Monday, November 3, 2008

25 சதவீதம் பேரை 'வீட்டுக்கு அனுப்ப' ஜரூர்: எக்கச்சக்க சம்பளம் கொடுத்த கம்பெனிகள்

கைநிறைய சம்பளம் தந்து ஆட்களை இழுத்த பல தனியார் கம்பெனிகள் ஆட் குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன; உருக்கு, கட்டுமானம், விமானத்துறை, சாப்ட்வேர், பிபிஓ.,க்கள், கால் சென்டர்கள் உட்பட பல நிறுவனங்கள், 25 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி விட்டன.அமெரிக்காவை தாக்கிய 'நிதி நெருக்கடி' புயல், இந்தியாவை அதிகமாக தாக்கவில்லை என்றாலும், ஓரளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டும் உண்மை.பல தொழில்களில் முதலீடுகளை முடக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நிறுவனங்கள் 'பின் வாங்கி' விட்டதால் நிலைமை மோசமாகி விட்டது. அதுபோல, அமெரிக்க நிறுவனங்களில் இந்திய கம்பெனிகள் போட்ட பணமும் 'முடங்கி' உள்ளதால் சில கம்பெனிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.இதுபோக, அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளில் உள்ள பெரிய கம்பெனிகளின் பணிகளை செய்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் அடி விழுந்துள்ளது. அந்த கம்பெனிகளே திவால் ஆகி விட்டதால், இந்த இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பணிகளை செய்வதற்கான ஆர்டரும் வருவதில்லை; ஏற்கனவே செய்த பணிகளுக்கான வருவாயும் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.இப்படி பல காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கிய இந்திய சாப்ட்வேர், கட்டுமான, நிதி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக் கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. உருக்கு, சாப்ட்வேர், பி.பி. ஓ.,க்கள், கால் சென்டர்கள், சிமென்ட், ரியல் எஸ்டேட் உட்பட பல துறை கம்பெனிகளில் 25 சதவீதம் வரை ஆட் களை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் குறைப்பு குறித்து மனித வள மேம்பாட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன்பே, சில கம்பெனிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தாமதம் ஆனாலும், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் குறைந்த அளவு ஊழியர்களை வெளியேற்ற பட்டியல் எடுக்கும் பணி ஆரம்பித்து விட்டது' என்று தெரிவித்தனர்.திறமைக் குறைவு, பணியில் சுணக்கம், அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்ற காரணங்களை காட்டி, ஊழியர்களை பட்டியலிட்டு வேலையில் இருந்து நீக்க கம்பெனிகள் முடிவு செய் துள்ளன. அதற்கேற்ப, பத்தாண்டு பணியில் இருக்கும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் அடிக்கடி விடுப்பு எடுப்பது, திறமை குறைவாக வேலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கம்பெனியும் அதிருப்தி அடைந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல, ஊழியர்களை நீக்கும் அதிரடி போக்கு இந்தியாவில் ஏற்படுத்தாமல் தடுக்க , தொழில், வர்த்தக கூட்டமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் காக்க உரிய நிவாரண நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

