Tuesday, December 29, 2009

வேலியே பயிரை மேய்ந்தால்...

ஹரியாணா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவியும், டென்னிஸ் வீராங்கனையுமான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமீபத்தில் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேலியே பயிரை மேய்ந்ததுதான்.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, அதுவும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர், ஏதும் அறியாத மாணவியை தனது வக்கிர எண்ணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தது 1990}ம் ஆண்டு. அப்போது ரத்தோர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற உயர்ந்த பதவியில் இருந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தவுடன் அதை மூடிமறைக்க ரத்தோர் கையாண்ட வழி என்ன தெரியுமா? ருசிகாவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான். ருசிகாவின் சகோதரர் அஷுவின் கைகளைக் கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸôர் துன்புறுத்தியுள்ளனர். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், குடும்பத்தையே அழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

"மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பதைப்போல குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியது கண்டு மனம் வெறுத்த ருசிகா, சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் 1993}ம் ஆண்டு டிச. 28}ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரியை மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கு முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.

குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரத்தோருக்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில டி.ஜி.பி. என பதவி உயர்வு கொடுத்துக் கௌரவித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகள் இறந்துவிட்டாலும், அதற்குக் காரணமான குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நினைத்த ருசிகாவின் பெற்றோர், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வழக்கைத் துணிச்சலுடன் நடத்தி வந்துள்ளனர்.

நீதிமன்றத் தலையீட்டின் பேரிலேயே ரத்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்.

இந்த வழக்கில் இப்போது, அதாவது 19 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 6 மாதம் கடுங்காவல்; ஆயிரம் ரூபாய் அபராதம். சட்டத்தின் பாதுகாவலன் செய்த படுபாதகச் செயலுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை வெறும் கண்துடைப்புதான்.

ஏற்கெனவே பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓய்வுபெற்றும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரத்தோருக்கு இந்தத் தண்டனை ஒன்றும் பெரிதல்ல. இது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புத்தானே! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது. ஜாமீன் பெற்றுவிட்டால் சிறைவாசத்தைக் கழிக்காமலே காலத்தை கழித்துவிடலாம் என்ற மனப்பாங்கில்தான் அவர் இருப்பார்.

இப்போது நம்முள் எழும் கேள்வி இதுதான். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான ஓர் அதிகாரி, பதவி உயர்வு பெற்றதுடன் எந்தப் பிரச்னையுமின்றி ஓய்வுபெற்றது எப்படி என்பதுதான்.

கிரிமினல் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, கிரிமினல் எண்ணம் கொண்ட போலீஸôருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மற்றொருபுறம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சட்டத்தின் காவலனே குற்றவாளிக் கூண்டில் நின்றால் தண்டனை கடுமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளே கேடயமாக இருந்து காப்பாற்றி வருகின்றனர் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.

குற்றச்சாட்டுக்கு ஆளான ரத்தோர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஓய்வுபெற்ற மற்றொரு போலீஸ் உயர் அதிகாரியான ஆர்.ஆர்.சிங் கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவரும் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். இதனால் எந்தப் பயனுமில்லை.

ருசிகா வழக்கில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க 19 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதைக் காணும்போது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

போலீஸ் அதிகாரி ரத்தோர், ருசிகாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறார்.

எனவே இந்த வழக்கைப் புதிதாகக் கையிலெடுத்து விசாரித்து அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற நிலை இருக்குமானால், குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைந்துவிடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறையிலும் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் ஒரே வழி.
கட்டுரையாளர் : ஜெ.ராகவன்
நன்றி : தினமணி

வரவேற்கத்தக்க முடிவு

பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பதும் என்றும், தேர்தலுக்கான மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவற்றின் கோரிக்கையும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் இத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான்.

மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைத்தால், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையின்போது வாழ்த்துத் தெரிவிக்காமல், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்துத் தெரிவிப்பவர் முதல்வர் கருணாநிதி. அதிலும் குறிப்பாக தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தவர். அப்படியிருக்க, தேதியை மாற்ற வேண்டாம் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆச்சரியம்தான். இருப்பினும், பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதையும், அவர்கள் ஏற்கனவே இத்தொகுதியில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் பார்க்கும்போது, இத்தேர்தலைத் தள்ளிவைக்காமல் சீக்கிரம் முடித்துவிட திமுகவின் அரசியல் தந்திரம் தெரிகிறது.

இந்தக்கூட்டம் நடத்தப்படும் முன்பாகவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த கட்சிகள் தெரிவ்த்த சில காரணங்களில் ஒன்று இது- வாக்குகளை விலைக்கு வாங்கும் கட்சியினர் பணப்பட்டுவாடாவை பொங்கள் இனாமாக விநியோகிக்கும்போது இதைப்போலீசார் தடுப்பதோ அல்லது பணத்தைப் பறிமுதல் செய்வதோ இயலாத காரியமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பணம் கொடுக்கும் கட்சிகளை யாரும் தடுத்துவிட முடியாது என்பதைக் கடந்தகால இடைத்தேர்தல்களில் பார்த்தாகிவிட்டதாலும் தேர்தல் இனாம் அல்லது பொங்கல் இநாம் கேட்டும் வாங்கும் அளவுக்கு வாக்காளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது என்பதாலும் இது ஒரு முக்கிய காரணமாகச் சொல்லும்படியாக இல்லாமல் போனது.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த இடைத்தேர்தலின் வெற்றியில் குரிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வரதராஜன் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் ரீதியில் ஏற்புடையதே.

இந்த விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை பொங்கள். அதுவும் மூன்று நாளைக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழா. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்கள் அனைவரும் வியாபாரம் மற்றும் பண்டிகைக்கான கொள்முதல்களில் பரபரப்பாக ஈடுபடுவது இந்த நேரத்தில்தான். எல்ல வியாபாரிகளும் தங்கள் நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மேலும் கூட திறந்து வைத்திருந்து வியாபாரம் பார்த்துவிட ஆர்வம் காட்டும் தருணம் இது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் இடைத்தேர்தல் நடத்தினால்,அத்தனை வியாபாரமும் பாதிக்கும்.

மேலும், தேர்தலுக்காகக் களப்பணி ஆற்ற வேண்டிய தொண்டர்கள் அனைவருமே உள்ளூர் மக்கள். இவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள்.

இடைத்தேர்தலில் எல்லா கட்சித் தொண்டர்களும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது ழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது வழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை விட்விட்டு அரசியல் களத்தில் குதிப்பதால் மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு. பென்னாகரம் போன்ற சிறிய ஊரில் அத்தனை தையலர்களும் அவரவர் கட்சிக்காகத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கான புதுத்துணியைத் தைப்பது எங்கே? ஒருவேளை, போட்டியிடும் கட்சிகள் தங்கள் தொழிலாளர் அணியின் தையலர்கள் அனைவரையும் அழைத்துவந்து இலவசத் துணி, இலவசமாகத் தைத்துத் தரும் பணியைச் செய்தால் அதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தடுக்கும்? இதுபோன்றுதான் எல்லா வேலைகளிலும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பண்டிகை கொண்டாடும் ஆர்வத்துக்குத் தடையாக அமையும். வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காது.

சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு அரிசி, வெல்லம் எல்லாமும் இலவசமாகத் தரப்பட்து. இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்தச் சலுகையை அவர்களுக்கு அளிக்க முடியாது. இதற்காகத் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் அரிசி,. வெல்லம் கொடுத்து, தனியாக ஒருநாள் பொங்கலிட்டுக் கொண்டாட முடியமா?

இப்பிரச்சனையில் 'தேர்த்ல் தேதியை மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை' என்று முதல்வர் கருûணாநித் கூறியிருக்கிறார். ஏன் இத்தகைய நடைமுறை இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் அதற்கான அதிகாரிகள் இருக்கும்போது, ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியை மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியம்? தேதியை நிர்ணயிக்கும் உரிமையைத் தேர்தல் ஆணையம் விட்டுக் கொடுக்க வேண்டியதேயில்லை. ஆனால் இரண்டு மூன்று தேதிகளை மட்டும் தெரிவிக்கும்படி மாநில அரசைக் கேட்டாலும் போதுமே! தொகுதி இடம்பெற்றுள்ள ஒரு மாநில அரசு, இந்த அளவுக்குக்கூட கலந்தோசிக்க உரிமை பெற்றிருக்கவில்லை?

இத்தனை கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கருத்துக்களைக் கேட்டிருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவின் நடவடிக்கையும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவும் சரியானதே. இருப்பினும், இடைத்தேர்தல் தேதியைத் தீர்மானிக்கும்போது மாநில அரசின் கருத்துக்களைக் கேடடறிவதை இனியாகிலும் தேர்தல் ஆணையம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இது புதிய நடைமுறையே என்றாலும், இதை மேற்கொள்வதால் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த கௌரவக் குறைச்சலும் ஏற்பட்டுவிட்டது.
நன்றி : தினமணி

மொபைல் போனை அறிமுகப்படுத்துகிறது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் மொபைல் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்ட்ராய்ட் என்ற மொபைல் போனுக்கான இயங்குதள மென்பொருளுடன் வெளியாகவிருக்கும் இந்த மொபைல் போன்களுக்கு நெக்சஸ் ஒன் என்று பெயரிடப் பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கூகுள் நிறுவனத்துக்காக மொபைல் போனை தாய்வான் நாட்டை சேர்ந்த எச்.டி.சி., மொபைல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடவிருக்கிறது என தொழில்நுட்பம் சம்பந்தப்பட் டெக் கிரன்ச் என்ற பிளாக் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்