Friday, October 23, 2009

புலனாய்வுத் துறை பற்றிய புலனாய்வு!

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஒரு குற்றம் நிகழ்ந்து ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கு உள்பட்ட மாநில போலீஸ் நடுநிலையுடன் விசாரணை நடத்தாது எனும் எண்ணம் பொதுமக்களுக்கும், பிற கட்சியினருக்கும் ஏற்பட்டால் சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுக்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட வழக்கு விசாரணையை சிபிஐதான் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிடுவதையும் காண்கிறோம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆக்ட்டீ (ஏஐசிடிஇ) எனப்படும் அகில இந்திய பொறியியல் கல்விக் கவுன்சிலின் இரண்டு உயர் அதிகாரிகளின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கள் வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மீது கட்டுக்கடங்காத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக அந்தஸ்து பெறவும், புதிய பொறியியல் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் இந்த ஆக்ட்டீ அனுமதி அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஆக்ட்டீயின் ஊழல் பற்றி எழுதி, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதிகாரிகள் தனது ஊழல் கூட்டாளிகள் என்பதால் கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட கோப்பினைத் தனது மேஜையில் எந்த நடவடிக்கையுமின்றி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இந்த ஆண்டு புதிய ஆட்சி அமைந்தபின், கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானபின் சிபிஐ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதில் இரண்டு உயர் அதிகாரிகளும் கைதானார்கள்.
இதே ஜூலை மாதம் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரப்ஜித் சிங் தன் தந்தையின் ஆணையத்தின் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன் எனக் கூறி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்து பூட்டாசிங் போட்டியிட்டதாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாரிசுகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் காங்கிரûஸ எதிர்த்து அர்ஜுன் சிங் உள்ளடி வேலைகள் செய்ததாலும் இந்த இரண்டு வழக்குகளையும் சிபிஐ கையிலெடுத்து தடாலடி கைதுகள் நடந்தேறின என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆளும் கட்சியின் பலசாலிகள் நினைத்தால் சிபிஐ வழக்குகள் பாயும் அல்லது பாய்ந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் எனும் பரிதாபமான நிலைமை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அரசியல் காற்று எத்திசையில் அடிக்கிறதோ அதன்படி கிடப்பில் போடப்படுவதும் முடுக்கிவிடப்படுவதும் நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளது.

மற்ற நாடுகளின் மத்திய உளவுத்துறை போலீஸ் தனித்தன்மையுடன் செயல்படும்போது நமது நாட்டின் சிபிஐ மட்டும் ஆளும் கட்சியின் அடிமையானது எப்படி? 1977-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி அன்றைய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியை பிரபல ஜீப் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது. அடுத்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்ற பின் முதல் வேலையாக சிபிஐ நிர்வாகத்தை மத்திய உள்துறையிடமிருந்து மாற்றி பிரதமரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். தான் கைது செய்யப்பட்ட தனிப்பட்ட கோபத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என அப்போதே பலரும் முணுமுணுத்தனர்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்குச் சாதகமாக முடிவெடுத்த காலகட்டத்தில், சமாஜவாதி கட்சியின் அமர்சிங், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முலாயம்சிங் மீதான வழக்கு முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசின் பழி வாங்கும் செயல் எனவும் சிபிஐ சமர்ப்பித்த வழக்கின் அறிக்கையில் 288 தவறுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ் வெளிப்படையாக முலாயம்சிங் யாதவின் மீது தவறான ஒரு வழக்குத் திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது அரசின் வழக்குக்குச் சாவு மணி அடிக்கும் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்ட அமைச்சர் ஒருவர் நடைபெற்று வரும் வழக்கைப் பற்றிய எதிர்கருத்தைக் கூறினால் அரசு எந்தவகையில் வழக்கை நடத்த முடியும் என்பது நடுநிலையாளர்களின் அன்றைய கேள்வி.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ 2007-ம் ஆண்டு பதிவு செய்தது. பின் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய சூழ்நிலையில் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியின் ஆதரவு மத்திய ஆளும் கூட்டணிக்குத் தேவைப்பட்டது. எந்தச் சத்தமும் இல்லாமல் மத்திய சட்டத்துறை, முலாயம்சிங் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்பை அன்றைய சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதியிடம் அனுப்புமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உண்மையில்லை எனவும், சிபிஐ தவறுதலாக முலாயம்சிங்கின் சொத்துகளுடன் அவரது மனைவி மற்றும் மருமகள் பெயரிலிருந்த சொத்துகளையும் சேர்த்துவிட்டது என மிக அறிவுப்பூர்வமான ஒரு சட்ட அறிவுரையையும் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார். 2008-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, ""இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்ப வழக்கு வாய்தா பெற்றது.

இதனிடையில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேரங்களில் சமாஜவாதி கட்சியும் காங்கிரஸýம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியது. சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, ""முலாயம்சிங் சொத்து பற்றி நான் அளித்த அறிக்கை சரியானதல்ல'' என ஒரு புதிய அறிக்கையை சிபிஐ மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மேல் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் முலாயம்சிங் மிகவும் திறமையுடன் சிபிஐ அதிகாரிகளுடன் தனது கட்சித் தலைவர்கள் சட்டத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்திய பேரங்கள் பற்றிய 16 ஒலிப்பதிவு சி.டி.க்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அகில இந்தியாவின் நாகரிக மனிதர்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும் இந்நிகழ்வு நம் நாட்டின் நடுநிலை ஆட்சிமுறையை எள்ளி நகையாடச் செய்தது.

மாயாவதியின் மீதான சிபிஐ வழக்கு 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. தாஜ் புராதன வழித்தடம் எனும் 175 கோடி ரூபாய் திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு. ஓராண்டு விசாரணைக்குப்பின் சரியான சாட்சியங்களுடன் இவ்வழக்கை நடத்த முனைந்த சிபிஐ, அன்றைய வாஜ்பாய் அரசின் தலையீட்டினால் தயக்கம் காட்டியது. பாஜக கூட்டணியுடன் மாயாவதி நட்புறவுடன் இருந்த காலம் அது.

பின்னர் மத்தியில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணி மாயாவதியுடன் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தில் அரசியல் செய்ய முயற்சிகள் நடந்தன. அதேநேரத்தில் சிபிஐ தீவிரமான விசாரணை முடிவில் மாயாவதியின் மீதான தாஜ் வழித்தடத் திட்டத்தின் ஊழல் பற்றிய தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசியல் காரணங்களுக்காக அன்றைய அட்டர்னி ஜெனரல் மிலின்ட் பானர்ஜி மிகவும் நகைச்சுவையான ஒரு காரணத்தைக் காட்டி மாயாவதிக்கு எதிராகத் தகுந்த ஆதாரம் இல்லை எனக் கூறினார்.

அதாவது ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆரம்பமாக காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் மாயாவதி கையெழுத்திடாமல் அவரது செயலர் கையெழுத்திட்டுள்ளாராம். அரசாங்கக் கோப்புகளில் குறிப்பாணையில் முதல்வரும் உத்தரவுகளில் அதிகாரிகளும் கையெழுத்திடும் நடைமுறை பாவம் படித்த மேதை அட்டர்னி ஜெனரலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளாமல் விசாரணையைத் தொடரும்படி தேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சிவிசிக்கு மாயாவதியின் வழக்கை மாற்றியது.

சிவிசி சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பார்வையிட்டபின், மாயாவதியின்மீது சரியான அத்தாட்சிகள் உள்ளன எனக் கூறி வழக்கைத் தீவிரப்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதேவேளையில் மாயாவதிக்கு காங்கிரஸýடன் மோதல் வலுக்க வழக்குத் தீவிரமடைந்துள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு என்பதை அகில உலகத்துக்கும் பறைசாற்றி, சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை என உறுதி செய்துள்ளது. 1980-களில் பல நடவடிக்கைகளைக் கையாண்டு, 2006-ம் ஆண்டு லண்டனில் முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்கை உயிரூட்டி அவர் இருபத்தொரு கோடி ரூபாயைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள வழிவகை செய்த சிபிஐ, காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமா அல்லது மத்திய அரசின் தலையாய உளவுத்துறையா எனும் சந்தேகத்தை நடுநிலை இந்தியர்கள் மனதில் எழுப்பியுள்ளது.

மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நீதித்துறை போன்றவை ஆட்சியாளர்களின் தலையீடுக்கு இடம்கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆனால், எந்த ஓர் அமைப்பும் முறையாகவும், துணிவாகவும் இயங்குவது என்பது அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைப் பொறுத்துத்தான் அமையும்.

டி.என். சேஷனின் தலைமையில் மத்தியத் தேர்தல் ஆணையமும், வி.என். விட்டலின் தலைமையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் சுதந்திரமாகச் செயல்பட்டது மட்டுமல்ல, அந்த ஆணையங்களின் அதிகாரம் எத்தகையது என்பதையும் தங்களது செயல்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார். பதவியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டுவதைவிட ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்து, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படும்போது, மத்தியப் புலனாய்வுத் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளுமே செயலிழந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

No comments: