Wednesday, August 26, 2009

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் அறிமுகம்

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிவிசனல் மண்டல நிர்வாகி அனில் சிங்கால் அளித்த பேட்டியில் : 4 பேர் அமரும் வசதி கொண்ட இந்த பேட்டரி காரை பர்ஸ்ட் ககம் பர்ஸ்ட் செர்வ் என்ற அடிப்படையில் புக் செய்து கொள்ளலாம். புக்கிங் செய்ய 98948-56789 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். புக் செய்த நபர்கள் ஸ்டேஷன் வாயிலில் இருந்து அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் கோச் வரை சென்று இறக்கி விடும் என்றார்.

நன்றி : தினமலர்



ஜின்னாவாலான உபகாரம்...!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை நீக்க தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாலும், நீக்கிய விதம் மட்டுமல்ல -நீக்கியதே தவறு என்றுதான் தோன்றுகிறது.

தேசப் பிரிவினைக்குக் காரணமான முகம்மது அலி ஜின்னாவை ஒரு வரி கூட பாராட்டி எழுதக்கூடாது என்பது கட்சியின் சித்தாந்தமாகவே இருக்கலாம். ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பாராட்டியதற்காக விளக்கம் கேட்டிருந்தால் நியாயம். அத்வானி செய்யாததையா ஜஸ்வந்த் செய்துவிட்டார்?

இந்தப் புத்தகம் மட்டுமே அவருடைய நீக்கத்துக்குக் காரணம் என்று தோன்றவில்லை. மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட அனைவருமே அவரவர் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கட்சியின் தோல்வியை ஆராய சிம்லாவில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதன் மூலம் உண்மையான ஆத்ம பரிசோதனையை மேற்கொள்ள பாஜக தலைமை தவறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

காங்கிரஸýக்கு மாற்றாக இடதுசாரிகளைத் தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவான ஜனதா கட்சி அதிக நாள்கள் ஒற்றுமையுடன் செயல்பட முடியாமல், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போலக் கொட்டிச் சிதறியபோது, உருவான கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி. நேர்மையானவர்கள், வித்தியாசமானவர்கள், லஞ்ச ஊழல் கறைபடியாதவர்கள் என்று இந்தக் கட்சியின் தலைமையில் இருந்தவர்கள் மதிக்கப்பட்டனர் என்பதும் நிஜம். படித்தவர்கள், பண்பாளர்கள் நிறைந்த கட்சி என்ற காரணத்துக்காகவே மக்களிடம் தனி மரியாதையைப் பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக பிறகு திமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், இந்திய தேசிய லோக தளம் போன்ற கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியால் அக் கட்சி தெற்கிலும் கிழக்கிலும் வளர முடிந்தது. காங்கிரஸýக்கு மாற்றாக ஒரு நிலையான கூட்டணியை அமைக்க முடியும் என்றும், அந்தக் கூட்டணியால் ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடர முடியும் என்றும் பாரதிய ஜனதா கட்சி நிரூபித்தது என்பதுதான் அதன் மிகப்பெரிய சாதனை எனக் கூறலாம்.

ஒரிசாவில் நடந்த வகுப்புக் கலவரத்துக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகி, தனித்து தேர்தலைச் சந்தித்து மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. அடுத்து அப்படி விலகிச் செல்ல பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய லோகதளத்துடனான கூட்டு ஹரியாணாவில் முறிந்துவிட்டது.

மீண்டும் கூட்டு வைக்க தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் தயங்குகின்றன. சரத் பவார் கட்சி சரி என்று சொன்னால் பாரதிய ஜனதாவை கைகழுவிவிட சிவசேனை தயாராகவே இருக்கிறது. அகாலி தளமும் இந்தக் கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய நிலைமை.

இந்த நிலையில் கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்க என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு இருப்பவர்களை வெளியேற்றும் போக்கு விந்தையாக இருக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் இருப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமளிக்கும் கட்சி என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி அதைவிட மோசமாக அல்லவா இருக்கிறது!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்து ரத்து, நாடு முழுவதற்கும் ஒரே மொழி (வேறென்ன ஹிந்திதான்), அயோத்தியில் ராமருக்குக் கோயில் என்ற கொள்கைகளால் கட்சிக்கும் பயன் இல்லை, மக்களுக்கும் பயன் இல்லை. தேர்தலில் வெற்றி பெறவாவது இவை உதவுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. இந்த நிலையில் ""தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்'' என்று இனியும் தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சி தேய்பிறையாகி பிறகு ஜனதா கட்சியைப்போல அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

தூய்மையான நிர்வாகம், சுதேசி கொள்கைக்கு முன்னுரிமை, சுயச்சார்பே எங்கள் லட்சியம் என்றெல்லாம் முழங்கி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிப்பதையே தங்களுடைய தேசியக் கடமையாக வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு செயல்பட்டதை அதன் ஆட்சிக்காலத்தில் பார்த்தது நாடு.

முரண்பாடுகளின் மொத்த உருவாகக் காட்சி அளிக்கும் இன்றைய பாரதிய ஜனதா கட்சி, அன்றைய ஜனதா கட்சியைப்போல இன்னொரு சிதைந்த கதைதானோ? தேசிய அளவில் பலமானதொரு மாற்று அமைப்பு அவசியம். இதை பாஜகவால்தான் தர முடியும். அதைக்கூட பாஜக தலைமை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது? தவறு ஜஸ்வந்த் சிங் போன்ற தனி நபர்கள் மீது இல்லை, தங்களிடம்தான் என்பதை கட்சித் தலைமை உணர வேண்டும்.

ஜின்னாவால் இந்தியா பிளவுபட்டது என்பதெல்லாம் இருக்கட்டும். இப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறார் என்பது என்னவோ உண்மை!

நன்றி : தினமணி

யாரிடம் யார் பாடம் கேட்பது!

விவசாயத்தில் தலையாய பிரச்னைகள் நிறைய உள்ளன. இன்று விவசாயிகளே அழிந்து வருகின்றனர். விவசாயமே தெரியாத பல தொழிலதிபர்கள், லகரத்தில் சம்பளம் வாங்கும் மென்பொருள் கணினிப் பொறியாளர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தினர் இத்தகையோர் தமிழ்நாட்டு கிராமங்களில் விவசாய நிலங்களை என்ன விலை கொடுத்தாவது வாங்கி அவற்றை அப்படியே அசையாச் சொத்தாக வளைத்துப் போட்டுவைக்கும் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிறது.

பாரம்பரியமாக விவசாயம் செய்து வருபவர்கள் இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இன்று விவசாயம் வருமானம் தரக்கூடியதாக இல்லை. இன்னமும் விவசாயிகள் கடனில்தான் வாழ்கின்றனர். பெரும் வருமானத்தில் கணிசமான பகுதி வட்டிகட்டவே செலவாகிறது. கள் / பதனீர் இறக்கும் அனுமதிக்கு விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு எதுவும் சட்டம் கொண்டுவரப்படவில்லை.

விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ""தின்பதற்கு அவல் கேட்டால் உரலை இடி'' என்ற கதையாக விவசாயத்தை மேலும் நஷ்டப்படுத்த, இந்தத் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்று சட்டம் என்ற மசோதாவை 23}6}2009ல் அறிமுகம் செய்து மறுநாளே எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்த விவசாய அனுபவமே இல்லாத ஏட்டுச்சுரைக்காய் பட்டதாரிகள் - அதாவது வேளாண்மையைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரிகளை வேளாண்மை நிபுணர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்குக் கற்றுத்தரும் உரிமையை வழங்க, இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

""பதிவுபெறாத எந்த ஒரு நபரும் தமிழ்நாட்டுக்குள் வேளாண்மை ஆலோசகராகத் தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப் பணிகளை ஆற்றுவதோ கூடாது. பதிவுபெற்ற பட்டதாரிகள் மட்டுமே விவசாயம் தொடர்பாக எல்லா தொழில்நுட்பங்கள், உழவியல் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.''

இச்சட்ட திட்டங்களை மீறுவோர்கள், அதாவது பதிவுபெறாதவர்கள், விவசாயிகளிடம் ஆலோசனைகூறி முதல்முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம். இரண்டாவது முறை குற்றவாளிக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் நம்மாழ்வார், சுந்தரராமன், அந்தோணிசாமி, கோமதிநாயகம், கோ. சித்தர், உடுமலை செல்வராஜ், கட்டுரையாசிரியர் ஆர்.எஸ். நாராயணன் போன்ற நூற்றுக்கணக்கான முன்னோடிகளுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. அபராதங்கள் காத்திருக்கின்றன.

மசோதாவின்படி விவசாயிகளுக்கு ஆலோசனை கூற தகுதியுள்ள தமிழ்நாடு வேளாண்மை மன்றம் மொத்தம் 29 உறுப்பினர்களைக் கொண்டது. பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளில் 20, த.நா. வேளாண்மை பல்கலையிலிருந்து 5 பேராசிரியர்கள், அரசு நியமன உறுப்பினர்கள் 4. அது என்ன 29 என்ற கணக்கு? பாட்டா செருப்பு விலை மாதிரியா? முப்பதோ அல்லது நாற்பதோ வைத்துக் கொள்ளுங்கள். இந்த மன்றம் யோசனைகூறி அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது இப்படித் தவறான யோசனை கூறிய பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளுக்கு வழங்கவேண்டிய தண்டனைபற்றி இந்தச் சட்டத்தில் இடம் இல்லாதது ஒரு பெருங்குறைதான். இனிமேல் விவசாயத்தைக் கெடுக்க என்ன மிஞ்சியுள்ளது?

இந்த வேளாண்மை மன்றத்தை இயக்கப்போகும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும், வேளாண் துறையும் கடந்த 40 ஆண்டுகளில் செய்துவந்த கொடுமை, துரோகம் ஆகியவற்றுக்குத் தண்டனை உள்ளதா? பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், பில்லியன் பில்லியன் அளவில் நுண்ணுயிரிகளையும் கொன்று குவித்துள்ளனர்.

உண்ணும் விளைபொருள்கள் மீது விஷமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம்; தண்ணீர் விஷம்; மூச்சுக்காற்று விஷம்; இப்படியெல்லாம் சூழலைக் கெடுத்துப் போதிய விளைச்சல் இல்லாமல் கடனில் மூழ்கி, வாழ வழி இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய பல்கலைக்கழக வேளாண் போதகர்களுக்கு என்ன தண்டனை தருவது? இவையெல்லாம் போதவில்லையா? இவர்கள் செய்துள்ள வேளாண் கொடுமைகளுக்கு ஒரு பரிசாக தமிழ்நாடு அரசு "வேளாண்மை மன்றத்தை' வழங்கியுள்ளதை விவசாயிகள் நிராகரிப்பது நிச்சயமான உண்மை.

அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. விவசாய சங்கத் தலைவர்களுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. இந்த மன்றத்தின் யோசனையைக் கேட்டு எந்த விவசாயியும் பயிரேற்றப் போவதில்லை. ஏனெனில் விவசாயத்தைப் பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய்ப் பட்டதாரிகளால் எதையும் சாதிக்க முடியாது. பட்டறிவு, பாரம்பரிய அறிவு, விவசாயிகளின் அறிவுப் பரிமாற்றங்கள் சாதிக்கக்கூடியதை இந்த மன்றத்தால் சாதிக்க இயலுமா?

வேளாண்மை செழிக்க யார் யாரிடம், எவ்வாறு பாடம் கேட்பது; எவ்வாறு கற்பிப்பது என்ற கேள்விகள் வரும்போது இரண்டு மறைந்த மகாமேதைகள் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் இந்தியர். மற்றொருவர் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். யார் அந்த இந்தியர்? அவர்தான் எஸ்.ஏ. தபோல்கர். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தியவாதி. கணிதப் பேராசிரியர். விவசாயத்தில் பட்டதாரி இல்லை. மண்ணியலில் இவர் பெற்ற நிபுணத்துவம், இவரை ஒரு நர்ண்ப் இட்ங்ம்ண்ள்ற் என்று கூற வைத்தது. இவர் படைத்தது டகஉசபவ ஊஞத அகக. சூரிய அறுவடையை ஒழுங்காகச் செய்தால் எல்லோருக்கும் எல்லாமும் உண்டு என்றவர். காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.

இவருடைய தாரக மந்திரம் ""விஸ்வம் புஷ்டம் கிராமே அஸ்மின் அனாதுரம்'' இது ரிக் வேதத்தில் உள்ளது. இதன் பொருள், ""உலக மக்கள் நலமாய் வாழ நாம் வாழும் இடங்களில் (கிராமங்களில்) ஏராளமாக உணவைப் பெற முடியும்''.

வேளாண் கல்விக்கு தபோல்கர் மூன்று வழிகளைக் கூறுகிறார்.

1. ஸ்வாத்யாயம்: அதாவது தன்னறிவு, தன்னைத்தானே தயார் செய்துகொள்ளும் கல்வி, 2. ஸ்வாஸ்ரேயம்: அதாவது தன் கையே தனக்குதவி. தற்சார்பு நிலை. 3. பிரயோக்பரிவார்: பலர் ஒன்று சேர்ந்தும் சேராமலும், பெற்ற கல்வியைப் பகிர்ந்து கொண்டு பயன்பெறுதல். இந்தப் பிரயோக்பரிவார் அமைப்பில் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற தன்னறிவை மற்றவர்கள் பயனுக்காக எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட உழவியல் நுட்பத்தினால் கூடுதல் மகசூல் பெற்றால் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். மாடித் தோட்டங்களை உருவாக்கியவர். பழத்தோட்டங்களை உருவாக்கியவர். மண்ணில் உள்ள விஷத்தைப் போக்கி நுண்ணூட்டங்களை மண்ணில் உருவாக்கி வளப்படுத்த பல தானிய விதைகளை விதைத்துப் பசுந்தழைகளை மடித்து உழும் ஒரு தொழில்நுட்பம் விவசாயிகளின் கருத்துப் பரிமாற்றத்தால் விளைந்ததுவே, இதற்குத் தபோல்கரின் பிரயோக் பரிவார் காரணம்.

கற்பதிலும் கற்பிப்பதிலும் தலைசிறந்த முன்னுதாரணம் ""வேளாண்மை உயில்'' என்ற காவியத்தைப் படைத்த ஆல்பர்ட் ஹோவார்ட் ஆவார். இவர் அன்று இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சான் கேட்டுக்கொண்டதன் விளைவால் லண்டன் ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர் அமைப்பு, இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, 1905-ம் ஆண்டு ஆல்பர்ட் ஹோவார்டை இந்தியாவுக்கு அனுப்பியது. புசா என்ற இடத்தில் அவருக்குப் பதவியும், சோதனை இடமாக 90 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

எவ்விதமான ரசாயனமும் இல்லாமல் இந்திய விவசாயிகள் கடைப்பிடிக்கும் உழவியல் நுட்பங்களைக் கண்டு ஹோவார்ட் வியந்தார். இந்திய விவசாயிகளிடம் பாடங்கள் கற்க விரும்பினார். விவசாயிகளைப் புசாவுக்கு அழைத்து, விவசாயிகளை ஆசான்களாக கௌரவித்து ஆசிரியர்கள் அமர வேண்டிய நாற்காலிகளில் உட்கார வைத்து, தான் தரையில் அமர்ந்துகொண்டு துபாஷி (மொழி பெயர்ப்பாளர்) உதவியுடன் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"வேளாண்மை உயில்' என்ற தனது நூலில் ஹோவார்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்: ""இந்திய விவசாயிகள் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த யாரும் ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தவில்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். பூச்சிக்கோ நோய்க்கோ விவசாயிகள் நஞ்சு தெளிக்காமல் இருப்பதைக் கண்டு வியப்புற்றேன். பொருத்தம் இல்லாத பயிர் ரகம், சாகுபடி முறை எவை என்பதைப் பூச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நோய் இயல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர் உதவியில்லாமல் ஆரோக்கியமாக விவசாயம் செய்வது எப்படி என்று விவசாயிகளிடம் கற்றுக்கொண்டேன்''

1935-ல் ஹோவார்டு இங்கிலாந்து திரும்பி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்டவர். பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் இவரைக் குருவாக மதித்துப் பின்பற்றினர்.

""காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்ற கவிஞரின் பாட்டுக்கு ஏற்ப இந்தியாவுக்கு நவீன விவசாயம் கற்றுக் கொடுக்க வந்தவர் இங்குள்ள விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு ""வேளாண் உயில்'' என்ற நூலைப் படைத்தார். அது வேளாண்மைக்கே உயிர். அந்த நூலில் ஒரு பொன்னான வரி உண்டு: ""பூமியின் வளம் என்பது வங்கிக்கணக்குப் புத்தகம் அல்ல. எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் கணக்கு வைக்க முடியாது...'' மண்ணிலிருந்து நாம் சுரண்டி எடுத்தது அதிகம். கொடுத்தது குறைவு. எடுக்கப்பட்டவை உலக வங்கிக்கடனை விடவும் அதிகம். எடுத்தவற்றை ஈடு செய்யப் பஞ்சகவ்யம், மண்புழு எரு, பல்வேறு குணபங்கள், உலர் மூடாக்கு, பசுந்தாள் உரம் கொண்டுதான் இழந்த வளத்தை மீட்க வேண்டும். அன்று இயற்கை விவசாயத்திற்குச் சோதனைக்கூடமாக விளங்கிய புசா, இன்று நவீன ரசாயனம் போதிக்கும் ஐய்க்ண்ஹய் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ஆக வளர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் செம்மை நெல் சாகுபடி என்ற பெயரில் ""ஒற்றை நாற்று நடவு'' பிரபலமாகிவிட்டது. ஆனால் இதைக் கண்டுபிடித்தது பிரயோக் பரிவார் முறையில் மடகாஸ்கர் விவசாயிகளின் கூட்டுமுயற்சி ஆகும்.

கடந்த 40 ஆண்டுகளாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் மண்வளத்தைக் கெடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, இன்று உணவு இறக்குமதி செய்யும் அளவில் விவசாயத்தையே கேவலமாக்கி, பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குக் காட்டிக் கொடுத்து விவசாயத்தை மானம் இழக்கச் செய்த எட்டப்ப ஏட்டுச்சுரைக்காய் விவசாயப் பட்டதாரிகளுக்கு இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான் கற்காத ஒன்றை விவசாயிகளுக்கு கற்பிக்கும் தகுதி உள்ளதா? என்று அவர்கள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லட்டும்.

மண்ணை வளப்படுத்தும் ஒரு விவசாயத்தை, வளங்குன்றா வேளாண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு தகுதி இயற்கை விவசாய முன்னோடிகளுக்கு மட்டுமே உண்டு. தொல்சிறப்புள்ள இந்திய விவசாயத்தை அழிக்க முயலும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டை ஒரு சோதனைக்கூட எலியாகப் பயன்படுத்த இந்த வேளாண்மைச் சட்டத்தைத் திணிக்க முயல்வதை, வேரோடு களைவோம்.

கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

ஒதுங்கி நிற்காதீர்

தமிழ்நாட்டில் இதுவரை 54 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே போதுமான அளவுக்குப் படுக்கைகள் கிடையாது, மருத்துவப் பரிசோதனை வசதிகள் கிடையாது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வகம் மற்றும் நோயாளிகளுக்குத் தனிப்பிரிவுகளை அதிகரிப்பது அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்யக்கூடியவை அல்ல.

சுனாமி போன்ற தேசிய பேரிடர் காலங்களில் எப்படி எல்லா நிறுவனங்களும் லாபநோக்கு இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றினவோ, அதேபோன்று தேசத்தையே பீதிக்குள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் லாபநோக்கு இல்லாமல் செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் வரிச் சலுகை பெறுகிற, லாபம் சம்பாதிக்கிற மருத்துவ நிறுவனங்கள் இன்னமும்கூடக் களத்தில் இறங்கிச் சேவை புரியாமல் ஒதுங்கி நிற்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

பன்றிக் காய்ச்சலைச் சமாளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தபோது, ""தங்கள் மருத்துவமனைக்குள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தால், மற்ற நோயாளிகள் பயந்து வெளியேறிவிடுவார்கள்'' என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தன.

பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் பணிக்கு 9 தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவர்களோ எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பதாகச் செயல்படுகிறார்கள். முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.750 கட்டணம் என்றும், அதை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ரூ. 5,000 கட்டணம் என்றும் அறிவித்திருப்பதைப் பார்த்தால், தமிழக அரசுக்கு இந்த ஆய்வகங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் கிங் இன்ஸ்ட்டிட்யூட், வேலூர் சிஎம்சி ஆகிய இரு மையங்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை நடத்த முடியும் என்ற நிலையில், இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பைத் தனியார் மருத்துவமனைகள் ஒரு சமுதாயக் கடமையாக, சமூகத்துக்கு செய்யும் பங்களிப்பாகக் கருதித் தாங்களாகவே இலவசமாக நடத்த முன்வந்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளை நடத்தத் தேவைப்படும் ரசாயனங்களுக்குச் செலவுகள் அதிகம் ஏற்படும் என்றால், அதை அரசிடம் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, பொதுமக்களிடம் கட்டணமாக வசூலிப்பதற்கான நேரமும் இதுவல்ல; அப்படியான நோயும் இதுவல்ல.

"எல்லோராலும் அரசு மருத்துவமனைக்கு வர முடியுமா? வசதி படைத்தவர்கள் இந்தச் சிகிச்சையைப் பணம் செலுத்திப் பெறுவதில் என்ன ஆட்சேபணை' என்று மேலெழுந்தவாரியாகச் சிலர் நியாயப்படுத்தலாம். இந்த அபரிமிதமான ஆய்வுக் கட்டணம் என்பது தங்கள் மருத்துவமனைக்குள் எந்த நோயாளியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டுப் போடப்பட்ட பாதுகாப்பு வளையம் மட்டுமே என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய அபரிமிதமான கட்டணம் நிர்ணயிப்பது முறையல்ல. இந்த அபரிமித கட்டணங்களைச் சுட்டிக்காட்டியே, கையூட்டின் அளவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் நிர்ணயித்தால், ஏழை எங்கே போவான்?

இன்றைய பிரச்னை நோயாளிகளைக் காப்பது மட்டுமல்ல, நோய் பரவாமல் தடுப்பதுதான் மிக முக்கியமான பணி. இதற்கு ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கு பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினால்தான் அவர்களைத் தனித்து இருக்கச் செய்து, அல்லது வீட்டிலேயே தங்கச் செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை மற்றும் சிகிச்சை எல்லா மருத்துவமனைகளிலும் இலவசம் என்ற அறிவிப்பினால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவை ஏற்பட்டால் மூச்சுக் கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும்கூட அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசும் முயற்சி செய்யவில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்களும் முன்வரவில்லை. பொதுமக்கள் அதிகம் கூடுகிற பஸ் நிலையம், ரயில்நிலையங்களில் பயணிகளுக்கும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஏன் இலவசமாக இத்தகைய மூச்சுக்கவசம் வழங்கக்கூடாது?

இப்போதும்கூட தனியார் மருத்துவமனைகளும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேசத்தின் பிரச்னையில் தங்கள் இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பார்கள் என்றால், வேறு எப்போதுதான் இவர்கள் தேசத்துக்கு உதவப் போகிறார்கள்! இப்போது செய்யப்படும் ஒவ்வொரு சிறு உதவியும் மிகமிக இன்றியமையாதவை என்பதை அவர்கள் உணர வேண்டும்; இல்லையேல், அரசு உணர்த்த வேண்டும்.

நன்றி : தினமணி

ஐடி துறையின் வீழ்ச்சிக் காலம் விரைவில் முடியும் : டாடா கன்சல்டன்சி நிதி அதிகாரி அறிவிப்பு

ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என உறுதியளித்தார். இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், ஐ.டி., துறை வேகமான மீட்பு பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்றார். 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.இந்த ஆண்டு 46.3 பில்லியன் அளவுக்கு ஐடி துறை வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது 3 முதல் 4 சதவிகித அளவு உயரும் வாய்ப்புள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். சமீபத்தில் 24,000 பேரை பணிகளுக்காக தேர்வு செய்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை தரப்படும் என்றார். இவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டு விட்டனவாம். விரைவில் இரு தவணையாக மற்றவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விடுமாம்.
நன்றி : தினமலர்


சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் மூடல்

சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் ஒன்று மூடப்பட்டுள்ளது. லண்டனின் பரபரப்பான பகுதியில் இயங்கி வந்த ரெஸ்டாரண்ட் ஏ நைட் இன் இந்தியா. இந்த உணவு விடுதியில், பிரிட்டனர் சுகாதார துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையல் செய்யும் இடத்தில் எலிகள் ‌திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதிய அளவு சுடுதண்ணீரும் இல்லை. லீசெஸ்ட் ‌மேஜிஸ்திரேத்திடம் சுகாதார கேடு குறித்த சாட்சிகள் ஒப்படைக்கப்பட்டன. சுகாதார அதிகாரியின் பரிந்துரையை பரிசீலித்த நீதிபதி ஓட்டலை மூட உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு தவற‌ை திருத்தி ‌கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போதிய நீராதாரம் , கைகழுவும் இடத்தில் பேக்டீரியா தடுப்பு ஜெல், சுத்தமான தரை, சுகாதாரமான கிச்சன் என உணவு விடுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்து, சுகாத‌ார அலுவலகரின் அனுமதி பெற்றால் ஓட்டலை மீண்டும் திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்