Tuesday, August 17, 2010

நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...

சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு.

திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.

இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.

மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.

ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.

இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?

கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.

ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.

விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.

மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.

"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி

Monday, August 16, 2010

காஷ்மீர்: பிரதமர் முனைப்புக் காட்டுவாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வன்முறைப் போராட்டங்களால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது, தில்லியில் ஆளும் அதிகார வட்டத்தினருக்குப் பெருங்கவலையை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு அங்கு நிலைமை மோசமாக இருப்பதைப் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 1989-ல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் "ஆஸôதி' கோஷம் முதன்முதலாக எழுந்தபோது இருந்த நிலைமையைவிட இப்போது நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் உள்பட பெரும்பாலானவர்கள் வீதிகளில் திரண்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதிலிருந்து அவர்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை முதல்வர் ஒமர் அப்துல்லா சென்று பார்த்தபோது, முதல்வரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண். இதிலிருந்தே காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு, தடையை மீறி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா? அல்லது பிரிவினைவாதிகள் காரணமா? அல்லது நமது அண்டை நாடான பாகிஸ்தான் காரணமா? என்பது புரியவில்லை. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாகிஸ்தான் முயல்வது மட்டும் தெளிவாகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம் என்று கேட்டால், அனைத்து நிலைகளிலும் தலைமை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கும் தலைவர்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தில்லியில் உள்ள தலைவர்களோ, ஸ்ரீநகரில் உள்ள ஆட்சியாளர்களோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நிறுவின. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்து அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து, எங்கே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மாநில அரசு சரிவர செயல்படாததால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆதரவாளருமான சையத் அலி ஷா கிலானி. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறையில் இருக்கும் கிலானியுடன் மாநில அரசு நிர்வாகம் பேச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு முற்றிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிலானியுடன் பேச்சு நடத்த முயன்றும் அவர் அதை நிராகரித்துவிட்டார். கிலானியைப் போல மஸôரத் ஆலம், ஆஸிய ஆந்திரபி போன்ற தீவிரவாதத் தலைவர்களும் இப்போது காஷ்மீர் விவகாரத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பொறுப்பேற்றபோது, இளம் தலைவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால், ஒமர் அப்துல்லா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு காஷ்மீர் பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயல்பட முதல்வர் ஒமர் தவறிவிட்டார். இதேபோல கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் டஃபைல் மட்டூ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண ஒமர் அப்துல்லா தவறிவிட்டார். இதையடுத்து வன்முறையும் போராட்டமும் தொடர்கதையாகிவிட்டது.

தற்போதைய நிலைமையை முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு உதவவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தயாராக இல்லை. இது தொடர்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானபோது மக்கள் பிரச்னைகளைத் தேசிய அளவில் எடுத்துச் செல்ல புதிய அரசியல் கட்சி உருவானதாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால், அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.

வன்முறை ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் சுட்டதாக போலீஸôர் கூறினாலும், நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா? இது விஷயத்தில் போலீஸ் துறை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போராட்டத்தின் போது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க புதிய உத்திகளைப் பாதுகாப்புப் படையினர் கையாள வேண்டுமே தவிர, அதற்காக கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாளக்கூடாது.

பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தாலும், குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு கதவையும் இழுத்துப் பூட்டியதுபோல் அவரது பேச்சு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராவார்.

கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை தலைதூக்கிய போதெல்லாம் அதைச் சமாளிக்கப் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர். பிரதமர் ஆவதற்கு முன் ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியவர்.

இப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் பிரதமராகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதிலும், காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவும் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால், இன்று நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் போல் வாய் பேசாமல் மௌனமாக இருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆராய பணிக்குழுவை பிரதமர் நியமித்திருந்தார். மத்திய அரசும் அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், அவற்றைச் செயல்படுத்தத்தான் முன்வரவில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை வெடித்து தடியடி, துப்பாக்கிச்சூடு நடந்து ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தபோதிலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குத் தீர்வுகாண பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிலைமையை எப்படி பிரதமர் சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஸ்ரீநகருக்குச் சென்றார். பயங்கரவாதிகளுடன் பேசி அவர்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டே வி.பி.சிங் அங்கு சென்றார். ஸ்ரீநகரில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வி.பி.சிங்கை சந்தித்துவிட்டுச் சென்றனர். ஷபீர் ஷா, தேநீர் விருந்துக்கு வருமாறு வி.பி.சிங்கை அழைத்தார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

வி.பி.சிங், ஷபீர் ஷா வீட்டுக்குச் செல்லவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அவரிடம் புலனாய்வுத் துறை போலீஸôர், "நீங்கள் அந்த இடத்துக்குச் செல்லவேண்டாம். அப்பகுதியைச் சுற்றிலும் வெடிமருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்' என்று கூறினர். ஆனால், வி.பி.சிங், உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இரண்டு மணிநேரத்தில் அவை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷபீர் ஷாவை சந்தித்தார் வி.பி.சிங். பின்னர் வி.பி.சிங் தனது சகாக்களிடம், பிரதமராகிய நான் ஷபீர் ஷாவுடன் தேநீர் அருந்துவதாகக் கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் காஷ்மீர் மக்கள் என்னை பிற விஷயங்களில் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார்.

இப்போது நிலைமை என்ன?

மத்திய அரசும், மாநில அரசும் துரிதமாகச் செயல்பட்டு காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் குறிப்பாக பாஜகவுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால். இப்போதைய தேவை காஷ்மீர் மக்களின் வலியை இதர மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான்!

கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

இந்தியன் வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்


இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


பொறுமைக்கும் எல்லையுண்டு...

வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!
நன்றி : தினமணி

Sunday, August 15, 2010

கைவரிசை காட்டும் கரையான்கள்!

அண்மைக்காலமாக லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவது செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி இடம்பெறும் செய்தியாகிவிட்டது. லஞ்சம் தொடர்பாக எப்போதாவது ஒருவர் பிடிபட்ட காலம்போய் இன்று தினம் ஒருவர் கைதுசெய்யப்படும் நிலை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதுடன் இனி வாங்கிய கையும் சும்மாயிருக்காது என சேர்த்துக் கொள்ளலாம்.

லஞ்சம் வாங்கியவர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தத் துறைதான் என்பது இல்லாமல் லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க இயலாமலோ, விரும்பாமலோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்து, அத்தகைய ஊழியர்களைச் சிக்கவைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனினும் லஞ்சம் கொடுப்பது தவறு என்னும் விழிப்புணர்வு முழு அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ காட்டிக் கொடுத்தால் தனக்கு ஆகவேண்டிய காரியம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயமும், அச்சமுமே மேலோங்க, எவ்வளவோ செலவாகிறது ஒரு ஐநூறு, ஆயிரம் கொடுப்பதால் நமது வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தால் சரிதான் என எண்ணும் பொதுமக்களாலேயே லஞ்சம் லஜ்ஜையின்றி முளைவிடத் தொடங்குகிறது. பிறகு அதை நீருற்றி, வாடவிடாமல் வளர்ப்பது அத்தகைய அலுவலர்களின் பணியாகிவிடுகிறது.

சமூகத்தின் அடித்தட்டில் அன்றாடம் பிடிசோற்றுக்கு ஏங்குவோர் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைகளைப்போல உழைத்து ஓடாய்த் தேய்வதைப் பார்க்கலாம்.

ஆனால், அரசாங்கப் பணி கிடைத்துவிட்ட ஒரே காரணத்துகாக குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்காமல் வேலைபார்க்கும் இவர்களுக்கு, அரசு பல்லாயிரக்கணக்கில் ஊதியத்தை அள்ளி வழங்கினாலும், சிறிதும் வெட்கமின்றி புன்னகை முகத்துடன் தலை சொறிந்தபடியோ, இறுகிய முகத்துடன் வலுக்கட்டாயமாகவோ லஞ்சம் பெறுவது தவறென்பது உரைப்பதில்லை.

லஞ்சம் வாங்கியதாகக் கைதாகும் பலரும் வறுமையில் வாடிக்கொண்டிருப்போராகத் தெரியவில்லை. சொந்த வீடு, மனை, கார் என சகல வசதியுடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களாகவே தென்படுகின்றனர். அவர்கள் லஞ்சம் வாங்கியே இவ்வளவு வசதிபெற்றனரா அல்லது உயரும் விலைவாசியைத் தான் மட்டுமன்றி, தனது பல தலைமுறையும் சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் லஞ்சம் வாங்கினரா என்பது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்பதுபோல விடைதெரியாத கேள்வியாகிவிடும்.

ஆனால், இதுபோன்ற பேர்வழிகள் அனைவருமே நினைக்கும் ஒன்று, லஞ்சம் வாங்கினால் தாங்களும் கவலைகளின்றி ராசாபோல வாழலாம் என்பதே!

பலநாள் அதிர்ஷ்டம், ஒருநாள் துரதிர்ஷடமாக மாறிவிடும்போது அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், கைதாகி அழைத்துச் செல்லப்படும்போது சிலர் வெற்றிப்புன்னகை சிந்துவதைப் பார்க்கலாம். எப்படியும் வழக்கு தனக்குச் சாதகமாகவே முடியும், இறுதியில் "தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வென்றது' என்ற டயலாக் பேச தனக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்பதாக இருக்கலாம்.

சிலரோ முகத்தை மூடியபடி செல்வதைப் பார்க்கலாம். அதற்கு, இந்தத் துறையில் இருந்துகொண்டு இவ்வளவு குறைந்த தொகைக்காக சிக்கிக் கொண்டோமே என்ற வெட்க உணர்வும் காரணமாக இருக்கலாம்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கும்மியடிக்கக் கூறினான் எட்டையபுரத்து எரிமலை. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிடுவர், லஞ்சம் வாங்குவதில் அவர்கள் 33 அல்ல, 50 சதவிகித பங்கு வகிக்கும் காலம் வரும் எனத் தெரிந்துதான் பாரதி இப்படி பாடினானோ?

லஞ்சம் வாங்கியதாகக் கைதுசெய்யப்படும் பலரையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அன்றைய தினத்தில் மட்டும் முடிந்தளவு முக்கியச் செய்தியாக்கிவிட்டு தொடரும் சில நாள்களில் மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. விளைவு, அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டையோ, வழக்குகளையோ "எதிர்கொள்ளும்விதமாய்' எதிர்கொண்டு, சில நேரங்களில் அதே துறையிலோ, வேறு துறையிலோ பதவி உயர்வுடன் மீண்டும் மக்களுக்கு வழக்கம்போலப் பணியாற்றும் வாய்ப்புபெறும் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. சிக்கிய லஞ்சப் பணம் சாட்சி சொல்ல வருவதில்லை. அதில் சிரித்தபடியிருக்கும் காந்தியும் சாட்சி சொல்ல வருவதில்லை.

அவர்கள் விஷயத்தில் ஒருவேளை "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது கடைப்பிடிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

கைதாகும் ஊழியர்கள் மீது இடைநீக்கம், துறைரீதியான விசாரணை என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்போ என நினைக்க வைக்கத் தக்கவிதத்திலேயே அமைந்துள்ளன.

நேர்மையான விசாரணை, தாமதமில்லா தீர்ப்பு, சிறை, வேலைபறிப்பு போன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்தாதவரை லஞ்சம் வாங்குவோர் எதுகுறித்தும் கவலைப்படப்போவதில்லை.

அரசை ஒரு மரம் எனக் கொண்டால் அனைத்துத் துறைகளும் கிளைகளுக்கு ஒப்பாகும். எல்லாக் கிளைகளிலுமே லஞ்சம் என்ற கரையான் தன் கைவரிசையைக் காட்டுவது இயற்கைதான். தாமதமின்றி நடவடிக்கை எடுத்து அவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் மரமும் வளம்பெறும்; மரத்தின் நிழலைப் பாதுகாப்பு என நம்பி நிற்கும் மக்களும் நிம்மதியாய் நலம்பெறுவர்!
கட்டுரையாளர் :மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ‌வோனேஜ்


இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்