Sunday, December 28, 2008

நிலையற்று தள்ளாடுகிறது பங்குச் சந்தை

வியாழனன்று சந்தைக்கு விடுமுறை. வெள்ளி துவக்கம் நன்றாக இருந்தாலும், போகப் போக சந்தையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. காலையில் சிறிது மேலேயே இருந்த சந்தை, போகப் போக சிறிது கீழே இறங்க ஆரம்பித்தது. வரும் காலங்களில், கம்பெனிகளின் ஆண்டு முடிவுகள் எதிர்பார்த்தது போல இருக்காது என்ற செய்திகளும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஏற் பட்டிருக்கும் போர் மேகமும், சந்தையை கடைசி அரை மணி நேரத்தில் கீழே இழுத்துத் தள்ளியது.
பணவீக்கம் இந்த வாரம் 6.61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற வார அளவை விட சிறிது தான் குறைவு. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இறுதியாக வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 223 புள்ளிகள் குறைந்து 9,328 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 59 புள்ளிகள் குறைந்து 2,857 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த வாரம் மட்டும் சந்தை 770 புள்ளிகளை இழந்திருக்கிறது.
அட்வான்ஸ் டேக்ஸ்: சென்ற ஆண்டு டிசம்பர் காலாண்டை விட, இந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 22 சதவீதம் குறைவாகக் கட்டப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருக்கும் என்று இது உணர்த்துகிறது. இது, ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.
உலகளவில் பங்குச் சந்தை இந்த ஆண்டு கூடியுள்ளதா என்ற கேள்வி பலரது மனதில் வந்திருக்கும். இந்தியாவில் 55 சதவீதம் சந்தை கீழே விழுந்திருக்கிறது. உலகிலேயே அதிகம் கீழே விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அதே சமயம், ஈரான் நாட்டின் பங்குச் சந்தை (மிகவும் சிறிய சந்தை) நஷ்டமில்லாமல் இந்த ஆண்டை முடிக்கவுள்ளது; சிறிது லாபமும் சம்பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, குஜராத்தின் ஜாம் நகரில் தனது உற்பத்தியை துவக்கி விட்டது. 25,000 கோடி ரூபாய் செலவில் துவங்கப் பட்டுள்ள இந்த ரிபைனரி, உலகின் ஆறாவது பெரிய ரிபைனரி. இது, இந்தியாவின் ரிபைனரி அளவை இன்னும் 20 சதவீதம் கூட்டும்.
இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு நாளைக்கு 5,80,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்ய முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்டீரிசின் முதல் ரிபைனரி இங்கே உள்ளது.
அது 6,60,000 பேரல்கள் சுத்தகரிப்பு செய்யும். இரண்டும் சேர்த்தால், ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு, உலகிலேயே அதிகமாக ஒரே இடத் தில் சுத்திகரிப்பு செய்யப்படும் அளவு. இதனால், ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
சந்தையில் எந்த பங்கு வெளியீடும் இருக்காத நிலையில், போர்டிஸ் ஹாஸ்பிட்டல் தனது உரிமை பங்கு வெளியீட்டை 1,000 கோடி ரூபாய் அளவில் கொண்டு வரவுள்ளது.
இதை, புதிய ஹாஸ் பிட்டல்கள் கட்டவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் உபயோகப்படுத்தப் போகின்றனர். 75 சதவீத பங்குகள் கம்பெனியின் பெரிய முதலீட்டாளர்களிடமே இருப்பதால், இந்த உரிமைப் பங்கு வெளியீடு எளிதாகச் செலுத்தப் பட்டு விடும் என்பதில் ஐயமில்லை என்று நினைக்கின்றனர்.
மேலும், அப்பல்லோவிற்கு போட்டியாக உள்ள பெரிய அளவு ஹாஸ்பிட்டல்களில் இதுவும் ஒன்று.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை அல்லாடிக் கொண்டிருப்பது உண்மை. சந்தையில் பணம் போட்டவர்களும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். உலகளவு அல்லது உள் நாட்டு அளவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக சந்தை மிகவும் ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. நிலைமைகள் சரியாக நீண்ட நாட்கள் ஆகும்; அதுவரை பொறுமையாக இருப்பேன் என்பவர்களுக்கு இந்த சந்தை ஏற்றதாக இருக்கும்.
-சேதூராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: