Wednesday, October 21, 2009

வெள்ளி விலை உயர்வால் கொலுசு உற்பத்தி பாதிப்பு

வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இயங்கும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளில், வெள்ளிக் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி ஆகியவற்றின் உற்பத்தியில், நேரடியாக 60 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வெள்ளி கிலோ 18 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மார்க்கெட் நிலவரப்படி, கிலோ 28 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கிறது. வெள்ளி விலை உயர்வால், கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தால், கலக்கத்தில் உள்ளனர்.
சேலம், வெள்ளி பட்டறை இயக்குனர் செல்வம் கூறியதாவது: சேலம் கொலுசுக்கு, வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், விலை உயர்வால் பாதிப்பு இல்லை. தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவியது, ஆனால், தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதனால், வெள்ளி ஆபரணங்கள் ஆர்டர் கொடுக்கும் பணி முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய, கொலுசு மீதான 4 சதவீத ஆபரண வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு செல்வம் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: