Thursday, September 4, 2008

ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து அதிகரித்துவருவதை அடுத்து, ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, தனியாரில் முன்னணியில் உள்ள ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இன்னும் மூன்று ஆண்டில், இந்தியாவில் இருந்து தான் அதிக ஆர்டர்களை எதிர்பார்க்கிறோம்' என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் கிரன் ராவ் கூறினார். விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங். இரண்டுமே, இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானங்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. கடந்த 2005ல், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 500 விமானங்களை இந்திய நிறுவனங்களுக்கு விற்றன. மிக அதிக அளவில் விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கியது அப்போது தான். மீண்டும் 2012க்குள் 500 விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கும் என்று ஏர்பஸ் விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. 'விமானப்போக்குவரத்து வர்த்தகத்தில் சற்று தொய்வு இருந்தாலும், இப்போது சீராகி வருகிறது. ஏர்பஸ் விமானங்கள் ஆர்டர் கொடுத்து விட்டு வாபஸ் பெறுவது குறைந்து விட்டது. கடந்த 2005ல் ஆர்டர் செய்யப்பட்ட விமானங்கள் அடுத்த இரண்டாண்டுகளில் டெலிவரி செய்யப் படும். அப்போது மீண்டும் அதிக அளவில் ஆர்டர் வரும்' என்றும் கிரன் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.  
நன்றி : தினமலர் 


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: கமர்சியல் சிலிண்டர் விலை சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் கமர்சியல் காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ. ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. ஆயில் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் 19.2 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குவதால் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.342.85க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கான சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்காததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், கடந்த எட்டு மாதமாக சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த ஜன., மாதம் ரூ.ஆயிரத்து 148 ஆக இருந்த சிலிண்டர் பிப்., மாதம் ரூ.ஆயிரத்து 153 ஆகவும், ஜூன்1ம் தேதி முதல் ஆயிரத்து 172 ரூபாய் 20காசுகளாகவும், ஜூலை மாதம் ஆயிரத்து 231 ரூபாய் 20காசுகளாகவும், கடந்த மாதம் ஆயிரத்து 250 ரூபாய் 90 காசுகளாகவும் அதிகரித்தது. சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால், நேற்று கடைகளுக்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிலிண்டர் விலை 59 ரூபாய் 91 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரை விடவும் குறைவு

சில வாரங்களுக்கு முன்பு வரை ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டாவ் என்ற புயல் தாக்கும் அச்சம் இருந்ததால் அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இப்போது அந்த புயலும் அங்கிருந்து நகர்ந்து விட்டதால் விலை குறைய ஆரம்பித்து விட்டது. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 110 டாலரை விடவும் குறைந்து, பேரலுக்கு 109.35 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 108.06 டாலராக இருந்தது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு 147 டாலருக்கும் மேல் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 110 டாலறை விடவும் குறைந்து விட்டது.உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை நிமிர வைத்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

