Wednesday, October 21, 2009

கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

'இந்த நிதியாண்டில் இந்தியாவில் கார் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்' என, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்திய தொழில் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையினர் கவலை அடைந்தனர். ஆனால், இந்த நிதியாண்டில் கார்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் 1.7 லட்சம் கார்கள் விற்பனையாயின. இந்தாண்டின் இதே மாதத்தில் 1.29 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி 1.31 சதவீதமாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி வீதம் இரட்டை இலக்கத்தை எட்டும், என இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 7.67 சதவீதமும், மற்ற வாகனங்களின் விற்பனை 9.6 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பங்குச் சந்தை எழுச்சி, பருவமழை மீண்டும் துவங்கியது, பண்டிகை காலம் போன்ற பல சாதகமான அம்சங்கள் இருந்ததால் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, பண்டிகை கால தள்ளுபடி, வரி குறைப்பு, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களும் கார்களின் விற்பனையை அதிகரித்துள்ளன. இவ்வாறு ஆட்டோமொபைல்ஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்


No comments: