Friday, October 31, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக ஆரம்பித்ததிலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சென்செக்ஸ் 792.03 புள்ளிகள் உயர்ந்து 9,836.54 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 214.80 புள்ளிகள் உயர்ந்து 2,911.85 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் திங்கட்கிழமை வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்கு சந்தை, செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மட்டும் நடந்த முகுரத் வர்த்தகத்தின் போது 500 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளும் சந்தையில் முன்னேற்றம் தான் காணப்பட்டது. நேற்று விடுமுறைக்குப்பின் இன்று துவங்கிய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களியையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில்,பேங்கிங், டெலிகாம், ஐ.டி., ஆட்டோ மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்டமாக 9,870.42 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 743.55 புள்ளிகள் ( 8.22 சதவீதம் ) உயர்ந்து 9,788.06 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 2,921.35 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 188.55 புள்ளிகள் ( 6.99 சதவீதம் ) உயர்ந்து 2,885.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம்ற உயர்ந்திருந்தது மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள்தான். 23 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹெச்டிஎஃப்சி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன், ஹெச்.சி.எல் டெக், கெய்ர்ன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 5 சதவீதம் இறங்கியிருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 2.52 சதவீதம், சீனாவின் ஷாங்காய் 1.97 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 0.43 சதவீதம் இறங்கியிருந்தது. ஆனால் ஜகர்த்தா, கோஸ்பி, தைவானில் 2.6 சதவீதத்தில் இருந்து 7.06 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி 3 மாதங்களுக்குப்பின், இப்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், முக்கியமாக, தனியார் இன்சூரன்ஸ் துறையில் இப்போது 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு, இனிமேல் 49 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த முடிவை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனினும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்படுவதால் ஏராளமான முதலீடு இந்தியாவுக்குள் வரும் என்றும் அது, நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக இதைத்தான் இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வந்தார்கள்.மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொண்டபின்புதான் மத்திய அரசால் இன்சூரன்ஸ் துறையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் ? : சிதம்பரம்

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்டுள்ளார். சமீபத்தில் அசோசெம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்து இன்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார். புதிய வேலை வாய்ப்பு உருவாகுதல் வேண்டுமானால் குறையுமே ஒழிய ஏற்கனவே இருக்கும் வேலையில் பாதிப்பு வராது என்றார் அவர். விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், கட்டுமானம் ஆகிய ஏழு துறைகளில் இன்னும் 10 வருடங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று சொன்ன அசோசெம்மின் கருத்தை, இன்னொரு தொழில் துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ.,யும் மறுத்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மேலும் தெரிவித்தபோது, இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சியால், தே. ஜ. கூட்டணி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலை வாய்ப்பை விட இப்போது கூடுதலாகத்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றார். அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி 5.8 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது எழும் இம்மாதிரியான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்றார் அவர். அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து வருவதை குறித்து அவரிடம் கேட்டபோது, உலக அளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானால் அது முன்னேறிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். அதே நேரம் இந்தியாவில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்திய பொருளாதாரம், உள்நாட்டு பயன்பாடு மற்றும் முதலீட்டை சார்ந்தே அமைந்திருக்கிறது. இங்கு ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பு என்பது சீனாவை போல் அவ்வளவு கடுமையானதாக இருக்காது என்றார்.
நன்றி : தினமலர்

சூடாகிறது என்று புகார் : ஒரு லட்சம் கம்ப்யூட்டர் பேட்டரிகளை திரும்ப பெறுகிறது சோனி

ஜப்பானின் சோனி கார்பரேஷன் தயாரித்து கொடுத்து, லேப்டாப்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் பேட்டரிகள், சூடாகிறது என்று வந்த புகாரினால் திரும்ப பெறப்படுகிறது. சோனி தயாரிப்பு பேட்டரிகள் சூடாகிறது என்றும் அதிலிருந்து புகை வருகிறது என்றும் வந்த சுமார் 40 புகார்களால், அந்த பேட்டரிகளை சோனி நிறுவனம் திரும்ப வாங்குகிறது. இதனால் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டு விட்டது என்று 21 பேரும், சூடான பேட்டரியால் தோல் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது என்று நான்கு பேரும் இதுவரை புகார் அளித்திருக்கிறார்கள். ஹேலட்-பேக்கார்ட், டோஷிபா, டெல் போன்ற முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள், சோனி பேட்டரியை அவர்களது லேப்டாப்களில் பொருத்தியிருந்தார்கள். அக்டோபர் 2004 க்கும் ஜூன் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள்தான் இந்த புகாருக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரி பிரச்னையில் சோனியின் வையோ லேப்டாப்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் 32,000 சோனி பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. இதில் பெருமாலானது ஹேலட்-பேக்கார்ட்டில் பொருத்தப்பட்டிருந்தது. சோனி பேட்டரிகள் பொருத்தப்பட்ட லேப்-டாப்களை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். டேஷிபாவின் 14,400 லேப்-டாப்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யுகோ சுகஹரா தெரிவித்தார். 2006 ம் ஆண்டிலும் ஒரு தடவை சோனியின் ஒரு கோடி லேப்-டாப் பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. அப்போதும் அது சூடாகிறது என்றுதான் புகார் வந்தது.
நன்றி : தினமலர்


சிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் குறைவதால் பலன் வருமா?

கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் 'வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை' குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.
நன்றி : தினமலர்


சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை 'டல்' : சேதுராமன் சாத்தப்பன்

மொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா? பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ? இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்.

நன்றி :தினமலர்



Thursday, October 30, 2008

அடுத்த மாதம் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கிறது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த மாதம் சிங்கப்பூரில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கிறது. முதலில் அங்குள்ள இந்தியர்கள் எங்களது பாலிசியை வாங்கிக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம் என்று எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குநர் டி.கே.மெஹ்ரோட்டா தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள இந்தியர்களிடம் எங்களது பாலிசியை விற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி.,யின் பாலிசிகளுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்து வருவதால், இந்த பொருளாதார சரிவு நிலையிலும் எங்களால் பாலிசியை இந்தியர்களிடையே சுலபமாக விற்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரை அடுத்து அது ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்திலும் வர்த்தகத்தை விரிவு படுத்தவும் எல்.ஐ.சி.,திட்டமிட்டிருக்கிறது. இருந்தாலும் எல்.ஐ.சி.,யின் இங்கிலாந்து கிளையில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனினும் அது, அங்குள்ள மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு போட்டி நிறுவனமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களுக்கு அங்கு சில தடைகள் இருப்பதால் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறோம். விரைவில் வளர்ச்சியை காண்போம் என்றார் மெஹ்ரோட்டா. தற்போது எல்.ஐ.சி.,க்கு இங்கிலாந்து, மொரீசியஸ், ஃபிஜி, நேபாளம், அரபு நாடுகள், சவுதி அரேபியா, மற்றும் பஹ்ரெய்னில் அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் எல்.ஐ.சி.,யின் ஏஜென்ட் எண்ணிக்கையையும் அதிகரிக்க அது திட்டமிட்டிருக்கிறது. இப்போது அதற்கு 12 லட்சம் ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் அதில் 30 சதவீதத்தை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குழைவால், எல்.ஐ.சி.,யின் யூனிட் லிங்க் பாலிசி திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான திட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றம் குறித்து மக்களிடையே சரியாக புரிதல் தன்மை இல்லாததால், நாங்கள் இந்த திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். முன்பு 85 சதவீதமாக இருந்த யூலிப் திட்டங்கள் இப்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டன என்றார் மெஹ்ரோட்டா. இந்திய இன்சூரன்ஸ் தொழிலில் இப்போதும் 55 சதவீத மார்க்கெட் ஷேர் எல்.ஐ.சி.,க்கு இருக்கிறது என்று சொன்ன மெஹ்ரோட்டா, ஹெல்த் பிளஸ் என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நாங்கள் 60,000 பேருக்கு விற்றிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

இந்திய டெலிகாம் நிறுவனத்தை ரூ.6,120 கோடிக்கு வாங்கும் நார்வே நிறுவனம்

யூனிடெக் வயர்லெஸ் என்ற இந்திய நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, நார்வே நிறுவனமான டெலினோர் ரூ.6,120 கோடிக்கு வாங்குகிறது.அதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கிறது. உலகின் ஏழாவது பெரிய டெலிகாம் ஆப்பரேட்டரான நார்வேயின் டெலினோருக்கு உலகமெங்கும் 15 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கில்களுக்கான டெலிகாம் லைசன்சை ரூ.1,650 கோடிக்கு வாங்கி வைத்திருந்தது. இதன் காரணமாக யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தில் மதிப்பு ரூ.11,620 கோடியாக உயர்ந்து விட்டது. டில்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கிற்கு சொந்தமானதுதான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம். பணப்பட்டுவாடா விஷயத்தில் அதற்கு ஏற்பட்ட கெட்ட பெயரால் கடந்த வாரத்தில் அதன் பெயர் பத்திரிக்கைகளில் பெரிதாக பேசப்பட்டது. பங்கு மதிப்பும் சரிந்து போயிருந்தது. இப்போது இதன் பங்கு ஒன்றிற்கு ரூ.50 என்ற விலையில் இதனை நார்வே நிறுவனமான டெலினோர் வாங்கிக்கொள்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் அது இங்கு ரூ.15,000 கோடி முதலீடு செய்து, 22 நகரங்களில் சேவையை துவங்க இருக்கிறது. முதலில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் இருக்கும் 13 நகரங்களில் அது சேவையை துவங்க இருக்கிறது. அனேகமாக அடுத்த வருட மத்தியில் அந்த சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. டெலினோர் நிறுவனத்திற்கு பங்குகள் விற்கப்படுவது பற்றி கருத்து தெரிவித்த யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சேர்மன் சஞ்சை சந்த்ரா, மெஜாரிட்டி ஷேரோ, மைனாரிட்டி ஷேரோ, எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவைப்பட்டார். அதனால்தான் அவர்களுக்கு பங்குகள் விற்கப்படுகின்றன... எங்களுக்கும் நிறைய முதலீடு தேவைப்படுகிறது என்றார். நாங்கள் பெற்றிருக்கும் லைசன்ஸ் மதிப்பிற்கு ஈடாக ஒரு நல்ல விலை கிடைத்ததால்தான் நாங்கள் விற்க முன்வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதத்தில்தான் இன்னொரு வெளிநாட்டு நிறுவனமான யு.ஏ.இ.,யை சேர்ந்த எடிசலாட், 13 சர்க்கிள்களுக்கு டெலிகாம் லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை ரூ.4,050 கோடிக்கு வாங்கியது. இது தவிர கடந்த ஜூன் மாதத்தில், வெறும் இரண்டு சர்க்கிள்களுக்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருந்த பிகே மோடியின் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 40.8 சதவீத பங்குகளை ஏவி பிர்லாவுக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
நன்றி :தினமலர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: சில வாரங்களுக்கு காத்திருங்கள்...

'கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபோதிலும், இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பின்பே, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை விலை குறைப்பு என்பதற்கே இடமில்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போதே அதிகமாக ஏறிய விலையில் பாதி விலைக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரச்னை எழுப்பிய போது, ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அறிவித்து இருந்தார். தற்போது, கச்சா எண்ணெயின் விலை நினைத்து பார்க்காத வகையில் பழைய நிலைக்கு நெருங்கிவிட்டது. இருப்பினும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கரமாக சரிந்து விட்டது. இதனால், கச்சா எண்ணெய்க்கு டாலரில் மாற்றி கொடுக்கும்போது தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு கணக்கு காட்டி வருகிறது. இதையேதான் நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சக துணை செயலர் எஸ்.சுந்தரேசன் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, குறைந்துவந்தாலும், பெட்ரோல் ,டீசல், காஸ் விலையை குறைப்பது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை. 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துவந்த போதிலும், இதே நிலைக்கு ஸ்திரமாகுமா என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்பட்டு வரும் இழப்புகளை மீண்டும் தொடராத அளவுக்கு நிலைமை யை சமாளிக்க முடியுமான என கவனித்து வருகிறோம். எனவே இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பிறகு முடிவு செய்யப்படும். ஒன்று இரண்டு நாட்களில் ஏற்படும் விலை குறைவை வைத்து முடிவு செய்ய முடியாது. நேற்று முன் தினம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 56 டாலராக இருந்தது. இன்று இரண்டு டாலர் கூடியுள்ளது. சீரானநிலையில் ஸ்திரமாகும் பட்சத்தில் விலை குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


வட்டியை ஒரு சதவீதமாக குறைத்தது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாகவே மோசமான நிதி நிலையில் இருந்து வரும் அமெரிக்கா, பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், அதிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றும் விதமாக அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை குறைத்திருக்கிறது. இப்போது அது விதிக்கும் வட்டி வெறும் ஒரு சதவீதம்தான். இந்த மாத துவக்கத்தில் தான், 2 சதவீதமாக இருந்த வட்டியை 1.5 சதவீதமாக அவசரமாக குறைத்தது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, உலகின் மற்ற ஐந்து மத்திய ரிசர்வ் வங்கிகளும் அப்போது வட்டியை குறைத்தன. ஆனாலும் இந்த நடவடிக்கை, அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 சரிவைத்தான் சந்தித்திருக்கிறது.செப்டம்பர் 2007ல் 5.25 சதவீதமாக இருந்த வட்டி இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு சதவீத வட்டி, கடந்த ஜூன் 2003 க்கும் ஜூன் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததுதான். இந்த வட்டி குறைப்பை ஏற்கனவே எல்லா பங்கு வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுதான் இருந்தார்கள் என்பதால், இதனால் ஒன்றும் பங்கு வர்த்தகத்தில் மாற்றம் நிகழவில்லை. நேற்றைய வர்த்தக முடிவில் டவ் ஜோன்ஸ் 0.82 சதவீதம், அல்லது 74.16 புள்ளிகள் குறைந்து, 8990.96 புள்ளிகளில் முடிந்திருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ், 1.11 சதவீதம், அல்லது 10.42 புள்ளிகள் குறைந்து 930.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆனால் நாஸ்டாக் 0.47 சதவீதம், அல்லது 7.74 புள்ளிகள் உயர்ந்து 1657.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 10.68 சதவீதமாக குறைந்தது

அக்டோபர் 18 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 10.68 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 சதவீதமாக இருந்தது. எரிபொருள் விலை குறைவு, உற்பத்தி பொருட்களில் விலை குறைவு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைவு போன்ற காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக 11 சதவீதத்திற்கும் மேல் இருந்த பணவீக்கம் இப்போது 0.39 சதவீதம் குறைந்து, 11 சதவீதத்திற்கும் கீழே வந்திருக்கிறது.கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.11 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 8.75 சதவீதமாக இருந்த பணவீக்கம், பெட்ரோலிய பொருட்களில் விலை உயர்வால் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. இப்போது ரிசர்வ் வங்கியின் சி.ஆர்.ஆர்/ ரிபோ ரேட் குறைப்பால் விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகியிருக்கிறது. பருப்பு, பழங்கள், கோதுமை விலை குறைந்திருக்கிறது.அயர்ன் அண்ட் ஸ்டீல் விலை 0.5 சதவீதம் குறைந்திருக்கிறது. துத்தநாகம் விலை 6 சதவீதம் குறைந்திருக்கிறது. வாசனை திரவியங்கள் விலை 0.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. காய்கறிகள் விலை 2.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நிதி நெருக்கடி விவகாரம்: சிதம்பரம் ஆலோசனை

சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை சமாளிப்பது குறித்து அமெரிக்கா ஜி-20 நாடுகளின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து முடிவு செய்வதற்காக நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், விரிவான ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி, சர்வதேச நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக பல நாடுகளில் பங்குச்சந்தைகள் படுத்துவிட்டன. இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல நாடுகள் மண்டையை போட்டு குழப்பி வருகின்றன. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்து முடிவு செய்வதற்காக 'ஜி-20' நாடுகளின் மாநாட்டிற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ளார். அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவின் நிலையை எடுத்துரைப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று உயர்மட்ட கமிட்டி கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில், இந்திய பொருளாதார சங்கிலி தொடரில் முக்கிய அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, நிதி செயலர் அருண் ராமநாதன், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், செபி சேர்மன் சி.பி.பாவே, நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர், பொருளாதார விவகார செயலர் அசோக் சாவ்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாடு குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். விரைவில் கூடி விவாதிக்க உள்ளோம். இதன் அடிப்படையில் அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் தயாரிக்க உள்ளது ' என்றார். 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு நேற்றுதான் வந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி :தினமலர்



