Wednesday, April 22, 2009

வீடு, வாகனம் கடன் மீதான வட்டி மேலும் குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வீடு, வாகனம் மற்றும் கம்பெனிகள் பெறும் கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படும் வகையில் ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், 2009-10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்தார். தற்போது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து, பல்வேறு சலுகை மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வங்கிகள் அளிக்கும் கடன் வசதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் 2009-10ம் ஆண்டின் கடன் வசதிக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், குறைந்த கால வங்கி ரொக்க கையிருப்பு (ரெப்போ) சதவீதம் 4.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கிகளில் வைத்திருக்கும் பணம் (ரிவர்ஸ் ரிப்போ) சதவீதம் 3.25 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது, ஏற்கனவே இருந்த அளவில் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வங்கிப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதே சமயம் மொத்த வளர்ச்சி 2008-09ம் ஆண்டுக்கு 6.5 சதவீதம் இருக்கும் என்ற மதிப்பீடு, தற்போது 6 சதவீதமாகக் குறையும் என்று மாற்றி மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பணவீக்கம் மார்ச் 2010 வரை தொடர்ந்து 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்காது என்ற நல்ல தகவலும் இதில் உள்ளது.
பணவீக்கம் பூஜ்யம் அளவிற்கு குறைந்ததால், பாதிப்பு ஏற்படாது என்றும் தேவைகள் குறைய வாய்ப்பில்லை என்றும், பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலைக்குறைவு இந்த அளவிற்கு பணவீக்கம் குறையக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறுகையில், 'உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிலைமையைக் கணக்கிட்டு அதற்கேற்ப ரிசர்வ் வங்கி நடவடிக்கை இருக்கும். 'உலக அளவிலான மந்தப் பொருளாதார நிலை பாதிக்காமல், அதே சமயம் வளர்ச்சி இருக்கும் வகையில் நடவடிக்கை அமையும். 'வங்கிகள் கடன் வழங்கும் போது, அதற்கான வட்டிவிகிதம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல வங்கிகள் டிபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி அளவை குறைப்பதால் சிறுசேமிப்பு போன்றவை போட்டியாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. காரணம் பணப்புழக்கம் பாதிப்பின்றி இருக்கிறது' என்றார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓரியண்டல் வங்கி நிர்வாக டைரக்டர் எஸ்.சி.சின்கா கூறுகையில், 'ரிசர்வ் வங்கி கொள்கையைப் பார்க்கும் போது வங்கி கடன் மீதான வட்டி குறையும்' என்றார். நிதித்துறை பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா கருத்துத் தெரிவிக்கும் போது, 'ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கி தரும் கடன் மீதான வட்டி விகிதம் குறையும்' என்று கருத்துத் தெரிவித்தார். வீடு, கார் மற்றும் கம்பெனிகள் வாங்கும் கடன் மீதான வட்டி அளவு இனிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கடன் அளவு 'ஓஹோ...': மத்திய, மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்: நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகள் வாங்கிய கடன் அளவு மதிப்பீடு: நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 647 கோடி ரூபாய். இது 2008-09ல் நான்கு லட்சத்து 2,032 ரூபாயாகும். நிதி ஊக்குவிப்பு செயல்களுக்காக செலவிடும் பணத்திற்காக கடன் வாங்கும் அளவு அதிகரித்திருக்கிறது.
முன்பு 2007-08ம் ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் இரண்டரை மடங்கு கடன் அதிகமாக வாங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவும் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: