Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, September 21, 2010

மக்களிடம் மறைப்பானேன்?

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.

நோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா?

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.

கோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.

மீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை "செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.

உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் "பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - "வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!'
நன்றி : தினமணி

Wednesday, August 25, 2010

எதிர்ப்பு தேவைதானா?

அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:

ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.

இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்

மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.

கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.

இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?

50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?

இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.

மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.

மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி

Saturday, August 21, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி

Saturday, August 14, 2010

அச்சுறுத்தும் "சூப்பர்-பக்'குகள்!

எந்தவொரு வீரிய மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர்-பக்' எனப்படும் பாக்டீரியா இந்திய மருத்துவமனைகளிலிருந்து உலகுக்கு பரவியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழில் வெளியான தகவல், இப்போது பரபரப்பாக செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விதழ் குறிப்பிடும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிருமி அல்லது ஒருவகை மரபீனி இ-காலி, கே-நிமோனியா ஆகிய இரு பாக்டீரியாக்களுடன் கலந்து, மனிதர்கள் உடலுக்குள் சென்று எல்லாவிதமான நோய்களையும் ஏற்படுத்தும் என்பதாலும், எந்தவிதமான தீவிர ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் இந்த "சூப்பர்-பக்' கட்டுப்படாது என்பதும்தான் அந்த ஆய்வின் முடிவு.

இந்தக் கிருமியின் பெயரில் நியு டெல்லி என்ற அடையாளம் இருக்கிறதே தவிர, இந்தக் கிருமி, தில்லி மருத்துவமனைகளிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலிருந்தோ வெளியுலகுக்குச் சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த "சூப்பர்-பக்' தாங்கிய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து அறிய வந்துள்ளன.

இந்த "சூப்பர்-பக்' கிருமி ஆய்வில் ஈடுபட்ட இரு ஆய்வு மாணவர்களில் ஒருவர் தமிழக ஆராய்ச்சியாளர் கே. கார்த்திகேயன். வெள்ளக்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியல் ஆய்வு மாணவர். இங்கிலாந்து ஆய்விதழின் கருத்தை இவரே மறுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டும்தான் இந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

ஏதோ "சூப்பர் பக்' மட்டும்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி என்று கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை என்று நிறைய கிருமிகள் உள்ளன. நுண்ணுயிரித் தொழில்நுட்பம் விரிந்து நுட்பமாகச் செல்வதால், புதுப்புது ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கிருமிகள் பற்றி கண்டறிகிறார்கள். அதற்காக பீதி கிளப்ப வேண்டியதோ அல்லது இந்தியாவின் மீது பழிசொல்வதோ தேவையில்லாத வேலைகள். குறிப்பாக ஆராய்ச்சி இதழ்களுக்குத் தேவையில்லாத வேலை.

இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்துதான் பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் இறக்குமதியாகின. இதற்காக எந்த நாட்டையும் இந்தியா பழிசொல்லவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, இந்தியாவுக்கு வருகை தந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் வாட்டி வதைக்கவில்லை.

மேலும், இத்தகைய கிருமிகள் மனிதர் மூலம்தான் பரவ முடியும் என்பதில்லை என்று மறுக்கும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது மனிதர்கள் விமானம் மூலம் சில மணி நேரத்திற்குள் உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்ல முடிகிறது. ஆகவே, அந்த நாட்டின் கிருமித்தொற்று இந்த நாட்டுக்குள் புகுந்ததாகச் சொல்ல முடிகிறது. ஆனால் இத்தகைய பயண வசதிகள் இல்லாத காலத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் காலரா போன்ற நோய்கள் பரவலாக ஒரே நேரத்தில் ஏற்பட்டு, உலகம் முழுவதும் மக்கள் இறந்தார்கள் என்பதைக் குறிப்பிடும் சில ஆய்வாளர்கள், வான் வழியாகவும், இடம்பெயரும் பறவைகள் மூலமும் கிருமிகள் பரவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

ஆகவே இந்தியாவின் மீது மட்டும், குறி வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசிவிட்டுப் போவதற்குக் காரணம், இந்தியாவில் ஏற்பட்டுவரும் மருத்துவ வளர்ச்சிதான். குறிப்பாக, மருத்துவப் பயணமாக இந்தியா வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மருத்துவ வசதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுக்கு இணையாக உள்ளது. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் குறைவு. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால், 30,000 அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 6,000 அமெரிக்க டாலர் (3 லட்சம் ரூபாய்) செலவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முடியும். ஆகவே இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது புதிது புதிதாகத் தொடங்கப்படும் பல மருத்துவமனைகள் இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்காகவே, ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்துக்கு மருத்துவமனையை நிர்வகிக்கின்றன. நோயாளிகளைத் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர, பிரசாரம் செய்ய ஏஜன்டுகளையும்கூட பல நாடுகளிலும் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில், வெளிநாட்டினரின் மருத்துவப் பயணத்தால் கிடைக்கும் வருவாய் 5,000 கோடி ரூபாயாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 10,000 கோடி ரூபாய்) உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வளர்ந்த நாடுகளின் மருத்துவக்கூடங்களின் லாபம் குறைந்து விடுகிறது. அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் குறைகிறது. ஆகவே, இவை வெளிநாட்டினரை அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகள்.

இந்த அவதூறுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அன்னிய சக்திகள். இன்னொருபுறம் நமது வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற முயலும் இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும். உலகம் "சூப்பர்-பக்' பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். இந்தியாவை அச்சுறுத்தும் "சூப்பர் பக்'குகள் ஒன்றா, இரண்டா... நாமல்லவா பயப்பட வேண்டியிருக்கிறது!

நன்றி : தினமணி

Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

Tuesday, January 19, 2010

போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி

Thursday, January 7, 2010

வருமுன் காத்தலே நலம்!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.

÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.

÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?

÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி

Tuesday, January 5, 2010

கொடிகட்டி பறக்குது 'ஸ்டெம் செல்' வர்த்தகம்: ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாயை எட்டியது

சமீபகாலமாக பிரபலம் அடைந்து வரும், 'ஸ்டெம் செல்' சிகிச்சைக்காக தொப்புள் கொடி, 'செல்'கள் சேமிக்கப்படுகின்றன. இதற்கான சேமிப்பு வங்கிகளின் வர்த்தகம், 100 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் வளரும், 'செல்'களை பயன்படுத்தி, உடலில் செயலிழந்த பகுதிகளில் காணப்படும் பழுதடைந்த செல்களை நீக்கிவிட்டு, புது செல்களை புகுத்தும், 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறைக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இதனால், 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளின் வர்த்தகமும் அதிகரிக்க துவங்கியது. அதிக விலைக்கு இந்த, 'செல்'கள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பு வங்கிகளின் மூலம் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட அதிகமான குடும்ப வியாதிகளுக்கு இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதனால், இந்த தொப்புள் கொடி ரத்தம் சேமிப்பு விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறையில், உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த செல்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய செல்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இந்த செல்கள் வேண்டி வங்கிகளை நாடும் தனியாருக்கு பொருத்தமான செல்கள், 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

'ஸ்டெம் செல்' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செல் உற்பத்தி செய் யும், 'கார்டு பிளட்' சேமிப்பு மற்றும் விற்பனையில் இறங்கிவிட்டன. டில்லியைச் சேர்ந்த, 'ஸ்டெம் செல்' குளோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வுப்படி, 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருவது தெரியவந்துள்ளது. இது ஆண்டு வளர்ச்சியில் 35 சதவீதமாகும். இந்த ஆண்டில் இதன் வர்த்தகம் 140 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நோயால் பாதிக்கப் பட்ட பல லட்சம் நோயாளிகளுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று, 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Wednesday, December 16, 2009

பட்​டி​யல் போடுங்​கள்

உடல் உறுப்பு தானம் செய்​வோர் எண்​ணிக்கை பெருகி வரு​வ​ தும்,​​ அத​னால் பலர் பய​ன​டைந்து வரு​வ​தும் மகிழ்ச்சி தரும் செய்​தி​கள்.​ உடல் உறுப்பு தானம் பற்​றிய விழிப்​பு​ணர்வு,​​ ஹிதேந்​தி​ர​னின் உடல் உறுப்​பு​க​ளைத் தானம் அளிக்க முன்​வந்த டாக்​டர் தம்​ப​தி​யால் தமிழ்​நாடு முழு​வ​தும் பர​வ​லா​யிற்று.​ தற்​போது மூளைச் சாவு ஏற்​பட்ட நோயா​ளி​க​ளின் உறுப்​பு​க​ளைத் தான​மாக அளிக்க முன்​வ​ரு​வோர் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ ​

தமிழ்​நாடு சுகா​தா​ரத் துறைச் செய​லர் சுப்​பு​ராஜ் குறிப்​பி​டு​வ​தைப் போல,​​ சரா​ச​ரி​யாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்​து​கொண்​டி​ருந்த நிலைமை மாறி​யுள்​ளது.​ இம்​மா​தம் 10,​ 12 ஆகிய இரு நாள்​க​ளில் 5 உறுப்​பு​தான உடல்​கள் பெறப்​பட்டு,​​ பல்​வேறு உறுப்​பு​மாற்று அறு​வைச் சிகிச்​சை​யால் 15 பேர் ​ பய​ன​டைந்​துள்​ள​னர்.​ ​ இது​வரை 100 சிறு​நீ​ர​கங்​கள்,​​ 14 கல்​லீ​ரல்​கள் தேவை​யான நோயா​ளி​க​ளுக்​குப் பொருத்​தப்​பட்​டுள்​ளன.​

விழிப்​பு​ணர்வு மேலும் அதி​க​ரிக்​கும்​போது உறுப்​பு​தான உடல்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் கிடைக்​கும் என்​ப​தில் சந்​தே​க​மில்லை.​ ஆனால் இந்த உறுப்​பு​க​ளைப் பெறு​வ​தில் சங்கி​லித் தொடர் நிறு​வன மருத்​து​வ​ம​னை​கள் முன்​னு​ரிமை பெறு​வ​தை​யும்,​​ பண​வ​சதி படைத்​த​வர்​கள் மட்​டுமே இத்​த​கைய மருத்​து​வ​ம​னை​க​ளில் ​ உறுப்பு மாற்​றுச் சிகிச்​சை​யால் பயன்​பெ​று​கி​றார்​கள் என்​ப​தை​யும் பார்க்​கும்​போது,​​ பழை​ய​ப​டியே முறை​கே​டு​கள் தொடங்​கி​வி​டுமோ என்ற அச்​சம் எழு​கி​றது.​

உடல்​தா​னம் செய்​யும் குடும்​பத்​தி​னர் ஏழை,​​ நடுத்​தர வரு​வாய்ப் பிரி​வி​னர்,​​ பணக்​கா​ரர்​கள் என்று பல வித​மாக இருக்​கி​றார்​கள்.​ அவர்​கள் இந்த உறுப்​பு​கள் யாருக்​குப் பொருத்​தப்​பட வேண்​டும் என்று விருப்​பம் தெரி​விப்​ப​தில்லை.​ விருப்​பம் தெரி​விக்​க​வும் முடி​யாது.​ உடல்​உ​றுப்பு மாற்​றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இய​லும் என்​ப​தை​யும்,​​ தானம் பெற்ற உறுப்​பின் அளவு,​​ திசுக்​கள் அதைப் பொருத்​திக்​கொள்​ளும் நோயா​ளி​யின் உடல் ஏற்​குமா என்​ப​தை​யும் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மருத்​துவ வல்​லு​நர் குழு​தான்.​

உறுப்பு மாற்​றுச் சிகிச்​சைக்​கான நவீன மருத்​து​வக் கரு​வி​களை வைத்​தி​ருக்​கும் மருத்​து​வ​ம​னை​கள் அனைத்​துமே பெரிய,​​ நிறு​வ​ன​மாக்​கப்​பட்ட மருத்​து​வ​ம​னை​க​ளாக உள்​ளன.​ விதி​வி​லக்​காக,​​ சென்​னை​யில் தலைமை அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ​ அதி​க​பட்​ச​மாக ஸ்டான்லி மருத்​து​வ​மனை அல்​லது கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​க​ளில் இந்த வசதி இருக்​கக்​கூ​டும்.​ மற்​ற​படி,​​ மாவட்ட அள​வி​லான அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் இதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லவே இல்லை என்​ப​து​தான் ​ நிலைமை.​

உடல்​தா​னம் செய்​வோர் எந்​த​வித பிர​தி​ப​ல​னும் எதிர்​பா​ரா​மல்,​​ மூளை இறப்​புக்கு உள்​ளான தங்​கள் குடும்ப அங்​கத்​தி​ன​ரின் உடல்​உ​றுப்​பு​கள் யாருக்​கா​வது பயன்​ப​டட்​டுமே என்​கிற நல்​லெண்​ணத்​தில் மட்​டுமே அளிக்​கின்​ற​னர்.​ இவ்​வாறு இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டும் உடல்​உ​றுப்​பு​கள் எந்​த​வொரு தனிப்​பட்ட மருத்​து​வ​ம​னைக்​கும் சொந்​த​மா​னது அல்ல.​ தற்​போ​தைய நடை​மு​றை​யில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான ஒருங்​கி​ணைப்​பா​ளரை அரசு நிய​மித்து,​​ தான​மா​கக் கிடைத்த உறுப்​பு​கள் யாருக்கு அளிக்​கப்​பட வேண்​டும் என்​பது முறைப்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இந்த நடை​மு​றை​யில் வெளிப்​ப​டைத் தன்​மையை தமி​ழக அரசு புகுத்த வேண்​டும்.​ ​

தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர் பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​ அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​து​தல் இணை​யம் ​(ஞட​பச)​ உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப் பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில் உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும்.​ ​ சிறு​நீ​ர​கத் திருட்​டு​கள் நடை​பெற்ற தமி​ழ​கத்​தில்,​​ இத்​த​கைய வெளிப்​ப​டைத் தன்மை மிக​வும் அவ​சி​ய​மா​கி​றது.​ ​

இதனை வலி​யு​றுத்த இன்​னொரு முக்​கிய கார​ணம்,​​ தமி​ழ​கத்​தில்​தான்,​​ முதல்​மு​றை​யாக தானம்​பெற்ற கல்​லீ​ரல் ஒரு அயல்​நாட்​ட​வ​ருக்கு அண்​மை​யில் பொருத்​தப்​பட்​டுள்​ளது.​ சென்னை தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் கல்​லீ​ரல் அழற்சி நோயால் அவ​திப்​பட்டு வந்த இராக் நாட்​டைச் சேர்ந்த நோயாளி பய​ன​டைந்​தி​ருக்​கி​றார்.​ ஸ்டான்லி அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ஒரு தனி​யார் மருத்​து​வ​ம​னை​யி​லும் கல்​லீ​ரல் மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான பொருத்​த​மான ​ நோயா​ளி​கள் இருக்​கி​றார்​களா என்று தேடி​ய​போது,​​ அங்கு இல்​லாத கார​ணத்​தால்,​​ ஒரு உறுப்பு வீணா​கி​வி​டக் கூடாதே என்​கிற நோக்​கில்,​​ அயல்​நாட்​ட​வர் தேர்வு செய்​யப்​பட்​ட​தாக விளக்​கம் தரப்​ப​டு​கி​றது.​ இது உண்​மை​யாக இருக்​க​லாம்.​ இருப்​பி​னும்,​​ இதே​போன்ற நிலைமை தொட​ரக்​கூ​டாது.​ ஏனென்​றால்,​​ இந்​தி​யா​வுக்கு மருத்​து​வச் சிகிச்​சைக்​காக வரு​வோர் எண்​ணிக்கை ஆண்​டு​தோ​றும் அதி​க​ரித்​துக்​கொண்டே வரு​கி​றது.​ அமெ​ரிக்​கா​வில் ஆகும் செல​வைக் காட்​டி​லும் மிகக் குறைந்த செல​வில்,​​ இங்கே ஐந்​து​நட்​சத்​திர ஹோட்​டல் போன்ற வச​தி​யுள்ள தனி​அ​றை​க​ளில் தங்கி,​​ தர​மான சிகிச்சை பெற்று நல​மா​கத் திரும்ப முடி​கி​றது என்​ப​து​தான் இதற்​குக் கார​ணம்.​ அவ்​வாறு வரு​வோர் எவ்​வ​ளவு பணம் வேண்​டு​மா​னா​லும் செல​வ​ழிக்​கத் தயா​ராக வரு​கின்​ற​னர்.​

அமெ​ரிக்கா உள்​ளிட்ட மேலை நாடு​க​ளில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​காக ஒரு சிறு​நீ​ர​கமோ அல்​லது கல்​லீ​ரலோ,​​ இத​யமோ வேண்​டும் என்​றால் அதற்​கா​கக் காத்​தி​ருப்​போர் பட்​டி​யல் மிக​மிக நீள​மாக இருக்​கும்.​ கிடைத்​தா​லும் அதற்​கான செலவு குறைந்​தது ஒரு லட்​சம் டாலர் ஆகி​றது.​ இது போதுமே-​இந்​திய மருத்​துவ உல​கில் முறை​கே​டு​களை முடுக்​கி​வி​டு​வ​தற்கு!​

உடல்​தா​னம் குறித்த விழிப்​பு​ணர்வு பர​வ​லா​கும் இந்த வேளை​யில்,​​ உடல்​உ​றுப்​பைத் தானம் பெறக் காத்​தி​ருப்​போர் மற்​றும் தானம் அளித்​தோர்,​​ சிகிச்சை நடை​பெற்ற மருத்​து​வ​ம​னை​கள் பற்றி வெளிப்​ப​டை​யாக அறி​விப்​பது முறை​கே​டு​க​ளைப் பெரு​ம​ளவு குறைக்​கும்.​​
நன்றி : தினமணி

Sunday, December 13, 2009

பயோகான் நிறுவனம் சாப்பிடக்கூடிய இன்சுலின் மருந்து தயாரிக்கிறது

பெங்களூரைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பயோகான், சாப்பிடக் கூடிய இன்சுலின் மருந்துப் பொருள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுமானால் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த இன்சுலின் மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் தெரிவித்தார். புதிய மருந்துக்கு இன்-105 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை மற்றும் ஆய்வுகள் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நாடு முழுவதுமாக 15 ஆராய்ச்சி மையங்களில் இந்த மருந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் இந்த மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவற்கான ஒப்புதல் மற்றும் உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
நன்றி :தினமலர்


Saturday, November 21, 2009

மூன்றாம் பால்

அரவானிகள் விரும்பினால், வாக்காளர் பட்டியலில் தங்களை "மற்றவர்' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அரவானிகளின் பத்தாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக செவி சாய்த்திருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.

இதுநாள்வரையிலும் அரவானிகளில் பெரும்பாலோர் வாக்களித்து வந்தாலும்கூட, அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே பால் பாகுபாடு செய்யப்பட்டு வந்தனர். வேலைவாய்ப்புகள், கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்களிலும்கூட இந்த பாகுபாடு ஆண் அல்லது பெண் என்றாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்துள்ள இந்த நல்ல நடைமுறை, அனைத்து துறைகளுக்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.

அரவானிகளில் சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்தார்கள். ஆனால், வடஇந்தியாவில் சில நகராட்சித் தேர்தல்களில் அரவானிகள் சிலருக்கு கிடைத்த வெற்றியைப் போல தமிழ்நாட்டில் பெற இயலவில்லை.

தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்ற ஏதோ ஒரு பாலினத்தைத் தேர்வு செய்துதான் போட்டியிட முடிந்தது. ஆனால் இப்போது மற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்து போட்டியிட முடியும். பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தொகுதிகளில் மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் இதற்கான தனி வரையறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்பது நிச்சயம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கிராமத்தில் அரவானிகள் நடத்தும் திருவிழாவுக்கும் அழகிப் போட்டிக்கும் சமூகமும் அரசும் கொடுத்த முக்கியத்துவம் அவர்களது கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்கள் எண்ணிக்கை வரும்போது இவர்களது சரியான எண்ணிக்கை தெரியவரும். இவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருப்பது தெரிந்தால் ஒருவேளை அரசியல் கட்சியினரும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

பிறப்பிலேயே அரவானிகளாக இருப்போர் எண்ணிக்கையைவிட, வளரும் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களால் தங்களை அரவானிகளாக மாற்றிக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் தங்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலின மாற்றுச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல்களும், புகார்களும் இருந்து வருகின்றன. இவர்கள் பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை மாற்றிப் பதிவு செய்வதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன.

