Wednesday, March 11, 2009

மரணத்தை நெருங்கினார் ஜேடி கூடி : நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் சாக விருப்பம்

பிரிட்டனில் நடந்த டெலிவிஷன் ஷோ ஒன்றில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் பிரிட்டிஷ் நடிகை ஜேடி கூடி. கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றி உடல் முழுவதும் பரவி விட்டதால் அவருக்கு அளிக்கப்பட்ட சீமோதெரபியால் பயனில்லாமல் போய்விட்டது. எனவே இனிமேல் அவர் பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இப்போது மரணத்தை நெருங்கி விட்ட ஜேடி கூடி, நான் ஆஸ்பத்திரி படுக்கையில் சாக விரும்பவில்லை; எனது வீட்டில் அதுவும் எங்கள் வீட்டுக்கு பின்பக்கம் இருக்கும் புல்வெளியை பார்த்தபடி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் சாகவே விரும்புகிறேன் என்று சொன்னதால், ஆஸ்பத்திரியில் இருந்து அப்ஷயர் என்ற இடத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கூட்டி செல்லப்பட்டார். அவரது கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், இனிமேல் பார்வை தெரிய வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டதால், அவரது இரண்டு குழந்தைகளை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. வரும் ஞாயிறு அன்று தான் இவருக்கும் ஜேக் என்பவருக்கும் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் சர்ச்சில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஜேடி கூடியின் கடைசி ஆசையாகவும் அது இருந்தது. ஆனால் அதற்குள் இவர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு விட்டார். ஞாயிறு வரை இவர் உயிருடன் இருப்பாரா, இவருக்கும் ஜேக் க்கும் திருமணம் நடக்குமா என்று தெரியவில்லை. இவரது திருமணத்திற்கு ஷில்பா ஷெட்டியை ஜேடி கூடி அழைத்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு வரமுடியாது என்று ஷில்பா சொல்லி விட்டார். இப்போது எனது சவ அடக்கத்திற்காகவாவது வாருங்கள் என்று ஷில்பா ஷெட்டி யை ஜேடி கூடி அழைத்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


No comments: