Thursday, July 17, 2008

தகிக்கிறது தங்கம்: சவரன் விலை 10 ஆயிரம் ரூபாயை தாண்டியது * மேலும் உயரும் வாய்ப்பு


சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 10 ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதால், உள்ளூர் சந்தையிலும் மேலும் விலை உயரும் நிலை உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. புத்தாண்டு தினத்தன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.ஏழாயிரத்து 960க்கு விற்கப்பட்டது. அடுத்த நாள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.ஏழாயிரத்து 904 ஆக குறைந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை படு வேகமாக உயர்ந்து கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி ரூ.10 ஆயிரத்து 40 ஐ எட்டியது. இதுவே அதிக பட்ச விலையாக கருதப்பட்டது. தற்போது, கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.ஆயிரத்து 189 என இருந்தது அடுத்தடுத்த நாட்களில் ரூ.ஆயிரத்து 201, ரூ.ஆயிரத்து 192 என படிப்படியாக அதிகரித்தது. அதன் பிறகும் 10 மற்றும் 11ம் தேதிகளில் ரூ.ஆயிரத்து 204, ரூ.ஆயிரத்து 218 என உயர்ந்தது. 12ம் தேதி ரூ.ஆயிரத்து 232 என உயர்ந்து சவரனுக்கு ரூ.ஒன்பதாயிரத்து 856 என இருந்தது. கடந்த 15ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.ஆயிரத்து 267 என உயர்ந்து, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்தை தாண்டியது. நேற்றைய தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. ஆயிரத்து 259 என, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கச்சா எண்ணெய்க்கு ஈடாக தங்கத்தை முதலீடு வைப்பதால், கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை பாதிக்கிறது. கடந்த வருடத்தில் இருந்து தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. சர்வதேச சந்தையில் உள்ள மதிப்பீட்டை வைத்தே தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவதும் விலை ஏற்றத்திற்கு காரணம். இந்த விலையேற்றம் குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் எல்.கே.எஸ்.அகமது கூறுகையில், 'வெளிநாட்டில் பங்குச் சந்தையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. தவிர, கச்சா எண்ணெய் விலை உயர்வும் காரணம். அமெரிக்க டாலர் வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க மக்கள், தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஒரு வார விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை சவரனுக்கு சராசரியாக ரூ.480 வரை அதிகரித்துள்ளது. அதாவது 7 சதவீதம் வரை விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 983 டாலர் என உள்ளது. இது ஆயிரம் டாலரை எட்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது' என்றார்.

நன்றி : தினமலர்


சொல்லவும், மெல்லவும் முடியாத பரிதாப நிலை


பங்குச் சந்தை தினம் தினம் ஏதாவது ஒரு காரணத்திற்காக விழுந்து கொண்டிருக்கிறது. பிரேக் பிடிக்காத கார், சாலையின் இறக்கத்தில் எப்படி இறங்குமோ அப்படி இறங்கிக் கொண்டிருக்கிறது. திங்களன்று ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்ததால், சந்தையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள புதிய குழப்பங்கள், அதாவது, அமெரிக்க அரசு, அந்த கம்பெனி மீது தொடரப்போகும் வழக்கு (கலப்படமான மருந்துகளை விற்றதாக) வந்த அறிவிப்புகளை தொடர்ந்து, அந்தக் கம்பெனியின் பங்குகள் திங்களன்று படுபாதாளத்துக்கு சென்றது. மற்றும் சமீபகாலமாக பேசப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான கம்பெனியின் சேர்மன், தனது வேலையை திங்களன்று ராஜினாமா செய்து விட்டதால், அந்தக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் அளவு குறைந்தது. மொத்தமாக மும்பை பங்குச் சந்தை 139 புள்ளிகளை அன்றைய தினம் இழந்தது.
நேற்று முன்தினம், 654 புள்ளிகள் குறைந்தது ஏன்? : பிட்ச் ரேட்டிங் என்ற கம்பெனி, இந்தியாவின் உள்நாட்டு கிரெடிட் ரேட்டிங்கை குறைத்துள்ளது. அது, சந்தையை நேற்று முன்தினம் பாதித்தது. சமீபத்தில் தான் ஸ்டாண்டர்டு அண்டு பவர் என்னும் வெளிநாட்டு ரேட்டிங் ஏஜென்சி, இந்தியாவின் சமீப நிலைமைகளை வைத்து பார்க்கும் போது கவலை தெரிவிக்கும் முகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனால், வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீடு இந்தியாவில் குறைய வாய்ப்பு உள்ளது. உலகின் பல நாடுகளில் மறுபடி வங்கிகளில் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. இந்த வருடத்துவக்கத்தில் இதே பிரச்னைக்காக சந்தை பல தூக் கமில்லாத இரவுகளைக் கழித்தது, பல ஆயிரம் புள்ளிகளை இழந்தது, பலருக்கு ஞாபகம் இருக்கலாம். மறுபடியும் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்பதால் வங்கிப் பங்குகள் எல்லாம் கீழே இழுக்கப் பட்டன. இவையெல்லாம் சேர்ந்து நேற்று முன்தினம் சந்தையை 654 புள்ளிகள் கீழே இழுத்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் சந்தை நேற்று மேலே செல்லவில்லை. காரணம் அரசியல் நிலைமை தான். துவக்கம் 250 புள்ளிகள் வரை மேலேயே இருந்தாலும், தொடர்ந்து பலரும் விற்கமுற்பட்டதால் சந்தை முடிவாக கீழே முடிவடைந்தது. கடந்த இரு தினங்கள் இறக்கத்திற்கு பிறகு ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. காரணம், அந்தக் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்த ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி கம்பெனி, கடந்த சில நாட்களில் ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தது தான். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 100 புள்ளிகள் கீழே இறங்கி, 12,575 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் இறங்கி 3,816 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை கடந்த 15 மாதங்களில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இது கவலையளிக்கக் கூடிய விஷயம். புரோக்கரேஜ் கம்பெனிகள்: பங்குச் சந்தை நன்றாக இருந்தால் முதலீட்டாளர்கள் வாங்குவதும், விற்பதும் அதிகமாக இருக்கும். அது சார்ந்த புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங்களும் நன்றாக இருக்கும். ஆனால், சந்தை கீழேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு விலகியே இருப்பதால் புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங் களும் காணாமல் போய்விட்டன. இதனால், சந்தை, அந்த கம்பெனிகளின் பங்குகள் மதிப்பிழந்து காணப் படுகின்றது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தையின் சரிவை யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. பலருக்கு என்ன செய்வது என்ற கவலை. சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத நிலமை. மியூச்சுவல் பண்டுகளில் ரிடம்ஷன் அதிகம் இல்லாதது ஒரு ஆறுதலான விஷயம். அதாவது, போட்ட பணத்தை அவசர அவசரமாக அதிகம் பேர் எடுக்காதது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். இப்போது எடுத்தால் நிறைய நஷ்டப்பட வேண்டிய வரும் அல்லது மியூச்சுவல் பண்டு என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணங் கள் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணம் வந்தாலே போதும். அதுவே ஒரு பெரிய ஆறுதலான விஷயம். வரும் நாட்களும் கசப்பானவையாகத்தான் இருக்கும். குறிப்பாக, 22ம் தேதி டில்லியில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை திடீர் குறைவு ஏன்?


சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை நேற்று திடீரெனக் குறைந்தது. நேற்று முன்தினம் இருந்த விலையை ஒப்பிடும் போது, சந்தையில் பேரல் ஒன்றுக்கு 10 டாலர் வரை விலை குறைந்தது. கடைசியில், நியூயார்க் சந்தையில் பேரல் ஒன்றுக்கு 138.74 டாலராக விலை போனது.
இனி, எப்போது பேரல் விலை 160 டாலராகும் என்று உலக நாடுகள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த திடீர் சரிவு அனைவரையும் அதிரவைத்தது. ஆசிய அளவில் எரிசக்தி தகவல் தொடர்பு நிபுணர் இது குறித்து கருத்து கூறும் போது, 'நான் அதிர்ந்து போனேன்' என்றிருக்கிறார். இதற்குக் காரணம் அமெரிக்க பெடரல் வங்கித் தலைவர் பென் பெர்னாகே நேற்று கூறுகையில், 'அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமற்ற தன்மையில் இருக்கிறது' என்று கூறியதின் விளைவேயாகும். அதிகளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் அமெரிக்காவில், பொருளாதாரம் சரியாக இல்லை என்றால் தேவை குறைந்து விடும் என்ற அச்சமே சரிவை ஏற்படுத் தியது என்று தெரிவித்தார். அதே சமயம் அமெரிக்க அதிபர் புஷ், வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில், 'அமெரிக்க கடல்பகுதியில் எண்ணெய் துரப்பன பணியை மேற்கொள்ளலாம். ஆனால், கச்சா எண்ணெய் உடனே கிடைக்காது. எரிபொருள் விலையைக் குறைக்க உடனடி நிவாரணம் கிடையாது. அதே போல், நாம் வைத்திருக்கும் அவசரத் தேவை கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்தலாம் என்பதும் சரியல்ல' என்றார். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமைப்பினர், இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதே, அடுத்த சில வாரங்களில் பேரல் 160 டாலரை தொட்டு விடும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


தீப்பெட்டி விலை உயர்வதற்கு காரணம் என்ன?


மூலப்பொருள் விலை உயர்வு, சென்வாட் வரி, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நசிவடைந்து வருகிறது.
தென் தமிழகத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், கோவில் பட்டி நகரங்களில், தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஒரு காலத்தில், மூன்றாயிரம் கோடி மதிப்பிலான, இந்திய தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில், 75 சதவீதம் இந்த மூன்று நகரங்களிலேயே நடந்தது. ஆனால், தற்போது, 50 சதவீதமாகக் குறைந்து விட்டதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய மதிப்பு கூட்டு வரியான சென்வாட், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை தான் தொழில் நசிவுக்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவைப்படும் சிவப்பு பாஸ்பேட், ஒரு கிலோ ரூ. 300லிருந்து ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, ஒரு டன் பொட்டாசியம் குளோரைடு, ஐந்தாயிரத்தில் இருந்து ஆறாயிரமாக உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மெழுகு விலை, வரலாறு காணாத அளவில் 140 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது என்று உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர். இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சென்வாட் வரி விதிக்கப்படுகிறது. குடிசை தொழிலாக தீப்பெட்டி உற்பத்தி செய்பவர்களுக்குச் சென்வாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிசைத் தொழில் என்று பலர் வரி ஏய்ப்பு செய்வதால், அவர்களுடன் போட்டிப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைப்பு ரீதியிலான தொழிற்சாலை அதிபர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சிவகாசி நகரில் மட்டும் தீப்பெட்டி தொழிலை சார்ந்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 20 ஆயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில், தீப்பெட்டி விலை மட்டும் 14 ஆண்டுகளாக 50 பைசாவாகவே இருந்தது. இந்நிலையில், மூலப்பொருள் விலை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த, உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல், 50 முதல் 70 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயாக இருக்கும்.


நன்றி : தினமலர்