அரவானிகளுக்கு தமிழக அரசு எப்போதும் கனிவாகவே நடந்து வந்திருக்கிறது. அரவானிகளின் பாலினமாற்று அறுவைச் சிகிச்சைக்கு மும்பை செல்லும் நிலைமையை மாற்றி, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவானிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கிடப் புகைப்படங்கள் எடுக்கும்பணி சென்னையில் நடைபெற்றுள்ளது. அரவானிகள் சிலர் தங்களுக்குக் குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இவை யாவும் அவர்களுக்கு ஆதரவாக அமையும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தனித்து வாழ உதவியாக இருக்கும்.

கடைவீதியிலும், ஓடும் ரயில்களிலும் அரவானிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. அவர்களது நிலையைப் புரிந்துகொண்டால் இந்த வெறுப்பு மறையும். மேலும் அரவானிகளும் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சமூகம் வெறுக்கும் இந்தப் பழக்கவழக்கங்களை விட்டுவிடும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு கூடும். ஒரு தொலைக்காட்சியில் "இப்படிக்கு ரோஸ்' தொடர் மூலம் அரவானிகள் பற்றிய எண்ணத்தை ஒரு அரவானி மாற்ற முடிகிறதென்றால், இதை நிச்சயமாக எல்லா அரவானிகளாலும் செய்ய முடியும்.

கவிஞர் நா. காமராஜன் கவிதையில், அரவானி தன்னைப் பற்றி சொல்லும் கவிதை வரி இது: "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'. அவர்கள் சந்திப்பிழை அல்ல. தனிச்சொல். எல்லாச் சொல்லும் பொருளுடைத்து!
நன்றி : தினமணி

Friday, November 20, 2009

விபரீத யோசனை

கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற மருத்துவப் படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று இந்திய மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் கூறியுள்ளார்.

இது பாராட்டத்தக்க முடிவு போலவும், கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை என்ற அவலத்தைப் போக்கிவிட வந்த மாற்று ஏற்பாடு என்பதைப் போலவும் தோற்றம் தந்தாலும், இதனால் கிராம மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

கிராமப்புறத்துக்குச் சேவை செய்ய கிராமப்புற மாணவன் மட்டுமே எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் பார்க்க அந்த மக்களில் ஒருவருக்கு எம்பிபிஎஸ் (டிரைபல்) என்று ஒரு மருத்துவக் கல்வியைத் தொடங்குவார்களா என்ன?

கிராமப்புற மாணவனின் அறிவை கிராமத்திலேயே இருத்தி வைப்பதற்கும், நகர்ப்புற மாணவனின் அறிவை நகரத்திலேயே வளரச் செய்வதற்கும் மட்டுமே இந்தப் புதிய முறை உதவியாக அமையுமே தவிர எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது.

கிராமத்தில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும், சென்னை மாநகராட்சி தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும் ஒரே விதமான தகுதியை நிர்ணயிக்கும்போது, ஊரகப் பகுதியில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் சென்னையில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் ஒரு விதமான தகுதி, சம்பளத்தை நிர்ணயிக்கும்போது, மருத்துவத்தில் மட்டும் இரு வேறு தகுதிகளை- நகரம், கிராமம்- புகுத்துவதன் மூலம் அலோபதி மருத்துவத் துறையில் தேவையற்ற ஒரு பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கிராம டாக்டர் என்பவர், நகர டாக்டரைவிட அனுபவம் மற்றும் அறிவில் குறைந்தவர் என்ற எண்ணத்தை அரசே உருவாக்கி, கிராம மக்களை நகரத்துக்கு வரச் செய்வதாக அமைந்துவிடும் அபாயமும் உள்ளது. கிராம மக்களே தங்கள் கிராம டாக்டர்களைப் புறக்கணிக்கவைப்பதாக அமைந்துவிடும்.

அத்தோடு, எம்பிபிஎஸ் (ரூரல்) படிப்பவர் மற்ற எம்பிபிஎஸ் (நகரம்) ஆக மாறவே விரும்புவார். இதற்கான சங்கம் உருவெடுக்கும்; போராட்டமும் நடக்கும். அரசு செவி மடுக்கும்போது, இவர்கள் அனைவரும் ஒரிஜினல் எம்பிபிஎஸ் ஆகிவிடுவார்கள்.

கேதன் தேசாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியாவில் மொத்தம் 299 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் 34,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடிகிறது. இதில் முதுகலை மருத்துவம் படிக்க 14,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதிலும் சிறப்பு மருத்துவம் பயில 709 இடங்களே உள்ளன. நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி அவரே தெரிவித்துள்ள புள்ளிவிவரம் இது.

மருத்துவப் படிப்பில் தற்போதுள்ள இடங்களை ஆண்டுக்கு 34,000 என்பதை இரட்டிப்பாக்கினால் எம்பிபிஎஸ் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைப் புதிய கல்லூரிகள் திறப்பதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு பதிலாக 200 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதும், வகுப்புகளை காலை மாலை என்று பிரித்துக் கொண்டு பயிற்றுவிப்பதும், இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கையைப் பாகுபாடு இல்லாமல் பரவலாக்க முடியும்.

கிராமப் புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் சேர 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறப்பு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் கிராமங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை முறைகேடு இல்லாமல், நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றால், நிச்சயமாகக் கிராமங்களில் டாக்டர்கள் சேவை கிடைப்பது எளிதாகிவிடும்.

இந்தியாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர் ஒவ்வொருவரும் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில், இவர்களைச் சுழற்சி முறையில் கிராமங்களில் பணியாற்றச் செய்வதன் மூலமும், கிராம மருத்துவமனைகளில் எப்போதும் மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

டாக்டர்களை கிராமங்களுக்கு அனுப்பும் சக்தி அரசுக்கு இல்லை என்பதற்காக, கிராமத்து மாணவர்களை எம்பிபிஎஸ் (ரூரல்) ஆக்குவது எந்த வகையிலும் சரியானதாக அமையாது.
நன்றி : தினமணி

Tuesday, November 10, 2009

மாற்றங்களை எதிர்நோக்கும் மருத்துவக் கல்வி!

சென்னை பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தங்களது படைப்பாக்கத்திறனை, அறிவாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தனர். அறிவியல் வினாக்களுக்கு அவர்கள் பளிச்பளிச் என்று பதில் அளித்தனர். இந்திய இளம் மூளைகளின் ஆற்றல் பிரமிக்க வைத்தது.

பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடம் அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டபொழுது, பலரும் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவி ""நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டால் எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. முப்பது லட்சம், நாற்பது லட்சம் கொடுத்து தனியார் கல்லூரிகளிலும் படிக்க முடியாது'' என்ற தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். பணம் இல்லை, வசதி இல்லை, எம்.பி.பி.எஸ். இடங்கள் போதுமானதாக இல்லை, அரசு ஒதுக்கீட்டில்கூட தனியார் கல்லூரியில் படிக்க வசதியில்லை என்றெல்லாம் மாணவர்கள் தங்களது பரிதாப நிலைமைகளை எடுத்துக் கூறினர்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தடைகள் இப்பொழுதும் நீடிப்பது வேதனைக்குரியது.

இன்றைய மக்கள்தொகைக்கேற்ப போதிய மருத்துவக் கல்லூரிகளை நமது மத்திய, மாநில அரசுகள் உருவாக்கத் தவறிவிட்டன. மருத்துவக் கல்வி தனியார்மயமாகி லாபம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 106 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்பொழுது ஏறத்தாழ 280 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சரிபாதிக்கும் மேல் தனியார் கல்லூரிகள். 1995-ல் 47-ஆக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2006-ல் 131-ஆக அதிகரித்தது. அதாவது 84 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தோன்றின.

இதே காலகட்டத்தில் 1995-ல் 109-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2006-ல் 131-ஆக உயர்ந்தன. அதாவது வெறும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கப்பட்டன.

கல்விக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போதிய நிதி ஒதுக்காததும், அரசுகளின் அலட்சியமுமே இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம். மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் பரவலாகத் தொடங்கப்படாமல் ஒரு சில மாநிலங்களிலேயே அதிகம் தொடங்கப்பட்டன. மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், குஜராத் போன்ற ஆறு மாநிலங்களில் மட்டும் 63 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளும், 67 விழுக்காடு எம்.பி.பி.எஸ். இடங்களும் குவிந்துள்ளன. மருத்துவத் துறையில் பல பிரச்னைகளுக்கு இது வழிவகுத்துள்ளது.

தற்பொழுது இந்தியாவில் 6.90 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். நமது மக்களின் தேவைக்கு இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவை. 6 லட்சம் மருத்துவர்களை உருவாக்கத் தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிகள் போதாது. எனவே மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும், தனியார் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி - விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்குமென தி.மு.க. தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் திட்டமோ ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

ஏழை மாணவர்களின் கட்டணங்களை ஏற்கும் திட்டத்தை அரசு மறந்தேவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களிடம் அரசால் நியமிக்கப்பட்ட குழு நிர்ணயித்த கட்டணங்களைத் தவிர பல்வேறு வகையிலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் நடுத்தர வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவப் பாடப் பிரிவுகளையும் தொடங்க அனுமதி வழங்கும் அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு மாற்றப்பட வேண்டும். மாநில மருத்துவக் கவுன்சில்களின் கட்டமைப்பாக மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் இருக்க வேண்டும்.

மருத்துவக் கவுன்சில்களின் செயல்பாட்டில் கூடுதல் வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும் வேண்டும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். அதேசமயம் மருத்துவக் கல்வியின் தரம் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவக் கல்வி போதனைகளிலும் நவீன நுட்பங்களைப் புகுத்த வேண்டும்.

மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு புதிய உயர்கல்வி அமைப்பின்கீழ் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என்ற யஷ்பால் குழுவின் பரிந்துரை மேலும் அதிகாரக் குவியலையும், ஊழல் முறைகேடுகளையும் உருவாக்கும். எனவே அப்பரிந்துரை கைவிடப்பட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மிகப்பெரிய தடையாக உள்ளது. இதைப் போக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறியியல், உடல்இயங்கியல், உயிர்வேதியியல் போன்ற சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள், வசதிகளுடன் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களிலும் ஊதியமும், இதர படிகளும், சலுகைகளும் அதிகமாக உள்ளன. ஆனால் தமிழக அரசு போன்ற மாநில அரசுகள் குறைவான ஊதியத்தையே வழங்குகின்றன.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் மத்திய அரசுக்கு இணையான பதவி உயர்வையோ, படிகளையோ, இதர சலுகைகளையோ சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு வழங்கவில்லை. ஒருசில சிகிச்சை சார்ந்த துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பை அளித்துள்ள அரசு, சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு அவ்வாய்ப்பை வழங்கவில்லை.

பதவி உயர்வையும், படிகளையும், இதர சலுகைகளையும் மத்திய அரசுக்கு இணையாக வழங்க மாட்டேன், விருப்ப ஓய்வும் வழங்க மாட்டேன் என்பது ஒருவகை கொத்தடிமைத்தனமாகவே உள்ளது. உளம் வெதும்பும் இப்பேராசிரியர்களின் குறைபாடுகள் களையப்பட்டால்தான் இத்துறைகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய இளைய தலைமுறையினர் முன்வருவர்.

மேலும், முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக உடற் கூறியியல், உடல் இயங்கியியல், உயிர் வேதியியல், நோய் குறியியல், நுண்ணுயிரியியல் போன்ற சிகிச்சை சாரா முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கே அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் வழங்க வேண்டும். அவ்வாறு அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அரசுப்பணியில் நீடிக்கும் வகையில் உத்தரவாதத்தைப் பெற வேண்டும்.

இவற்றைச் செய்யாமல் மருத்துவப் பேராசிரியர் பற்றாக்குறையையும் போக்க முடியாது. போதிய புதிய மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க முடியாது.

பிளஸ் டூ வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் முதலாம் ஆண்டில் திடீரென ஆங்கில வழியில் பயில்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதிய சூழல், ராகிங் போன்றவையும் கூடுதல் பிரச்னைகளாகின்றன.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட இப் பிரச்னைகளால் தேர்வில் முதல் தோல்வியைச் சந்திக்கின்றனர். முதலாம் ஆண்டில் மூன்று பாடங்களில் ஆறு தாள்களுக்கான தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. ஏதேனும் ஒரு தாளில் செய்முறைத் தேர்விலோ அல்லது கோட்பாட்டுத் தேர்விலோ தேர்ச்சி பெறாவிட்டால்கூட அவர்கள் அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியாது.

ஆறு மாதம் கழித்து வரும் தேர்வில் குறிப்பிட்ட தாளில் தேர்ச்சி பெற்ற பிறகே அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியும். இதனால் தேர்வில் தோல்வியடைபவர்கள் தங்களோடு முதலாமாண்டில் சேர்ந்த இதர மாணவர்களைவிட ஆறுமாதங்கள் கல்வியில் பின்தங்க நேரிடுகிறது.

