Saturday, January 16, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!

ஜாதியிலே,​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.

விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.

தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.

அறியாமை!​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.

தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.

விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!

""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.

அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.

""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).

மதத்துக்கும்,​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.

ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.

மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.

""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.

விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)

ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.

இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.

விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி

இந்தியாவின் அடுத்து வரும் ஆண்டுகள்

புத்தாண்டு பிறந்தவுடன், அடுத்து வர உள்ள ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும்; மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி அமையும் என்று சிந்திப்பது ஆரோக்கியமான ஒரு வழக்கமே.

ஆனால், கடந்த காலங்களில், ஆரோக்கியமற்ற சில ஆருடங்கள் சொல்லப்பட்டதும், நல்ல வேளையாக, அவை பொய்த்துப் போனதும் நினைவுக்கு வருகின்றன.

ஒன்று, 1967-ம் ஆண்டில் நிகழ்ந்தது: அது சமயம் நாட்டின் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மழையின்மையால் கடும் வறட்சி நிலவிய நேரம். போதாக்குறைக்கு, அந்தத் தேர்தலுக்குச் சிறிது காலம் முன்னர்தான் இந்தியா ஒரு போரையும் சந்தித்திருந்தது. நாட்டின் அரசியல் தலைமை அவ்வளவு வலுவாக இருக்கவில்லை. அப்போது, இங்கிலாந்து நாட்டின் பிரபல முன்னணி நாளேடு, ""இதுவே இந்தியாவின் கடைசிப் பொதுத் தேர்தல்'' என்று எழுதியது!

இன்னொரு நிகழ்வு, 1947-ம் ஆண்டில் நடந்தது. இது பலருக்கு நினைவிலிருக்கும். ஆருடம் கூறியவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்! இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினால், நாடு சின்னாபின்னமாகிவிடும், என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

கடந்த காலத்தை விட்டு, நிகழ்காலத்துக்கு வருவோம்! 2009-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.9 சதவீதம். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட இது சற்று அதிகம். இந்த ஜி.டி.பி. வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை அரசு திடீரென்று விலக்கிக் கொண்டால், இதே அளவு வளர்ச்சி தொடருமா என்பது சந்தேகம்தான்.

அதேநேரம், இந்தியாவின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், வரிகளைக் கூட்டுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். ஜி.டி.பி.யின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

தற்போது, பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் மிகப் பெரும் பிரச்னை, விலைவாசி உயர்வுதான். கடந்த ஓராண்டில் நாம் கண்கூடாகப் பார்த்த விஷயம், ஜி.டி.பி. வளர்ச்சியால் விலைவாசி குறைந்துவிடாது என்பதுதான். ஆக, வளர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கும் விலைவாசிக்கும் தொடர்பு இல்லை.

விலைவாசியில், ஒரு முரண்பாட்டையும் காண முடிகிறது. கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் விலைகள் குறைகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட தொழில் கூடங்களில் உற்பத்தியான பொருள்களின் விலைகளும் குறைகின்றன. ஆனால் உணவுப் பொருள்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உணவுப் பண்டங்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு என்பதைத் தவிர வேறு பல காரணங்கள் உண்டு.

அவற்றில், முன் பேர வணிகம் ஒரு முக்கிய காரணம். குறைந்த அளவே முதலீடு செய்து, அதிக அளவில் பண்டங்களை வர உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் செய்வதுதான் முன் பேர வணிகம். இதனால் விலைகள் உயர வாய்ப்பு உள்ளது. 2007-ம் ஆண்டு அரிசி, கோதுமை, உளுந்து, துவரம்பருப்பு ஆகிய நான்கு பொருள்களுக்கு முன் பேர வணிகத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்தத் தடை தொடர வேண்டும். இதர உணவுப் பண்டங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே, உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. காரணம் அநேக நாடுகளில் உணவுப் பொருள்களின் விளைச்சல் சரிந்துள்ளது. இதுவும் இந்தியாவில் விலைகள் உயரக் காரணம். இந் நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துள்ளன. இதைச் சரி செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாது. ரேஷன் பொருள்கள் கடத்தல், கள்ளச்சந்தை, பதுக்குதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இது மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த உயிர்நாடிப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிடில், வளர்ச்சி 8 சதவீதம் எட்டினாலும், அதனால் மக்களுக்குப் பயன் இல்லை.

