Tuesday, August 4, 2009

அடுத்த வருடத்தில் இருந்து வருடத்திற்கு 200 டன் தங்கத்தை விற்க ஐ.எம்.எப்., முடிவு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்பனை செய்ய சர்வதேச நிதியமைப்பு (ஐஎம்எப்) திட்டமிட்டுள்ளது.
இப்போது லண்டன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 935.32 டாலராக இருக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அது 1000 டாலரைத் தாண்டும் என்கிறார்கள். விலை உயர்ந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்க ஐஎம்எப் திட்டமிட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டின் பிற்பாதியில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 850 டாலராகத்தான் இருக்கும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வாளர் ஆலன் ஹீப் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர கூட்டத்துக்கு முன்பே தங்கம் விற்பதற்கு ஐஎம்எப் வாரியம் ஒப்புதல் வழங்கும் என்று அதன் திட்டமிடுதல் மற்றும் மறு ஆய்வு பிரிவு இயக்குநர் ரெஸா மொகதம் தெரிவித்துள்ளார். 403 டன் தங்கம் விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, ஐஎம்எப் அமைப்பிடம் 3,217 டன் தங்கம் இருப்பு உள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஜிஎப்எம்எஸ் ஆய்வு நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது. உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் கடந்த ஆண்டில் 246 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன.
நன்றி : தினமலர்


No comments: