Friday, June 19, 2009

5 ஆண்டுகளில் தங்கம் விலை மூன்று மடங்கு உயர்வு

ஆண்டுக்கு ஆண்டு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டே செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்தாலும், விற்பனை மட்டும் குறையவில்லை.
தற்போது, நகை வாங்குவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள் ளது. நகைகளாக வாங்கிக் குவிப்பதை விட தங்க நாணயங்களாக வாங்கி சேமிப்பதே புத்திசாலித்தனம் எனக் கருதுகின்றனர்.
விற்கும் போது சேதாரம் குறைப்பதில்லை, அன்றைய விலைக்கே விற்கலாம் என்பதே காரணம்.
நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கும் தங்க விலை குறைய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து சென்னை நகர தங்க நகை மொத்த வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'மே 15ம் தேதி கிராம் ஆயிரத்து 379 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்றது. அதிகபட்சமாக ஜூன் 16ம் தேதி கிராம் ஆயிரத்து 387 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்றது.
அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 51 ஆக இருந்தது. தற்போது 47 ரூபாய்க்கு வந்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை தற்போது சிறிது குறைந்துள்ளது. டாலர் மதிப்பில் 44 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதால், தங்கம் விலை 30 முதல் 50 ரூபாய் வரை குறையலாம்' என்றார்.
நேற்று சென்னை நகரில் ஒரு கிராம் ஆயிரத்து 357 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்றது.
மதுரை மற்றும் திருச்சியில் கிராம் ஆயிரத்து 374 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையானது. கோவையில் கிராம் ஆயிரத்து 360 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்றது. கடந்த 2004ம் ஆண்டு ஒரு சவரன் நான்காயிரத்து 760க்கு விற்ற தங்கம், தற்போது 10 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


No comments: