Tuesday, August 18, 2009

கட்டுபடியாகாத கரும்பு விலை

கரும்பு மற்றும் சர்க்கரைக்கு தாயகமாகக் கருதப்படும் நம் நாட்டில் கரும்பு பயிரிடுதலிலும், அதைச் சார்ந்த பிற தொழில்களிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் கரும்புக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற அதிருப்தி விவசாயிகள் மத்தியில் நீண்டகாலமாக நிலவுகிறது. எனவே, இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டன்னுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், 2006-ம் ஆண்டில்தான் கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000-ஐ எட்டியது.

அப்போதைய சூழ்நிலையில், அதைவிடச் சாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே, கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்குப் பயனில்லை. இடு பொருள், ஆள்கள் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துவிட்டதே இதற்குக் காரணம்.

ஒரு ஏக்கருக்கு கரும்பு நடவு செய்யும் போது, உரம், ஆள் கூலி உள்ளிட்ட சாகுபடிச் செலவு ரூ. 22,000-ம், வெட்டுக் கூலி மற்றும் ஆலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ரூ. 16,000-ம் என மொத்தம் ரூ. 38,000 செலவாகிறது.

தமிழகத்தில் ஏக்கருக்கு சராசரியாக 42 டன் கரும்பு கிடைக்கிறது (அகில இந்திய அளவில் ஏக்கருக்கு சராசரி செலவு ரூ. 62,000; சராசரி மகசூல் 35 டன்கள்).

சாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையிலும்கூட, கடந்த ஆண்டு கரும்பு பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்) டன்னுக்கு ரூ. 1,034 என்றும், இந்த ஆண்டு ரூ. 1,050 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன்படி, தமிழகத்தில் ஏக்கருக்கு ரூ. 40,000 முதல் ரூ. 45,000-தான் வருவாய் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பாடுபட்டாலும், செய்த செலவைவிட, ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே லாபம் ஈட்டும் நிலை உள்ளது. அகில இந்திய அளவிலான சராசரி மகசூலுடன் ஒப்பிடுகையில் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர்.

குத்தகை நிலமாக இருந்தால், நிலத்துக்கான குத்தகைத் தொகை கிட்டத்தட்ட ரூ. 20,000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே, குத்தகை விவசாயிகளுக்கு இந்த விலையால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைதான் உள்ளது.

வெட்டுக் கூலி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை ஆலையே ஏற்றுக் கொண்டு டன்னுக்கு ரூ. 2,000 அல்லது ரூ. 2,500 என விலை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50 சதம் விலை நிர்ணயித்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழு அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 2,100 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்றாலும், இந்த விலையை அமல்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வரும் கரும்பு பருவத்துக்கான (அக்டோபர் 2009-செப்டம்பர் 2010) விலையை டன்னுக்கு ரூ. 1,077.60 என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ரூ. 27.60 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், சர்க்கரை பிழிதிறனும் 9-லிருந்து 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

கடந்த 1972-73-ம் ஆண்டில் பிழிதிறன் 9.4 சதத்திலிருந்து 8.5 சதமாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2005-06-ம் ஆண்டில் சர்க்கரை பிழிதிறன் 9 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் விளையும் கரும்பு பயிர்களில் சர்க்கரை பிழிதிறன் 8 முதல் 8.5 சதம்தான் இருக்கிறது.
இந்நிலையில், 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் கரும்பு சாகுபடி குறித்த அச்சம் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இந்த வேதனையான சூழ்நிலையிலும்கூட, மாநில அரசு நிர்ணயிக்கும் பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஏற்பதில்லை. மாறாக, அரசு நிர்ணயித்த விலையைவிட ஏறத்தாழ ரூ. 50 குறைத்துத்தான் விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

விலை நிர்ணயத்தின்போது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளும், ஆலோசனைகளும் பெறப்படுவதுமில்லை. முன்னோடி விவசாயிகளின் கருத்துகளும் புறக்கணிக்கப்படுகின்றன.
எனவே, உற்பத்தி செய்த செலவைவிடக் குறைவான விலைக்கு விற்கும் நிலை இருப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் சொத்துகளை இழந்து, வங்கியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் திணறுகின்றனர். மேலும், அரசு தள்ளுபடியை எதிர்பார்த்து, தனியாரிடம் பெற்ற கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

அரிசிக்கும், கோதுமைக்கும் அதிக விலை கிடைத்ததால், பல விவசாயிகள் கரும்பிலிருந்து மாற்றுப் பயிருக்குச் சென்றுவிட்டனர். இதனால், தமிழகத்தில் மட்டும் கரும்பு உற்பத்தி 4 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் சர்க்கரை கொண்டு வரப்பட்டாலும், அதன் மீதான கட்டுப்பாட்டால் விவசாயிகளுக்குப் பாதகமே தவிர, எந்தவிதப் பயனும் இல்லை.

குறிப்பாக, 1966-ம் ஆண்டு சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை, 1966-ம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு ஆணை, 1979-ம் ஆண்டு லெவி சர்க்கரை வழங்குதல் உத்தரவு, 1977-ம் ஆண்டு சர்க்கரை சிப்பம் மற்றும் சந்தை ஆணை, 1982-ம் ஆண்டு சர்க்கரை, தீர்வைச் சட்டம் ஆகியவற்றால் தொடக்கத்தில் சில பயன்கள் கிடைத்திருந்தாலும், அதன் பிறகு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் கரும்பு சாகுபடி கேள்விக்குறியாகி, சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
கட்டுரையாளர் : வி. என். ராகவன்
நன்றி : தினமணி

தமிழ் விக்கிபீடியா

கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது.

மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும்.
அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகர வரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன.

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணைய தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.
விக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு ""விரைவு'' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளோபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.
விக்கிபீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. விக்கிபீடியா தொழில்நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கரும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியைத் தொடங்கினர். ஜிம்மி வேல்ஸ் முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிபீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளிவிவரங்களை இணைக்கலாம்.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார். இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிபீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிபீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது.

தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.

கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.
கட்டுரையாளர் : மு. இளங்கோவன்
நன்றி : தினமணி

பன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை

பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

இக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான ஏ1ச1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்' எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை.

அதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.

இது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

அமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர்.

தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை.

தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும். வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது; ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது; மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது; கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது. நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக ஏ1ச1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

""மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.

மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது''.

மற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

பள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும்.

பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை ஏ1ச1 வைரஸýக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

கடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர் : டாக்டர் எம்.எம். ஸலாஹுத்தீன்
நன்றி :தினமணி

லட்சம் வாட்ச் விற்பனை: டைட்டன் பெரும் சாதனை

இந்தியாவின் முதன்மையான வாட்ச் நிறுவனமான டைட்டன், எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சென்ற மாதம் 23ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை, டைட்டன் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் ஐந்தாவது எக்ஸ்சேஞ்ச் ஆபரான இது, பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 20 லட்சம் மக்கள், டைட்டன் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் ஆபரால் பயனடைந்துள்ளனர்.
இந்தாண்டு எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்ட, முதல் 15 நாட்களில், இரண்டு லட்சம் வாட்சுகள் விற்பனை ஆகி உள்ளன. சூரத், பரோடா, நாக்பூர், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி,ராய்பூர் மற்றும் புவனேஸ்வர் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும், டைட்டன் நிறுவன எக்ஸ்சேஞ்ச் ஆபர் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆபரில், 'நெபுலா-18 கேரட் சாலிட் கோல்ட் வாட்ச்' வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு, 'ஹெரிட்டேஜ் வாட்ச்' இலவசம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படு கின்றன.
நன்றி : தினமலர்


சட்டமெனும் இருட்டறை!

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.

ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.

இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?

தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?

பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி : தினமணி