Saturday, January 2, 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?

இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது.

2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் ""நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை'' என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.

தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். ""வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார்.

இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து - விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி - அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.

அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் - இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா? ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.

ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை.

பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க. ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது.

இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை - மாற்றத்துக்குக் காரணம் என்ன?

÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் - ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்?

1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும்.

ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம்.
கட்டுரையாளர் :தா. பாண்டியன்
நன்றி : தினமணி


உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.

திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெüனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: ""இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.

தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''

அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?

எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?

உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?

மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.

அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.

சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?

சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,""வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''

புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா? அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?

வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும் பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி

நான்கு நகரங்களில் 3ஜி செல்போன் சேவை அறிமுகம்

கோவை, ஊட்டி, நாகை, குன்னூர் உள்ளிட்ட 4 நகரங்களில் பொங்கல் பண்டிகைக்குள் மூன்றாம் தலைமுறை(3ஜி) செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செல்போனில் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை 2009ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கடந்த நவம்பர் 20ல் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்தது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இச்சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் கீழ் வரும் இதர மாவட்டங்களிலும் இச்சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக கோவை, ஊட்டி, குன்னூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் பொங்கலுக்குள் அறிமுகம் செய்யப்படும் எனவும், அறிமுக விழா கோவையில் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நகரங்களை தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3ஜி செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர், கன்னியாகுமரி போன்ற தொழில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 15 நகரங்களிலும் 3ஜி சேவை அறிமுகம் ஆகிறது. அதற்கான கட்டமைப்பு பணிகளை சீனாவின் ஹுவாய் நிறுவனம் செய்து வருகிறது.
நன்றி : தினமலர்


வாசனை திரவியமாகும் திமிங்கலத்தின் எச்சம்: கிலோ ரூ.பல லட்சத்துக்கு விற்பனை

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும். அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் 'அம்பர்கிரிஸ் 'என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும். இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.
நன்றி : தினமலர்