Saturday, January 3, 2009

மொபைல் கட்டணம் 30 சதவீதம் குறையும்

மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தொலைபேசி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் 'டிராய்' அமைப்பு, மொபைல் நிறுவனங்களின், மொபைல் இணைப்பு சேவை தொடர்பாக, சில கட்டணங்களை விதித்துள்ளது. இந்த கட்டணங்களை இப்போது குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி உள்ளது. பி.எஸ்.என்.எல்., மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறது என்றால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் 13 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும். இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'டிராய்' தன் முடிவை இப்போது பரிந்துரை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினாலும், இறுதி முடிவு, மார்ச் மாதம் எடுக்க உள்ளது.

அப்போது தான் இது தொடர்பாக முழு விவரம் தெரியும். இந்தியாவில் மொபைல் போன் சேவை, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப முறைகளில் தரப்படுகிறது. ஜி.எஸ்.எம்., முறையில் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ள சந்தாதாரர்கள் தான் அதிகம். சி.டி.எம்.ஏ.,வில் கணிசமாக குறைவாகத்தான் உள்ளனர். இதனால், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்களை விட, ஜி.எஸ்.எம்.,நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. போட்டி காரணமாக, சந்தாவை குறைத்து, அதனால், ஓரளவு இழப்பை தான் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், 'டிராய்' திட்டம் பற்றி மொபைல் நிறுவனங்கள் தரப்பில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. 'டெர்மினேஷன் கட்டணத்தை ஒன்பது பைசாவாக குறைக்க வேண்டும். அப்போது தான் எல்லா நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படாமல் வர்த்தக போட்டியை சமாளிக்க முடியும்' என்று சில நிறுவனங்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் இறுதி முடிவு தெரிந்த பின், மொபைல் கட்டணம் அதிக பட்சம் 30 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, சாதா போன் சந்தாதாரர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும்.
நன்றி : தினமலர்

ரிசர்வ் வங்கியின் இரண்டாவது கட்ட சலுகை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான, இரண்டாவது சலுகை திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வீதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றம், இம் மாதம் 17ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேரியல் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது விரிவுப்படுத்தப்படும். வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.0 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ரொக்க கையிருப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், வங்கிகளில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம், வங்கிகளுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கும். இந்திய கட்டுமான நிதிக் கழகம் தங்கள் நிதி ஆதாரத்தை மேலும் அதிகரித்து கொள்ள, வரிச்சலுகை அளிக்கும் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள் ளது. ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் நிதி திரட்டவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்


கண்ணாமூச்சி காட்டும் தங்கம் விலை : மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது

சில மாதங்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை, மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது. முக்கிய விசேஷ காலங்கள், முகூர்த்தங்கள் வரும் தை, ஆவணி உள்ளிட்ட மாதங்களில் தங்கத்தின் விலை உச்சத்திற்குச் செல்லும். சமீப காலமாக தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டி, நடுத்தர மக்களை பரிதவிக்கச் செய்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,284 ரூபாயை எட்டியது. அப்போது ஒரு சவரன் 10,272 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள் ளது. கடந்தாண்டு நவம்பர் மாத துவக்கத்தில் ஒரு கிராம் 1,097 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,774 ரூபாய்க்கும், 15ம் தேதி ஒரு கிராம் 1,115 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. டிசம்பர் முதல் தேதியில் ஒரு கிராம் 1,201 ரூபாய்க்கும், சவரன் 9,608 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. உயர்ந்துவந்த நிலையில், டிசம்பர் 10ம் தேதி தங்கத்தின் விலையில் சிறிய சறுக்கல் காணப்பட்டது. ஒரு கிராம் 46 ரூபாய் குறைந்து 1,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் 1,242 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,936 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 1,247 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,976 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. தை மாதம் பிறக்க இருக்கும் நிலையில் கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியதால், திருமணத் திற்காக நகைகள் வாங்க காத்திருக்கும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தினமலர்