Saturday, September 5, 2009

வாரம் தோறும் பிரிமியம்: எல்.ஐ.சி.,யின் ஜீவன் மங்கள்

வாரம் தோறும் பிரிமியம் செலுத்தும் வகையில் எல்.ஐ.சி.,யின் நுண் காப்பீட்டுத் திட்டமாக 'ஜீவன் மங்கள்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., கட்டடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'ஜீவன் மங்கள்' பாலிசியை மண்டல மேலாளர் வி.கே.சர்மா அறிமுகப்படுத்தி பேசியதாவது: நகர்ப்புற, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் 'மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாலிசியான 'ஜீவன் மாதூர்' திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2006ல் துவக்கி வைத்தார். இரண்டாவதாக தற்போது 'ஜீவன் மங்கள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு காலவரையறைக்கு உட்பட்ட திட்டம். பாலிசி முடிவில் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும். இதன் பிரிமியத்தை ஒரே தவணை, ஆண்டு, காலாண்டு, அரையாண்டு, மாத தவணை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மற்றும் வாரந்தோறுமாக செலுத்தலாம். கால முடிவிற்குள் பாலிசிதாரர் இறந்தால், வாரிசுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விபத்துக்கான கூடுதல் காப்பீடு செலுத்தி, விபத்து பாதுகாப்பு பெறும் வாய்ப்பும் உள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை காப்புத் தொகை பெறலாம். எல்.ஐ.சி.,யின் 53வது ஆண்டு மற்றும் எல்.ஐ.சி., வார விழா இம்மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எல்.ஐ.சி., தனது பாலிசிதாரர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவான சேவையை தந்து வருகிறது. இவ்வாறு சர்மா தெரிவித்தார். 'ஜீவன் மங்கள்' பாலிசியை சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் வெளியிட்டார். எல்.ஐ.சி., நிறுவன அதிகாரிகள், ஏஜன்ட்கள், என்.ஜி.ஓ.,க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்


No comments: