Saturday, September 13, 2008

ரூ.24 ஆயிரம் கோடி காப்பீடு : 'இன்போசிஸ்' அறிவிப்பு

இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தனது ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 97 ஆயிரம் ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான குழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. எல்.ஐ.சி., மேலாண்மை இயக்குனர் தாமஸ் மாத்யூ கூறுகையில்,'குழு காப்பீட்டு திட்டங்களிலேயே மிக அதிக மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை இன்போசிஸ் அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக மதிப்பிலான காப்பீடு என்றும் இதைக் கூறலாம். இந்தியாவை பொறுத்தவரை இதனை அதிகமான தொகைக்கு குழு காப்பீட்டு திட்டங்களை வேறு எந்த நிறுவனமும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
நன்றி : தினமலர்


இன்றும் வீழ்ச்சியில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சியைத்தான் சந்தித்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 323.48 புள்ளிகள் ( 2.26 சதவீதம் ) குறைந்து 14,000.81 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 61.85 புள்ளிகள் ( 1.44 சதவீதம் ) குறைந்து 4,228.45 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரச்சர் - 6.33 சதவீதம், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் - 6.09 சதவீதம், ஐ சி ஐ சி ஐ பேங்க் - 4.92 சதவீதம், ஹெச்.டி.எப்.சி.பேங்க் - 3.84 சதவீதம், டி.எல்.எப். - 3.81 சதவீதம், ஹெச்.சி.எல்., டெக் - 3.76 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் மாருதி சுசுகி, பெல், ஹெச்.யு.எல்., பார்தி ஏர்டெல், பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி ; தினமலர்