Wednesday, October 29, 2008

ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், சில டெக்னாலஜி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் பார்மா, குறிப்பிட்ட சில ரியாலிட்டி, கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பின்தங்கி இருந்தன. இன்று சென்செக்ஸ் அதிகபட்சமாக 9,297.76 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 8,894.34 வரையிலும் சென்றது. முடிவில் 36.43 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,044.51 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி, அதிகபட்சமாக 2,781.25 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 2,631.90 புள்ளிகள் வரையிலும் சென்று பின்னர் 12.45 புள்ளிகள் ( 0.46 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,697.05 புள்ளிகளில் முடிந்துள்ளது. ஹிண்டல்கோ மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் முறையே 18 மட்டும் 12 சதவீதம் உயர்ந்திருந்தது. மகிந்திரா அண்ட் மகிந்திரா, விப்ரோ, ஏசிசி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் பிபிசிஎல் போன்றவைகள் 4.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தனற. இருந்தாலும் சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், மற்றும் ரான்பாக்ஸி பங்குகள் 10 - 11.5 சதவீதம் சரிந்திருந்தன. டிஎல்எஃப், சத்யம், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி, சீமன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை 3 - 9 சதவீதம் சரிந்திருந்தன.
நன்றி : தினமலர்

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் முன்னேற்றம்

உலகம் முழுவதிலும் உள்ள பங்கு சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காலை நேர வர்த்தகத்தில் ஜப்பானின் நிக்கி 232.60 புள்ளிகள் உயர்ந்திருந்தது. அதே போல் வர்த்தக துவக்கத்தில் உயர்ந்திருந்த தென் கொரியாவின் கோஸ்பி பின்னர் குறைந்து மைனஸ் 30 புள்ளிகளாக இருந்தது. ஜப்பானை போலவே ஹாங்காங்கின் ஹேங்செங்க் 171 புள்ளிகள் உயர்ந்திருந்தது. தைவானின் இன்டக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்திருந்தது. செவ்வாய் அன்று முடிவில் அமெரிக்க வால்ஸ்டிரீட்டில் 10 சதவீத புள்ளிகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து இன்று ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகளில் ஏறுமுகம் காணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் நேற்று 10.88 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 9.53 சதவீதமும், எஸ் அண்ட் பி 10.79 சதவீதமும் உயர்ந்திருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை 0.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அதே போல ஜப்பானிலும் பேங்க் ஆப் டோக்கியோ வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அங்கும் பங்கு சந்தையில் ஏறுமுகம் காணப்படுவதாக சொல்கிறார்கள்.ஏற்றுமதியையே பெரிதும் நம்பிஇருக்கும் ஜப்பான் கம்பெனிகளின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் ஜப்பான் கரன்சியான யென் னின் மதிப்பு குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். அமெரிக்காவை போலவே ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் முன்னேற்றமே காணப்பட்டது. லண்டனின் எஃப்.டி.எஸ்.இ., 1.9 சதவீதம், பாரீசின் சிஏசி 1.6 சதவீதம், ஃபிராங்பர்ட்டின் டாக்ஸ் 11.3 சதவீதம் உயர்ந்திருந்தது. இந்தியாவை பொருத்தவரை இன்று காலை வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை : மத்திய அரசு அதிகாரிகள்


இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கை தொடர்ந்து கொஞ்சம் நாட்களுக்கு கண்காணித்தபின்பே அது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்தார். இன்னும் சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய் விலையின் போக்கை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். அதன் பின்னரே விலை குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 57 டாலருக்கும் குறைவாக வந்தால்தால் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று ஏற்கனவே மத்திய அரசு சொல்லி வந்துள்ளது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை கடந்த வாரத்தில் பேரலுக்கு 64 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன் கிழமை பேரலுக்கு 1.99 டாலர் உயர்ந்து 64.72 டாலராக இருக்கிறது.

நன்றி : தினமலர்


தீபாவளியன்று ரூ.100 கோடி சரக்கு விற்பனை : முதல்நாளும் 'டாஸ்மாக்' சாதனை

தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் 'டாஸ்மாக்'கில் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி. இந்த வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது. சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க அனைத்து கடைகளிலும்
கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி தீபாவளி வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.
சாதாரண நாட்களில் அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது.
இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.

நன்றி : தினமலர்



அடிமட்டத்திற்கு போனது ஏன்? : சேதுராமன் சாத்தப்பன்

நேற்று முன்தினம் சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளுக்கு வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சியமாக அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் அனைத்தும், நேற்று முன்தினம் காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து வருட இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல ப்ளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசும் நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத்திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள் கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இல்லாவிடில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக மும்பை பங்குச் சந்தை 191 புள்ளிகள் குறைந்து 8,509 புள்ளிகளில் முடிவடைந்தது. டிரைவேடிங்க் டிரேடிங் நாளை முடிவடைவதால், ஷார்ட் கவரிங் பொசிஷன்களை பலரும் கவர் செய்ததால் சந்தை தப்பியது.
நன்றி : தினமலர்


Tuesday, October 28, 2008

ஆசிய, அமெரிக்க பங்கு சந்தைகளில் இன்றும் கடும் வீழ்ச்சிதான்

கடந்த ஒரு வார காலமாக சரிவை மட்டுமே சந்தித்து வரும் ஆசிய பங்கு சந்தைகளில் இன்றும் சரிவுதான் காணப்படுகிறது.சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 7.20 சதவீதத்தை இழந்திருக்கிறது. சீனாவின் ஷாங்கை 2.87 சதவீதம், தைவானின் இன்டக்ஸ் 2.59 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசிய சந்தைகளைப்போனவே அமெரிக்க சந்தையிலும் சரிவுதான் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவ்ஜோன்ஸ் 2.42 சதவீதத்தை இழந்திருக்கிறது. நாஸ்டாக் 2.97 சதவீதம் குறைந்திருக்கிறது. ஜப்பானை பொருத்தவரை வர்த்தக ஆரம்பத்தில் நிக்கி 2 சதவீதத்தை இழந்திருந்தது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி. பின்னர் மதிய வேளையில் கொஞ்சம் முன்னேறி 0.95 சதவீத இழப்புடன் இருந்தது. அங்குள்ள பங்கு சந்தை அதிகமாக சரிந்து வருவதை அடுத்து, ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விடலாமா என்றும் ஜப்பான் யோசித்து வருகிறது. ஜப்பானை போலவே இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்தியாவை பொருத்த வரை நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 191.51 புள்ளிகள் குறைந்து 8,509.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.80 புள்ளிகள் குறைந்து 2,524.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை. ஆனால் முகுராத் வர்த்தகம் மட்டும் நடக்கும். அது மாலை 5.15 க்கு தான் துவங்குகிறது. கடந்த வருட தீபாவளிக்கு 19,997 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், இந்த வருட தீபாவளிக்கு வெறும் 8,509 புள்ளிகளாகத்தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் 57 சதவீத புள்ளிகளை சந்தை இழந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

ஐசிஐசிஐ வங்கியின் பிரிட்டிஷ் கிளைக்கு ரூ.160 கோடி நஷ்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் இன் பிரிட்டிஷ் கிளை ரூ.160 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே ஐசிஐசிஐ பேங்க், பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறது. பெருமளவில் கடனை கொடுத்து அது திரும்ப வராததால் கடும் நிதி சிக்கலில் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி, பின்னர் அந்த வங்கி கொடுத்த விளக்கத்தை அடுத்து அது சரியாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நலிவடைந்த நிதி வங்கியான லேமன் பிரதர்ஸூக்கு பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கடன் கொடுக்கப்போய், ஒரு பெரும் தொகையை இழந்தது. அதன் பின்னரும் ஒரிரு முறை சர்ச்சையில் சிக்கியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அடிக்கடி வெளிவரும் தகவலை அடுத்து,அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பலர் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கிளை 35 மில்லியன் ( சுமார் 160 கோடி ரூபாய் ) நிகர நஷ்டமடைந்திருப்பது ( நெட் லாஸ் ) வெளியாகி இருக்கிறது.இந்த தகவலை அந்த வங்கியில் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரிட்டிஷ் ஐசிஐசிஐ வங்கி கிளையில் 4.9 பில்லியன் டாலர் டெபாசிட் இருப்பதாகவும் அதில் 39 சதவீதம் டர்ம் டெபாசிட் என்றும், அந்த கிளையின் கடன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

Sunday, October 26, 2008

பயிற்சி பைலட்டுகளின் சம்பளம் குறைகிறது : கிங் பிஷர் நிறுவனம் அதிரடி

கிங் பிஷர் விமான நிறுவனம், தனது பயிற்சி பைலட்டுகளுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. விமான போக்குவரத்து கட் டணங்கள் அதிகரிக்கப் பட்டதால், பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் விமானங்கள் பயணிகள் இன்றி காத்தாடத் துவங்கியுள்ளன. இந்நிறுவனங்கள், எண் ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக் கியை குறிப்பிட்ட காலம் முடிந்தும் இன்னும் பாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக் கைகளை துவங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாக, விஜய் மல்லய்யாவின் கிங் பிஷர் நிறுவனமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அதிரடியாக ஒன்றிணைந்தன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது தற்காலிக ஊழியர்களை அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரம் சர்ச் சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஊழியர்கள் மீண் டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அடுத்த கட்டமாக, கிங் பிஷர் நிறுவனம் தனது நிறுவனத்தில் பயிற்சி பைலட் டுகளாக பணிபுரியும் துணை பைலட்டுகள் 50 பேரின் சம்பளத்தை அதிரடியாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பயிற்சி பைலட்டுகள் கவலையில் ஆழ்ந் துள்ளனர். அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. எந்த அள விற்கு சம்பள குறைவு இருக்கும் என்பது பற்றி தற்போது கூற முடியாது' என்றார். பயிற்சி பைலட் ஒருவர் கூறுகையில்,'தற்போது ரூ.20 ஆயிரம் சம்பளமாக தரப்படுகிறது. இதையும் குறைத்தால் என்ன செய்வது. 'கால் சென்டர்களில்' இதை விட அதிகம் சம்பளம் தரப்படுகிறது' என்றார்.
நன்றி : தினமலர்


ஓடி வருவர் என்ற எதிர்பார்ப்பு வீண்: நார் நாராக கிழிந்தது பங்கு சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

வெள்ளி பங்குச் சந்தையில் அழியாத முத்திரை பதித்து சென்று விட்டது. ரத்தக்களரி என்றே சொல்ல வேண்டும். சந்தை 22,000 புள்ளிகளில் இருந்த போது 1,000 புள்ளிகள் சரிவு என்றால், அதை பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சந்தை 10,000 புள்ளி அளவில் வந்த பின்பும் 1,000 புள்ளிகள் சரிவு என்றால், நிச்சயமாக சந்தை எல்லாருக்கும் ஒரு கிலி கொடுத்து தான் சென்றிருக்கிறது. சரிவுகளே வாழ்க்கை என்று வரும் போது, அதை சமாளிக்க பெரிய தைரியம், மனதிடம் வேண்டும். சேமித்த பணம் முழுவதையும் சந்தையில் போட்டவர்கள், கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்தவர்கள் என்ற வகையினர் அதிகம் நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். சந்தையில் பரமபதத்தில் பாம்பிடம் மாட்டிக் கொண்டது போல சறுக்கி கீழே விழுகிறது. ஊர், உலகத்தோடு ஒத்து வாழ் என்று நல்ல நாள் பெரிய நாட்களில் வாழ்த்துவர். நாம் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ஊர், உலகத்தோடு ஒத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். கிடைத்த பலன் அவ்வளவும் போய் விட்டது.
ஏன் சந்தை வெள்ளியன்று விழுந்தது? ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசியில் இன்னும் பல அறிவிப்புகளை எதிர்பார்த்தனர்; அது வரவில்லை. அது தவிர, மதியத்திற்கு மேலே துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் கீழே விழுந்ததால், இந்திய சந்தையிலும் அதன் பாதிப்பு இருந்தது. இவை இரண்டும் சேர்ந்து சந்தையை கீழே இழுத்துப் போட்டு விட்டது. சந்தை நார் நாராகக் கிழிந்து கிடக்கிறது. முன்னேற இன்னும் வெகு நாட்களாகும். இந்த இரண்டு நாட்கள் சந்தை கீழே விழுந்ததுக்கு மேலும் ஒரு காரணம் என்று பார்த்தால் ரிலையன்ஸ் கம்பெனியின் காலாண்டு முடிவுகள். கடந்த 10 காலாண்டு முடிவுகளில், இந்த காலாண்டு முடிவில் தான் லாபங்கள் மிகவும் குறைந்திருக்கிறது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மிகவும் அடி வாங்கின. இதே போலத் தான் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளும் சந்தை எதிர்பார்த்தது போல இல்லை. மானிடரி பாலிசியில் எந்த அறிவிப்பும் இல்லாததால் வங்கிப் பங்குகள் மிகவும் சரிவைச் சந்தித்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 1,071 புள்ளிகள் குறைந்து 8,701 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 359 புள்ளிகள் குறைந்து 2,584 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. ஒவ்வொரு வாரமும் குறைந்து வருவது பீதி கொள்ளச் செய்கிறது.
டாலரும் ரூபாயும்: 50 ரூபாய் தாண்டிய டாலர்; வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. டாலர் இறக்குமதி லாபமா? கடந்த சில மாதங்களாக டாலர் எல்லா கரன்சிகளுக்கும் எதிராக மேலே சென்று கொண்டிருக்கிறது.இதனால், இறக்குமதியாளர்கள் பீதியடைந்துள்ளனர். இறக்குமதியாளர்கள் கனடியன் டாலர், யூரோ ஆகியவை மூலம் இறக்குமதி செய்வது சிறந்ததாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? யாரும் கணிக்க முடியாத படி சந்தை இருப்பதால், வரும் நாட்கள் சந்தைக்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. சந்தைக்கு இதுவரை வராதவர்கள் இரண்டு வழிகளில் மகிழ்ச்சி அடையலாம். ஒன்று, சந்தைக்கு வர நல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு. இன் னொன்று, சந்தையில் இதுவரை ஈடுபடாததை நினைத்து. சந்தை 10,000 புள்ளிகளுக்கு கீழே வரும் பட்சத் தில், முதலீட்டாளர்கள் ஆவலுடன் இது தான் சமயம் என்று ஓடி வருவர் என்று பலரும் எதிர்பார்த்தனர்; அது நடக்கவில்லை.
நன்றி : தினமலர்

Saturday, October 25, 2008

மொத்த வளர்ச்சி குறையும், பணப்புழக்கம் சீராகும்: ரிசர்வ் வங்கி தகவல்

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட கடன் வசதிக் கொள்கையில் விசேஷ அறிவிப்புகள் ஏதும் இல்லை. வங்கிகளின் மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் உட்பட எவ்வித ரேட்டும் குறைக்கப்படவில்லை. ஆனால், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதமாக குறையும் என்றும், பணப்புழக்கம் சீராகும் என்றும் ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் படம் பிடிக்கிறது.மத்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டுக்கான இடைக்கால நிதி கொள்கையை நேற்று வெளியிட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்மாத துவக்கத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்காக ரிசர்வ் வங்கி 1.65 லட்சம் கோடி வரை பணத்தை வெளியிட்டது.இவ்வளவு நடவடிக்கைக்கு பிறகும், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்., விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கூறியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட இடைக்கால நிதி கொள்கைளில் பல அறிவிப்புகள் வெளிவரும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மேலும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் வெளியடும் முதல் நிதிக் கொள்கை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் இடைக்கால நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசுகையில் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உள்நாட்டில் நிதிச்சந்தைகளில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நமது பொருளாதார நிலைமை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதால் இந்த அளவுக்கு சமாளிக்க முடிகிறது.விரைவில் இந்த நிலைமை மாறி முன்னேற்றம் ஏற்படும். வங்கிகளில் பணப்புழக் கத்தை சரிசெய்ய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பயனாக, வங்கி ரேட் விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்யப்படவில்லை ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்க வேண்டிய மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். குறுகிய கால கடன்களை வழங்க வங்கிகளுக்கான ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இது 8 சதவீதமாக இருக்கும். அது போல் ரிசர்வ் ரெபோ ரேட்டும் 6 சதவீதமாக இருக்கும்.கடன்களுக்கான வட்டி, டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 8 சதவீதமாக இருக்கும் என முன்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது, தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள் வர வாய்ப்பு இருக்கிறது.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது நெருக்கடியை கொடுப்பதாக உள்ளது. தற்போது உலக சந்தையில் பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், பணவீக்கத்தை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 7 சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் உன்னிப்பாக உள்ளோம்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறோம்.
வங்கிகளின் நிதி நிலைமை, கடன் நிலை, போன்றவற்றை பல்வேறு நிலைகளில் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக ஸ்திரமான நிதி நிலைமை இருப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிதிச்சந்தைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.சிதம்பரம் கருத்து: கடந்த 6ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் ளாக பணப்புழக்கத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. எனவே, பணப்புழக்கத்தை தக்கவைப்பதற்காக, மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ரேட் விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்' என்றார்.
நன்றி : தினமலர்


