Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


Wednesday, June 8, 2011

யாரிடம் சொல்லி அழ?


கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.


இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!
நன்றி : தினமணி


Tuesday, June 7, 2011

நடப்பு 2011ம் ஆண்டில் இதுவரையில்புதிய பங்கு வெளியீடுகள்: 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவு



நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 15 நிறுவனங் களுள், 9 நிறுவனப் பங்குகளின் விலை, வெளியீட்டு மதிப்பை விட, 16 முதல் 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. 6 நிறுவனப் பங்குகளின் விலை, 1.40 சதவீதம் முதல் 277 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்ற 2010ம் ஆண்டிலும், நடப்பு 2010ம் ஆண்டிலும், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வருகிறது. உலகளவில், பணவீக்கம் அதிகரித்து வருவது, ஒரு சில வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாதது, மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வியாபாரம் சுணக்கமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை இந்தியாவில், 15 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. இவற்றுள், அக்ரோபெடல் டெக்னாலஜீஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 90 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. ஆனால், இதன் பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட, 75 சதவீதம் சரிவடைந்து, 22.70 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது. அதாவது, இதன் பங்குகளில், முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இதன் பங்குகளை விற்கும் நிலையில், அதிக இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.இதே போன்று, ஷில்பி கேபிள் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 69 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது.

ஆனால், இதன் பங்கின் விலை, தற்போது, பங்கு சந்தையில், வெளியீட்டு விலையைவிட 73 சதவீதம் சரிவடைந்து, 18.65 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மேலும், சர்வலட்சுமி பேப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 29 ரூபாயை விட, 64 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஓம்கார் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்கின் விலை (வெளியீட்டு விலை 98 ரூபாய்) 46 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பாரமவுன்ட் பிரின்ட் பேக்கேஜிங் நிறுவனத்தின் பங்கின் விலை ( 35 ரூபாய்) 45 சதவீதமும், பி.டி.சி. இந்தியா பைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் பங்கின் விலை (28 ரூபாய்) 32 சதவீதமும், சங்வி போர்ஜிங் அண்டு இன்ஜினியரிங் நிறுவனப் பங்குகளின் விலை (85 ரூபாய்) 25 சதவீதமும், பியூச்சர் வென்சர்ஸ் இந்தியா நிறுவனப் பங்கின் விலை (10 ரூபாய்) 19 சதவீதமும், இன்னோவென்டிவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை (வெளியீட்டு விலை 29 ரூபாய்) 16 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன.நாட்டின் பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள், ஒரே இடத்தில் முதலீட்டை மேற்கொள்ளாமல், ஆதாயம் அளிக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களில், முதலீடு செய்து வருகின்றனர்.

இதுவும், புதிய பங்கு வெளியீடுகள் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு குறைந்து போனதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.இவ்வாண்டு புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, பல நிறுவனங்களுள், பினோடெக்ஸ் கெமிக்கல் நிறுவனம் பங்கின் வெளியீட்டு விலையை 70 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்திருந்தது. இதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 277 சதவீதம் அதிகரித்து, 264.35 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, மிட்வேலி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், பங்கு ஒன்றை 70 ரூபாய்க்கு வெளியிட்டது. இதன் பங்கு ஒன்று தற்போது, 79 சதவீதம் உயர்ந்து 125.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்கள் தவிர, லவ்வபிள் லிங்கிரி நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்போது, வெளியீட்டு விலையான, 205 ரூபாயை விட 58 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஞ்சநேயாலைப்கேர் நிறுவனம், பங்கு ஒன்றை 234 ரூபாய்க்கு வெளியிட்டது. அதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுடர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 77 ரூபாயை விட, 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலையும், வெளியீட்டு விலையான 175 ரூபாயை விட, 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்நிலையில், சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், கேலக்ஸி சர்பாக்டன்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, போதிய அளவிற்கு ஆதரவு கிடைக்காததால், இந்நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றுக் கொண்டது.

மென்னிரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதாக புகார் வந்ததையடுத்து, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி', இந்நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படுவதை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்


Monday, June 6, 2011

வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்

வங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது?


இந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.

மேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.

மேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.

பெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.

இவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.

இத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

அதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.

- ஏ.கே.விஜய்தேவ்
நன்றி : தினமலர்   


Sunday, June 5, 2011

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்து இந்தப் படிப்பு குறித்த ஆலோசனைகள், அவன் அல்லது அவள் ஒரு வேலைக்குச் செல்வது வரை தொடர்ந்து நிழல் போல் வருவது என்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

பள்ளிகளில் சேர்க்கும் போதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை தங்கள் பிள்ளைகளின் தோளில் ஏற்றி அவர்களின் தோள் வலியைக் கூட பொருள்படுத்தாது சுமக்கச் சொல்லி வருவதே பல பெற்றோர்களின் செயலாக இருந்து வருகிறது.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பக்கத்து வீட்டு மாணவரைக் காட்டி, இது போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அடிக்கடி கூறுவதுதான் பல குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்ச்சி. இந்த வார்த்தை மாணவர்களின் மனதில் பதிவாகி எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற துடிப்பையும் உருவாக்கி விடுகிறது.

இதனால் பொறியியல், மருத்துவம் போன்றவைகளைத் தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய் விடுகிறது.

இதனைத் தவிர்த்து எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டயப் படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.

அப்படி இருந்தாலும் அந்தப் படிப்புகள் என்னவோ மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு போன்று கிராக்கியுடன் இருப்பதில்லை என்பதுதான் வேதனை.

தெரிந்த பையன் ஒருவன் பொறியியல் படித்து இன்று கைநிறைய சம்பளம் வாங்குகிறான் என்ற பிரமிப்புத்தான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் பட்டம்பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி குடும்பமும்,சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவரையும் பொறியியல் படிப்புக்காகத் தயார்படுத்தி இருக்கின்றனர். இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாமல் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் கூட வேறு வழியின்றி மாணவர்களும், பெற்றோர்களும் ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்திப் படிக்கவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை. தன் பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகி விட்டது.

குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதை விட, படிக்கும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்குரிய கல்வியைக் கற்க பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையிலும், பணத்தைச் செலவழித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.

இதனால் ஏராளமானவர்கள் தங்கள் கல்வியைத் தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள்.

அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், அவர்களின் எண்ணங்களை மாணவர்களின் மனதில் திணிப்பதுதான் பிரச்னையாகி வருகிறது. இதன் காரணமாகத் தங்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ தொலைக்காட்சிகள் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்கள் பல கல்லூரிகளின் பாடப்பிரிவுகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றனர்.

எனவே, தேர்வு முடிவுகளை அறிந்துள்ள நிலையில், அடுத்த நிலைக்குச் செல்ல மாணவர்களைப் பெற்றோர்கள் தயார்படுத்தினாலே போதும். மாணவர்களின் சிந்தனையை மழுங்கடிக்காமல் இருந்தாலே,அவர்களின் ஆற்றல் தானாகவே வெளிப்படும். பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.

கட்டுரையாளர்: வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி


Friday, December 3, 2010

வெட்கம் கெட்டவர்கள்!

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.


ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

நன்றி : தினமணி 

Thursday, December 2, 2010

யாகாவாராயினும் நா காக்க...

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.

முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.

கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.

காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?

கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?

போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!

இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?

1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?

ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.

பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.

ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.

இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?

ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?

ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!

பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.

தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?

ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?

ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!

மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.

தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.

இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.

வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.

என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே

கட்டுரையாளர் :  நெல்லைகண்ணன்

நன்றி : தினமணி