Wednesday, October 22, 2008

உலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வேலை இழப்பர் : ஐ.எல்.ஓ., கவலை

உலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் லேபர் ஏஜென்சி கவலை தெரிவித்திருக்கிறது. இப்போதுள்ள நிலையில் கணக்கெடுத்தால், 1997ம் ஆண்டு 19 கோடியாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2010 ம் ஆண்டு வாக்கில் 21 கோடியாக உயர்ந்து விடும் என்று ஐ.எல்.ஓ.,வின் இயக்குனர் ஜூவன் சோமாவியா தெரிவித்துள்ளார். இது தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரிக்கும் என்றும் 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்றும் ஐ.எல்.ஓ., தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இது வெறும் வால்ஸ்டிரீட் பிரச்னை மட்டும் அல்ல. எல்லா நாடுகளுமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சோமாவியா தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


வீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், 'ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்' என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Monday, October 20, 2008

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத ரெபோ ரேட் கட் போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 247.74 புள்ளிகள் ( 2.48 சதவீதம் ) உயர்ந்து 10,223.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 48.45 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) உயர்ந்து 3,122.80 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, பேங்கிங், பார்மா,மெட்டல் மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. ரியல் எஸ்டேட், பவர், சில ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத பெரோ ரேட் குறைப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவு உதவி புரிந்தது.இன்று பேங்கிங் இன்டக்ஸ் 2.08 சதவீதம் அல்லது 149.03 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2003 க்குப்பின் இப்போது தான் ரெபோ ரேட் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் கட்டாய பண கையிருப்பு விகிதமும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் வங்கிகளில் தாராளமாக பணபுழக்கம் இருந்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.டி.பி.ஐ. வங்கியின் சேர்மன் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிகள் வட்டியை குறைப்பது, கடனுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும் என்றார்.
நன்றி :தினமலர்


ஐந்து ஆண்டு ஊதியமில்லா விடுப்பு; திரும்பி வந்தால் வேலை: சர்ச்சைக்கு ஏர் இந்தியா முற்றுப்புள்ளி

ஐந்தாண்டுக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், சம்பளம் கிடைக்காது; ஐந்தாண்டுக்கு பின் மீண்டும் திரும்பி வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!- இப்படி ஒரு நூதனமான தற்காலிக 'வி.ஆர். எஸ்.,' திட்டத்தை, மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, 2002 ல் அறிமுகம் செய்தது. இந்த சலுகை திட்டத்தை ஏற்று, அப்போது 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர். இதனால், ஏர் இந்தியாவுக்கு சில நூறு கோடிகள் செலவு மிஞ்சியது. இந்த சிக்கன நடவடிக்கையால் விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஊழியர்களில் சிலர், மீண்டும் வந்து வேலையில் சேர்ந்தனர். இந்த திட்டத்தை தான் மீண்டும் ஏர் இந்தியா இப்போது அமல்படுத்த உள்ளது. ஆனால், ஏர் இந்தியா செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா கூறியதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட சில பத்திரிகைகளும், 'டிவி'க்களும் 'ஏர் இந்தியா தன் ஊழியர்கள் சிலரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டமிட்டுள் ளது' என்று வெளியிட்டு விட்டன. இதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கடுப்பாகி விட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். 'ஏர் இந்தியா எல்லா வகையிலும் நிதி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் அமல்படுத்த மாட்டோம். மாறாக, ஏற்கனவே 2002ல் அமல்படுத்த நீண்ட விடுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார். 'சுய விருப்ப ஓய்வு திட் டம் அல்ல; சுய விடுப்பு திட்டத்தை தான் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதனால், நிர்வாகத்துக்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி நல்லது. நிதி இழப்பை தடுக்க இது நிர்வாகத்துக்கு உதவுகிறது. அதுபோல, ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதையும் தடுக்கிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு இது தொடர்பாக பல பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது' என்று பார்கவா கூறினார். ஏர் இந்தியா மற்றும் பல தனியார் நிறுவனங்கள், விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நீண்ட நாள் குத்தகைக்கு வாங்கித்தான் இயக்கி வருகின்றன. பயணிகள் இல்லாமல், ஒரு விமானம் நின்று விட்டாலும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலை இப்போது ஏற்பட்டு வருகிறது. அதனால், விமானங்களை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதை சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. விமானம் ஓடாத போது, அதன் ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அதனால், இதுபோன்ற நிலையை தவிர்க்கவும், இழப்பை முடிந்தவரை தடுக்கவும் ஏர் இந்தியா இந்த புதுமை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, October 19, 2008

நானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்

டாடாவின் நானோ காருக்கு போட்டியாக அஜந்தா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவின் கனவுத் திட் டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்கூர் பிரச்னையால் திட்டமிட்டபடி நானோ கார், குறித்த காலத்திற்குள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு போட்டியாக கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான அஜந்தா, குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரெவா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத், கட்ச் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையில் காரின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அஜந்தா நிறுவனங்களின் இயக்குனர் ஜய்சுக் படேல் கூறுகையில், 'ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய அனுபவம் உள்ளது. இதனால், எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. காரின் மாடல் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு பணி முடிவடைந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது' என்றார். அஜந்தா நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், 'காரின் விலை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும். இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து விசாரணைகள் வரத் துவங்கியுள்ளன' என்றன.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் 'உல்டா புல்டா' கனஜோர் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை, 10 ஆயிரத்திற்கும் கீழே வராது என்று தைரியமாக நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் பயப்படும்படியாக 10 ஆயிரத்திற்குக் கீழே வந்துள்ளது. உலகளவில் சந்தைகள் இறங்கும் போது இங்கும் இறங்கினால், அதனால் இறங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உலகளவில் சந்தைகள் மேலே செல்லும் போது கூட இங்கு சந்தை இறங்குவது, சந்தையில் முதலீட்டாளர் கள் மத்தியில் சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. 'மேகம் கறுக்குது, மழை வரப் பார்க்குது' என்ற ஆவலோடு பங்குச் சந்தையைப் பார்த்தால், கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. சந்தை வியாழனன்று இறங்கவே இறங்காது என்று பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு வலுவான காரணங்களும் இருந்தது.
அதாவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை புதனன்று சந்தை நேரத்திற்கு பிறகு எடுத்திருந்தது. அது சந்தையை வியாழனன்று பலப்படுத்தும் என்றே எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகளுடன், புதன்கிழமை மேலும் பல சலுகை அறிவித்தது. இதன் மூலம் வங்கிகளுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்த சலுகைகளின் மூலம் வியாழக்கிழமை சந்தை ஏற்றத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது உல்டா புல்டா. வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்., மேலும் குறைக்கப் படாது என மத்திய நிதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர் வயிற்றில் புளி கரைத்தபடி இருந்தது. ஆனால், ஆபத்பாந்தவனாக வந்த செய்தி பணவீக்கம் குறைந்திருக்கிறது என்றது தான். அது, சந்தையில் கிட்டத்தட்ட 570 புள்ளிகள் சரிவிலிருந்து மீள்வதற்கு உதவியது. முடிவாக 227 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. அனைத்து துறைகளும் இறங்கின என்றே கூற வேண்டும்.
காரணம் இது தான்: பங்குச் சந்தையின் ஜாம்பவான் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் ஹெட்ஜ் பண்ட் ஒன்று சந்தையில் அதிகமாக பல பெரிய கம்பெனியின் பங்குகளை வியாழனன்று விற்கத் தொடங்கியதால், சந்தையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேலாக குறைந்தது. உலக சந்தைகளை ஒட்டி வெள்ளியன்று காலை சந்தை மேலேயே துவங்கியது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு சரியத் தொடங்கியது. அதுவும் 10,000 புள்ளிகளுக்கு கீழே. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000க்கும் கீழே சென்று சந்தை முடிவடைந்தது. இதுவே முதல் முறையாகும். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்று பாடத் தோன்றுகிறது. எதிர்பார்க்காத எல்லாம் நடப்பது தான் பங்குச் சந்தை. வேண்டாம் என்றால் எல்லாரும் வெளியேற முயற்சிப்பர். வேண்டும் என்றால் எல்லாரும் போட்டி போட்டு வருவர். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 606 புள்ளிகள் குறைந்து 9,975 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 194 புள்ளிகள் குறைந்து 3,074 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கச்சா எண்ணெய்: பேரலுக்கு 147 டாலருக்கு மேலே சென்றிந்த எண்ணெய், தற்போது இந்த வாரம் 70 டாலர் அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலே குறைந்துள்ளது. இவ்வளவு குறைவாக தற்போது இருப்பதற்கு காரணம், அமெரிக்காவில் கையிருப்பு கச்சா எண்ணெய் அதிகமாக இருப்பது என்று சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் விலை குறைவது நமக்கு நல்லது தான். ஏனெனில், நம் நாட்டுடைய இறக்குமதியில் முதலிடம் வகிப்பது கச்சா எண்ணெய் தான். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளா அப்படியென்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு சந்தை வந்துள்ளது. இது நிச்சயம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில், பல கம்பெனிகள் வங்கிகளிடமிருந்து அதிக வட்டியில் கடன்கள் வாங்குவதை விட, முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு முதல் திரட்டுவதை ஒரு வாய்ப்பாகக் கருதின. மேலும், அரசாங்க கம்பெனிகள் தங்களுடைய பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் திட்டமும் தள்ளிப் போகிறது. பங்குச் சந்தையும் ஒரு கரம் தானே; ஏற்றமும் இறக்கமும் இருக்கத்தானே செய்யும். வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பமா? சந்தையில் இதுவரை அதிகம் ஈடுபடாத, சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்கும் கேள்வி இது தான். 15,000 புள்ளிகள் இருக்கும் போதே இது அருமையான சந்தர்ப்பம் என்று கூறப்பட்டது. தற்போது, சந்தை 10,000க்கும் கீழே வந்துள்ளது. பழங்கள் பழுத்து தொங்குகின்றன. ஆனால், பறிப்பதற்கு ஆட்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தும் வகையில் நடைமுறை மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதலால், மறுபடி வெளிநாட்டுப் பறவைகள், இந்திய பங்குச் சந்தை குளத்தை நோக்கி வர ஆரம்பிக்கலாம். சந்தையில் உள்ள புரோக்கர்களும், சந்தை வல்லுனர்களும் 10,000 போகும், 8,000 வரை போகும் என்று தங்களது வாடிக்கையாளர்களிடம் பயமுறுத்தி வருவதும், மற்றொரு பக்கம், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது பயப்பட தேவையில்லை என்றும், சந்தை ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லி வருகின்றனர். இப்படி குட்டையை கலக்கி சிலர் மீன் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். புதிய முதலீட்டாளர்கள் தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை ஒதுங்கியிருப்பதே மேல்.
நன்றி :தினமலர்

