Thursday, January 21, 2010

மும்பை பங்குச்சந்தையின் பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ‌அறிமுகம்

மும்பை பங்குச்சந்தையில், பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ஒன்று தொடங்கப் பட்டள்ளது. இதனை டில்லியில் மத்திய கனரக தொழில்-பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த இணையத்தளத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு, பங்கு விலைகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் குறித்து மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான மது கண்ணன் கூறும் போது, இலாபம் ஈட்டும் பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இல்லாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வசம் உள்ளவற்றில் 49 விழுக்காடு அரசு அதன் வசம் வைத்துக் கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

மற்ற பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கூடிய விரைவில் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ,சட்லஜ் ஜல் வித்யாத் நிகாம் லிமிடெட்,தேசிய அனல் மின் நிலையம், ரூரல் எலக்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


பெடரல் வங்கியை வாங்க ஐடிபிஐ முயற்சி

கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான பெடரல் வங்கியை, அரசுத் துறை வங்கியான ஐடிபிஐ வாங்க உள்ளது. இதற்கான நடைமுறைகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் கைமாறும் தொகை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு, மற்ற அரசு வணிக வங்கிகளுக்கு இணையான கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாஸிட்டுகளை ஐடிபிஐ வங்கியும் பெற்று விடும்.

தென்னிந்தியாவின் பெரிய தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. ரூ 33439 கோடி டெபாஸிட்டுகள் கொண்ட இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ 59000 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்டர்ன் யூனியன் வங்கியை இதே போல கையகப்படுத்தியது ஐடிபிஐ. இப்போது பெடரல் வங்கி தவிர, சவுத் இந்தியன் வங்கி, கர்நாடக வங்கி போன்றவற்றை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பெடரல் வங்கியை வாங்கும் ஐடிபிஐயின் முயற்சி பற்றி அதன் தலைவர் யோகேஷ் அகர்வால் வெளிப்படையாகப் பேசி வருகிறார். ஆனால் பெடரல் வங்கி நிர்வாக இயக்குநர் வேணுகோபாலோ மௌனம் சாதிக்கிறார்.

நன்றி : தினமலர்


Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி

எலுமிச்ச‌ை சுவையில் புதிய குளிர்பானம்: கோகோகோலா அறிமுகம்

எலுமிச்சை சுவை கொண்ட புதிய குளிர்பானத்தை கோகோ கோலா நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குளிர்பானத்திற்கு மினிட் மெய்ட் நிம்பு என பெயரிடப் பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, எலுமிச்சை சாறு அடிப்படையிலான சுவை கொண்ட குளிர்பானமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை போன்று புத்துணர்வு அனுபவத்தை அளிக்கும் என்று‌ தெரிவித்தார்.
400 மில்லி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். விலை முறையே ரூ. 15 மற்றும் ரூ. 40.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட குளிர்பானம் குறித்து, சந்தைப் பிரிவுத் துணைத் தலைவர் ரிக்கார்டோ ஃபோர்ட் கூறும்போது, தமிழகத்தில் திருநெல்வேலியில் கங்கை கொண்டான் ஆலை மற்றும் ஆந்திரத்தில் சித்தூரில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த குளிர்பானத்தில் எவ்வித பதப்படுத்திகள் மற்றும் வண்ணச் சேர்ப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. 'முற்றிலும் வீட்டு சுவை' என்ற வாசகத்துடன் இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Monday, January 18, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது.

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும் நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும். மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து.

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.
நன்றி : தினமணி