Saturday, November 7, 2009

வருமுன் காவாதான் வாழ்க்கை!

உலகின் 2-வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, 1962-ம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு நேரிட்ட இந்த அவமானத்தால் இந்திய நாடு, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவை சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

1962-ம் ஆண்டு யுத்தத்துக்கு முன்பாகவே இந்தியாவின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க அனைத்து விதமான ராஜதந்திர நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டது. இந்தியாவாலும், சீனாவாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட இந்தியா - சீனா இடையேயான மக்-மோகன் எல்லைக்கோட்டைத் தாண்டி பல்வேறு விதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

திபெத்தை சட்டவிரோதமாக சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக ஆக்கிரமித்துக் கொண்டு திபெத்தியர்களை கொடுமைப்படுத்தியதோடு, திபெத்தியர்களின் மதத் தலைவர் தலாய்லாமாவை திபெத்தை விட்டு விரட்டியடித்தது. அப்போதைய சர்வதேசத் தலைவர்கள் இதுவிஷயத்தில் சீனாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தபோதும் நேருவின் தலைமையிலான சுதந்திர இந்திய அரசு இதுவிஷயத்தில் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது.

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து, இந்திய மக்களிடம் வரி வசூலித்து வந்தது. இதுவிஷயம் இந்திய மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதுகுறித்து பாரதிய ஜனசங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இந்திய எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்ததை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்த நேரு, சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் பதிலளித்தது நாடாளுமன்றக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. இந்தப் பதிலில் கோபம் கொண்ட ஜனசங்க உறுப்பினர் நாடாளுமன்ற அவையில் தனது வழுக்கைத்தலையைக் காட்டி, நேரு அவர்களே! என் தலையில்கூட புல் பூண்டு முளைப்பதில்லை, அதற்காக என் தலையை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? புல் பூண்டு முளைக்காத பூமியானாலும் அதை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், "இந்தி - சீனி பாய் பாய்' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தியா வந்த அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய்க்குச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சசீலக் கொள்கையை பெய்ஜிங்கில் அறிவித்தார். சீனாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். ஒருபுறத்தில் நேரு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்ட மை காயும் முன்பே இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்து, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

சீனா, இந்தியாவின் மீது 1962-ம் ஆண்டு போர் தொடுக்கும் என முன்கூட்டியே இந்திய நல விரும்பிகள் சொன்னபோது, அதை நேரு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால், இந்திய ராணுவத்தையும், அதற்குத் தேவையான போர் தளவாடங்களையும், இந்திய மக்களையும், இந்திய அரசையும் சீனாவின் ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு எதிராகத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளும் நிலையில் நேருவின் அரசு இல்லை.

எனவே, உலகையே வென்ற அலெக்சாண்டரை விரட்டியடித்த இந்திய நாடு, 1962-ல் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. 3,800 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதோடு, 40 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியா இழந்தது.

இருந்தபோதும், 1962-ல் இந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு காரணமாகவும், தேசபக்த எழுச்சி காரணமாகவும், தேசபக்தி கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் சீனா ஆக்கிரமிப்பு ஓரளவுக்கு முறியடிக்கப்பட்டது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, "சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது' என்று விரக்தியை வெளிப்படுத்தினார். கிருஷ்ணமேனன் ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகுதான், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நேரு உணர்ந்து கொண்டார்.

1962-ம் ஆண்டுக்கு முன்பாக எத்தகைய சூழ்நிலை நிலவியதோ அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது. இப்போதும் சீனா நமது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்பதோடு நமது நிலப்பரப்பில் உள்ள பாறைகளில் சிவப்பு எழுத்துகளில் சீனா என்ற பெயரை எழுதியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தைக் கடுமையாக சீனா எதிர்க்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சுற்றுப்பயணத்தைக்கூட சீனா கடுமையாக எதிர்க்கிறது.

சீனா வெளியிடும் தேச வரைபடங்களில் அருணாசலப் பிரதேசத்தை தனக்குட்பட்ட பகுதியாகக் காட்டிக் கொள்கிறது. காஷ்மீரைத் தனி நாடாக அங்கீகரித்து, அதற்கு சிறப்புத் தூதரை நியமித்துள்ளது.

இந்தியா மீது சீனா மீண்டும் போர் தொடுப்பதற்குண்டான அனைத்து விதமான முன்தயாரிப்புகளையும் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள்படி, இந்தியாவின் பெருநகரங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் அணுகுண்டு தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. ஹைனன் தீவில் அணுஆயுத நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. இத் தளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அணுஆயுதக் கப்பல்களை நிறுத்தி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.

