Sunday, October 26, 2008

ஓடி வருவர் என்ற எதிர்பார்ப்பு வீண்: நார் நாராக கிழிந்தது பங்கு சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

வெள்ளி பங்குச் சந்தையில் அழியாத முத்திரை பதித்து சென்று விட்டது. ரத்தக்களரி என்றே சொல்ல வேண்டும். சந்தை 22,000 புள்ளிகளில் இருந்த போது 1,000 புள்ளிகள் சரிவு என்றால், அதை பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சந்தை 10,000 புள்ளி அளவில் வந்த பின்பும் 1,000 புள்ளிகள் சரிவு என்றால், நிச்சயமாக சந்தை எல்லாருக்கும் ஒரு கிலி கொடுத்து தான் சென்றிருக்கிறது. சரிவுகளே வாழ்க்கை என்று வரும் போது, அதை சமாளிக்க பெரிய தைரியம், மனதிடம் வேண்டும். சேமித்த பணம் முழுவதையும் சந்தையில் போட்டவர்கள், கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்தவர்கள் என்ற வகையினர் அதிகம் நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். சந்தையில் பரமபதத்தில் பாம்பிடம் மாட்டிக் கொண்டது போல சறுக்கி கீழே விழுகிறது. ஊர், உலகத்தோடு ஒத்து வாழ் என்று நல்ல நாள் பெரிய நாட்களில் வாழ்த்துவர். நாம் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ஊர், உலகத்தோடு ஒத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். கிடைத்த பலன் அவ்வளவும் போய் விட்டது.
ஏன் சந்தை வெள்ளியன்று விழுந்தது? ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசியில் இன்னும் பல அறிவிப்புகளை எதிர்பார்த்தனர்; அது வரவில்லை. அது தவிர, மதியத்திற்கு மேலே துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் கீழே விழுந்ததால், இந்திய சந்தையிலும் அதன் பாதிப்பு இருந்தது. இவை இரண்டும் சேர்ந்து சந்தையை கீழே இழுத்துப் போட்டு விட்டது. சந்தை நார் நாராகக் கிழிந்து கிடக்கிறது. முன்னேற இன்னும் வெகு நாட்களாகும். இந்த இரண்டு நாட்கள் சந்தை கீழே விழுந்ததுக்கு மேலும் ஒரு காரணம் என்று பார்த்தால் ரிலையன்ஸ் கம்பெனியின் காலாண்டு முடிவுகள். கடந்த 10 காலாண்டு முடிவுகளில், இந்த காலாண்டு முடிவில் தான் லாபங்கள் மிகவும் குறைந்திருக்கிறது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மிகவும் அடி வாங்கின. இதே போலத் தான் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளும் சந்தை எதிர்பார்த்தது போல இல்லை. மானிடரி பாலிசியில் எந்த அறிவிப்பும் இல்லாததால் வங்கிப் பங்குகள் மிகவும் சரிவைச் சந்தித்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 1,071 புள்ளிகள் குறைந்து 8,701 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 359 புள்ளிகள் குறைந்து 2,584 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. ஒவ்வொரு வாரமும் குறைந்து வருவது பீதி கொள்ளச் செய்கிறது.
டாலரும் ரூபாயும்: 50 ரூபாய் தாண்டிய டாலர்; வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. டாலர் இறக்குமதி லாபமா? கடந்த சில மாதங்களாக டாலர் எல்லா கரன்சிகளுக்கும் எதிராக மேலே சென்று கொண்டிருக்கிறது.இதனால், இறக்குமதியாளர்கள் பீதியடைந்துள்ளனர். இறக்குமதியாளர்கள் கனடியன் டாலர், யூரோ ஆகியவை மூலம் இறக்குமதி செய்வது சிறந்ததாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? யாரும் கணிக்க முடியாத படி சந்தை இருப்பதால், வரும் நாட்கள் சந்தைக்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. சந்தைக்கு இதுவரை வராதவர்கள் இரண்டு வழிகளில் மகிழ்ச்சி அடையலாம். ஒன்று, சந்தைக்கு வர நல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு. இன் னொன்று, சந்தையில் இதுவரை ஈடுபடாததை நினைத்து. சந்தை 10,000 புள்ளிகளுக்கு கீழே வரும் பட்சத் தில், முதலீட்டாளர்கள் ஆவலுடன் இது தான் சமயம் என்று ஓடி வருவர் என்று பலரும் எதிர்பார்த்தனர்; அது நடக்கவில்லை.
நன்றி : தினமலர்

No comments: