Saturday, August 15, 2009

இந்நினைவகற்றாதீர்...!

அந்நியர் ஆட்சியிலிருந்து முழுவதுமாக விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக இந்தியா உலக அரங்கில் முத்திரை பதிக்கத் தொடங்கி 62 ஆண்டுகள் கடந்துவிட்டன. நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை மொழிகள், மதங்கள், ஜாதிப் பிரிவுகள், உணவு, உடை, பழக்கவழக்கங்களில் மாறுதல் என்று எண்ணிலடங்காத முரண்பாடுகளுக்கிடையில், இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காண முடிந்திருக்கிறது என்பதே பிரமிப்பான விஷயம்தானே?

தேர்தல் தில்லுமுல்லுகளும் மக்களாட்சித் தத்துவத்துக்கே ஒவ்வாத பல வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டும், மக்கள் தேர்தல் முறையில் அவநம்பிக்கை அடையாமல், தவறுகள் வாக்குச்சீட்டுகளின் மூலம் திருத்தப்பட முடியும் என்கிற நம்பிக்கையில் தொடர்கிறார்களே, அது பிரமிப்பான விஷயம் இல்லையா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் 180. அதில் அன்றுமுதல் இன்றுவரை ஒரு குடியரசாக, நாடாளுமன்ற ஜனநாயக முறையில் தொடரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான் என்பது பெருமைக்குரிய விஷயமல்லவா?

இத்தனை கோடி மக்கள்தொகையுள்ள ஒரு நாடு, இத்தனை பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த தேசம் தவறாமல் தேர்தல்களை நடத்திக் கொண்டு வருவது என்பதே ஆச்சரியமான அதிசயம் அல்லவா? இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் உலகில் உள்ள பல நாடுகளைவிட அளவிலும், மக்கள்தொகையிலும் பெரிதாக இருந்தும், இந்திய யூனியனின் அங்கமாகத் தொடர்கிறது என்பதே அந்நிய சக்திகளை ஆச்சரியப்படுத்தும் விஷயம். இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ இந்தியாவும் ஆப்பிரிக்கக் கண்டம்போலத் துண்டு துண்டாகிவிடும் என்று இலவு காத்த கிளிகளாகச் சிலர் காணுகின்ற பகல் கனவு தொடர்கிறதே தவிர, நனவாகவில்லையே, அதை யாரால் மறுக்க முடியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் கடந்தும் வறுமை ஒழியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அகலவில்லை, தீண்டாமை முற்றிலுமாக நீங்கவில்லை, கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் கிடைத்தபாடில்லை - இப்படிப் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இந்தியாவின் பல மலைப்பகுதி மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் சிக்கி இருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றால், இன்னொரு புறம் சுதந்திரத்தின் ஆசுவாசம் கிடைக்காமல், இருள் சூழ்ந்து கிடப்பது நிஜம்.

பல லட்சம் கோடிகள் அரசு வருமானம் வருகிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பும் லட்சம் கோடிகளில். விரைவிலேயே உலக வல்லரசுகளில் ஒன்றாகப் போகிறது இந்தியா என்று நமக்கு நாமே பெருமைதட்டிக் கொள்கிறோம். நமது சாதனைகளின் பெருமைகளில் மூழ்கி, சாதிக்க வேண்டிய விஷயங்களில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறோம் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

வானளாவிய அடுக்குமாடிக் கட்டடங்களும், மேம்பாலங்களும், பறக்கும் ரயில்களும், அதிநவீன மோட்டார் வாகனங்களும், உலகத் தரத்திலான பல்பொருள் அங்காடிகளும், சர்வதேசப் புகழ்பெற்ற உணவு விடுதிகளும், அணுகுண்டு உள்படப் பல பாதுகாப்பு ஆயுதங்களும் மட்டுமே வளர்ச்சிக்கு அளவுகோல் இல்லை. ஒருபுறம் உணவுக் கிடங்குகளில் தானியங்கள் நிரம்பி வழியும்போது, தெரு ஓரங்களில் ஒருவேளைச் சோறு இல்லாமல் மக்கள் தவிப்பதாக இருந்தால் அதைத் தன்னிறைவு என்று எப்படிக் கூறுவது?

"எல்லோருக்கும் கல்வி' என்று திட்டம் தீட்டி 70 விழுக்காடுக்கும் அதிகமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வைக்கிறோம். ஆனால், அந்தக் குழந்தைகளில் 29 சதவிகிதம் ஐந்தாம் வகுப்புடன் படிப்பைத் தொடர்வதில்லை. அதற்கு மேலே படிக்கும் குழந்தைகளில் 51 சதவிகிதம் எட்டாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள். பத்தாம் வகுப்புக்குமேல் படிப்பைத் தொடராமல் இருப்பவர்களின் சதவிகிதம் 62. இதற்குக் காரணம், சூழ்நிலையும், படிப்பு வரவில்லை என்பதும் மட்டுமல்ல, வறுமையும்தான்!

கல்வி இப்படி என்றால், சுகாதாரம் அதைவிட மோசமாக இருக்கிறது. ஏழைக்கு மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகிவிடும் போலிருக்கிறது. மேலைநாடுகளைப்போலக் காப்பீட்டு வசதி இல்லாமல் மருத்துவம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்படும் விபரீதம் அரங்கேறுகிறது. அரசு மருத்துவமனைகளின் அவல நிலையைப் பற்றி எழுதுவதாக இருந்தால் புத்தகங்கள் தேவைப்படும்.

மேலைநாடுகளில் உள்ள மக்களைப்போல, நமது இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இல்லை. இவன் கேட்பதெல்லாம் நாகரிக உலகிலுள்ள சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தண்ணீர், செய்யத் தொழில், ஆரம்பக் கல்வி, அடிப்படை சுகாதார வசதி போன்றவைதான். இதைக்கூட நாம் 62 ஆண்டுகளில் கொடுக்க முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மையே தவிர, கொடுக்க முடியவில்லை என்பது பொய். ஆனாலும் இந்தியா நம்பிக்கை இழக்கவில்லை. ஒற்றுமையாக இருக்கிறது.

பாரதி சொல்வதுபோல,
""பாரதபூமி பழம்பெரும்பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!
பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம்,
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!''
நன்றி : தினமணி

No comments: