Monday, January 18, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது.

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும் நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும். மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து.

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.
நன்றி : தினமணி

அமெரிக்காவில் மேலும் 4 வங்கிகள் மூடல்

அமெரிக்கா, பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அங்கு வங்கிகள் மூடும் நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


வங்கம் தந்த வரலாற்று நாயகன்

இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.

சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.

ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.

அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.

ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.

சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.

நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.

ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.

ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.

கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.

இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.

மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.

வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.

உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.

÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.

இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.

வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!
கட்டுரையாளர் :உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

லால் சலாம்!

ஒரு மாமலை சாய்ந்துவிட்டது; இனி எதிர்காலம் சூன்யமாகத் தெரிகிறது; அடுத்து என்ன, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் மரணத்தின் துயரமும் இழப்பின் தாக்கமும் குறைந்துவிடவும் செய்யாமல் நிகழ்ந்திருக்கிறது ஜோதிபாசுவின் மரணம். கடந்த பல மாதங்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும், அந்த மாமனிதரின் இழப்பு என்பது இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன?

மேற்கு வங்காளம் பல இடதுசாரி சிந்தனையாளர்களை இந்திய அரசியலுக்கு வழங்கி இருக்கிறது. பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஏ. பி. பரதன் என்று ஒரு மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருமே தலைசிறந்த பாராளுமன்றவாதிகளாகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளாகவும் திகழ்ந்தனரே தவிர, பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த அடிப்படை ஜனநாயக அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களா என்றால் கிடையாது. அதுதான் ஜோதிபாசுவின் பலம்.

அரசியலையும் கொள்கைப் பிடிப்பையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருந்ததால்தான் ஜோதிபாசுவால் 23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

ஜூலை 8, 1914-ல் பிறந்த ஜோதிபாசுவின் வாழ்க்கையில் இடதுசாரி இயக்கச் சிந்தனையின் தாக்கம் அவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்றபோது ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளர் யூனியன்தான் ஜோதிபாசுவின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருந்தது. அவரது முதல் சட்டப்பேரவை பிரவேசமே ரயில்வே தொகுதியிலிருந்துதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. டாக்டர் பி.சி. ராய் தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமாக அமைந்திருந்த காலத்தில், ஜோதிபாசு எதிர்க்கட்சி உறுப்பினராக எழுப்பிய விவாதங்களும் நடத்திய போராட்டங்களும் ஏராளம், ஏராளம்.

1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்திய நிறுவனத் தலைவர்களில் ஜோதிபாசு முக்கியமான பங்கு வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய அரசியல்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர்.

1969-ல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய அஜாய் முகர்ஜியின் வங்காள காங்கிரஸýடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அஜாய் முகர்ஜி முதல்வராகவும் அந்த அமைச்சரவையில் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். அந்தக் கூட்டணி ஆட்சி ஏன் கவிழ்ந்தது தெரியுமா? உள்துறை அமைச்சரான ஜோதிபாசு தன்னை செயல்படவிடுவதில்லை என்று முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சட்டப்பேரவையில் முதல்வரான தானே, தர்னா இருக்கப் போவதாக அறிவித்த கேலிக்கூத்துகள் மேற்கு வங்க சரித்திர நிகழ்வுகள்.

ஜோதிபாசுவின் வெற்றிக்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சாதுர்யமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக ஓர் இடதுசாரிக் கூட்டணி அரசை நடத்தியது. இன்னொரு காரணம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக நிலச் சீர்திருத்தங்களையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வையும் முறையாகச் செய்து முடித்தது. இவையாவையும்விட, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுப்படுத்தியதும் கட்சி பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும்தான்.

1996-ல் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசில் பங்கு பெறாதது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியது மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ஆட்சியில் பங்குபெற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புக்கொண்டிருந்தால், ஜோதிபாசு இந்தியாவின் முதல் இடதுசாரி பிரதமராகியிருப்பார். ஆனால் கட்சித் தலைமையின் விருப்பத்தை அரசியல்குழு ஏற்கவில்லை. கட்சியின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதால் என்ன பயன் என்று அரசியல் குழு கருதியது. கட்சியின் முடிவை கனத்த மனதுடன் தலைவணங்கி ஏற்ற தலைவர் ஜோதிபாசு. இன்னொரு தலைவர், இன்னொரு கட்சி இப்படியொரு சவாலை எதிர்கொள்ளுமா?

சரியான நேரத்தில் ஜோதிபாசு தன் பதவியைத் துறந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னமும் சிறிது காலம் கடத்தியிருந்தால், அவரது இயலாமை அவரைக் கேலிப் பொருளாக்கி ஜோதிபாசு என்கிற மிகப்பெரிய ஆளுமையைத் தகர்த்திருக்கும். ஜோதிபாசு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி வலுவிழக்கத் தொடங்கி இருப்பதில் இருந்தே இந்தத் தனிமனிதரின் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாளை ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்கப்போகும் செஞ்சட்டைப் படையினரின் முன்னால் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கும். இனிமேல் இடதுசாரி இயக்கத்தை வழிநடத்தவும், பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, ஜாதிய, மத சக்திகளால் கவரப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களை வழிநடத்தவும் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்குறிதான் அது.

ஜோதிபாசுவின் மரணம் இடதுசாரி இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமேயானால் மட்டுமே அவர் குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்படும்.
நன்றி : தினமணி