Thursday, January 21, 2010

கசக்கும் உண்மைகள்

வரப்போகும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் ஆகியோருடனான ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட நிதித்துறை நிர்வாகிகளுடன் இப்போது ஆலோசனை நடந்து கொண்டி ருக்கிறது.

பணவீக்க விகிதமும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த இரண்டும்தான் முகர்ஜி இப்போது உடனே கவனித்தாக வேண்டிய முக்கிய பிரச்னைகள்.

பணவீக்க விகிதம் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் அது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகளை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அரசியல் ரீதியாகவும் ஆளும் கூட்டணிக்குத் தேர்தலில் பெருத்த தோல்வியை வழங்கும். பட்ஜெட் பற்றாக்குறையை இப்படியே வளரவிட்டால் அது நிதி நெருக்கடியில் போய் முடியும். பணவீக்க விகிதம் என்பதை பாமர மக்கள் மொழியில் சொல்வதென்றால் விலைவாசி உயர்வுதான்.

விலைவாசி உயர்வு பற்றி ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு உள்ள கவலையும் மத்திய அரசுக்கு உள்ள கவலையும் ஒன்றல்ல. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைகிறதே, சத்துள்ள காய்கறிகளையும் நல்ல உணவுப்பொருள்களையும் நிறைய வாங்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாட்டுக்கே போகிறதே என்பதுதான் ஏழை, நடுத்தர மக்களின் கவலை.

மத்திய அரசின் கவலை பொருளாதார ரீதியிலானது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு அதிகரித்துவிடுமே, வரிவிதிப்பையும் அதிகப்படுத்த முடியாதே, தொழில் - வர்த்தகத்துறைகளுக்குத் தரும் வரிச் சலுகைகளையும் இதர பணச் சலுகைகளையும் குறைக்க முடியாமல், பொருளாதார நிர்வாகம் ஆட்டம் கண்டுவிடுமே என்பதுதான்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் குறைவது குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை என்று கூறிவிட முடியாது, அதே சமயம் அவர்களுடைய கவலை பட்ஜெட் பற்றாக்குறையும் இதர பொருளாதாரக் காரணிகளும்தான் என்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் தொழில்துறையில் உற்பத்தியே சூடு பிடிக்கும் என்பதால் ஆட்சியாளர்கள் அதை வரவேற்பதும் உண்டு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நம்முடைய நிதி அமைச்சர்கள் மக்களுடைய பிரச்னைகளை அவர்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதையும், தொழிலதிபர்கள் - வியாபாரிகள் கேட்கும் சலுகைகளை வழங்குவதையுமே மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாடு முழுக்க உணவு தானியங்களையும் காய்கறி, பழங்களையும் சேமித்து வைக்க போதிய உலர் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் உரத்துக் கூறி வருகின்றன. ஆனால் அந்தத் திசையில் ஒரு அடியைக்கூட மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பது பற்றியது. நாடு முழுக்க உள்ள ஏழைகள், பழங்குடிகள், மலைவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் போன்றவற்றில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்காகப் பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வருகிறவர்கள் ஆமோதிக்கிறார்கள், ஆனால் அதற்காக அலட்டிக் கொள்வதே இல்லை. விலைவாசி உயர்வு குறித்து வலியுறுத்திக் கேட்டால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் அனுமதித்துவிட்டு விலைவாசியைக் குறைப்போம் என்று கூறுவது வெறும் உதட்டளவு உறுதிமொழியாகத்தானே இருக்கிறது? அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தாலும் சாகுபடியாளர்களான விவசாயிகளுக்குக் கிடைப்பதோ அதில் நாலில் ஒரு பகுதிதான். இடைத்தரகர்களும் ஊக வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்தான் பெரும் பங்கை விழுங்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கு காரணமாகவே அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

கரும்பு சாகுபடி செய்தால் கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. கரும்பாலைகள் தொடங்கி அரசு அமைப்புகள் வரை அனைவராலும் அலைக்கழிக்கப்படுவதே மிச்சம் என்ற விரக்தி காரணமாகவே கரும்பு சாகுபடியே இனி வேண்டாம் என்று ஏராளமான மாநிலங்களில் விவசாயிகள் அதிலிருந்து விலகி வருகின்றனர். உள்நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவதற்கும் இதுவே காரணம்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அரசு, கரும்புச் சாகுபடியாளர்களுக்கோ, சர்க்கரை நுகர்வோருக்கோ ஆதரவாக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதே உண்மை. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த போதிய நிதி இல்லை என்ற பல்லவியையே மத்திய, மாநில அரசுகள் பாடிவருகின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அந்த நிதியை பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால்தான் என்ன?