Saturday, October 18, 2008

இந்திய பங்கு சந்தையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அன்னிய முதலீட்டாளர் கையில்


இந்திய பங்கு சந்தையில் ஒரு காலத்தில் 20 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டிச்சென்ற சென்செக்ஸ், இப்போது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. 10,000 புள்ளிகளை ஒட்டியே இருந்த சென்செக்ஸ் 20,582 புள்ளிகளை எட்டுவதற்கு 23 மாதங்கள் வரை தேவைப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் 10,000 புள்ளிகளுக்கும் கீழே போய் 9,975 புள்ளிகளாக ஆனதற்கு 9 மாதங்கள் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்ததற்கும், மீண்டும் அது 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கும் பெரும் காரணமாக இருந்தது எஃப்.ஐ.ஐ. என்று சொல்லப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்தான். பிப்ரவரி 7,2006 அன்று 10,082 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் ஜனவரி 10,2008 அன்று 20,582 புள்ளிகளாக உயர்ந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,00,951 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பணபுழக்கம் நல்லவிதமாக இருந்தது. சென்செக்ஸ் 20,582 புள்ளிகளில் இருந்து 9,975 புள்ளிகளாக இறங்கியபோது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து ரூ.47,299 கோடியை எடுத்திருந்தார்கள். இது இந்தியாவின் பணப்புழக்கத்தை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது. அதாவது சென்செக்ஸ் உயர்ந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு புள்ளி உயர்வதற்கும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதற்காக ரூ.9.61 கோடியை செலவு செய்திருந்தனர். ஆனால் சென்செக்ஸ் இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு புள்ளி இறங்கும்போதும் அவர்கள் ரூ.4.46 கோடியை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் இருந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்களில் முதலீடு பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ரூ.8 லட்சம் கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே திரும்ப எடுத்திருந்தாலும் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 50 சதவீதம் குறைந்து போனது.

நன்றி : தினமலர்