கடந்த ஆண்டுகளில், அமெரிக்கப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. மிதவாதப் போக்கை கடைபிடித்ததால், இந்திய வங்கிகள் தப்பித்தன. ஆனால், நம் நாட்டில் தோல் உற்பத்தி, ஜவுளித் துறை, ஆபரணக் கற்கள் பட்டை தீட்டுதல், பல்வகை கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய வரிச் சலுகையால் இத்துறைகள் ஓரளவு சமாளித்து வருகின்றன. எனவே, அரசு தற்போது வழங்கும் உதவிகளை அவசரப்பட்டு நிறுத்திவிடக் கூடாது. அவை தொடர வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்திவிடக் கூடாது. அப்படி ஒரு வேளை உயர்த்தினால் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

இவ்வளவையும் மீறி, உலகின் முன்னணி தர நிர்ணய அமைப்புகள் என்ன கூறுகின்றனவெனில், உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக, வேகமாக வளரும் நாடு இந்தியாதான், என்பதே. காரணம், சர்வதேச அளவில், பொருளாதார மந்த நிலை நீடித்தாலும், இந்தியா நடப்பாண்டில் 8 சதவீத வளர்ச்சி அடையும் என்பதும், சீனா 9.6 சதவீத வளர்ச்சி அடையும் என்பதே.

÷வாஷிங்டனிலிருந்து செயல்படும், "பியூ' பொருளாதார ஆய்வுக் கழகம், 25 வளரும் நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள கணிப்பும் இதையே உறுதி செய்கிறது. அது மேலும் கூறுகையில், பல வளரும் நாடுகளைவிட இந்திய மக்களின் தன்னம்பிக்கை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதே ஆகும்.

÷வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் என்னவெனில், மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் உற்பத்தித் திறன்.

÷இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீடு படிப்படியாக வளர்ந்து, இப்போது மொத்த உற்பத்தி மதிப்பில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவும் இதே அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

÷அடுத்ததாக தொழிலாளர் திறன் என்னும் குறியீடு. இதில் இந்திய சீனாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 1.8 சதவீதம் வேகமாக வளருகிறது. இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் உழைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

÷மூன்றாவது, உற்பத்தித் திறன் வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா ஆண்டுக்கு 2 சதவீதம் பின்தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உள்ள நிலை இது. இதற்கு சர்வதேச வல்லுநர்கள் தரும் விளக்கம் சிந்தனையைத் தூண்டுவதாகும். இதே 5 ஆண்டு காலமாக, சீனா கடைப்பிடித்து வரும் நாணய மதிப்பீட்டு முறை உத்தியே இதற்குக் காரணம் என்பதே அது.

÷சீனா எதிர்கொள்ளும் இரண்டாவது பிரச்னை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அதீதமான "கார்பன் புகை வெளியேற்றம்'. இவ்விரண்டு காரணங்களால், சர்வதேச பொருளாதார அமைப்புகளும், வல்லுநர்களும் சீனா மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே உற்பத்தித் திறனில் சீனாவுக்கு இருப்பதாகக் கருதப்படும் சாதகமான சூழல் விரைவில் மறைந்து விடும் என்பதும், அது இந்திய உற்பத்தித் திறன் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்பதும் வல்லுநர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. புதிய வளர்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்களும் கணிக்கின்றனர்.

÷பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருத்தல்; முறையான பொதுத் தேர்தல்கள்; உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் அரசியல் தலைமை; அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள்; சுதந்திரமாகச் செயல்படும் பெருவாரியான செய்தித்தாள்கள்; உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆகிய பல சாதகமான அம்சங்கள் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.

÷அதே நேரம், சில நெருடலான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெருகி வரும் மனித உரிமை மீறல்கள்; மக்களிடையே அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர் இடைவெளி; அரசியல் அரங்கில் ஊடுருவல் செய்யும் சமூக விரோத சக்திகள்; உள்நாட்டில் பாதுகாப்பின்மை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை, விரைந்து கட்டுப்படுத்தினால்தான்,இந்தியா வளமான நாடாக மட்டும் அல்லாமல் அமைதிப் பூங்காவாகவும் திகழ முடியும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!

உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.

÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.

÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.

÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.

÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.

÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.

÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.

÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.

÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.

÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.

÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.

÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.

÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.

÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.

÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் :தில்லை நாகசாமி
நன்றி : தினமணி