Sunday, November 8, 2009

தொடர்ந்து கூடுகிறது அமெரிக்காவில் மூடப்படும் வங்கிகளின் எண்ணிக்கை

அமெரிக்காவில் தொடர்ந்து மூடப்படும வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியால் கடும் சரிவை கண்டன. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க பொருளாதாரம் மீட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது அமெரிக்காவில் மூடப் படும் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள்‌ வெளியாகி உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு வரை மூடப் பட்ட மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 103 என்ற நிலை இருந்தது. இப்போது அது 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் 5 வங்கிகள் மூடப் பட்டு இருப்பதாகவும், இதனால், 1.5 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


விமான கட்டணம் குறைப்பு : 'கிங் பிஷர்' அறிவிப்பு

'கிங் பிஷர்' நிறுவனம், சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்தை 2,879 ரூபாயிலிருந்து 2,529 ரூபாயாக குறைத்துள்ளது. வரும் 15ம் தேதி முதல் சேலம் - சென்னை விமான சேவையை இயக்க கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. துவக்கத்தில் சென்னையிலிருந்து சேலத்துக்கு வரவும், சேலத்திலிருந்து சென்னை செல்லவும் ஒரே கட்டணமாக 2,879 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இக்கட்டணத்தை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது குறைக்க வேண்டும் என வர்த்தகர் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். கடந்த வாரம் சென்னையிலிருந்து சேலம் வருவதற்கான கட்டணத்தில் 679 ரூபாய் குறைத்து, 2,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிங் பிஷர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அலுவலர்கள் சேலத்தில் ஆய்வு செய்தனர். சேலம் உருக்காலை, தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர் சங்க தலைவர் தினகரன், ஏற்றுமதியாளர் ஜார்ஜ், சோனா கல்லூரி செயலர் தீரஜ்லால், ரோட்டரி கவர்னர் டேவூ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர். இந்நிலையில், நேற்று சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்திலிருந்து 350 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,529 ரூபாயாக மாற்றி நிர்ணயித்துள்ளனர்.
நன்றி : தினமலர்