Sunday, July 27, 2008

வருமான வரி சிறப்பு கவுன்ட்டர் திறப்பு : ரூ. 23,861 கோடி வசூலிக்க இலக்கு


''இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள வருமான வரி செலுத்துவோர் 2007-08ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி இறுதி நாளாகும். வருமான வரி கணக்குகளை பொதுமக்கள் எளிதாக தாக்கல் செய்யும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் 42 சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புக் கவுன்ட்டர்களை மத்திய வருவாய்த் துறைச் செயலர் பிடே நேற்று துவக்கி வைத்தார். இந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட, வரும் 31ம் தேதி வரை செயல்படும். காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்குளைச் செலுத்துவதற்காகவும், ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கும் சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்குப் படிவங்களை தீதீதீ.டிணஞிணிட்ஞுtச்துடிணஞீடிச்.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்திலிருந்து, 'டவுண்லோடு' செய்து கொள்ளலாம். சிறப்புக் கவுன்ட்டர்கள் குறித்து வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராம கிருஷ்ணன் கூறியதாவது: சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் வருமான வரிக் கணக்குகளைச் செலுத்த சிறப்புக் கவுன்ட்டர்களை அமைத்துள்ளோம். கடந்த ஆண்டு சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். கடந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் மூன்று லட்சம் பேர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இது மூன்றரை லட்சமாக உயரும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ. நான்காயிரத்து 261 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


நன்றி : தினமலர்


No comments: