Friday, January 15, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.
இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.

இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.
தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : வி.குமாரமுருகன்
நன்றி : தினமணி

தொட​ரும் இன​வெ​றித் தாக்​கு​தல்

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​திய மாண​வர்​கள் மீது நடந்து வரும் இன​வெ​றித் தாக்​கு​தல் கவலை அளிக்​கி​றது.​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக ​ இத்​த​கைய தாக்​கு​தல்​கள் நடந்து வரு​வது கவ​னத்​தில் கொள்​ளத்​தக்​கது.​

க​டந்த ஒரு​வா​ரத்​துக்கு முன்​னர் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் மெல்​பர்ன் நக​ரில் பஞ்​சா​பைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளை​ஞர் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் கொடூ​ர​மா​கக் குத்​திக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.​ இதைத் தொடர்ந்து எரிந்த நிலை​யில் இந்​தி​ய​ரின் உடல் மீட்​கப்​பட்​டுள்​ளது.​ இச் சம்​ப​வங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளன.​ இந்த அதிர்ச்​சியி​லி​ருந்து நாம் மீள்​வ​தற்​குள் மற்​றொரு இந்​தி​யர் மீது மர்​மக் கும்​பல் ஆசிட் வீச்சு நடத்​தி​விட்டு தப்​பி​யோ​டி​யுள்​ளது.​

மெல்​பர்ன் நக​ரின் வட​மேற்​குப் பகு​தி​யில் வசித்து வரு​ப​வர் ​ ஜஸ்ப்​ரீத் சிங்.​ இந்​தி​ய​ரான இவர்,​​ தனது மனை​வி​யு​டன் ஒரு விருந்​துக்​குச் சென்​று​விட்டு வீடு திரும்​பு​கை​யில் மனை​வியை வீட்​டில் இறக்​கி​விட்டு,​​ காரை பக்​கத்​துத் தெரு​வில் நிறுத்​தி​விட்டு வெளியே வந்​த​போது மர்​மக் கும்​பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி,​​ தீவைத்​து​விட்​டுத் தப்​பி​யோ​டி​விட்​டது.​

இப்​படி இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தல் அடிக்​கடி நடக்​கின்ற போதி​லும் இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு தீவி​ரப் பிரச்​னை​யாக எடுத்​துக் கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்​தத் தாக்​கு​தலை இன​வெ​றித் தாக்​கு​தல் என்று சொல்​ல​மு​டி​யா​விட்​டா​லும்,​​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக இந்​தி​யர்​களை மட்​டும் குறி​வைத்து நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைப் பார்த்​தால் இது இன​வெறி ஆதிக்​கச் செயலே என்​பது தெரி​ய​வ​ரும்.​

இந்​தத் தாக்​கு​தல் சம்​ப​வங்​கள் சாதா​ரண குற்​றச் சம்​ப​வங்​கள்​தான் என்​பது போல் ஆஸ்​தி​ரே​லி​யத் தூதர் தாமஸ் வர்​கீஸ் பேசி​யுள்​ளார்.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் மேற்​ப​டிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தற்கு சர்​வ​தேச அள​வில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரச் சரிவே கார​ணம் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.​ ஆனால்,​​ ஊட​கங்​கள் மூலம் கிடைக்​கும் தக​வல்​க​ளைப் பார்த்​தால் பாது​காப்பு இல்​லாத கார​ணத்​தால்​தான் இந்த எண்​ணிக்கை குறைந்து வரு​வது புரி​யும்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் ஆசி​யர் அல்​லா​த​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யு​டன் ஒப்​பிட்​டால் அங்கு படித்து வரும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறை​வு​தான்.​ ஆனால்,​​ ஆசி​யர்​கள் எண்​ணிக்​கை​யில் இந்​தியா இரண்​டா​வது இடம் வகிக்​கி​றது.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் பட்​ட​மேற்​ப​டிப்பு படிக்​கும் மாண​வர்​கள்,​​ பகு​தி​நேர ஊழி​யர்​க​ளாக வேலை​செய்து தங்​கள் செல​வி​னங்​க​ளைச் சமா​ளித்து வரு​கின்​ற​னர்.​ குறிப்​பாக மெல்​பர்ன் நக​ரில் இந்​தி​யர்​கள் எங்கு சென்​றா​லும் குழு​வா​கவே செல்​கின்​ற​னர்.​ தனி​யா​கச் செல்​வ​தில்லை.​ மேலும் விலை​ம​திப்பு மிக்க பொருள்​கள் எதை​யும் அவர்​கள் கையி​லெ​டுத்​துச் செல்​வ​தில்லை.​ இந்​நி​லை​யில் இது​போன்று நடத்​தப்​ப​டும் தாக்​கு​தலை வழிப்​பறி என்ற சாதா​ரண குற்​ற​மாக யாரும் சொல்​லி​விட முடி​யாது.​

இந்​தி​யர்​கள் மீது குறிப்​பாக மாண​வர்​கள் மீது நடத்​தப்​பட்டு வரும் கொலை​வெ​றித் தாக்​கு​த​லுக்கு இந்​தியா ​ கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளதை ஆஸ்​தி​ரே​லிய அர​சால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தா​கக் கூறு​வ​தற்​குப் பதி​லாக உல​கம் எங்​கும் இது​போன்ற குற்​றங்​கள் நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ ஏன் தில்லி,​​ மும்பை போன்ற நக​ரங்​க​ளி​லும் இவை நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ எனவே இதைப் பெரி​து​ப​டுத்த வேண்​டாம் என்று அந்த நாட்​டின் வெளி​யு​றவு அமைச்​சர் பேசி​யுள்​ளது அவ​ரது பொறுப்​பற்ற தன்​மை​யையே காட்​டு​கி​றது.​

இத்​த​கைய சம்​ப​வங்​கள் தற்​செ​ய​லாக நடந்​தி​ருந்​தா​லும் சரி...இன​வெ​றித் தாக்​கு​த​லாக இருந்​தா​லும் சரி...​ வெளி​நாட்​டி​னரை,​​ குறிப்​பாக இந்​தி​யர்​க​ளைப் பாது​காக்​கும் பொறுப்பு ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு உள்​ளது.​

இந்​தி​யர்​கள் மீது இன​வெ​றித் தாக்​கு​தல் நடந்து வரும் நிலை​யில்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா,​​ "ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​கள் ஒரு​மு​றைக்கு இரு​முறை யோசித்​துப் படிக்​கச் செல்​ல​வேண்​டும்.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் ஆஸ்​தி​ரே​லியா சென்று படிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்.​ வேறு​நா​டு​க​ளில் உள்ள பட்ட மேற்​ப​டிப்​பு​க​ளைத் தேர்ந்​தெ​டுத்​துப் படிக்​க​லாம்' என்​றும் யோசனை கூறி​யி​ருக்​கி​றார்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தலை உட​ன​டி​யாக நிறுத்த அந்த நாட்டு அர​சு​டன் பேச்சு நடத்தி சுமு​கத் தீர்​வு​காண முன்​வ​ரா​மல்,​​ மாண​வர்​களை அங்கு சென்று படிக்க வேண்​டாம் என்று கூறு​வது புத்​தி​சா​லித்​த​னம் அல்ல.​ ஆஸ்​தி​ரே​லிய பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பட்​ட​மேற்​ப​டிப்​புக் கல்வி நன்​றாக இருப்​ப​தால்​தான் அங்கு சேர்​வ​தில் மாண​வர்​கள் ஆர்​வம் காட்​டு​கின்​ற​னர்.​ மேலும் திற​மை​யுள்ள மாண​வர்​க​ளும்,​​ அதிக மதிப்​பெண் பெறும் வாய்ப்​புள்ள,​​ வன்​மு​றைச் செயல்​க​ளில் ஈடு​ப​டாத மாண​வர்​கள்​தான் அங்கு செல்​கின்​ற​னர்.​ எங்கு சென்று படிக்க வேண்​டும்,​​ என்ன படிப்பு படிக்க வேண்​டும் என்​ப​தைத் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மாண​வ​ரும் அவ​ரு​டைய பெற்​றோ​ரும் தான்.​ கல்வி ஆலோ​ச​கர்​க​ளா​கச் செயல்​ப​டும் சில​ரு​டைய தவ​றான வழி​காட்​டு​தல்​க​ளாலே தவ​று​கள் ஏற்​ப​டு​கின்​றன.​ வெளி​நாடு சென்று படிக்​கும் மாண​வர்​க​ளுக்​குச் சில எச்​ச​ரிக்​கை​களை அமைச்​சர் தெரி​விக்​க​லாமே தவிர அவர்​களை இங்கு படிக்​காதே,​​ அங்கு படிக்​காதே என்று தீர்ப்​புச் சொல்​லக்​கூ​டாது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் இந்​திய மாண​வர்​கள்,​​ தங்​க​ளின் திற​மை​யான படிப்​பின் மூல​மும்,​​ செயல்​பாட்​டின் மூல​மும் அந்த நாட்​டுக்​குப் பெருமை தேடித் தரு​கின்​ற​னர்.​

இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு உணர்ந்​து​கொண்டு நடந்த சம்​ப​வத்​துக்கு வருத்​தம் தெரி​விப்​ப​து​டன் நில்​லா​மல்,​​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்​பில் கவ​னம் செலுத்த வேண்​டும்.​ அது​மட்​டு​மல்ல,​​ இது​போன்ற இன​வெ​றித் தாக்​கு​த​லுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​ப​து​டன் இதற்​குக் கார​ண​மான குற்​ற​வா​ளி​க​ளைக் கண்​டு​பி​டித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​

அன்​னிய நாட்​டில் இந்​தி​யர்​க​ளின் விலை​ம​திக்க முடி​யாத உயிர் பறி​போ​வதை பார்த்​துக்​கொண்டு நாம் சும்மா இருக்க முடி​யாது.​ இந்​திய மாண​வர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு முழு பொறுப்பு உள்​ளது.​ அதை வலி​யு​றுத்​தும் கடமை இந்​திய அர​சுக்கு உள்​ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராக​வன்
நன்றி : தினமணி

தகுதியற்றதா, தேவையற்றதா?

தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் அண்ணா கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது போன்ற தகுதியற்ற செலவுகளுக்காகத் திருப்பிவிட்டதாகக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறியிருக்கிறது.

தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருந்து அதில் கூறப்படும் குறைகளைப் பற்றி பேரவையிலும் வெளியிலும் பேசுவதைத் தங்களுடைய கடமையாகவே கருதி ஒரு காலத்தில் செயல்பட்டன எதிர்க்கட்சிகள். கணக்கு வழக்குகளில் நிபுணர்களும் நடுநிலையாளர்களுமான தணிக்கையாளர்களின் அறிக்கை என்பதால், அவற்றுக்கு ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆளும் கட்சிகளும் அதற்கு விளக்கம் அளித்து தவறு எப்படி ஏற்பட்டது என்று கூறி, தன் மீதான பழியை ஓரளவாவது போக்கிக் கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய்தன.

இப்போது அதெல்லாம் அவசியம் என்று எதிர்க்கட்சிகளும் நினைப்பதில்லை, ஆளும் கட்சியும் கவலைப்படுவதில்லை. தணிக்கை அறிக்கை என்பது பத்திரிகைகளில் பிரசுரமான பிறகு, ""நேராக எங்கு போக வேண்டுமோ'' அங்கே போய் விடுகிறது.

அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவது உள்ளிட்ட தகுதியற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தியிருப்பதாகத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தொலைக்காட்சிப் பெட்டியை முட்டாள்(களின்) பெட்டி என்றே அழைப்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதற்காகவே தொலைக்காட்சிப் பெட்டியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, வழக்கம்போல ஏதோ நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒரே முனைப்பாக இருந்து அந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினார் முதல்வர்.

பொதுப் பணத்தை சூறையாடத்தான் இந்தத் திட்டம் என்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது ""ஆண்ட'' அனுபவத்தைக் கொண்டு உடனே குற்றம் சாட்டியது. ""தொலைக்காட்சிப் பெட்டியைத் தேர்வு செய்யப் போவதும், தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யப் போவதும் அனைத்துக் கட்சி குழுதான்'' என்று முதல்வர் அறிவித்தார். பிரச்னை, தரமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்படுவதிலும், முறையாக விநியோகம் செய்யப்படுவதிலும் இல்லை. இப்படி ஒரு திட்டம் இன்றைய நிலையில் அவசியத் தேவைதானா, அதனால் யாருக்கு என்ன லாபம் என்பதுதான்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் என்று தொடங்கி, ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லா குடும்பங்களுக்கும் என்று இப்போது இந்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் நிதியாதாரம் என்பது பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பிலிருந்துதான் மறைமுக வரிகள் மூலம் பெறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பது அரசின் கட்டாயக் கடமை.

பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருக்கலாம்; படிக்காத குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இருக்கலாம்; வேலை கிடைக்காத பட்டதாரிகள் இருக்கலாம்; மருத்துவமனையே இல்லாத கிராமங்கள் இருக்கலாம்; மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனை இருக்கலாம்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கலாம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று நினைத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படும் இந்த அரசைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது.

எந்த நிறுவனம் இந்தப் பொது அறிவு அட்சயபாத்திரத்தைத் தயாரிக்கிறது என்று தெரியவில்லை. மின்வாரியத்தின் மின்னழுத்த மாற்றத்தைத் தாங்க முடியாமல் பருத்தி வெடிப்பது போல ஆங்காங்கே வெடித்துச் சிதறி, கரிந்து வருகிறது மக்களின் வரிப்பணம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமாப் படங்களும், குத்தாட்ட நடனங்களும், பழிக்குப்பழி சீரியல்களும் பார்க்காமல் அறிவார்ந்த விஷயங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது உலகறிந்த ரகசியம். ஆளுங்கட்சி ஆதரவு சானல்களின் பார்வையாளர்கள் கணக்கை (டி.ஆர்.பி.ரேட்டிங்) அதிகரித்து அதன்மூலம் தங்களது விளம்பர வருவாயை அதிகரிக்கத்தான் இந்தத் திட்டம் உதவுகிறது என்பதும் ரகசியமல்ல.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்கான செலவை இலவச சமையல் எரிவாயு அடுப்புக்கான செலவுடன்கூட ஒப்பிட முடியாது. விறகுக்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க உதவுவதால் இலவச சமையல் எரிவாயு திட்டம்கூட வரவேற்கப்பட வேண்டியதே.

வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான செலவு மட்டும் அல்ல, சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்காக ஒதுக்கப்படும் தொகுதிவளர்ச்சி நிதியும்கூட முழு அளவுக்குப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படுவதில்லை என்றுதான் தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.

நல்லரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற முன்னேற்றம் போன்றவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கவர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதைத் தணிக்கை அறிக்கையில் கண்டிக்கத்தான் முடிகிறதே தவிர, தண்டிக்கவா முடியும்? ஆட்சியாளர்கள் தீர்க்கதரிசிகளாக இல்லாமல், தொலைநோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளாக இருப்பதன் விளைவை அனுபவிக்கப்போவது என்னவோ நாளைய தலைமுறைதானே... இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
நன்றி : தினமணி