ரத்தம் சொட்டும் பங்கு சந்தை

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் நேற்று ரத்தம் சொட்டும் வகையில் எங்கு பார்த்தாலும் சிவப்பாக காணப்பட்டது. நேற்று மட்டும் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. முதலீட்டாளர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.பங்குச்சந்தையில் நிலைமை எப்போது சரியாகும் என்பது புதிராக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. நேற்று முன்தினம் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்ததால், நேற்று மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கியது.மத்திய ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதி அறிக்கையில் நல்ல அறிவிப்புகள் என்ற எதிர்பார்ப்பு தென்பட்டதால் சந்தையில் மந்தமான நிலை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளிலும் தொய்வு நிலை காணப்பட்டதால், 500 புள்ளிகள் வரை சரிந்து கொண்டிருந்தது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத வகையில் சரிவு கண்டது.அடுத்து, மத்திய ரிசர்வ் இடைக்கால நிதி அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்ற செய்தி வந்ததன் தாமதம் பலரும் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு விற்க வந்தனர். வட்டி குறைப்பு பற்றியோ, டிபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிப்பு பற்றியோ எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதால் வங்கி பங்குகள் அடி வாங்கின. இதனால் சென் செக்ஸ், 'நிப்டி' அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.வங்கித்துறை, ரியல் எஸ்டேட், ஆயில் காஸ் பங்குகளின் விலை சடசடவென சரிந்தன.
எல்லா பங்குகளும் சிவப்புமயமாக காணப்பட்டன. தங்கள் முதலீடு முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டுவது போல் நேற்று ரத்தம் வடியும் பங்குச்சந்தையாக இருந்தது.
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரையில் 53 சதவீதத்திற்கு பங்குகள் விலை குறைந்துள்ளன. கடந்த ஜனவரி 21ம் தேதி 1,408 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்தது. அதற்குப் பிறகு நேற்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. நேற்று வர்த்தகம் முடியும் போது, 'சென்செக்ஸ்' 1,071 புள்ளிகள் சரிந்து 8,701.07 என்ற நிலையில் முடிந்தது.
'நிப்டி' 359 புள்ளிகள் சரிந்து, 2,584 என்ற நிலையில் முடிந்தது. பங்குச்சந்தையை தூக்கி நிறுத்த கடந்த சில நாட்களில் தீவிரமாக செயல்பட்ட ரிசர்வ் வங்கி நேற்றை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
பெரிய கம்பெனிகளுக்கு பணப் புழக்கம் சீராக இல்லாத நிலை, உலக அளவில் ஏற்படக்கூடிய தொழில் துறை தேக்கம் ஆகியவை இங்கு எதிரொலிக்கின்றன. குறிப்பாக பரஸ்பர நிதிநிறுவனங்கள் பணமின்றி இருப்பதும், அன்னியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு தேய்வதும் பல்வேறு பிரச்னைகளாக இங்கே எதிரொலிக்கின்றன.இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக சந்தை நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், வர்த்தக அமைச்சர் கமல்நாத் இந்த வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை என்றார்.
நன்றி : தினமலர்


Friday, October 24, 2008

பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1052 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

மும்பை பங்கு சந்தையில் இன்று மதிய நேரத்தில் சென்செக்ஸ் 1,052 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது.ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட இடைக்கால மறு ஆய்வு அறிக்கையில், முக்கிய வட்டி விகிதம் எதையும் மாற்றாமல் இருந்ததால் வெறுப்படைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்க வந்ததால் இவ்வளவு புள்ளிகளை சந்தை இழக்க நேர்ந்தது என்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் 912 புள்ளிகளை ஏற்கனவே இழந்திருந்த சென்செக்ஸ், இன்று மதிய வேளையில் 1,052.18 புள்ளிகள் குறைந்து 8,719.52 புள்ளிகளாகி விட்டது. இந்த நிலை இதற்கு முன் கடந்த 2006 ம் ஆண்டு ஜூன் மாத்தில் தான் காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 343.05 புள்ளிகள் குறைந்து 2,600.20 புள்ளிகளாகி விட்டது. இது குறித்து பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆர்.பி.ஐ.வெளியிட்ட அறிக்கையில் சந்தைக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இல்லாததால், சந்தையில் விற்பனை விகிதம் கடுமையாக உயர்ந்து விட்டது. நிறைய பேர் பேங்க் பங்குகளை அதிக அளவில் விற்க ஆரம்பித்து விட்டார்கள் என்றனர்.
nandri : dinamalar


பங்கு முதலீட்டாளர் பீதி அடைய வேண்டாம் : சிதம்பரம் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் நிலவி வரும் கடும் வீழ்ச்சியை கண்டுவரும் முதலீட்டாளர்கள், சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளதால் பீதி அடைந்துள்ளனர். பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதன் மதிப்பை இழந்துள்ளன. இதனால் தங்களிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு மேலும் குறைந்து போவதற்குள் விற்று, ஏதோ கொஞ்சம் பணத்தையாவது காப்பாற்றிக்கொள்வோமே என்று, கிடைத்த பணத்திற்கு பங்குகளை விற்று வருகின்றனர். பங்கு சந்தையில் அதிக அளவில் விற்பனை நடந்து வருவதாலேயே சந்தை சரிந்து வருகிறது. இதனையடுத்து நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் சந்தை சரிந்து வருவதை கண்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அவசரம் அவசரமாக பங்குகளை விற்க வேண்டியதில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு ஆசிய பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மட்டுமே இந்திய சந்தையும் வீழ்ந்து விடும் என்று அர்த்தமில்லை. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைந்து பங்குகளை விற்க வேண்டாம். அவசரப்படாமல் நிதானமாக திர்மானித்து விற்பதை பற்றி முடிவு செய்யலாம் என்று அவர் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார். அன்னிய முதலீட்டாளர்கள் பலர் பெருமளவு பணத்தை இந்திய சந்தையில் இருந்து எடுத்துக்கொண்டதால், ரூபாயின் மதிப்பு குறைந்து, இங்கு கேப்பிட்டலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து, எடுத்துக்கொண்ட பணத்தை திரும்ப பெற வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகி விட்டதும் மீண்டும் இந்தியாவுக்குள் பெருமளவு பணம் வந்து விடும். அவைகள் இ.சி.பி., எஃப்.சி.என்.ஆர்., என்.ஆர்.இ.,வழியாக இங்கு வந்து சேரும். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப்.ஐ.ஐ.) பிரச்னை தீர்ந்து விட்டால், அவர்கள் இந்திய கார்பரேட் மற்றும் அரசாங்க கடன் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எனவே அதுவரை பொறுமை காக்குமாறு முதலீட்டாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்தது

இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு ரூ.50 க்கும் கீழே மதிப்பு குறைந்து விட்டது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் ஏற்பட்டு வரும் கடும் வீழ்ச்சியை அடுத்து, இந்திய பங்கு சந்தையில் செய்யப்பட்டிருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இன்றைய காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50.15 ஆக குறைந்து துவங்கியது. இது நேற்றைய வர்த்தக முடிவில் ரூ.49.81 ல் முடிந்திருந்தது.
நன்றி : தினமலர்


வங்கிகள் இனி தாராளமாக கடன் தரும் : சிதம்பரம் தகவல்

'பணப்புழக்கம் சகஜமாகி வருவதால், கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சமீபத்தில் சந்தித் தேன். கடன் கொடுப்பதை தீவிரமாக்க ஆலோசனை வழங்கினேன். தற்போது பணப்புழக்கம் திருப்திகரமாக உள்ளதால், கடன் கொடுப்பது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த மாத கடன் நடவடிக்கை களில் தற்காலிகமாக தொய்வு ஏற்பட்டது. தற்போது முன்பு போல் கடன் வழங்குவதை வங்கிகள் மும்முரப்படுத்தியுள்ளன. வங்கிகள் தங்களிடம் உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை முழுமையாக கடன் கொடுக்க பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர் கள், இந்தியாவில் முதலீடு செய்து இருக்கும் பங்குகளை, மற்ற அன்னிய நிறுவன முதலீட்டு நிறு வனங்களுக்கு மாற்றி கொடுப்பது, ஷார்ட் செல்லிங் நடைமுறைக்கு இணையானது. இதை நிறுத்தும்படி 'செபி' கேட்டுக் கொண்டுள்ளது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோல் மாற்றி கொடுத்து இருந்ததை திரும்பப் பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார். இதற்கிடையில், பணவீக்கம் பற்றிய புள்ளி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.40 சதவீதமாக இருந்தது. குறையும்: பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் 10 சதவீதத்திற்குள்ளாக வந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலர் அசோக் சாவ்லா நேற்று நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது 9.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறையும்' என்றார். அதேசமயம் இந்தியப் பொருளாதார சூழ்நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் கடும் நெருக்கடி நிலவிய போதிலும், மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியா வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ளதாலும், வளர்ச்சிக்கு உறுதியான நிதி நிர்வாகத்தை கொண்டு இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை எளிதாக முறியடிக்கும் என்று உலக வங்கி நற்சான்றிதழ் கொடுத்துள்ளது.
நன்றி ; தினமலர்


பிக்சட் டிபாசிட்களை குவிக்க அள்ளி விடுது வங்கிகள் : கெடுபிடி கட்டணம் கிடையாது

பொது மக்களின் டிபாசிட் பணம், தங்களிடம் இருந்து மற்ற வங்கிக்கு போகாமல் தடுக்க, சலுகைகளை அளிக்க பல வங்கிகளும் முன்வந்துள்ளன. வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடுமாற்றங்களால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகளின் மீதான நம்பிக்கையில் லேசான சறுக்கல் கூட வராமல் தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் பிக்சட் டிபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டு கழிந்த நிலையில், எந்த கட்டணமும் இல்லாமல் பணத்தை திரும்பப் பெறும் சலுகையை சில வங்கிகள் அளிக்கின்றன. முன்பு கறாராக இருந்த வங்கிகள் இப்போது விதியை தளர்த்தியுள்ளன. வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்கள் 4.06 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பிக்சட் டிபாசிட் உட்பட டிபாசிட்களை தக்க வைக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் பலவும் எடுக்க ஆரம்பித்து விட்டன. எச்.டி.எப்.சி., போன்ற வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகள் கூட சலுகைகளை அளித்து பிக்சட் டிபாசிட்களை பெருக்க புதிய திட்டங்களை தீட்டியுள்ளன. இது போல, பிக்சட் டிபாசிட்களுக்கு வட்டி வீதத்தையும் அதிகரிக்க வங்கிகள் ஆரம்பித்துள்ளன. போட்டா போட்டி போட்டு, பொதுமக்களிடம் இருந்து டிபாசிட்களை குவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க், 1,000 நாள் அடிப்படையில் போடப்படும் பிக்சட் டிபாசிட்களுக்கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி, இப்போது 10.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கி, குறிப்பிட்ட கால அளவில் பெறப்படும் டிபாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, October 23, 2008

பங்கு சந்தையில் மீண்டும் பெரும் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் பெரும் சரிவை சந்திருக்கிறது. ஜூலை 24, 2006 க்குப்பிறகு, இன்று நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. சென்செக்ஸ் மீண்டும் 10000 புள்ளிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. கடந்த வரம் ஒரு தடவை இது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போயிருந்தது. பின்னர் மேலே எழுந்து வந்து இன்று மீண்டும் கீழே போய் விட்டது. எஃப் ஐ ஐ களின் ஷார்ட் செல்லிங் முறைக்கு தடை விதிப்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பிரயோஜனமாக இருக்கவில்லை.உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் கடும் சரிவு ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிவிப்பால் ஒரளவு சந்தை மீண்டு வந்தாலும் பெரிதாக மீழ முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 398.20 புள்ளிகள் ( 3.92 சதவீதம் ) குறைந்து 9,771.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 122.00 புள்ளிகள் ( 3.98 சதவீதம் ) குறைந்து 2,943.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பார்தி ஏர்டெல், செய்ல், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள்தான்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்தது

அக்டோபர் 11ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.44 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அட்டவணைப்படி கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த வருடத்தில் இதே காலத்தில் 3.07 சதவீதமாகத்தான் இருந்தது. பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர பருத்தி, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், புண்ணாக்கு, பாலியஸ்டர், காரீயம், துத்தநாகம் ஆகியவைகளின் விலையும் குறைந்திருக்கிறது. ஆனால் டீ, நெய், சோளம், அரிசி, புகையிலை, காட்டர் யார்ன், கடுகு விதை போன்றவைகளின் விலை உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கடந்த 16 மாதங்களாக இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது

உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டது. அமெரிக்காவில் வழக்கமாக சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய் அளவும், கடந்த அக்டோபர் 17ம் தேதியுடன் முடிந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட 3.2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக இருப்பதாக வந்த தகவலும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.43 டாலர் குறைந்து 66.75 டாலராகி விட்டது. இது கடந்த ஜூன் 2007க்கு பின் ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 64.52 டாலராகி விட்டது. இதுவும் கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்த அளவுதான். வெள்ளி அன்று ஓபக் மாநாடு கூடி, ஆயில் உற்பத்தியை குறைக்க தீர்மாணித்திருந்தாலும் இப்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை இன்னும் குறையும் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலருக்கும் கீழே போய் விடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலருக்கும் மேலே இருந்தது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் தெரிகிறது முன்னேற்றம் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை சிறிது மேலே தலை தூக்கிப் பார்க்கிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் அன்று பாடினார். இன்று பாடியிருந்தால், 'வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியிருப்பார். கடந்த வாரங்களில் குறைக்கப்பட்ட ரொக்க கையிருப்பு சதவீதம் 2.5 தவிர, இந்த வாரம் ரெப்போ ரேட் 1 சதவீதமும் குறைக்கப்பட்டது. இது பணப் புழக்கத்தை இன் னும் அதிகமாக்கும் என்றும், கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறையும் என்ற நோக்கத்தில் செய்யப் பட்டுள்ளது. பணப்புழக்கம் அவ்வளவு மோசமாகவாக இருக்கிறது? ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்று வெளிநாட்டுப் பணத்தை கொண்டு செல்வதால் பணப் புழக்கம் குறைகிறது. மேலும், டாலரின் மதிப்பு கூடி வருகிறது. பணம் உள்ளே வந்த போதெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். தற் போது போகும் போது பொறுமையாகத்தான் இருக்க வேண் டும். அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு என்ன வந்தது. எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பது போல எடுத்துச் செல்கின்றனர். பொறுமை தேவை. பங்குச் சந்தை என்பது இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கும் இடம். அதில் பயணம் செய்ய பொறுமை தேவை. தற்போது அசாத்திய பொறுமை தேவை. டாலர் மதிப்பைக் குறைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வங்கிகளில் வைக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதங்களை கூட்டியுள்ளன.

இது வெளிநாட்டுப் பணம் உள்ளே வர ஏதுவாகும். அப்படி வரும் வரத்து கூடிவருகிறது. எங்கு வட்டி கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு தானே போவார்கள். திங்களன்று மும்பை பங்குச் சந்தை 2.5 சதவீதம் மேலே சென்று முடிவடைந்தது. அன்று 247 புள்ளிகள் கூடியது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. நேற்று முன்தினம், ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நன்றாக மேலே சென்றது சந்தையையும் மேலே கொண்டு சென்றது. குறிப்பாக டி.சி.எஸ்., 12.9 சதவீதம் மேலே சென்றது. ஆசிய அளவில் சந்தைகள் குறைந்ததாலும், லாப நோக்குடன் விற்றதாலும் நேற்று சந்தை மிகவும் கீழே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 513 புள்ளிகள் குறைந்து 10,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 169 புள்ளிகள் குறைந்து 3,065 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மறுபடியும் மும்பை பங்குச் சந்தை 10,000க்கும் அருகில், வாய்ப்புகளா அல்லது சறுக்கல்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். திங்கள், நேற்று முன்தினம் கிடைத்த லாபத்தை நேற்று ஏற்பட்ட நஷ்டத்தால் காணாமல் போனது. இந்திய பங்குச் சந்தையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நார்வே 9,800 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்பது சந்தையை பலப்படுத்த உதவும். காலாண்டு முடிவுகள்: செயில் சென்ற வருடம் இதே காலாண்டை விட 18 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. அதே போல ஹீரோ ஹோண்டா சென்ற வருடம் இதே காலாண்டை விட 50 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. ஜெயப்பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வருடம் இதே காலாண்டை விட 96 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது.

இதே போல எல்.ஐ.சி., ஹவுசிங், இந்தியா புல்ஸ் பைனான்சியல், யுனைடெட் ஸ்பிரிட், போலாரிஸ் சாப்ட்வேர், மாரிகோ, ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.

ஏன் தங்கம் விலை குறைகிறது? பங்குச் சந்தையில் 10,000க்கும் கீழே வந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக தெரிந்ததால், தங்கத்தை விட்டு பங்குக்கு தாவ ஆரம்பித்தனர். இதனால், தங்கம் பரிதவித்துப் போய் கீழே இறங்கியது. கூடி வரும் டாலர் மதிப்பால் சிறிது விலை கூடி நிற்கிறது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பலரும் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும் அது நாடுகளையும், சந்தைகளையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதே நிறையப் பார்த்தாகிவிட்டது. இந்திய சந்தை பல நாடுகளின் சந்தைகளை வைத்துப் பார்க்கும் போது அதிகம் சரிந்த சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதலால் மேலும் பெரிதாக சரிய வாய்ப்பில்லை. 10,000க்கும் கீழே செல்லும் போது வாங்குபவர்கள் அதிகம் வருவார்கள்.
நன்றி : தினமலர்


Wednesday, October 22, 2008

உலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வேலை இழப்பர் : ஐ.எல்.ஓ., கவலை

உலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் லேபர் ஏஜென்சி கவலை தெரிவித்திருக்கிறது. இப்போதுள்ள நிலையில் கணக்கெடுத்தால், 1997ம் ஆண்டு 19 கோடியாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2010 ம் ஆண்டு வாக்கில் 21 கோடியாக உயர்ந்து விடும் என்று ஐ.எல்.ஓ.,வின் இயக்குனர் ஜூவன் சோமாவியா தெரிவித்துள்ளார். இது தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரிக்கும் என்றும் 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்றும் ஐ.எல்.ஓ., தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இது வெறும் வால்ஸ்டிரீட் பிரச்னை மட்டும் அல்ல. எல்லா நாடுகளுமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சோமாவியா தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


வீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், 'ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்' என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Monday, October 20, 2008

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத ரெபோ ரேட் கட் போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 247.74 புள்ளிகள் ( 2.48 சதவீதம் ) உயர்ந்து 10,223.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 48.45 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) உயர்ந்து 3,122.80 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, பேங்கிங், பார்மா,மெட்டல் மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. ரியல் எஸ்டேட், பவர், சில ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத பெரோ ரேட் குறைப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவு உதவி புரிந்தது.இன்று பேங்கிங் இன்டக்ஸ் 2.08 சதவீதம் அல்லது 149.03 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2003 க்குப்பின் இப்போது தான் ரெபோ ரேட் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் கட்டாய பண கையிருப்பு விகிதமும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் வங்கிகளில் தாராளமாக பணபுழக்கம் இருந்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.டி.பி.ஐ. வங்கியின் சேர்மன் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிகள் வட்டியை குறைப்பது, கடனுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும் என்றார்.
நன்றி :தினமலர்


ஐந்து ஆண்டு ஊதியமில்லா விடுப்பு; திரும்பி வந்தால் வேலை: சர்ச்சைக்கு ஏர் இந்தியா முற்றுப்புள்ளி

ஐந்தாண்டுக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், சம்பளம் கிடைக்காது; ஐந்தாண்டுக்கு பின் மீண்டும் திரும்பி வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!- இப்படி ஒரு நூதனமான தற்காலிக 'வி.ஆர். எஸ்.,' திட்டத்தை, மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, 2002 ல் அறிமுகம் செய்தது. இந்த சலுகை திட்டத்தை ஏற்று, அப்போது 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர். இதனால், ஏர் இந்தியாவுக்கு சில நூறு கோடிகள் செலவு மிஞ்சியது. இந்த சிக்கன நடவடிக்கையால் விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஊழியர்களில் சிலர், மீண்டும் வந்து வேலையில் சேர்ந்தனர். இந்த திட்டத்தை தான் மீண்டும் ஏர் இந்தியா இப்போது அமல்படுத்த உள்ளது. ஆனால், ஏர் இந்தியா செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா கூறியதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட சில பத்திரிகைகளும், 'டிவி'க்களும் 'ஏர் இந்தியா தன் ஊழியர்கள் சிலரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டமிட்டுள் ளது' என்று வெளியிட்டு விட்டன. இதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கடுப்பாகி விட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். 'ஏர் இந்தியா எல்லா வகையிலும் நிதி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் அமல்படுத்த மாட்டோம். மாறாக, ஏற்கனவே 2002ல் அமல்படுத்த நீண்ட விடுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார். 'சுய விருப்ப ஓய்வு திட் டம் அல்ல; சுய விடுப்பு திட்டத்தை தான் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதனால், நிர்வாகத்துக்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி நல்லது. நிதி இழப்பை தடுக்க இது நிர்வாகத்துக்கு உதவுகிறது. அதுபோல, ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதையும் தடுக்கிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு இது தொடர்பாக பல பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது' என்று பார்கவா கூறினார். ஏர் இந்தியா மற்றும் பல தனியார் நிறுவனங்கள், விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நீண்ட நாள் குத்தகைக்கு வாங்கித்தான் இயக்கி வருகின்றன. பயணிகள் இல்லாமல், ஒரு விமானம் நின்று விட்டாலும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலை இப்போது ஏற்பட்டு வருகிறது. அதனால், விமானங்களை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதை சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. விமானம் ஓடாத போது, அதன் ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அதனால், இதுபோன்ற நிலையை தவிர்க்கவும், இழப்பை முடிந்தவரை தடுக்கவும் ஏர் இந்தியா இந்த புதுமை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, October 19, 2008

நானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்

டாடாவின் நானோ காருக்கு போட்டியாக அஜந்தா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவின் கனவுத் திட் டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்கூர் பிரச்னையால் திட்டமிட்டபடி நானோ கார், குறித்த காலத்திற்குள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு போட்டியாக கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான அஜந்தா, குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரெவா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத், கட்ச் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையில் காரின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அஜந்தா நிறுவனங்களின் இயக்குனர் ஜய்சுக் படேல் கூறுகையில், 'ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய அனுபவம் உள்ளது. இதனால், எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. காரின் மாடல் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு பணி முடிவடைந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது' என்றார். அஜந்தா நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், 'காரின் விலை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும். இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து விசாரணைகள் வரத் துவங்கியுள்ளன' என்றன.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் 'உல்டா புல்டா' கனஜோர் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை, 10 ஆயிரத்திற்கும் கீழே வராது என்று தைரியமாக நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் பயப்படும்படியாக 10 ஆயிரத்திற்குக் கீழே வந்துள்ளது. உலகளவில் சந்தைகள் இறங்கும் போது இங்கும் இறங்கினால், அதனால் இறங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உலகளவில் சந்தைகள் மேலே செல்லும் போது கூட இங்கு சந்தை இறங்குவது, சந்தையில் முதலீட்டாளர் கள் மத்தியில் சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. 'மேகம் கறுக்குது, மழை வரப் பார்க்குது' என்ற ஆவலோடு பங்குச் சந்தையைப் பார்த்தால், கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. சந்தை வியாழனன்று இறங்கவே இறங்காது என்று பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு வலுவான காரணங்களும் இருந்தது.
அதாவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை புதனன்று சந்தை நேரத்திற்கு பிறகு எடுத்திருந்தது. அது சந்தையை வியாழனன்று பலப்படுத்தும் என்றே எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகளுடன், புதன்கிழமை மேலும் பல சலுகை அறிவித்தது. இதன் மூலம் வங்கிகளுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்த சலுகைகளின் மூலம் வியாழக்கிழமை சந்தை ஏற்றத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது உல்டா புல்டா. வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்., மேலும் குறைக்கப் படாது என மத்திய நிதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர் வயிற்றில் புளி கரைத்தபடி இருந்தது. ஆனால், ஆபத்பாந்தவனாக வந்த செய்தி பணவீக்கம் குறைந்திருக்கிறது என்றது தான். அது, சந்தையில் கிட்டத்தட்ட 570 புள்ளிகள் சரிவிலிருந்து மீள்வதற்கு உதவியது. முடிவாக 227 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. அனைத்து துறைகளும் இறங்கின என்றே கூற வேண்டும்.
காரணம் இது தான்: பங்குச் சந்தையின் ஜாம்பவான் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் ஹெட்ஜ் பண்ட் ஒன்று சந்தையில் அதிகமாக பல பெரிய கம்பெனியின் பங்குகளை வியாழனன்று விற்கத் தொடங்கியதால், சந்தையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேலாக குறைந்தது. உலக சந்தைகளை ஒட்டி வெள்ளியன்று காலை சந்தை மேலேயே துவங்கியது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு சரியத் தொடங்கியது. அதுவும் 10,000 புள்ளிகளுக்கு கீழே. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000க்கும் கீழே சென்று சந்தை முடிவடைந்தது. இதுவே முதல் முறையாகும். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்று பாடத் தோன்றுகிறது. எதிர்பார்க்காத எல்லாம் நடப்பது தான் பங்குச் சந்தை. வேண்டாம் என்றால் எல்லாரும் வெளியேற முயற்சிப்பர். வேண்டும் என்றால் எல்லாரும் போட்டி போட்டு வருவர். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 606 புள்ளிகள் குறைந்து 9,975 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 194 புள்ளிகள் குறைந்து 3,074 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கச்சா எண்ணெய்: பேரலுக்கு 147 டாலருக்கு மேலே சென்றிந்த எண்ணெய், தற்போது இந்த வாரம் 70 டாலர் அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலே குறைந்துள்ளது. இவ்வளவு குறைவாக தற்போது இருப்பதற்கு காரணம், அமெரிக்காவில் கையிருப்பு கச்சா எண்ணெய் அதிகமாக இருப்பது என்று சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் விலை குறைவது நமக்கு நல்லது தான். ஏனெனில், நம் நாட்டுடைய இறக்குமதியில் முதலிடம் வகிப்பது கச்சா எண்ணெய் தான். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளா அப்படியென்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு சந்தை வந்துள்ளது. இது நிச்சயம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில், பல கம்பெனிகள் வங்கிகளிடமிருந்து அதிக வட்டியில் கடன்கள் வாங்குவதை விட, முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு முதல் திரட்டுவதை ஒரு வாய்ப்பாகக் கருதின. மேலும், அரசாங்க கம்பெனிகள் தங்களுடைய பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் திட்டமும் தள்ளிப் போகிறது. பங்குச் சந்தையும் ஒரு கரம் தானே; ஏற்றமும் இறக்கமும் இருக்கத்தானே செய்யும். வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பமா? சந்தையில் இதுவரை அதிகம் ஈடுபடாத, சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்கும் கேள்வி இது தான். 15,000 புள்ளிகள் இருக்கும் போதே இது அருமையான சந்தர்ப்பம் என்று கூறப்பட்டது. தற்போது, சந்தை 10,000க்கும் கீழே வந்துள்ளது. பழங்கள் பழுத்து தொங்குகின்றன. ஆனால், பறிப்பதற்கு ஆட்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தும் வகையில் நடைமுறை மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதலால், மறுபடி வெளிநாட்டுப் பறவைகள், இந்திய பங்குச் சந்தை குளத்தை நோக்கி வர ஆரம்பிக்கலாம். சந்தையில் உள்ள புரோக்கர்களும், சந்தை வல்லுனர்களும் 10,000 போகும், 8,000 வரை போகும் என்று தங்களது வாடிக்கையாளர்களிடம் பயமுறுத்தி வருவதும், மற்றொரு பக்கம், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது பயப்பட தேவையில்லை என்றும், சந்தை ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லி வருகின்றனர். இப்படி குட்டையை கலக்கி சிலர் மீன் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். புதிய முதலீட்டாளர்கள் தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை ஒதுங்கியிருப்பதே மேல்.
நன்றி :தினமலர்

Saturday, October 18, 2008

இந்திய பங்கு சந்தையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அன்னிய முதலீட்டாளர் கையில்


இந்திய பங்கு சந்தையில் ஒரு காலத்தில் 20 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டிச்சென்ற சென்செக்ஸ், இப்போது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. 10,000 புள்ளிகளை ஒட்டியே இருந்த சென்செக்ஸ் 20,582 புள்ளிகளை எட்டுவதற்கு 23 மாதங்கள் வரை தேவைப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் 10,000 புள்ளிகளுக்கும் கீழே போய் 9,975 புள்ளிகளாக ஆனதற்கு 9 மாதங்கள் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்ததற்கும், மீண்டும் அது 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கும் பெரும் காரணமாக இருந்தது எஃப்.ஐ.ஐ. என்று சொல்லப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்தான். பிப்ரவரி 7,2006 அன்று 10,082 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் ஜனவரி 10,2008 அன்று 20,582 புள்ளிகளாக உயர்ந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,00,951 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பணபுழக்கம் நல்லவிதமாக இருந்தது. சென்செக்ஸ் 20,582 புள்ளிகளில் இருந்து 9,975 புள்ளிகளாக இறங்கியபோது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து ரூ.47,299 கோடியை எடுத்திருந்தார்கள். இது இந்தியாவின் பணப்புழக்கத்தை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது. அதாவது சென்செக்ஸ் உயர்ந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு புள்ளி உயர்வதற்கும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதற்காக ரூ.9.61 கோடியை செலவு செய்திருந்தனர். ஆனால் சென்செக்ஸ் இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு புள்ளி இறங்கும்போதும் அவர்கள் ரூ.4.46 கோடியை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் இருந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்களில் முதலீடு பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ரூ.8 லட்சம் கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே திரும்ப எடுத்திருந்தாலும் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 50 சதவீதம் குறைந்து போனது.

நன்றி : தினமலர்



Wednesday, October 1, 2008

இந்திய பங்கு சந்தை வலுவானதாக இருக்கிறது : சிதம்பரம்


புதுடில்லி : இந்திய பங்கு சந்தை வலுவாகதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்படும் பாதிப்பு இந்திய பங்கு சந்தையையும் பாதித்தாலும், அது வலுவானதாகத்தாகவும்,கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாகத்தான் இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் கலக்கமடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். பங்கு சந்தையை மத்திய அரசு அக்கறையுடன் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பங்கு சந்தை மீது இப்போது இருக்கும் கட்டுப்பாடே போதுமானதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக வேண்டிய நடவடிக்கையை எடுக்கவும் மத்திய அரசு தயங்காது என்றார். கட்டுப்பாடுகள் இருந்தாலும் சந்தையை ஒரு லேசான சூழ்நிலையில்தான் வைத்திருக்க விரும்புகிறோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்றிருக்கிறார்களா என்று அவரிடம் கேட்டபோது, கொஞ்சம் பேர் பங்குகளை விற்றிருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் விற்கவில்லை என்றார். எல்லோரும் விற்கவும் மாட்டார்கள் என்றார். நிறைய வெளிநாட்டினர் இந்தியாவில் பங்குகளை வாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய பங்கு சந்தை, அவர்களை பொறுத்தவரை, அவர்களை கவரும் விதமாகவும் கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் புஷ் கொண்டு வந்த 700 பில்லியன் டாலர் நிதி உதவி திட்டம் அங்குள்ள காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டிருப்பதைபற்றி கேட்டபோது, ஏன் காங்கிரஸ் அதை நிராகரித்தது என்று தெரியவில்லை. ஆனால் நிதி உதவி செய்ய வேண்டியது அவசியம். அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் அது எல்லோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நன்றி தினமலர்

வதந்திகளை நம்ப வேண்டாம் : ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள்


மும்பை : எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது; எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி சிக்கலில் இருப்பதாக நேற்று நாட்டின் பல பகுதிகளில் வதந்தி பரப்பப்பட்டது. குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பல ஊர்களில் இந்த வதந்தி பரவியது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக வந்த வதந்தியை அடுத்து அந்த இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான ஊர்களில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்., களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் பணம் எடுக்க முண்டியடித்தது. எல்லோரும் அவரவர் கணக்கில் இருக்கும் எல்லா பணத்தையுமே எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். இøனால் ஏ.டி.எம்., முன்பு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. இது குறித்து இன்று அந்த வங்கியின் சி இ ஓ மற்றும் மேலாண் இயக்குநர் கே.வி.காமத் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது. எனவே எங்கள் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதையும் வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகள் எல்லாம் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தில் பரப்பப்படுகிறது.எனவே அவைகளை கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.4,84,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது. எனவே யாரும் எங்களது நிதி நிலை குறித்து அச்சம் அடைய தேவை இல்லை என்றார்.எங்கள் வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் தாராளமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நன்றி தினமலர்