ஐந்தரை ஆண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடுத்து வரும் தேர்விலும் வெற்றி பெறவில்லையெனில் மேலும் ஆறுமாதங்கள் விரயமாகி விடும். ஒரே ஒரு தாளில் கோட்பாட்டுத் தேர்விலோ அல்லது செயல்முறைத் தேர்விலோ தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் ஒரு மதிப்பெண் குறைந்தால் ஏற்படும் தோல்வியால் கூட ஆறு மாதங்கள் விரயப்படும் என்பது கொடுமையானது.

இக்கொடுமையைப் போக்க "பிரேக் சிஸ்ட'த்தை ரத்து செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வந்த உடன் ஒரு மாத காலத்துக்குள் மறுதேர்வை வைத்து அடுத்தகட்ட வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றிட வழி காண வேண்டும்.

மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுவதைத் தடுத்திட குறைந்தபட்சம் முதலாமாண்டிலாவது தேர்வுகளை தாய்மொழியில் எழுதவும் தாய்மொழியில் வாய்மொழித் தேர்வில் பதில் அளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா? மருத்துவக் கல்வியில் மாற்றங்கள் வருமா?
கட்டுரையாளர் : ஜி . ஆர். ரவீந்திரநாத்
நன்றி : தினமணி

Sunday, November 1, 2009

உன் கண்ணில் நீர்வழிந்தால்...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 12 பேர், கண்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு, பார்வை பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் தீவிர சிகிச்சைக்காக சென்னை சங்கர நேத்ராலய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலும், இவர்களில் 4 பேரின் கண்களில் நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்ததால், உயிரைக் காப்பாற்ற அவர்களது கண்களை அகற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என அகற்றப்பட்டது.

விழிப் படல மாற்றுச் சிகிச்சை முதலாக, கண்புரை அகற்றும் சிகிச்சை வரையிலும் கண் மருத்துவமனைகளில் எப்போதும் ஒரு கண்ணுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படும். திரைப்படங்களில் காட்டப்படுவதைப்போல இரண்டு கண்களிலும் கண் அறுவைச் சிகிச்சை செய்து, இரண்டு கண் கட்டுகளும் ஒரே நேரத்தில் பிரிக்கப்படும் அபத்தங்கள் உலகின் எந்தக் கண் மருத்துவமனையிலும் நடப்பதில்லை என்பதால், இந்த 4 பேரும் தங்களது ஒரு கண்ணை மட்டுமே இழந்துள்ளனர். மற்ற கண்களின் புரையை தரமான மருத்துவமனைகளில் நீக்கி, பார்வையை எளிதில் பெற முடியும் என்பது நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். இன்னும் 2 பேருக்கு ஓரளவு பார்வை கிடைக்கச் செய்ய இயலும் என்று சங்கர நேத்ராலய நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவை அடையாளம் கண்டுள்ள சங்கர நேத்ராலய, தனது ஆய்வுக் கூடத்திலேயே இந்த பாக்டீரியாவின் மரபீனி (டிஎன்ஏ) அமைப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற மருத்துவச் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அனைத்து மருத்துவர்களும் பயன்பெற முடியும்.

இதேபோன்ற சம்பவம் ஓர் ஆண்டுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. சிலர் பார்வை இழந்தனர். மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கண் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் காலம் நம் ஞாபகத்தை மூடி மறைத்துவிட்டது. தற்போது நெல்லூரில் நடைபெற்றுள்ளதால் மீண்டும் இப்போது நம் கண்களை இவர்களின் கண்கள் திறந்துள்ளன.

இந்தச் சம்பவங்களிலும் பொதுவான ஒரு விஷயம், இவை இலவச மருத்துவ முகாம்களில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நிகழ்ந்தவை என்பதுதான். அதற்காக, நோயாளிகளைத் தேடிப் போய், கண்களைச் சோதித்து அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், இலவச கண்புரை அகற்றம், அதன் பின்னர் கண்ணாடி அனைத்தும் வழங்கும் இத்தகைய கண் சிகிச்சை முகாம்களின் சேவையைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. இத்தகைய முகாம்கள் நடக்காவிட்டால், பல குடும்பங்களில் பார்வை இருண்டவர்கள் நிறையப் பேராக இருப்பார்கள்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய இந்த நோய்த்தொற்றுக்குக் காரணம் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. மருத்துவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், இத்தகைய இலவச அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கையாளும் கருவிகள், மருந்துகள், சிகிச்சையின்போது கண்களைக் கழுவும் மருத்துவ நீர், புரையை அகற்றியவுடன் பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.) எல்லாவற்றிலும் தரத்தைக் குறைத்துச் செலவை ஈடுகட்ட (அல்லது லாபத்தை பெருக்கிக்கொள்ள) முயற்சிக்கும்போதுதான் இத்தகைய விபரீதங்கள் நடந்துவிடுகின்றன. அதுதான் உண்மை.

இலவச மருத்துவச் சிகிச்சை என்று சொல்லப்படும் இந்தக் கண் மருத்துவச் சிகிச்சைகள் 99 சதவீதம் அரசு அல்லது ஏதாவொரு உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகளால் நிதி பெறுகின்றன. இவர்கள் கொடுக்கும் தொகையிலேயே மருத்துவமனைக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும் வகையில்தான் தருகிறார்கள். இருப்பினும் ஒரு சில கண் மருத்துவமனைகள், இந்தச் சேவையிலும் அதிக லாபம் பார்க்கக் கருதும்போது, மருந்துகள், செயற்கை லென்ஸ் எல்லாவற்றிலும் விலை மலிவான, தரம் குறைந்த பொருள்களுக்கு மாறுகின்றன.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், சில நடவடிக்கைகளை அரசு-எந்த மாநிலமானாலும்-மேற்கொள்வது அவசியம். ஒவ்வொரு தரமான கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு என்ன செலவாகிறது; அதற்காக தன்னார்வ அமைப்புகள் வழங்கும் தொகை எவ்வளவு? அந்தத் தொகை தரமான சிகிச்சைக்குப் போதுமானதா? தரமான மருந்துகள், என்னென்ன லென்ஸýகள் சந்தையில் உள்ளன, இவற்றை மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கண்டறிய வேண்டும். அறுவைச் சிகிச்சை அரங்கம் தூய்மைக்குச் சான்றுகள் பெறச் செய்தல் வேண்டும்.

