Saturday, September 5, 2009

ஆசிரியப் பணி என்னும் அறப்பணி

இதுவரை உலகில் இவ்வளவு உயர்ந்த இடத்தை யாருக்கும் அளித்தது இல்லை; அன்று முதல் இன்றுவரை இதில் மாற்றமும் இல்லை; இதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன வெறும் மொழிகள் இல்லை; பொன்மொழிகள்! மனித வரலாற்றில் வழிவழி வந்த மாறாத மணிமொழிகள்.

மக்கள் மட்டுமல்ல, மாமன்னர்களே மண்டியிடும் இடம் குருவின் பாதங்கள். அவர் பேச்சே வேதம்; அவர் மூச்சே அரசியல்; அவர் அன்றி நாட்டில் ஓர் அணுவும் அசையாது; அவர் காட்டும் வழியில்தான் அரசாங்கமே நடந்தது.

முடியுடை மூவேந்தர்களாக இருந்தாலும் புலவர்களைப் போற்றியதற்குக் காரணம் இதுதான்; சாணக்கியனின் வழியில் சந்திரகுப்தன் போனதற்குக் காரணமும் இதுதான்; அர்த்தசாஸ்திரம் ஆக்கப்பட்டதற்கும் அதுவே காரணம்.

மாபெரும் இதிகாசமாகப் போற்றப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், பகைவர்களான கௌரவர்களுக்கும் ஒரே குரு துரோணாச்சாரியார். அவர் கட்டை விரலைக் கேட்டபோதும் கவலைப்படாமல் எடுத்துத் தந்த மாணவன் கதை, காலம் காலமாகக் கவலையோடும், கண்ணீரோடும் கேட்கப்படுகிறது.

கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் இவர்களை உலகம் இன்னும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அறிஞர் அரிஸ்டாட்டில் மாவீரன் அலெக்சாண்டருக்கு மட்டுமா ஆசிரியராக இருந்தார்? அறிவுலகம் அனைத்துக்குமே ஆசிரியராகப் போற்றப்படுகிறார்.

""நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார் அந்த அலெக்சாண்டர்.

கல்வியா? செல்வமா? வீரமா? இவ்வாறு எத்தனை கேள்விகள் கேட்டாலும் அவற்றில் முதலில் வைத்துக் கேட்கப்படுவது கல்வியேயாகும். அதனை அளிப்பவர்கள் மதிக்கப்படுவதும், துதிக்கப்படுவதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பதை எடுத்துக்கூற வேண்டுமோ?

இவ்வாறு மரியாதை அளித்துவரும் மக்கள் சமுதாயத்துக்கு ஆசிரியர் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்குப் பங்கம் ஏற்படாதவண்ணம் நடந்து காட்ட வேண்டுமல்லவா? தேசத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் இளைய சமுதாயத்துக்குக் கல்வியும், ஒழுக்கமும் அளித்து அவர்களைப் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நன்றிக்கடனை நமது ஆசிரியர்கள் மறந்துவிடலாமா?

ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கிறார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப்போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில் தவறில்லையே!

""மாணவர்கள் நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள். அவர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல் நாட்டிற்குத் தலைகுனிவும், ஏமாற்றமும் உண்டுபண்ணும். ஐம்பது ஆண்டுகள் உலகின் பல பகுதிகளில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற முறையில் ஒன்று கூறுவேன். ஆசிரியர் செய்வதை மாணவர் பின்பற்றுவர். ஆகவே முந்தியவர், சரியான வழிகாட்டுவது அவசியம். மேலும் மூளைத்திறனைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...'' என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆசிரியப் பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல; தொண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் சேர வேண்டும்; கல்வியும், அறிவும் அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்; இந்த நாட்டைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை என்று இவர்கள் கூற முடியாது; கூறவும் கூடாது.

"ஆசிரியர் அடித்ததால் கிணற்றில் விழுந்து தற்கொலை' என்றும், "மாணவி மீது பாலியல் வன்முறை - பேராசிரியர் கைது' என்றும், "மாணவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதால் தலைமையாசிரியரை எதிர்த்துப் போராட்டம்' என்றும் வரும் செய்திகள் நாட்டின் நலனை நாடுவோருக்குக் கவலை தருகிறது. பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியதால் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாற்காலிகப் பணிநீக்கம்; அவர் மீதான ஊழல் புகார்கள் பற்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் முடக்கம்; இதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகளும், ஆசிரியர்களும் துணை என்னும் செய்திகள் ஆசிரியர் சமுதாயத்தை மாசுபடுத்துகின்றன.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்தால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது; சில மாணவர்கள் அவசரப்பட்டு தன்னையே மாய்த்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தவறுகளைத் திருத்திக் கொள்வதால் பயன் என்ன?

இவையெல்லாம் எங்கேயோ நடப்பவை, யாரோ சிலரால் செய்யப்படுபவை என்றாலும் அந்தச் செய்திகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆசிரியர் சமுதாயத்துக்குத் தீராத பழியாகவே நின்று நிலவும். மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு ஒழிந்துபோகும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும்.

கறுப்புத் துணியில் கறைபட்டால் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளைத் துணியில் கறைபடக் கூடாது என்பதில் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் இந்தப் பண்பு நலன்களை வளர்த்தெடுத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது.

""தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளி - கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்றனர்'' என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்; வரவேற்க வேண்டியதுதான்.

இதுதவிர, முறையான பயிற்சியில்லாத புதிய ஆசிரியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறாத போலி பயிற்சிப் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டதுதான். இதற்கு யார் காரணம்?

படிக்காமலேயே, பயிற்சி பெறாமலேயே பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் போதும், தேர்வில் அமர்ந்து விடலாம். அதன்பிறகு கல்வித்துறையை எதிர்த்து நீதிமன்றம் போய் வெற்றி பெற்று விடலாம் என்ற கல்வி வணிகர்களின் கணக்குத்தானே அரசியல்வாதிகளின் துணையோடு தொடர்கிறது.

நீதிமன்றமும் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நடத்திய கல்வி வணிகர்களுக்குத் தண்டனை தராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் துணை செய்வதாகக் கூறிக்கொண்டு தீர்ப்பு என்ற பெயரால் துணைபோனது.

போலிப் பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி மருத்துவர்கள் போலவே போலி ஆசிரியர்களும் புகுந்துவிட்டனர். இதற்கு யார் காரணம்? அரசும், கல்வித்துறையும்தான். போலிக் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்மேல் நடவடிக்கை எடுக்காமல், "அந்தக் கல்விக்கூடங்களில் சேர வேண்டாம்' என்று மக்களை எச்சரித்தால் போதுமா? இந்த எச்சரிக்கை எத்தனை பேருக்குத் தெரியும்?

கடுமையான வெயிலில் பாறைமேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருகி ஓடுவதை, கையில்லாத ஊமையன் கண்ணால் பார்த்துக் கலங்கி நிற்கும் நிலையில்தான் உண்மையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தங்கள் காலத்திலேயே, தங்களுக்கு எதிரிலேயே கல்வி சீரழிவதைப் பார்த்து வேதனைப்படுகின்றனர்; மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

உலகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கமே உயர் தனிச் செம்மொழி என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகும் தமிழ்வழிக் கல்வி எதிர்க்கப்படுகிறது. எல்லோரும் வரவேற்கும் "சமச்சீர் கல்வி'யை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், "அதனை எதிர்த்து நீதிமன்றம் போவோம்' என்று மெட்ரிக்குலேஷன் நிர்வாகங்கள் அரசாங்கத்தையே மிரட்டுகின்றன.

இந்த நிலையில் ஆசிரியர்களுக்குப் பொறுப்புகள் அதிகம். ஆசிரியர் சங்கங்கள் இனியும் ஊதிய உயர்வு கேட்கும் சங்கங்களாக மட்டும் இல்லாமல், எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களுக்குத் தங்கள் உரிமைகளோடு கடமைகளையும் செய்யும்படி எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது.

ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் - குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவரும் ஓர் ஆசிரியரிடம் பயின்றவர்தாம். ஆசிரியர்கள் அந்த உயர்ந்த இடத்தை இழந்துவிடலாமா?

(இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)

கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

இப்படியும் ஓர் ஆசிரியர்!

வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.

மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.

இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.

குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.

அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.

ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.

கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?

தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன். ஆசிரியர் தினத்தன்று அவரின் தியாகச் செயல்களை நினைத்துப் பெருமை கொள்வோம்.

அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.

நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.

ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.

ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும். ஆசிரியர் தினமான இன்று மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!

கட்டுரையாளர் : எஸ்.வி.எஸ். ஜெகஜோதி
நன்றி : தினமணி

மும்பையில் ரூ.1.77 கோடி கிரெடிட் கார்டு மோசடி

மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் 'எலக்ட்ரானிக் டேட்டா கேப்ச்சர்'(ஈ.டி.சி) மிஷின்களை நிறுவியுள்ளன. இவற்றில் கிரெடிட் கார்டு மூலம், வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தலாம். 7,500 ரூபாய்க்கு மேல் போனால் வாடிக்கையாளரின் அடை யாள அட்டை நகலை கடைக்காரர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பை அந்தேரியில் 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஈ.டி.சி., மிஷினை வைத்திருந்தது. வங்கி ஊழியர்கள் அந்தக் கடையின் வங்கிக்கணக்கில் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்ததைக் கண்டுபிடித்தனர். எப்போதும் மிகக் குறைவாகவே பரிவர்த்தனை செய்யும் அந்தக் கடையை சோதனையிட்டனர். அப்போது, போலி வாடிக்கையாளர் அட்டைகளும் போலி கிரெடிட் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து, மும்பைப் பெருநகர பொருளியல் குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் சக்சேனா கூறுகையில், 'ஹுக்கும்சிங் இதே கடை மூலம்தான் மோசடி செய்துள்ளான்.


பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. கடைசியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில்தான் ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. மோசடிக்கு உடந்தையான 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடைக்காரரையும் விசாரித்து வருகிறோம்' என்றார்.

நன்றி : தினமலர்


வாரம் தோறும் பிரிமியம்: எல்.ஐ.சி.,யின் ஜீவன் மங்கள்

வாரம் தோறும் பிரிமியம் செலுத்தும் வகையில் எல்.ஐ.சி.,யின் நுண் காப்பீட்டுத் திட்டமாக 'ஜீவன் மங்கள்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., கட்டடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'ஜீவன் மங்கள்' பாலிசியை மண்டல மேலாளர் வி.கே.சர்மா அறிமுகப்படுத்தி பேசியதாவது: நகர்ப்புற, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் 'மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாலிசியான 'ஜீவன் மாதூர்' திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2006ல் துவக்கி வைத்தார். இரண்டாவதாக தற்போது 'ஜீவன் மங்கள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு காலவரையறைக்கு உட்பட்ட திட்டம். பாலிசி முடிவில் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும். இதன் பிரிமியத்தை ஒரே தவணை, ஆண்டு, காலாண்டு, அரையாண்டு, மாத தவணை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மற்றும் வாரந்தோறுமாக செலுத்தலாம். கால முடிவிற்குள் பாலிசிதாரர் இறந்தால், வாரிசுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விபத்துக்கான கூடுதல் காப்பீடு செலுத்தி, விபத்து பாதுகாப்பு பெறும் வாய்ப்பும் உள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை காப்புத் தொகை பெறலாம். எல்.ஐ.சி.,யின் 53வது ஆண்டு மற்றும் எல்.ஐ.சி., வார விழா இம்மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எல்.ஐ.சி., தனது பாலிசிதாரர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவான சேவையை தந்து வருகிறது. இவ்வாறு சர்மா தெரிவித்தார். 'ஜீவன் மங்கள்' பாலிசியை சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் வெளியிட்டார். எல்.ஐ.சி., நிறுவன அதிகாரிகள், ஏஜன்ட்கள், என்.ஜி.ஓ.,க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்