Friday, October 9, 2009

இது மட்டுமே போதாது!

எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை-உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான். அவை-உணவு வழங்குவோர், கையாள்பவர், சமையலரிடம் சுகாதாரமின்மை, வழங்கப்படும் குடிநீர், காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசி, பொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.

நோய் ஏற்படுவதைத் தடுக்க இந்த நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. ஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடை, அவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணி, குடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம், உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையை, சுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால், மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.

இந்த விஷயத்தில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. ஒவ்வோர் ஓட்டலும் உணவு வழங்குவோர், கையாள்வோருக்கு உரிமம் (Food Handlers' Licence) வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 60,000 தொழிலாளர்கள் உணவுக்கூடங்களில் பணியாற்றுகின்றனர். ஆனால், இத்திட்டத்தை மாநகராட்சி கட்டாயமாக்கவில்லை என்பதாலும், இதற்கான கட்டணம் ரூ.500 என்பதாலும் இதுவரை சுமார் 3500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், உணவு கையாளுதல், வழங்கல் பணியில் உள்ளவர்களுக்குத் தொற்று நோய்கள் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்வதும், அடிப்படைச் சுகாதாரம் குறித்த சிறு பயிற்சியை அளிப்பதுமான செலவை உள்ளடக்கி இருப்பதுதான். ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அரசுடன் பேச்சு நடத்தி, கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை வைத்தால் அது நியாயமாக இருக்குமே தவிர, இத்திட்டத்தைப் புறக்கணிப்பதுபோல நடந்துகொள்வது சரியானதாக இருக்காது.

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள ஓட்டலில் உணவு வழங்குவோர், கையாள்வோர், சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும், கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன், இத்திட்டத்தை தமிழகம் முழுவதிலும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அறிமுகம் செய்வதற்கும் உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அதற்கான தேவை இன்று மேலதிகமாக இருக்கிறது.

இதில் தமிழக அரசு இதோடு நின்றுவிடக்கூடாது. நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம், பயிற்சி என்பது போதாது. ஏனென்றால், இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி, தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம், ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும், கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும், முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.

கையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும், அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும், இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.

ஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும் இற்றைநாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில், முன்னெப்போதையும்விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.

கையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல், உணவுக் குப்பைகளை இரவோடு இரவாக வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.

உணவின் சுவை, உணவின் வகை, அவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள், உண்ணும் சூழல், மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதி, பொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால், எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மனது வைத்தால் நிச்சயம் சாத்தியமான ஒன்று.
நன்றி : தினமணி

No comments: