Thursday, December 24, 2009

புதிய பாதையில் அத்வானி

ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.

பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​ மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ​ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.

இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.

புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.

பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.

அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.

முதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்.​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.

அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.

மூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன?​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது?​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது?​ என்பது முக்கியமான விஷயமாகும்.

பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.

சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.

நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.

பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

புதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம் மின்தடை நடைமுறையில் உள்ளது.​ மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும்,​​ மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது.​ இது 11 சதவீதப் பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது.

இதன் காரணமாக நிரந்தரமான மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம்.​ இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக் கருதப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கு உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பில்லை என மின்சார வாரியமே தெரிவிக்கிறது.​ தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்க மேலும் 5 ஆண்டுகள் ​ ஆகலாம்.

தேவையான மின்சாரம்,​​ நீர்த்தேக்கங்கள்,​​ அனல் மின்நிலையங்கள்,​​ காற்றாலை,​​ இயற்கை வாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ உற்பத்தி விகிதத்தைவிட பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் மின்சாரத் தேவை அதிகரித்துவிட்டது.​ ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.​ மேலும் விவசாயம்,​​ குடிசை வீடுகள்,​​ நெசவாளர்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.​ எனவே,​​ மின்சாரத்தைச் ​ சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.

​ அண்மையில் மின்வாரியம் மின்சார சிக்கன வாரவிழாவைக் கொண்டாடியது.​ இந்த விழாவில் மின்வாரிய ஊழியர்கள்,​​ தனியார் ஆலை,​​ தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.​ பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.​ காரணம் இவ்விழா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால் மின்சார சிக்கன வார விழா குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை.

​ மின்சார சிக்கன வார விழாவை மின்சார வாரியம் மண்டலம்,​​ கோட்ட அளவில்தான் நடத்தியது.​ இந்த விழாவில் பேசிய மின்வாரிய அதிகாரிகள் மின்சார சிக்கனம் இல்லையெனில் எதிர்காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அபாய நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

சமூக அக்கறையுடன் மின்சார சிக்கனத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.​ எனவே அரசே மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை உள்ளது.​ மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கிய அரசு,​​ ஏன் மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் மின்சாரம் சிக்கனமாகச் ​ செலவழிக்கப்படுவதில்லை.​ ஏன் மின்வாரியப் பராமரிப்பில் உள்ள தெருவிளக்குகள்கூட உரிய நேரத்தில் அணைக்கப்படாததால்,​​ பகலில் பல மணி நேரம் மின்விளக்குகள் எரியும் நிலை உள்ளது.

இதனால்,​​ பெருமளவில் மின்சாரம் வீணாகச் செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை.​ எனவே மின்சார சிக்கனம் என்பது ஒரு சதவீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை மறுக்க முடியாது.

​ மின்சாரம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பிட்ட சில மணி நேர மின்தடையைச் சமாளிப்பதற்குக்கூட ​ இன்வெர்ட்டர்,​​ ஜெனரேட்டர் போன்ற சாதனங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

வீடுகள்,​​ பங்களாக்கள்,​​ அரசு அலுவலகங்கள்,​​ பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் 40 வாட்ஸ் குழல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்கு மாற்றாக 13 முதல் 18 வாட்ஸ் சிஎப்எல் ​(இஞஙடஅஇப ஊகஞமதஉநஇஉசப கஅஙட)​​ பல்புகளைப் பயன்படுத்தினால் குறைந்த மின்சாரச் செலவில் அதிக வெளிச்சம் பெறலாம்.

மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இதுபோன்ற சிஎப்எல் பல்புகளை அரசு அலுவலகங்கள்,​​ பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் இதுபோன்ற மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கலாம்.​ அவ்வாறு மின்விளக்குகளை பொருத்தினால்தான் இணைப்பு வழங்க வேண்டும்.

​ பிரம்மாண்டமான அரசு விழாக்கள்,​​ அரசியல் கட்சியினர் நடத்துகின்ற விழாக்களுக்கு தேவையான மின்சாரம் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து கிடைக்காது என்பதால் உயர் மின்அழுத்த இணைப்பில் இருந்து கொக்கி போட்டு திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் தொலைநோக்கான மின்உற்பத்தித் திட்டங்கள் கொண்டுவரப்படாத காரணத்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

ஏற்கெனவே மின் இணைப்புகள் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவோர் இணைப்புகளில் உள்ள பழுதானவயர்கள் மூலம் மின்சாரம் கசிந்து வீணாவதை மின்சார வாரியம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.

சமூக அக்கறையுடன் அரசும் மக்களும் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முன்வந்தால் எதிர்காலத்தில் மின்தடையே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
கட்டுரையாளர் : சா.​ ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி

தமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்

தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலை பார்ப்பதில், பெண்களும், குழந்தைகளும் அதிகம் ஆர்வம் காட்டுவதால், 'டிவி' சீரியல்கள் பார்ப்பது குறைந்து வருகிறது. கலாசாரத்திற்கு எதிரான விஷயங்களை, சீரியலாக தயாரித்து சில 'டிவி' சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கும் சீரியல்களை பார்க்கும் டீன்-ஏஜ் மாணவர்கள், குழந்தைகள், தவறான பாதைக்கு செல்லும் நிலை உள்ளது. சினிமாவை போல் 'டிவி' சீரியல்களுக்கு சென்சார் போர்டு இல்லாததால், வக்கிரம், குரூரம், ஆபாசம், வன்முறை என, கலாசார சீரழிவிற்கு வித்திடும் வகையில், சில சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது, சமூக நல ஆர்வலர்களுக்கு, பெரும் கவலையை அளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக, டிஸ்கவரி சேனல் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது அறிவு சம்பந்தமான பூகோளம், விண்வெளி, மருத்துவம், வனவிலங்குகள், காட்டில் உள்ள அதிசயங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை என, உலகிலுள்ள அனைத்து அம்சங்களையும் கண்முன் நிறுத்துகிறது. நேரில் சென்று பார்க்க முடியாத பல இடங்களை, தத்ரூபமாக படமாக்கி, அரிய தகவல்களோடு அளிக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒளிபரப்பானவரை, மொழி புரியாததால், கிராமங்களில், தகவல் புரியாமல் வேறு சேனலை மக்கள் பார்த்து வந்தனர். தற்போது, சுவாரசியம் குறையாமல் வசனங்களும், தகவல்களும் தமிழில் தருவதால், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்க்க துவங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளுக்கும் இச் சேனலை பார்க்க அறிவுறுத்துகின்றனர். சீரியல் பார்க்க நினைக்கும் பெற்றோரும், குழந்தைகளின் நச்சரிப்பதால் டிஸ்கவரி சேனல் பார்க்கத் துவங்கியுள்ளனர். முக்கியமாக, இரவு நேரங்களில், சுவாரசியம் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இதனால், தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனல் பார்க்கும் ஆர்வம், பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்