Sunday, July 26, 2009

இதோ ஒரு வழிகாட்டி!

மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புவி வெப்பமடைவதைக் குறைப்பதில் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இதை மற்றவர்களும் குறிப்பாக சாதாரண மக்களும் பின்பற்றத் தொடங்கினால் புவியின் வெப்பத்தைக் குறைப்பதுடன் கணிசமான அளவுக்கு ரூபாயையும் மிச்சப்படுத்தலாம்.

மின் விளக்குகளை எரியவிடுவதும், மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதும், குளிர்சாதனப் பெட்டி போன்ற குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதும் நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டாலும், பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் அதனால் புவி வெப்பம் அடைவதற்கும் அதுதான் காரணம் என்று அறிவியலாளர்கள் இப்போது இடைவிடாமல் அரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளைவிட மேலை நாடுகளில் உள்ளவர்கள் அறிவாளிகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மக்கள் இனிமையாக வாழ வழி செய்கிறார்கள், அவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பகுத்தறிவின் வெளிப்பாடுகள், அதனால் மனிதகுலம் அடைந்துவரும் நன்மைகளுக்கு அளவே இல்லை என்று புளகாங்கிதம் அடையாதவர்களே கிடையாது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் இயற்கையை நாசப்படுத்தும் சக்தி இருப்பதும், அதன் விளைவாக புவியில் உள்ள தாவரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதும் மெல்ல மெல்லத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த முன்னேற்றங்களை ஒரேயடியாகத் தூக்கி எறிந்துவிட்டு மாட்டுவண்டி காலத்துக்கு யாராலும் போக முடியாது. ஆனால் தீமைகளின் தீவிரத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும். அதற்கு மேற்கு வங்க ஆளுநரும் மகாத்மா காந்திஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வழிகாட்டி வருகிறார்.

ஆளுநர் வெளியே செல்லும்போது அவருடன் பயணிக்கும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார். ஆளுநர் மாளிகையில் தேவையற்ற மின்சார சாதனங்களை நீக்குமாறு கூறிவிட்டார். அதிக அளவு மின்சாரத்தைத் துய்ப்பதும் வெப்பத்தை வெளியிடுவதுமான மின் விளக்குகளை அகற்றிவிட்டு, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத மின்சார விளக்குகளைப் பொருத்தச் செய்தார். அதிக எண்ணிக்கையில் இருந்த குளிரூட்டிகளைக் குறைத்துவிட்டார். சுடுநீர் பெறுவதற்காக இருந்த மின்சார சூடேற்றிகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் சூடேற்றிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். தினமும் 2 மணி நேரம் மாலை நேரத்தில் ஆளுநர் மாளிகையில் மின்சார விநியோகத்தை நிறுத்தி வைத்து மின்சாரப் பயன்பாட்டை வெகு கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

அவர் ஆளுநராகப் பதவியேற்றபோது 2005-06-ல் ஆளுநர் மாளிகையில் கரியமில வாயு வெளியேற்றம் 408 டன்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுவே, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பிறகு 335 டன்களாக இருக்கிறது.
இது சாதாரணமான சாதனை அல்ல. ஆடம்பரம், அதிகாரத்தை வெளிக்காட்டும் அனாவசியப் பகட்டு ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டாலே செலவும் குறையும், புவி வெப்பமடைவதும் கணிசமாகத் தணியும் என்பது இந்த உதாரணத்திலிருந்து அறிய முடிகிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், விடுதிகள், ஆலயங்கள், திருமண மண்டபங்கள், வங்கிகள், அரசுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான தலைமை நிர்வாகி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருமே உறுதி எடுத்துக் கொண்டு மின்சாரத்தைச் சேமிக்க நடவடிக்கைகளைத் தொடங்கினால் மின்சார விரயம் கணிசமாகக் குறையும். அதனால் தொழில்துறைப்பயன்பாடு, விவசாயத் தேவை போன்றவற்றுக்கு மின்சார வாரியத்தால் கூடுதல் மின்சாரத்தை அளிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்தைச் சீர்படுத்தி பெரிய பஸ், மினி பஸ் ஆகியவற்றை எந்த நேரமும் இயக்குவதை உறுதி செய்தால் சொந்தமாக 2 சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய தேவை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறவே ஏற்படாது.

இதனால் பெட்ரோல் பயன்பாடு கணிசமாகக் குறைந்து நம் நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் அரிய அன்னியச் செலாவணி கோடிக்கணக்கில் மிச்சப்படும். மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றுக்கு வரிச்சலுகை, எளிய கடன் வசதி போன்றவற்றை அளித்து மோட்டார் வாகனத்துறையில் தேவையற்ற பெட்ரோல், டீசல் வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு உதவலாம்.

வீடுகளிலும் கிணறுகளில் தண்ணீர் இறைக்கப்பயன்படும் மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், ஏ.சி., தரையைப் பெருக்க வாக்குவம்-கிளீனர் போன்ற சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மின்சாரம் கணிசமாக மிச்சப்படும். சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்களை படிப்படியாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தால் மின்சாரம் வெகுவாக மிச்சப்படும். சிறுதுளிதானே பெரு வெள்ளமாகிறது.
நன்றி : தினமணி

2 comments:

Yogi said...

arumayana karuthukkal..Thinanmum Pinpatraa vendiyavai..namathu tholaikatchikal intha pmathiri ubayogamanaa...vidayangalai makkalukku sonnaela evalavo minsarathai micha paduthalaam..\

Yoge

பாரதி said...

Yogiவருகைக்கு நன்றி