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க உலர் கிடங்குகளையும் பழங்கள், காய்கறிகளைப் பதமாக வைத்திருக்க குளிர்பதனக் கிடங்குகளையும் அவரவர் தொகுதிகளில் இந்த நிதியைக் கொண்டு அமைத்துக் கொள்ளுங்கள் என்று 3 ஆண்டுகளுக்கு நிதியைத் திருப்பிவிட்டால் என்ன?

தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறப்பது சாத்தியம் என்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட மத்திய, மாநில அரசுகளால் பொது விநியோகச் சங்கிலியை அமைக்க முடியாதா?

மக்களால் மக்களே மக்களை ஆளும் அரசாக இருந்தால் இது சாத்தியம்; ஊக வியாபாரிகளுக்காக ஊக வியாபாரிகளால் ஊக வியாபாரிகளே நடத்தும் அரசாக இருக்கும்போது அசாத்தியம்!
நன்றி : தினமணி

மும்பை பங்குச்சந்தையின் பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ‌அறிமுகம்

மும்பை பங்குச்சந்தையில், பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ஒன்று தொடங்கப் பட்டள்ளது. இதனை டில்லியில் மத்திய கனரக தொழில்-பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த இணையத்தளத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு, பங்கு விலைகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் குறித்து மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான மது கண்ணன் கூறும் போது, இலாபம் ஈட்டும் பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இல்லாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வசம் உள்ளவற்றில் 49 விழுக்காடு அரசு அதன் வசம் வைத்துக் கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

மற்ற பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கூடிய விரைவில் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ,சட்லஜ் ஜல் வித்யாத் நிகாம் லிமிடெட்,தேசிய அனல் மின் நிலையம், ரூரல் எலக்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


பெடரல் வங்கியை வாங்க ஐடிபிஐ முயற்சி

கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான பெடரல் வங்கியை, அரசுத் துறை வங்கியான ஐடிபிஐ வாங்க உள்ளது. இதற்கான நடைமுறைகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் கைமாறும் தொகை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு, மற்ற அரசு வணிக வங்கிகளுக்கு இணையான கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாஸிட்டுகளை ஐடிபிஐ வங்கியும் பெற்று விடும்.

தென்னிந்தியாவின் பெரிய தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. ரூ 33439 கோடி டெபாஸிட்டுகள் கொண்ட இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ 59000 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்டர்ன் யூனியன் வங்கியை இதே போல கையகப்படுத்தியது ஐடிபிஐ. இப்போது பெடரல் வங்கி தவிர, சவுத் இந்தியன் வங்கி, கர்நாடக வங்கி போன்றவற்றை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பெடரல் வங்கியை வாங்கும் ஐடிபிஐயின் முயற்சி பற்றி அதன் தலைவர் யோகேஷ் அகர்வால் வெளிப்படையாகப் பேசி வருகிறார். ஆனால் பெடரல் வங்கி நிர்வாக இயக்குநர் வேணுகோபாலோ மௌனம் சாதிக்கிறார்.

நன்றி : தினமலர்


Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி

எலுமிச்ச‌ை சுவையில் புதிய குளிர்பானம்: கோகோகோலா அறிமுகம்

எலுமிச்சை சுவை கொண்ட புதிய குளிர்பானத்தை கோகோ கோலா நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குளிர்பானத்திற்கு மினிட் மெய்ட் நிம்பு என பெயரிடப் பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, எலுமிச்சை சாறு அடிப்படையிலான சுவை கொண்ட குளிர்பானமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை போன்று புத்துணர்வு அனுபவத்தை அளிக்கும் என்று‌ தெரிவித்தார்.
400 மில்லி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். விலை முறையே ரூ. 15 மற்றும் ரூ. 40.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட குளிர்பானம் குறித்து, சந்தைப் பிரிவுத் துணைத் தலைவர் ரிக்கார்டோ ஃபோர்ட் கூறும்போது, தமிழகத்தில் திருநெல்வேலியில் கங்கை கொண்டான் ஆலை மற்றும் ஆந்திரத்தில் சித்தூரில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த குளிர்பானத்தில் எவ்வித பதப்படுத்திகள் மற்றும் வண்ணச் சேர்ப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. 'முற்றிலும் வீட்டு சுவை' என்ற வாசகத்துடன் இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்