மேலும், மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் சுகாதாரமான உற்பத்தி முறையை (Good Manufacturing Practice) கையாளுகின்றனவா என்று மருந்து வாங்கும் மருத்துவமனைகளால் அறியமுடிவதில்லை. மருந்து நிறுவனத்தின் பெயரை வைத்து நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யத்தான் முடிகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, சுகாதாரமான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் குறித்த பட்டியலை அரசு வெளியிட்டால் மருத்துவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தகைய சம்பவங்களால் சிலர் பார்வை இழந்தவுடன் அரசாங்கம் இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் மிக முக்கியமானது இத்தகைய நடைமுறைகளும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும்தான், மருத்துவருக்கும் மருத்துவமனைக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் அதுவே பயன் தரும்.
நன்றி : தினமணி

Thursday, September 17, 2009

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு
நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
நன்றி : தினமணி

Tuesday, September 1, 2009

பன்றிக்காய்ச்சல் பீதியின் எதிரொலி : ஹிமாலயன் லிக்விடுக்கு கிராக்கி

பன்றிக் காய்ச்சல் பீதியால், பொதுமக்கள் அனைவரும் வருமுன் காப்போம் விழிப்புணர்வுக்கு ஓரளவு வந்துள்ளனர். இந்நிலையில் ஹிமாலயன் ஹெர்பல் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான கை சுத்திகரிப்பு திரவத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் இந்த லிக்விட் அறிமுகப்படுத்தப்பட்டது. விளம்பரத்துக்கு கூட அசைந்து கொடுக்காத இதன் மார்கெட்டிங் தற்போது, பன்றிக் காய்ச்சல் பீதியால் சூடு பிடித்துள்ளது. விற்பனையில் அனல் பறக்கிறது என்பது தகவல். தற்போதைய சூழலில், தேவை மட்டும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஹிமாலயா பிராடக்ட்ஸ் வியாபார தலைவர் சாகெட் கோர் தெரிவித்துள்ளார். பிராடக்ட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து கூறிய அவர், இது ஆல்கஹாலை மூலப் பொருளாக கொண்டு மிதமான நறுமனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கையில் ஊற்றி கழுவ வேண்டாம், கையில் ஊற்றி தேய்த்தவுடன் ஆவியாகி விடும் என்றார். இந்த மவுசால், விலை எகிறுமா என நிருபர்கள் கேட்டதற்கு : விலை உயர்த்தப்பவாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, August 26, 2009

ஒதுங்கி நிற்காதீர்

தமிழ்நாட்டில் இதுவரை 54 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே போதுமான அளவுக்குப் படுக்கைகள் கிடையாது, மருத்துவப் பரிசோதனை வசதிகள் கிடையாது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வகம் மற்றும் நோயாளிகளுக்குத் தனிப்பிரிவுகளை அதிகரிப்பது அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்யக்கூடியவை அல்ல.

சுனாமி போன்ற தேசிய பேரிடர் காலங்களில் எப்படி எல்லா நிறுவனங்களும் லாபநோக்கு இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றினவோ, அதேபோன்று தேசத்தையே பீதிக்குள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் லாபநோக்கு இல்லாமல் செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் வரிச் சலுகை பெறுகிற, லாபம் சம்பாதிக்கிற மருத்துவ நிறுவனங்கள் இன்னமும்கூடக் களத்தில் இறங்கிச் சேவை புரியாமல் ஒதுங்கி நிற்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

பன்றிக் காய்ச்சலைச் சமாளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தபோது, ""தங்கள் மருத்துவமனைக்குள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தால், மற்ற நோயாளிகள் பயந்து வெளியேறிவிடுவார்கள்'' என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தன.

பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் பணிக்கு 9 தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவர்களோ எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பதாகச் செயல்படுகிறார்கள். முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.750 கட்டணம் என்றும், அதை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ரூ. 5,000 கட்டணம் என்றும் அறிவித்திருப்பதைப் பார்த்தால், தமிழக அரசுக்கு இந்த ஆய்வகங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் கிங் இன்ஸ்ட்டிட்யூட், வேலூர் சிஎம்சி ஆகிய இரு மையங்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை நடத்த முடியும் என்ற நிலையில், இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பைத் தனியார் மருத்துவமனைகள் ஒரு சமுதாயக் கடமையாக, சமூகத்துக்கு செய்யும் பங்களிப்பாகக் கருதித் தாங்களாகவே இலவசமாக நடத்த முன்வந்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளை நடத்தத் தேவைப்படும் ரசாயனங்களுக்குச் செலவுகள் அதிகம் ஏற்படும் என்றால், அதை அரசிடம் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, பொதுமக்களிடம் கட்டணமாக வசூலிப்பதற்கான நேரமும் இதுவல்ல; அப்படியான நோயும் இதுவல்ல.

"எல்லோராலும் அரசு மருத்துவமனைக்கு வர முடியுமா? வசதி படைத்தவர்கள் இந்தச் சிகிச்சையைப் பணம் செலுத்திப் பெறுவதில் என்ன ஆட்சேபணை' என்று மேலெழுந்தவாரியாகச் சிலர் நியாயப்படுத்தலாம். இந்த அபரிமிதமான ஆய்வுக் கட்டணம் என்பது தங்கள் மருத்துவமனைக்குள் எந்த நோயாளியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டுப் போடப்பட்ட பாதுகாப்பு வளையம் மட்டுமே என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய அபரிமிதமான கட்டணம் நிர்ணயிப்பது முறையல்ல. இந்த அபரிமித கட்டணங்களைச் சுட்டிக்காட்டியே, கையூட்டின் அளவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் நிர்ணயித்தால், ஏழை எங்கே போவான்?

இன்றைய பிரச்னை நோயாளிகளைக் காப்பது மட்டுமல்ல, நோய் பரவாமல் தடுப்பதுதான் மிக முக்கியமான பணி. இதற்கு ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கு பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினால்தான் அவர்களைத் தனித்து இருக்கச் செய்து, அல்லது வீட்டிலேயே தங்கச் செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை மற்றும் சிகிச்சை எல்லா மருத்துவமனைகளிலும் இலவசம் என்ற அறிவிப்பினால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவை ஏற்பட்டால் மூச்சுக் கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும்கூட அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசும் முயற்சி செய்யவில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்களும் முன்வரவில்லை. பொதுமக்கள் அதிகம் கூடுகிற பஸ் நிலையம், ரயில்நிலையங்களில் பயணிகளுக்கும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஏன் இலவசமாக இத்தகைய மூச்சுக்கவசம் வழங்கக்கூடாது?

இப்போதும்கூட தனியார் மருத்துவமனைகளும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேசத்தின் பிரச்னையில் தங்கள் இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பார்கள் என்றால், வேறு எப்போதுதான் இவர்கள் தேசத்துக்கு உதவப் போகிறார்கள்! இப்போது செய்யப்படும் ஒவ்வொரு சிறு உதவியும் மிகமிக இன்றியமையாதவை என்பதை அவர்கள் உணர வேண்டும்; இல்லையேல், அரசு உணர்த்த வேண்டும்.

நன்றி : தினமணி

Tuesday, August 25, 2009

கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னையில் புதிய மருத்துவமனை

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி அந்த கொடிய நோயை மூன்றே ஊசிகளில் குணமாக்கிக் கொள்ள முடியும் என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்ச‌ை அளிப்பதற்காக சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஹீலியாஸ் மருத்துவமனை . இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊசியை ஒருமுறை போட்டுக் கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பை புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


ஓக்ஹார்ட் ஹாஸ்பிடல்சிடம் இருந்து 10 மருத்துவமனைகள் வாங்குகிறது போர்டிஸ் ஹெல்த் கேர்

ஓக்ஹார்ட் நிறுவனத்தின் 10 மருத்துவமனைகளை டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போர்டிஸ் நிறுவனம் ரூ.909 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், கோல்கட்டாவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மற்றும் பெங்களூருவில் உள்ள 5 மருத்துவமனைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இவற்றின் மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1902 ஆகும். இந்த எட்டு மருத்துவமனைகளுடன், தற்போது கட்டப்பட்டு வரும் இரு மருத்துவமனைகளையும் சேர்த்து வாங்கியுள்ளது போர்டிஸ். இந்த ஒப்பந்தத்துக்கான பணத்தில் ரூ.350 கோடியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது போர்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓக்ஹார்ட் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக இந்த மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இவற்றை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே அப்பல்லோ மற்றும் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகங்கள் முயன்று வந்தன. ஆனால் இறுதியில் இந்த டீல் போர்டிஸுக்கே சாதகமாக முடிந்தது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனை விற்பனை ஒப்பந்தம் இதுவே. இதற்கு முன்னதாக போர்டிஸ் நிறுவனம் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை கடந்த 2005ம் ஆண்டு வாங்கியது தான் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருந்தது. இணைப்பு மூலம் நாட்டின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காக வொக்கார்ட்
நன்றி : தினமலர்


Wednesday, August 19, 2009

ஊதுகிற சங்கை...!

அமைச்சர்களும் அதிகாரிகளும் அலுவல் நிமித்தம் பயணம் செய்யும்போது, அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்றும், தனியார் விமானங்களில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே துரதிர்ஷ்டவசமானது என்பது ஒருபுறமிருக்க, இப்போதாவது மத்திய அரசு துணிந்து ஒரு கட்டுப்பாட்டை விதிக்க முற்பட்டிருக்கிறதே என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் பல விமானத் துறையில் நுழைந்தது முதல், தனியார் விமானத்தில் பயணிப்பதுதான் பெருமை. மரியாதை என்கிற தவறான கண்ணோட்டம், பெரு முதலாளிகளுக்கும், தனியார் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. தனியார் துறை என்றாலே சிறப்பாக இயங்கும் என்கிற மாயையை உலகமயம் ஏற்படுத்தி இருப்பதில் அதிசயமும் இல்லை. ஆனால், நமது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் பயணிப்பது தங்கள் பதவிக்கு இழுக்கு, அகௌரவம் என்று கருதி செயல்பட்டதை எப்படி ஜீரணிப்பது?

கல்வி, சுகாதாரம், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை முழுக்க முழுக்க வியாபாரக் கண்ணோட்டத்துடன் செயல்படுவதற்கும், தனியார்மயம் என்கிற பெயரில் பகல் கொள்ளைக்கு உள்படுத்தப்படுவதற்கும் மிக முக்கியமான காரணம், நமது ஆட்சியாளர்களும், நிர்வாகமும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் விமானத் துறையைப் புறக்கணிக்க முற்பட்டதுதான்.

பணமும், பதவியும், அதிகாரமும் வந்தவுடன் நமது மக்கள் பிரதிநிதிகளும் சரி, அமைச்சர் பெருமக்களும் சரி, தத்தம் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பாமல், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைத் தேடிப்பிடித்துச் சேர்க்க முற்பட்டனர். அவர்களைப் போலவே அதிகார வர்க்கமும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது கேவலம் என்கிற மனப்போக்கைக் கடைப்பிடித்தது.

அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் போன்றோர் ஊரார் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால், நமது கிராமத்து ஆரம்பப்பள்ளிகள்கூட ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு உயர்த்தப்பட்டுவிடாதா?

தனியார் மருத்துவமனைக் கலாசாரம் பெருகுவதுவரை, நமது மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தானே சிகிச்சை பெற்றனர். அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, மருத்துவமனையின் வளர்ச்சியும், நவீனமயமாக்கப்படுதலும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்?

ஆட்சி அதிகாரத்திலும், நிர்வாக மையத்திலும் உள்ளவர்களே சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, சராசரிக் குடிமகனுக்கும் அரசு மருத்துவமனைகளின்மீது நம்பிக்கை ஏற்படும்! அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் அவமானப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல்தானே நமது ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது? எங்களைக் கேவலப்படுத்தாதீர்கள் என்று ஏன் நமது மருத்துவத் துறையினர் குரல் கொடுப்பதில்லை?

முன்பெல்லாம் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முடிந்தவரை வெளியூர் பயணங்களை பஸ்ஸிலும், ரயிலிலும்தான் செய்வது வழக்கம். இப்போது அவர்களிடம் கார் வசதி வந்துவிட்டது. போதாக்குறைக்கு, விமானப் போக்குவரத்து எல்லா நகரங்களையும் இணைக்கத் தொடங்கிவிட்டது. எதற்கெடுத்தாலும் பறக்கத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம் என்று காரணம் கூறுகிறார்கள். இவர்கள் ஆலாய்ப் பறந்து நேரத்தை மிச்சப்படுத்துவது அவர்களுக்கு வேண்டுமானால் பயனளித்திருக்கலாம். தேசத்துக்குப் பயனளித்ததாகத் தெரியவில்லை.

சில விஷயங்களை எல்லாம் சட்டம் போட்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. அவரவர் மனசாட்சி உறுத்த வேண்டும். தார்மிகக் கடமை அவர்களை வழிநடத்த வேண்டும். இதுதான் மகாத்மா காந்தி தனது தொண்டர்களுக்குச் செய்த வழிகாட்டுதல்.

அரசு உத்தரவு இல்லாமலேயே, நமது மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் தங்கள் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கும், தங்கள் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்புவது என்று முடிவெடுத்தாலே, நமது கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தனியாருக்குத் தண்ணீர் காட்டும் அளவுக்குச் செயல்படத் தொடங்கிவிடும்.

அதேபோல, தேவையற்ற விமானப் பயணத்தைத் தவிர்த்து பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்தால், நாடே அவர்களை வாழ்த்தும். மக்களோடு மக்களாக வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியடிகளின் பெயரால் ஆட்சி நடத்துகிறோம் என்கிற உணர்வுடன் அனைவரும் செயல்பட்டால்...? ஊதுகிற சங்கை ஊதித்தான் பார்ப்போமே...!

நன்றி : தினமணி