இந்தியாவின் விமானப்படை தலைமை மார்ஷல் பாலிஹோமி மேஜர், இந்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "சீனா, இந்திய எல்லையில் ஏராளமான விமானப்படையைக் குவித்து வருகிறது. அதனால் நாமும் நம் விமானப்படையை சீனாவுக்கு நிகராக வலுப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் ராணுவ நிபுணர்களும் ராஜதந்திரிகளும் சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆதரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதுவிஷயத்தில் நேருவின் பாணியிலேயே செயல்பட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா நிறுத்தியுள்ளது. சீனா- இந்தியா இடையே 3,500 கி.மீ. வரை எல்லைக்கோடு உள்ளது. காஷ்மீர் பகுதியில் மட்டும் 36 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துவிட்டது.

சமீபத்தில் சீனா வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்தியாவை 36 துண்டாக உடைத்துப் பிரித்து பலவீனப்படுத்த வேண்டும் என பகிரங்கமாகப் பேசியுள்ளனர். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலம் மறைமுகமாக ஆட்சியை தன் கையில் வைத்துள்ள சீன அரசு, இந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டை உருவாக்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், உல்பா தீவிரவாதிகள், மணிப்பூர் போர்க் குழுக்கள், நாகா தீவிரவாதிகள் ஆகிய பயங்கரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக சீனா ஆயுத, பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் கோயு, இந்தியாவின் சார்பில் சீனாவுக்குச் செல்லும் பயிற்சி அதிகாரிகளின் குழுவில் இடம்பெற்றிருந்தார். சீனா, அவருக்கு மட்டும் விசா வழங்க மறுத்தது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, அதனால், கணேஷ் கோயு சீன நாட்டு பிரஜை. அதனால் விசா வழங்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, சீனாவுக்கு அனுப்ப இருந்த இந்தியக் குழுவின் பயணத்தையே இந்திய அரசு ரத்து செய்தது.

அருணாசலப் பிரதேசத்தில் இந்திய அரசு ரூ. 3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியது. இதுவிஷயத்தில் சீனா தலையிட்டு, இந்திய அரசுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்க வேண்டிய தொகையை வழங்கக் கூடாதென நிர்பந்தம் செய்தது. அருணாசலப் பிரதேசத்தில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை சீனா தடுக்கிறது.

இந்தியாவின் வற்றாத மிக நீளமான பிரம்மபுத்திரா இந்தியாவில் உற்பத்தியாகி சீனாவுக்குள் புகுந்து, மீண்டும் இந்தியாவுக்குப் பாயும் நதியை சர்வதேச நதி நீர் கொள்கைக்கு எதிராக சீன அரசு, அணை கட்டித் தடுப்பதன் மூலம் இந்தியாவின் நீர் திட்டம், நீர்மின் திட்டங்களை முடக்க நினைக்கிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள சிறிய அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்திய விரோத எண்ணங்களை வளர்ப்பதோடு, மேற்கண்ட நாடுகளுக்கு "எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கருத்துக்கேற்ப சீனா பல்லாயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நாடுகளில் முதலீடு செய்து, போக்குவரத்து சாலைகள், துறைமுகங்கள் மின் உற்பத்தி நிலையங்கள், அணுஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து வருவதோடு ராணுவத் தடவாளங்களையும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்திய - சீனா போர் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வசதிகளை சீன ராணுவம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் திட்டத்துக்கு "ஆபரேஷன் முத்துமாலை'த் திட்டம் என்று பெயர்.

இந்த முத்துமாலைத் திட்டம் எப்போது வேண்டுமானாலும், ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் திட்டமாக மாறும்.

1950-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியா வாய்மூடி மெüனமாக இருந்த காரணத்தால் - சீனாவின் அடாவடித்தனத்தை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறிய காரணத்தால், இன்றுவரை திபெத் விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து சீனா தப்பி வருகிறது. இதுவிஷயத்தில் சர்வதேச அரங்கில் இந்தியா, சீனாவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு திபெத் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அதேபோல், இலங்கை சிங்கள அரசுக்கு, சீனா கொடுக்கும் ஒத்துழைப்பு உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உகந்த, இந்தியாவுக்கு விசுவாசமான தமிழ் ஈழ மக்களை ஆதரிக்க வேண்டும்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்' என வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஏற்கெனவே, தனது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் ஏராளமான நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளது. அதைப் போரிட்டு மீட்காவிட்டாலும், இருக்கும் நிலப்பரப்பையாவது நேரு பாணியில் இருந்து விலகி, மன்மோகன் சிங் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தேசபக்தர்களின் வேண்டுகோள்.
நன்றி : தினமணி

No comments: