Wednesday, November 11, 2009

மீட்கப்பட்ட நாட்டின் மதிப்பு!

தனிமனிதர் ஒருவர், சந்தர்ப்பவசத்தால், தன் ஆஸ்தியை அடகு வைக்க நேர்ந்து, நாளடைவில் அதை மீட்டு எடுத்தால், அது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு, கிட்டத்தட்ட அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால், அது ஓர் உணர்வுபூர்வமான விஷயமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை.

சுமார் 18 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அந்தச் சம்பவம் இப்போது நினைவுகூரப்படுகிறது.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கு கெடு நெருங்கிவிட்டது. வட்டி செலுத்துவதற்குப் போதுமான அந்நியச் செலாவணி மத்திய அரசிடம் அப்போது இல்லை.

அதேபோல் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் அந்நியச் செலாவணி இல்லை.

அதுசமயம் வெளிநாட்டிலிருந்து கடத்தல் செய்யப்பட்ட தங்கத்தை நமது சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கத்தை - சுமார் 70 டன் தங்கம் - பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து அந்நியச் செலாவணி திரட்டப்பட்டது.

"இளம் துருக்கி' என மதிக்கப்பட்ட மறைந்த சந்திரசேகர் பாரதப் பிரதமராக இருந்த அந்தநேரத்தில், இப்படித்தான் அவர் ஒரு சிரமமான நிலையைச் சமாளித்தார்.

அதன்பிறகு, ஒரு சில ஆண்டுகளில் நிலைமை மாறத் தொடங்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக உயர்ந்தது. இப்போது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

இதற்கு முத்தாய்ப்பாக, சில தினங்களுக்குமுன் பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதி அமைப்புக்கு (ஐ.எம்.எஃப்.) 6.7 பில்லியன் டாலர் (ரூ. 29,490 கோடி) கொடுத்து 200 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளது.

இது வெறும் தங்கக் கொள்முதல் மட்டுமல்ல; இந்தியா நியாயமான பெருமிதம் கொள்ளத்தக்க "வெற்றிக் கதை' என பலரால் கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எம்.எஃப். விற்பனை செய்ய முன் வந்த தங்கத்தில் பாதி அளவை இந்தியா கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் வாங்குவதில் இரு வேறு நிலைப்பாடுகள் உள்ளன. சிலர், நகைச்சுவையாகக் கூறுவதுபோல், ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ, உலகிலேயே சந்தையில் அதிகம் தங்கம் வாங்குவது இந்திய மக்கள்தான். ஆண்டுக்கு சுமார் 800 டன் தங்கத்தை இந்திய மக்கள் வாங்குகிறார்கள்.

அதேநேரம், பாரத ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு அப்படி ஒன்றும் பெரிய அளவில் இல்லை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு.
அமெரிக்காவில் உள்ள "பெரெட்டன் உட்ஸ்' நகரில் 1944-ம் ஆண்டு பல நாடுகள் கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு நாடும் தன் கையிலிருக்கும் தங்கத்தின் அடிப்படையில்தான், தங்கள் நாணயத்தை மாற்றிக் கொள்வதற்கான விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்பதே அது.

ஆனால், காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக, 1971-ல் இந்த முறை கைவிடப்பட்டது.

மாறாக, கையிருப்பாக எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதற்குப் பதில், கையிருப்பாக எவ்வளவு அமெரிக்க டாலர் இருக்கிறது என்ற அடிப்படையை உலக நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில், இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 285 பில்லியன் டாலராக இருந்தது.

இது அன்னிய கரன்சியாகவும், தங்கமாகவும், ஐ.எம்.எஃப்.ல் எஸ்.டி.ஆர். வடிவிலும் உள்ளன. பல்வேறு உலக நாடுகளைப்போல், இந்தியாவின் தங்கக் கையிருப்பு மதிப்புக் குறைவுதான். அண்மைக்காலம்வரை இந்தியாவின் தங்கக் கையிருப்பின் மதிப்பு, பத்து பில்லியன் டாலர் அளவுதான்.

துல்லியமாகச் சொல்ல வேண்டும் எனில் 351 டன் தங்கம் மட்டுமே இருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது.

அண்மையில் 200 டன் தங்கம் கொள்முதல் செய்த பிறகு, இந்தியாவின் தங்கக் கையிருப்பு 557 டன்னாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் அளவு 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் பயனாக, உலகில் அதிக அளவு தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், இந்தியாவைப் பின்பற்றி மேலும் சில நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பை உயர்த்துவதற்கு முன்வரக்கூடும்.

ஏற்கெனவே சீனா, ரஷியா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பில் பெரும் பகுதியைத் தங்கமாகத்தான் வைத்திருக்கின்றன.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மேலும் சில நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கள் தங்கக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், தங்கம் கொள்முதல் செய்வார்களேயானால், தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும்.

அதுதவிர, தங்கத்தின் விலை உயருவதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருவதுதான். கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, உலகின் முக்கிய கரன்சிகளுக்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு சில நீண்டகால அடிப்படையிலான காரணங்களும் உண்டு.

உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாகக் குறைந்துள்ளது.

தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கான உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு போவதற்கு இவையெல்லாமும் காரணம் ஆகும்.

ஒரு பக்கம், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து, வளர்ச்சி பூஜ்யத்துக்குக்கீழே சரிந்துள்ளது.

இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரின் மதிப்புக்குக் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும்கூட, சர்வதேச வர்த்தகத்தில், நாணய மாற்றம் என்று வரும்போது, அமெரிக்க டாலருக்கு உள்ள உயர்ந்த இடத்தை இப்போதைக்கு தட்டிப்பறித்துவிட முடியாது.

எனினும், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது என்பது எப்படி ஒரு தனி நபரின் முதலீட்டுத் திட்டத்துக்குப் பொருந்துமோ, அதேபோல், ஒரு நாட்டின் கையிருப்பை நிர்வகிப்பதற்கும் பொருந்தும்.

இந்தியாவின் கையிருப்பை ஒரே நாணயத்தில் வைத்துக் கொள்ளாமல், பரவலான வகையில் வைத்திருப்பதே விவேகமானது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும். அந்த வகையில் பார்த்தாலும், பாரத ரிசர்வ் வங்கி சுமார் ரூ.30,000 கோடி கொடுத்து 200 டன் தங்கம் வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

குடியாட்சி குடிகளுக்காக இல்லையா?

"மக்களின் நலன் கருதி நாங்கள் இணக்கமாகப் போய்விட்டோம்' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்திருக்கிறார். எந்த மக்களின் நலன் என்பதை எடியூரப்பா விரித்துரைக்கவில்லை!

ஒரு தொடர்பும் இல்லாத ஒகேனக்கல்லுக்குச் சொந்தம் கொண்டாடி வம்படி அரசியலில் ஈடுபாடு காட்டுகிற எடியூரப்பாவா, இப்படி வாலைக் குழைத்துக் கொண்டு ரெட்டி உடன்பிறப்புகளிடம் மண்டியிட்டு நிற்கிறார் என்பதை நம்ப முடியவில்லை!

ஒரு சாதாரண ஏட்டையாவாக என்றாவது ஒருநாள் ஆகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில், நாடு விட்டு நாடு சென்று, மொழி அறியாக் கன்னட தேசத்துக் காவல்துறையில் சேர்ந்து, கண்டவனுக்கெல்லாம் "சல்யூட்' அடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஆந்திரத்துச் செங்கரெட்டிக்குத் தன்னுடைய மக்கள் மூவருக்கும் ஒருநாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவே "சல்யூட்' அடிப்பார் என்று கடவுளே நேரில் தோன்றிச் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்.

செங்கரெட்டியின் காலம் அப்படிப்பட்ட காலம்; அது நேரு நாடாண்ட காலம். சோஷலிச பாணி சமுதாயத்தை உருவாக்க நேருவுக்கு நம்முடைய ஊரான ஆவடி அடியெடுத்துக் கொடுத்த காலம்.

""டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப் பகையாளி'' என்ற முழக்கங்களால் பெருமுதலாளிகள் ஒரு வரையறைக்குள் வைக்கப்பட்டிருந்த காலம். ஆயினும் காலத்தின் சுழற்சியை யார் மறிக்க முடியும்? மேற்கு வங்கப் பொதுவுடைமை முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சாரியா, டாட்டா பிர்லாக்களுக்குக் கூட்டாளியாகி விடுவார் என்று யார்தான் கருதியிருக்க முடியும்?

நவீன உற்பத்தி முறைகள் தோற்றுவித்திருக்கும் "பகாசுர' முதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு முதலாளிகளிடமிருந்தும் தொழிலாளி வர்க்கத்தைக் காப்பாற்றப் பிறப்பெடுத்த பொதுவுடைமைக் கட்சிகள், பிறப்பு நோக்கம் மாறி, டாட்டாக்களுக்கு ஏழை உழவர்களின் நந்திகிராமத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கப் புறப்பட்டுவிட்ட காலம்தானே, ஆந்திரத்துச் செங்கரெட்டியின் மக்கள் பெல்லாரியில் செழித்து வளர்வதற்குரிய காலமாகவும் இருக்க முடியும்.

முன்பெல்லாம் பணமுதலைகள் தங்களின் சிறுசிறு தேவைகள் நிறைவேற அரசின் தயவுக்காகக் காத்துக் கிடப்பார்கள். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாக ஆளும் கட்சிகளுக்குச் சிறு சிறு கொடைகள் கொடுப்பதுண்டு.

அதற்காகப் பிரதமர் நேருவைச் சந்திப்போர் பட்டியலில் டாட்டா பிர்லாக்களின் பெயர்கள் என்றுமே இடம்பெற்றது கிடையாது. அண்ணல் காந்தி அடிகள் தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சேரிகளிலும் தங்குவார்; பிர்லா மாளிகையிலும் தங்குவார்! ஆனால் பெருமுதலாளியான பிர்லா, காந்தியைப் பொறுத்தவரை இன்னொரு சேவாதள ஊழியர்; அவ்வளவே!
ஆனால் இன்று முதலமைச்சர்களெல்லாம் சேவாதள ஊழியர்களாகிவிட்டனர். ஆளுநரின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரை ஓர் அரசு பதவியில் நீடிக்கலாம் என்பது எழுதப்பட்ட அரசியல் சட்டம். பகாசுர முதலாளிகளின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரைதான் ஓர் அரசு பதவியில் நீடிக்க முடியும் என்பது இன்றைய எழுதப்படாத அரசியல் சட்டம்.

கர்நாடகத்தில் ஒருவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது, பெல்லாரியில் சுரங்கத் தொழில் நடத்தும் மூன்று ரெட்டி உடன்பிறப்புகள் கையில் இருப்பதை நாடு அதிர்ச்சியோடு பார்த்து உறைந்து போனது. நாட்டின் பிரதமர் நாற்காலிக்கு அறிவிக்கப்பட்ட அத்வானியால்கூட நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையே.

சிறுத்தை கவ்வி விட்ட தொடையைச் சிறுத்தையிடமே விட்டுவிட்டு, மீதி உடலோடு எப்படியோ உயிர் பிழைத்து ஓடிப் போய் மீதிக் காலத்துக்கு ஆட்சி நடத்த முயல் என்றுதானே அத்வானியாலேயே சொல்ல முடிந்தது. ரத்த ருசி கண்டுவிட்ட சிறுத்தை ஊருக்குள் மீண்டும் மீண்டும் வராதா? இது ஒரு தொடைதானே என்று முடித்துக் கொள்கிற கதையா?

இரும்புத்தாது ஏற்றிச் செல்லும் சரக்குந்து (லாரி) ஒன்றுக்குச் சுங்கவரி ஒரு நடைக்கு ஆயிரம் ரூபாய் என்று அரசு விதித்திருப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்பது ரெட்டி உடன்பிறப்புகள், எடியூரப்பா அரசின் தலைக்குக் கேட்ட விலைகளில் ஒன்று.

தனியொரு நிறுவனம் தனக்கு என்ன வரி விதிக்க வேண்டும்; எவ்வளவு விதிக்க வேண்டும் என்னும் உரிமையை எடுத்துக் கொள்வது என்றால், இதற்கு அரசு எதற்கு?

ஒருவன் வங்கியிலே வாங்குகிற கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை அளவுக்குப் போகிறான். தனியாள்கள் கடன் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய்தான் வட்டி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட கந்துவட்டிச் சட்டம் கடன் கொடுத்தவனைச் சிறையில் தள்ளும். ஆனால் இதே சட்டம் மத்திய அரசின் பார்வையில் இயங்கும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாதாம். அந்த வங்கிகள் தனியாரைப்போல் மூன்று மடங்கு, அதாவது முப்பத்தாறு விழுக்காடுவரை வட்டி வாங்குகின்றன. கட்டத் தாமதமானால் அபராத வட்டி வேறு! இந்த வட்டியைக் கட்டவே வழியில்லை; இந்த வட்டிக்குச் சேவை வரி வேறு போட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

இப்படி ஈரக்குலையை அறுக்கும்வண்ணம் வரிமேல் வரியாகப் போட்டு மக்களை அடிவரை அரசு சுரண்டுவது ஒருபக்கம். அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாயை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அலைக்கற்றை உரிமம் போன்றவற்றை மத்திய அமைச்சர் ஆ. ராசா போன்றவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கருவூலத்தின் வருவாய் வரத்தை அடைத்துவிடுவது இன்னொரு பக்கம். அதே பாணியில்தானே பெல்லாரியில் இரும்புத்தாதுச் சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அரசுக் கருவூலம் நிறைந்தால்தானே அது சாலைகளாகவும் சோலைகளாகவும் மாறும்; ஏரிகளாகவும் வாய்க்கால்களாகவும் மாறும்; மருத்துவமனைகளாகவும் பள்ளிகளாகவும் மாறும்; ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு மானியங்களாக மாறும். அரசின் வருவாய்க் கால்கள் தனியாருக்குத் திருப்பிவிடப்பட்டால், தனியாரும், அவ்வாறு திருப்பிவிட்ட மந்திரிகளும்தானே கொழுப்பார்கள்.

""எங்கள் கையில் அறுபது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நீ ஆட்சியில் இருப்பதும் இல்லாததும் எங்கள் கையில்; எங்களுக்குச் சுங்க வரி போட நீ யார்? எங்களுக்குச் செய்யும் சேவையை ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாக எண்ணி மகிழும் அதிகாரிகளை மட்டுமே பெல்லாரியில் நியமிக்க வேண்டும்; எங்களுக்குப் பாதபூஜை செய்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எங்களுடைய பதிலாளாக இருந்து எங்களுக்காக ஆட்சி நடத்து; இன்னோர் ஆறு மாதம் பார்ப்போம். இல்லையென்றால் உன்னுடைய லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த பேரவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராவார்.''

இவையெல்லாம் பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் வெளிப்படையான அறிவிப்புகள். கூரைமேல் ஏறிக்கொண்டு இவற்றையெல்லாம் அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. எடியூரப்பாவின் தலையைத் தப்பச் செய்வதற்கு எல்லா நிபந்தனைகளும் தில்லி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதுதான் பேரவலம்.

இனி முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்களிடம் என்ன மதிப்பிருக்கும்; அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு வழியாகத்தான் அதிகாரிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், வரி விதிப்புகள் மற்றும் முக்கிய முடிவுகளும் முடிவாகும் என்றால் முதலமைச்சர் எதற்கு? எந்த அதிகாரி எடியூரப்பாவுக்குக் கட்டுப்படுவான்? எந்த அமைச்சருக்காவது ரெட்டி உடன்பிறப்புகளை எதிர்க்கத் துணிவு வருமா? தலைமைச் செயலகம் பெங்களூரில் இருக்குமே தவிர, அரசு பீடம் பெல்லாரியில் அல்லவா இயங்கும்.

ரெட்டி உடன்பிறப்புகள் கர்நாடகத்தை வேட்டைக்காடாக்குவதற்கு உடன்பட்டுப் பதவியிலிருப்பதைவிடச் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மக்களைச் சந்தித்திருக்கலாமே எடியூரப்பா. அது முன்மாதிரி அரசியலாகவும் இருந்திருக்குமே.

ஒருவேளை நெறியற்ற தேவ கௌடாவும், அவருடைய மகனும், நெறிமுறையற்ற காங்கிரஸýம் ஒன்றுகூடி, ரெட்டி உடன்பிறப்புகளின் "கையாள்' ஒருவரை முதலமைச்சராக்கி, அரசமைக்கும் இழி செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது என்று கேட்டால், இவற்றை எதிர்கொள்வதுதானே நெறி சார்ந்த அரசியல்?

நெறிசார்ந்த அரசியலை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே ராமன் அவதாரம் எடுத்தான். கர்நாடகத்தை ராமராஜ்யம் ஆக்காமல், அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டி ஆகப் போவதென்ன?

ரெட்டி உடன்பிறப்புகள் இந்த அளவுக்கு அசுர வலிமை அடைய முடிந்ததற்குக் காரணம் ஆந்திர முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவிக்கு வந்ததும், அவருடைய குடும்பத்துக்கு ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழிலில் கணிசமான பங்கு ஏற்பட்டதும்தான்.

ஆந்திர எல்லையிலுள்ள பெல்லாரியிலிருந்து இரும்புத்தாது கடத்தல் ஆந்திரம் வழியாகத்தான் நடக்கிறது. ஆந்திரத்தில் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அதன் முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்தபோது, அவர் வைத்துவிட்டுச் சென்ற எல்லையில்லாத பணமும், சொந்தத் தொலைக்காட்சியும், சொந்தச் செய்தித்தாள் பின்னல்களும் அடுத்து முதல்வராக வந்த ரோசய்யாவுக்கு எதிராக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏவப்பட்டன.

பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழில் போன்ற பகாசுர நிறுவனங்கள் எடியூரப்பாவை மட்டுமன்று, ஆந்திர முதல்வர் ரோசய்யாவையும் தவித்துத் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் முந்நூற்றைம்பதுக்கு மேற்பட்டவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள். அவர்கள் அரசியலில் இருப்பதே அம்பானிகளுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இவர்கள் கையில் சட்டம் செய்யும் அதிகாரம். அவர்கள் யாருக்காகச் சட்டம் செய்வார்கள்?

பாக்சைட்டையும், இரும்புத் தாதுக்களையும், கனிம வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் தவிக்கிறது மத்திய அரசு. அந்தப் பகுதிகளிலெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களும் ஆதிவாசிகளும் வாழ்கிறார்கள். டாட்டா மற்றும் எஸ்ஸôர் ஸ்டீல் அங்கே காலூன்ற அறுநூறு எழுநூறு கிராமங்களிலுள்ள மக்கள் அகதிகள் ஆக வேண்டும்.

நாட்டின் வளம் அரசுக்குச் சொந்தம்; அரசு அடிமட்ட மக்களுக்குச் சொந்தம் என்னும் நிலை இங்கு கிடையாதே.

கனிமங்களை அரசு தோண்டும்; அந்தந்தப் பகுதி மக்கள் அதன் காரணமாக ஒளி பெறுவார்கள் என்னும் நிலை இங்கு இல்லையே.

ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் கனிம வளங்களையும், மலைவாழ் மக்களையும் பன்னாட்டு முதலாளிகள் சூறையாடி விடாதபடி, ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார்களைப்போல பாதுகாத்து நிற்பவர்களே இந்த நக்சலைட்டுகள்தானே. குடியாட்சி தீர்வாக முடியவில்லை என்னும்போது மக்கள் வேறு ஏற்பாடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். இது குடியாட்சியின் குற்றமா? மக்களின் குற்றமா?

சோற்றுப் பதம் பார்ப்பதுபோல் சொல்லப்பட்ட தீமைகள் சிலவே. நாட்டின் உயிர்ப்புக் கொஞ்சம் கொஞ்சமாக நாடெங்கிலுமுள்ள கயவர்களின் கையில் அடங்கிக் கொண்டிருக்கிறது. குடியாட்சி, விழி பிதுங்கி நிற்கிறது.
இன்னொரு பக்கம் நக்சலைட்டுகள் நாட்டின் நாற்பது விழுக்காடு மாவட்டங்களில் வேரூன்றி நிற்கிறார்கள். நாட்டைச் சந்தைப் பொருளாதாரத்தின் பேரால் பன்னாட்டு முதலாளிகளிடம் கூறு போடுவதற்கு இவர்களே தடை என்று மத்திய அரசு நினைக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதிக்கட்சி, மதக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்துமே தீமைகளுக்கு முன்னால் அவிந்து அடங்கிப் போய் விடுகிறபோது, தீமையின் பலன்களைப் பங்கிட்டுக் கொள்ள முண்டி அடித்துக் கொண்டு நிற்கும்போது, குடியாட்சி குடிகளுக்காக இல்லை என்று ஆகிவிடாதா?

நாடு நக்சலைட்டுகளிடம் சென்று கொண்டிருக்கிறது என்பது ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் அச்சமானால், அதை ராணுவம் கொண்டு களைய முடியாது. நாட்டை அவர்களிடம் செலுத்துவதே நீங்கள்தானே!
கட்டுரையாளர் :பழ. கருப்பையா
நன்றி : தினமணி

சத் சங்கமாகுமா ஜாதி விழாக்கள்...!

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள்...!

அத்தகைய நிலைக்கு ஜாதித் தலைவர்கள், அரசியல் கட்சியினரின் செயல்பாடே பல நேரங்களில் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது.

சில விழாக்களை, பொதுமக்களின் நலன் கருதி (?) அரசே முன்னின்று நடத்துகிறது.

விழா நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அதில் மேற்கொள்ளப்படும் முடிவுகளின்படி, விழா நடக்கும் இடத்துக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து குவியும் தொண்டர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

விழா நாள், நெருங்க நெருங்க பதற்றம் கூடிக் கொண்டே போவதால், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்கள்தான் எத்தனை..! எத்தனை..!

விழாவையொட்டி, நகரங்களில் போக்குவரத்தை அடியோடு மாற்றுவதால் நிலைகுலையும் வாகனங்கள்.

எல்லாத் தலைவர்களும் விழா நாளன்று ஒரே இடத்தை நோக்கி அணிவகுப்பதால், மேற்கொள்ளப்படும் பல அடுக்குப் பாதுகாப்பு.

எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதனைப் பொருட்படுத்தாமல், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கையில் நீண்ட கழிகளுடன் (கொடிகள்..!) ஆர்ப்பரித்தபடி வரும் தொண்டர்கள்.

குடிநீர் கூட கிடைக்காத, ஆள் அரவமற்ற இடங்களில் தாற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் வெறுப்பில் அதனைக் கண்டும், காணாதிருக்கும் போலீஸôர்.

அறிவிக்கப்படாத "பந்த்' போல, நகர் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக உடைக்கப்படும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மூடப்படும் கல்வி நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள்.

பள்ளிகளில் இருந்து பிள்ளைகள், பத்திரமாக வீடு திரும்பி விட்டார்களா, என்ற பதைபதைப்பில் பெற்றோர்கள்..!

விழா நடைபெறும் இடம் நோக்கி வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை..

இந்த அசாதாரண நிலையைப் பயன்படுத்தி, அண்ணன், தம்பிகளாகப் பழகிவரும் வெவ்வேறு சமூகத்தினரிடையே பிரச்னையைத் தோற்றுவித்து, நிரந்தரப் பகை ஏற்படுத்தும் விஷமிகள்!

இவையாவும், ஜாதியக் கண்ணோட்டத்தோடு இவ்விழாக்கள் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் எழுப்புகின்றன.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் சமூகம் பிளவுபட்டுக் கொண்டிருக்கிற மோசமான சூழலில், ஜாதியமும் தம்முடைய வலிமையை, இதுபோன்ற விழாக்கள் மூலம், நிலைநிறுத்திக் கொள்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

வாழும் காலத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்களுக்கு ஓரிரு இடங்களில் சிலைகள் வைக்கலாம்; விழாக்கள் நடத்தலாம் தவறில்லை.

ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை, அவர்கள் எந்த ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், விழாக்களின் பெயரால் ஒரே இடத்தில் குவித்து, பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதை, மறைந்த தலைவர்களின் ஆன்மாக்கள்கூட ஏற்றுக் கொள்ளாது.

இவ்விழாக்கள், ஜாதி துவேஷங்களுக்கு மூலவிசையாகவும், கலவரங்களுக்கு வித்தாகவுமே அமைந்தது கடந்தகால வரலாறு.

ஒட்டுமொத்தமாக, இதுபோன்ற விழாக்களைத் தடை செய்வது சாத்தியமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.

காரணம்.. தனி மனித ஆராதனைகளாக, இவ்விழாக்கள் தந்திரமாக மாற்றப்பட்டு, பல ஆண்டுகளாகி விட்டன.

அதற்குப் பதிலாக, அவ்விழாக்களை அந்தந்த ஊர்களிலேயே அமைதியான தியானக் கூட்டமாகவோ, ஜாதிப் புகழ் பாடாத சத் சங்கமாகவோ, மறைந்த தலைவர்களின் சிந்தனைகளை விதைக்கும் கருத்துப் பட்டறைகளாகவோ, ஊரெங்கும் மரங்களை நடும் பசுமை இயக்கமாகவோ நடத்த ஜாதித் தலைவர்கள் முன்வர வேண்டும்.

இதன்மூலம், துடிப்பான இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்திய பெருமை அவர்களைச் சேரும்.

விழா குதூகலத்தில், ஒரு முட்டாள் இளைஞனால் எங்காவது வீசப்படும் சிறு கல் கூட, பெருங்கலவரத்துக்குக் காரணமாவதை, இத்தலைவர்கள் உணராதவர்களா..!

இதோ பாருங்கள்..! எனக்குப் பின்னால் எத்தனை வாகனங்கள்..! எத்தனை எத்தனை இளைஞர்கள் என ஒவ்வொருவரும் இறுமாப்புக் கொள்ளவும், தேர்தல்கால வாக்கு பேரங்களுக்கு முன்னோட்டமாக, தம்மை அடையாளங்காட்டிக் கொள்ளவுமே, இதுபோன்ற விழாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே, காலங்காலமாக வேரூன்றி கிராமங்களை மூர்க்கமாகப் பிளவுபடுத்திவரும் ஜாதித் தகராறுகளை சமாளிக்க முடியாமல், அரசு நிர்வாகம் திணறி வருவது கண்கூடு.

இதுபோன்ற சூழ்நிலையில் நடத்தப்படும் விழாக்கள், பிரச்னையை மேலும் அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறைக்காது.

சமத்துவம் பேசிக்கொண்டே, ஜாதியை வளர்க்கும் தலைவர்கள் இதனை உணர வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ ஒத்துழைப்புத் தர வேண்டும்.

கட்டுரையாளர் :ப.செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கியுள்ள வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள் இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி உள்ளன. பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த லீகல் அன்ட் ஜெனரல் உள்ளிட்ட வங்கிகள் கூட்டாக இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தில் பேங்க் ஆப் பரோடா 44 விழுக்காடு பங்குகளையும், ஆந்திரா வங்கி 30 விழுக்காடு பங்குகளையும், லீகல் அண்டு ஜெனரல் நிறுவனம் 26 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கும்.
இந்த கூட்டு நிறுவனம் ரூ.200 கோடி மூதலீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இதன் முதலீட்டு அளவை அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.2,500 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஆரம்பத்தில் இர்டாவிடம், நான்கு ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளது. இதில் மூன்று பங்கு சந்தை சார்ந்த காப்பீடு திட்டங்களாக இருக்கும். இத்திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான அனுமதி கிடைத்தவுடன் நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிவப்பு நாடா முறை ஒழிந்தால் தான் வளர்ச்சி அதிகரிக்கும்: பிரணாப் தகவல்

இந்தியாவின் மொத்த வளர்ச்சி அதிகரிக்க, சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டிப்பாக தெரிவித்தார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ( சி.ஐ.ஐ.,) மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்திய வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்குவிப்பு சலுகைகள் தொடரும் என்று அறிவித்தார். அடுத்து வரும் ஆண்டில் ஊக்குவிப்பு சலுகைகள் தொடராது என்று இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்த கருத்தை ஆதரித்த அவர், தொடர்ந்து ஊக்குவிப்பு தந்தால் அரசின் நிதிச் சுமை கூடும் என்ற கருத்தில் பிரதமர் பேசியதாக தெரிவித்தார். அதே சமயம், உள்நாட்டு பொருளாதாரத்தை நம்பியிருக்கும் நம்நாட்டில், ஊக்குவிப்பு சலுகை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார். அதே சமயம் அதிக அளவு அரசு கடன் வாங்குவதால், தனியார் மூலதன அதிகரிப்பு பாதிக்கும் என்பதை ஏற்கவில்லை. அரசு தன் தேவைக்கான கடன்வசதி தேவையில் முக்கால்பகுதியை சேகரித்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி மற்றநாடுகளுடன் தகவல் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைச் சட்டத்தை இந்தியா பின்பற்றுகிறது. இந்தியாவில் மொத்தவளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு லஞ்சம் ஒழிப்பு, அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகள் தகர்ப்பு ஆகியவை முக்கியம். என் துறையில் உள்ள ரெவின்யூ துறை, கறுப்புப் பணம் மீட்பு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். ரிசர்வ் வங்கி: நேற்று மும்பையில், ரிசர்வ் வங்கி அணுகுமுறை குறித்து துணை கவர்னர் சியாமளா கோபிநாத் கூறியதாவது :

பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை முடிவுக்கு கொண்டு வருவதில், அரசு மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. பொருளாதார ஸ்திரத் தன்மையை விட்டுக் கொடுக்காமல், அதன் வளர்ச்சிக்கான நிதிக் கொள்கையை உருவாக்குவது, சவாலானது. எளிய நிதிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவது, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். குறுகிய காலத்தில், ஊக்குவிப்பு சலுகைகளில் இருந்து வெளிவருதல், உள்நாட்டு தேவை மற்றும் பயன்பாட்டிற்கு புத்துயிர் ஊட்டுதல் ஆகியவை கொள்கை வகுப்பவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்திய வங்கி துறைகள், போதுமான முதலீட்டுடன் நல்ல நிலையிலேயே உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி, பணப்புழக்க நிலையை கண்காணித்து, வங்கி துறையில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்யும். நிதி நிலைமையை கவனமாக கண்காணித்து, தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சியாமளா கோபிநாத் கூறினார்.
நன்றி :தினமலர்

வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை குறைப்பது எப்படி?

இன்சூரன்ஸ் என்பது கட்டயமாக்கப்பட்ட ஒன்று. போலீஸார் சோதனை நடத்தும் போது, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கண்டிப்பாக ஆய்வு செய்வார்.
எனவே, கார் மற்றும் பைக்குக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள் நன்கு உணர்ந்து இருப்பர். ஆனால், பெரும்பான்மையானோர் சோம்பறிதனத்தினால், வாகனத்துக்கு இன்சூரன்ஸை ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்க மறந்து விடுவர். வாகனம் விபத்தில் சிக்கும் போது தான், இன்சூரன்ஸின் உண்மை நிலை அவர்கள் உணர தொடங்குவர்.

வாகன இன்சூரன்ஸ் கட்டயமாக்கப்பட்ட ஒன்று என்றாலும், அதற்கான பிரிமியம் தொகையை பல வகையிலும் குறைக்க முடியும். அதற்கு முத்தான 10 வழிகள் இதோ.

1. வாகனத்தின் மாடல் மற்றும் வகை: கார் அல்லது பைக்கை பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வாகனம், அடிக்கடி விபத்துக்குள்ளாவது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருப்பது போன்ற காரணத்துக்காக அந்த வாகனத்துக்கும் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் பிரிமியம் வசூலிப்பர். எனவே, எந்த மாடல், எந்த வகை வாகனத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டால், பிரிமியம் தொகை குறையும். சில மாடல் வாகனங்கள், பராமரிப்பு செலவு குறைந்ததாக இருக்கும். அந்த வாகனங்களுக்கும் குறைந்த பிரிமியம் தான் வசூலிக்கப்படுகிறது.

2. டிரைவரின் பாலினம்: வெளிநாடுகளில், வாகனத்தை ஓட்டுபவர் ஆணா பெண்ணா? என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை வசூலிக்கின்றனர். ஆண் என்றால், குறைந்த பிரிமியம், பெண் என்றால் அதிக பிரிமியம் தொகை என்ற நிலைமை பல நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. எனினும், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆண் டிரைவர்களை விட பெண்கள் சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று கருதுகின்றனர். எனவே, பெண்கள் பெயரில் இன்சூரன்ஸ் பதியும் போது சில சலுகைகளை அளிக்கின்றனர்.

3. வாகனம் ஓடும் நகரம்: வாகனம் எந்த நகரத்தில் பதிவு செய்யப்பட்டது, எந்த நகரில் ஓடுகிறது என்பதையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் உள்ள நகரத்தில், வாகனங்களுக்கு உரசி செல்வதால் ஏற்படும் சிறிய சேதங்கள் தான் ஏற்படும். ஆனால், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் வாகனங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகும். எனவே, இன்சூரன்ஸ் புக் செய்யும் போது எந்த நகரத்தில் ஓடுகிறது/ ஓடப்போகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டால், அதற்கு ஏற்றவாறு, பிரிமியம் தொகை கணக்கிடப்படும். பெரிய நகரங்கள் என்றால், பிரிமியம் தொகை குறைய வாய்ப்பு உள்ளது.

4. வாகனம் ஓட்டுபவரின் பணி: கார் அல்லது பைக்கை ஓட்டுகிறவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தும் பிரிமியம் தொகை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். தினமும் அலுவலகம் செல்பவர் என்றால், அலுவலகம் மற்றும் வீட்டுக்கு செல்லத் தான் அந்த வாகனத்தை பயன்படுத்துவார். ஆனால், சிறு வணிகம் செய்பவர் என்றால், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாகனத்தை செலுத்துவார். எனவே, வாகனம் ஓட்டுபவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தே பிரிமியம் தொகையும் கணக்கிடப்படுகிறது.

5. கிளைம் செய்யாவிடில் போனஸ்: வாகன இன்சூரன்ஸ் செய்து இருப்பவர், அந்த வாகனம் சிறு சிறு விபத்துக்களில் சிக்கும் போது ஆகும் செலவை, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் செய்யாவிடில், ஆண்டுதோறும் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, 'நோ கிளைம் போனஸ்' என்ற பெயரில் பிரிமியம் தொகையில் சிறிதளவு குறைக்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸை புதுபிக்கும் போது எவ்வித தாமதத்தையும் காட்டாமல், உடனுக்கு உடன் புதுப்பித்தால், இந்த தள்ளுபடி சலுகை பெறாலம். கிட்டத்தட்ட பிரிமியம் தொகையில் 35 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

7. பாதுகாப்பு சாதனங்கள்: கார் அல்லது பைக், திருடு போகாமல் இருக்க, விபத்தின் போது பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தி இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை குறையும்.

8. வாகனத்தின் உரிமையாளர் ஆட்டோமொபைல் சங்க உறுப்பினராக இருந்தால், 5 சதவீதம் வரை, பிரிமியம் தொகையில் குறைக்கப்படும்.

9. குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் முதல், சில காலம் வரை வாகனம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தால், இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க செய்யலாம் அல்லது இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது சில தள்ளுபடி சலுகை பெறலாம். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்பதை, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த சலுகை கிடைக்கும்.

10. ஆன் லைனில் பதிவு: ராயல் சுந்தரம், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆன் லைன் மூலம் வாகன இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் நபர்களுக்கு பிரிமியம் தொகையில் தள்ளுபடி சலுகை அளிக்கின்றனர்.

இவ்வாறு, பத்து வழிகளை பின்பற்றினால், வாகன இன்சூரன்ஸின் பிரிமியம் தொகையை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
நன்றி : தினமலர்