சாதாரணமாக தரையில் எண்ணெய் விழுந்துவிட்டால் அது நம்மை வழுக்கி விடும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டால், அது பங்குச் சந்தையில் எல்லாரையும் தூக்கி விடும். அது தான் நேற்று முன்தினம் நடந்தது. எண்ணெய் வரலாறு காணாத அளவு வழுக்கி விழுந்தது(விலையில்). அதாவது, சமீபத்தில் ஒரு பேரல் 147 டாலர் அளவு இருந்த கச்சா எண்ணெய், நேற்று முன்தினம் 106 டாலர் அளவிற்கு வந்தது. இது, சந்தையை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் லாப வாரமாகவே இருந்தது. நேற்று முன்தினம் கிடைத்த லாபம், சமீப காலத்தில் கிடைத்த லாபங்களில் பெரிதான ஒன்று. அது, திங்களன்று ஏற்பட்ட சிறிய சரிவையும் ஈடுகட்டி விட்டது. நேற்று சந்தைக்கு விடுமுறையாதலால் முதலீட்டாளர்களும் சந்தோஷத்தில் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி இருப்பார்கள். உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், திங்களன்று சரிவிலேயே துவங்கிய சந்தை முடிவாக 66 புள்ளிகள் நஷ்டத்தில் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சந்தை 200க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. வங்கிப் பங்குகள் தான் சந்தையைக் காப்பாற்றின. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி, சந்தையை நிமிர வைத்தது. அதுவும், 500 புள்ளிகளுக்கு மேலே. வங்கிப் பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள், ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் பங்குகள் ஆகியவை மேலே சென்றன. விமான எரிபொருள் விலைகளும் மிகவும் குறைந்துள்ள நிலையிலும் விமானக் கட்டணங்கள் குறையாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். மக்களும் குறைந்த கட்டண விமானப் பயணங்களுக்கு அடிமையாகி விட்டதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 551 புள்ளிகள் கூடி 15,049 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 155 புள்ளிகள் கூடி 4,504 புள்ளிகளுடன் முடிவடைந்தது. 15,000க்கு மேல் என்றாலே தற்போதெல்லாம் ஒரு நிம்மதி வருகிறது. கச்சா எண்ணெய் விழுந்தால் சந்தை ஏன் மகிழ்கிறது? மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் கச்சா எண்ணெயும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை கூடும் போது அதை அதிகம் உபயோகிக்கும் கம்பெனிகளின் பொருட்களின் விலையும் கூடும். மேலும் அதிகம் உபயோகிக்கும் சரக்கு லாரிகள், டிரக்குகள் தங்கள் கட்டணங்களை கூட்ட வேண்டியிருக்கும். அப்படி பொருட்களின் விலைகள் கூடும் போது பணவீக்கம் கூடுகிறது. அதுபோல கச்சா எண்ணெய் விலை விழும் போது பொருட்களின் விலையும் குறையும், பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்புகளில் தான் சந்தை மகிழ்கிறது. மேலும், சமீபத்தில் எண்ணெய் வள நாடுகளை ஒட்டி வந்த வந்த புயல் எந்த நாட்டையும் தாக்காமல் சென்றதால் அதுவும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
புதிய வெளியீடு: செபி கடந்த மாதம் அறிவித்த புதிய விதிகளின் படி வரும் புதிய வெளியீடு 20 மைக்ரான். இந்த வெளியீடு வரும் 11ம் தேதி முடிவடையும். 43.5 லட்சம் பங்குகள் வெளியிடப்படவுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூபாய் 50 முதல் 55 வரை. பெயின்ட், பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு தேவையான அல்ட்ரா பைன் மினரல் தயாரிக்கிறது இந்தக் கம்பெனி.
சந்தையும் 2008ம்: டிசம்பர் 31, 2007 அன்று சந்தை 20,286 புள்ளிகளில் இருந்தது. தற்போது 5,237 புள்ளிகள் குறைந்து நிற்கிறது. சதவீத கணக்கில் பார்த்தால் 25.81 சதவீதம் சந்தை கடந்த வருடத்தை விடக்குறைந்துள்ளது.
கடந்த டிசம்பரை விட, இந்த வருடம் ஜனவரி 10ம் தேதி அதிகபட்ச அளவான 21,206 புள்ளிகளை தொட்டிருந்தது. அதிலிருந்து பார்த்தால் சந்தையில் 6,156 புள்ளிகள் குறைந்துள்ளது. சந்தையில் கடந்த வருடங்களில் பல சரிவுகள் இது போல ஏற்பட்டிருந்தாலும், பெரிய சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தை 15,000 தாண்டி இருப்பதே ஒரு நல்ல செய்தி தான். இது தொடர்ந்தால் சந்தைக்கும் நல்லது, முதலீட்டாளர்களுக்கும் நல்லது. சென்ற முதலீட்டாளர்கள் திரும்பி சந்தைக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்