Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி