Tuesday, August 12, 2008

வட்டியை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்று செவ்வாய்க்கிழமை முதல் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதம் உயர்த்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அதன் நிதிக்கொள்கைக்குப்பின் எல்லா வங்கிகளும் வட்டியை உயர்த்த துவங்கி இருக்கின்றன. சில வங்கிகள் ஏற்கனவே வட்டியை 0.25 - 0.50 சதவீதம் வரை உயர்த்தி விட்டன. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தில் ஒரு சதவீதத்தை இன்று முதல் உயர்த்தி உள்ளதாக அறிவித்திருக்கிறது. அதன் பிரைம் லெண்டிங் ரேட் இனிமேல் 13.75 சதவீதமாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ.உயரதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமையில் இருந்து டெபாசிட்டுக்கான வட்டியையும் 0.25 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை ஸ்டேட் பாங்க் உயர்த்துகிறது. ஸ்டேட் பாங்க்கில் கடனுக்கான வட்டி 13.75 சதவீதமாக இருந்தாலும் அது மற்ற வங்கிகளை ஒப்பிடும்போது குறைவுதான் என்று ஸ்டேட் பாங்க் தெரிவிக்கிறது. எனவே ஏற்கனவே நாங்கள் அடைந்து வரும், கடன் பிரிவில் 20 - 22 சதவீத வளர்சியையும், டெபாசிட் பிரிவில் 25 சதவீத வளர்ச்சியையும் அடைந்து கொண்டுதான் இருப்போம் என்கின்றனர். கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருந்தாலும் ரூ.30 லட்சம் வரையிலான பழைய மற்றும் புதிய வீட்டு கடனுக்கான வட்டியை உயர்த்தவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் ஆட்டோ மற்றும் கல்வி கடனுக்கும் வட்டி உயர்த்தப்படவில்லை. புதிதாக ஆட்டோ கடன் வாங்கினால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியதிருக்கும்.
நன்றி : தினமலர்


சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்று மும்பை பங்கு சந்தை சரிவில் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 291.79 புள்ளிகள் ( 1.88 சதவீதம் ) குறைந்து, 15,212.13 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 68.15 புள்ளிகள் ( 1.47 சதவீதம் ) குறைந்து, 4,552.25 புள்ளிகளில் முடிந்தது. ஜூனில் இந்திய தொழில் வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ள தகவல் வெளிவந்ததில் இருந்து சென்செக்ஸ் குறைய ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். ஜூன் மாதத்தில் இந்திய தொழில் வளர்ச்சி, மே மாத வளர்ச்சியான 4.1 சதவீதத்தை விட கூடுதலாக 5.4 சதவீதமாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாத வளர்ச்சியான 8.9 சதவீதத்துடன் ஒப்பிட்டால் மிக குறைவானதே. சி.என்.பி.சி.-டிவி18 ன் கணிப்பான 5.95 சதவீதத்தை விட குறைவான வளர்ச்சியே ( 5.4 சதவீதம் ) இந்த ஜூனில் இருந்துள்ளதால் அது பங்கு சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113.81 டாலராகியது

சர்வதேச சந்தையில் கடந்த மாதம் வரை உயர்ந்துகொண்டே வந்து, உலக நாடுகளை நிம்மதி இல்லாமல் இருக்க செய்த கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113.81 டாலராக குறைந்திருக்கிறது. இது கடந்த 14 வாரங்களில் இல்லாத அளவு குறைவு. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147.27 வரை உயர்ந்து வந்த போது அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த விலை இன்னும் நீங்கவில்லை. அது 2009 வரை நீடிக்கும் என்று சொல்கிறார்கள். அதனால் அங்கு பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. மேலும் உலகில் இரண்டாவது அதிகம் பெட்ரோல் உபயோகிக்கும் நாடான சீனாவும் சமீப காலமாக இறக்குதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்திருக்கிறது. ரஷ்யாவுக்கும் ஜார்ஜியாவுக்குமிடையே இப்போது நடந்து வரும் சண்டையில், ஜார்ஜியாவில் இருக்கும் முக்கிய எண்ணெய் குழாய் சேதமடைந்திருக்கும் என்று முதலில் பயப்பட்டார்கள். இதனால் அந்த குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால் இப்போது அந்த குழாய் சேதமடையவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஜார்ஜியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடு இல்லை என்றாலும். அந்த நாடு வழியாக செல்லும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பைப்லைன் வழியாக பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அனுப்பப்படுகிறது. ஆசர்பைஜானில் இருந்து ஜார்ஜியா வழியாக துருக்கிக்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


இறங்கிய தங்கம் மீண்டும் ஏறியது

கடந்த வாரத்தில் இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.53 அதிகரித்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென சரிந்ததால், அது தங்கத்தில் எதிரொலித்தது. கடந்த வாரம் கிராம் ஒன்றிற்கு ரூ.200 வரை குறைந்தது. இதனால், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆயிரத்து 40 ரூபாயாக இருந்தது. நேற்று காலை, வர்த்தகம் துவங்கியதுமே தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.53 அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதிலும், சர்வதேச அளவில் அனைவரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டியதாலும், ஆன்-லைன் பொருட்கள் சந்தையில் அன்றாட வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தங்கத்தை அதிகம் முதலீடு செய்ததால், குறைந்த தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது.மாலையில் மேலும் மூன்று ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் விலை, ஆயிரத்து 96 ரூபாயாக இருந்தது.பங்குச் சந்தையில் முன்னேற்றம்: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம், 280 புள்ளிகள் உயர்வுடன் தான் துவங்கியது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காரணமாக இந்த ஏற்றத்தை காண முடிந்தது. ரியல் எஸ்டேட், வங்கி துறை பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. கச்சா எண்ணெய் விலை பேரல் 115 டாலருக்கு கீழ் வந்ததும் ஒரு காரணம். இருப்பினும் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் மிதமான போக்கை கடைப்பிடித்ததால் 336 புள்ளிகள் ஏற்றத்துடன், 15,503 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை நிலை பெற்றது.சந்தை 15 ஆயிரத்து 400 புள்ளிகளுக்கு மேல் நிலை பெற்றுள்ளதால், தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக நோக்கர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்