சாப்பாட்டுக்கே இல்லாத போது பொம்மையை வாங்குவார்களா? -டாக்டர் பாரத் ஜுன்ஜுன்வாலா

தற்போதைய நிதிச் சுழலில் இந்தியா, சீனாவிலுள்ள பங்குச் சந்தை மற்றும் சொத்து மதிப்புகளும் குறைந்திருக்கிறது. எல்லாரும் இந்தப் பிரச்னையில் சீனா தப்பிவிடும் என்கின்றனர். ஆனால், இச்சூழலை உருவாக்கியதில் சீனாவுக்குப் பங்கு உண்டு.அமெரிக்காவில், 'டாட்காம்' குமிழி உடைந்த பின், அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கம் அடைய ஆரம்பித்தது. அமெரிக்க நிதித்துறை வீட்டுவசதிக் கடன் வட்டி சதவீதத்தைக் குறைத்தது. மேலும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, வங்கிகள் தாராளமாகக் கடன் அளித்தன.அமெரிக்கர்களோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் காலணிகள், பொம்மைகள் போன்றவற்றிற்கு செலவு செய்தனர். எப்படி பெரிய கார் நிறுவனங்கள், தங்களுடைய நிதி நிறுவனங்களை வைத்துக் கொண்டு செயல்படுமோ அதுபோல சீனா செயல்பட்டது. தங்கள் கார்கள் அதிக விற்பனைக்காக கடன் வசதியும் தந்தனர். அதேமாதிரி தங்கள் பொம்மைகளை வாங்க அமெரிக்க நுகர்வோருக்குப் பணம் தந்தது சீனா.அதாவது, அமெரிக்க கஜானாவின் நிதிப் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு செயல்பட்டது. அப் பத்திரங்கள் வீட்டுக்கடன் வசதி நிதியாகவும், நுகர்வோர் செலவுக்கான கடன் வசதிகளாகவும் மாறின. இதில் சீனாவுக்கு அன்னியச் செலாவணிக் கையிருப்பாக 1.8 லட்சம் டிரில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு பத்திரங்களாக கிடைத்தன. அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பிற்காக, கடந்த 25 ஆண்டுகளாக பாடுபடுகிறது சீனா. குறைந்த விலையில் பொருட்கள், குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் ஆகிய இரண்டும் சீனத்தயாரிப்பு அதிகரிக்க காரணம். ஆகவே, சீனப்பொருட்கள் அமெரிக்காவில் அதிகமாகக் குவிந்தன.சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருளாதார நெருக்கம் அதிகம். அமெரிக்காவில் வீட்டுக்கடன் திவாலா விவகாரத்தில் சீனா பணம் தந்து பங்கேற்றது. சீனாவில் இருந்து மலிவான இறக்குமதி காரணமாக, அமெரிக்காவில் அப்பொருட்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது; அத்தொழில்கள் மூடப்பட்டன; அதற்கான வேலைவாய்ப்பும் பறிபோனது. அங்கு, 'சப்பிரைம்' திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் கட்டத்தவறியதால் ஏற்பட்ட ஆபத்து தான் இப்போது நாம் காண்பது. ஆனால், இந்தியா 'கார்-லோன்' என்ற இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நம் அன்னியச் செலாவணி 300 பில்லியன் டாலராக அதிகரித்தது. அமெரிக்க பிரதம வங்கிக்கு நம் ரிசர்வ் வங்கி அனுப்பிய பணத்தில் இருந்து நம் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படவில்லை. ஆகவே, உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி எந்த அளவு சீனாவையும், இந்தியாவையும் வித்யாசமாக பாதிக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.இந்தியாவின் கடையில் உள்ள ஒரு பொருளை விற்கும் போது, அதை தன் சொந்தப் பணத்தில் இருந்து வாங்கும் நுகர்வோர் இங்கு அதிகம். சீனாவில் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் கையில் பணம் இல்லை. இதனால் சீனாவுக்குப் பாதிப்பு ஏற்படும், அன்னியச் செலாவணிக்கையிருப்பு குறையும். இன்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்த நிலை நீண்டகாலத்திற்கு நீடிக்காது.சீனாவின் ஏற்றுமதிப் பட்டியலில், 'டிவி'க்கள், ஐபாட்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளவை. அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கும் போது இவற்றின் விற்பனை அதிகரிக்காது. சாப்பாட்டுக்கே இல்லாத போது யார் பொம்மையை வாங்குவார்கள்? எங்கிருந்து இரவு டின்னர் வரும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சீனாவில் இருந்து வரும் 'பார்பி டால்' விலை 10 டாலரில் இருந்து ஒன்பது டாலராகக் குறைந்தால் யாருக்கு என்ன லாபம்? எப்படி வாங்க முடியும்? இந்தியாவும் சாப்ட்வேர் மற்றும் 'பிபிஓ' சர்வீஸ்களை ஏற்றுமதி செய்கிறது. இவை உற்பத்தித் திறன் கொண்டவை. சில நிபுணர்கள் கருத்துப்படி இந்த 'சர்வீஸ் வகை ஏற்றுமதி' அதிகரிக்கும். சொல்லப்போனால், அங்கு செலவினத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளால் இவை ஏற்கனவே குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் இடங்களுக்குத் தானே வரும். இப்போது சந்திக்கப்படும் நெருக்கடிகளை சீனாவை விட இந்தியா நன்றாகச் சமாளிக்கும். ஆனால், வருமான வரியில் சில சலுகைகளைத் தந்து மக்கள் கையில் பணம்புழங்க சீனா முடிவு எடுத்திருக்கிறது. நாமும் வருமான வரிச்சலுகைகளை அதிகப்படுத்த வேண்டும். எக்சைஸ் வரிகளைக் குறைப்பதுடன், இறக்குமதி வரியை அதிகரிக்கவேண்டும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தரப்படும் மானியம் அதிகரித்தால் அது அடிப்படை செலவினத்தை ஊக்குவிக்கும். அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதால், அவர்கள் அதை அடிப்படை நுகர்விற்குப் பயன்படுத்த மாட்டார்கள்.இன்றைக்கு சொத்து மதிப்பு சரிந்து விட்டதே, பங்குச்சந்தை சரிந்ததே என்று கவலைப்பட வேண்டாம். இது நிஜ பொருளாதாரத்தைப் பிரதிபலிப்பதில்லை, மொத்த வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் இருக்கும் என்பதே நல்ல தகவல். அன்னிய மூலதன முதலீட்டாளர் பணத்தை திரும்ப எடுத்ததே பங்குச்சந்தை வீழக் காரணம். இந்த அலையில் இருந்து இந்தியாமீண்டுவிடும்.
நன்றி : தினமலர்


புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்: அலட்சியப்படுத்தி தொடர்ந்து இறக்குமதி

புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்களை, பல்வேறு நாடுகள் தடை செய்திருந்தாலும், இந்தியா மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.ஆஸ்பெஸ்டாஸ் என்று அழைக்கப்படும் கல்நார்களில் உள்ள அபாயகரமான ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட, உள்நாட்டில் இவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ஆஸ்பெஸ்டாஸ்களை தொடர்ந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ரோம் நகரில் நடந்த மாநாட்டில் 126 நாடுகள் கலந்து கொண்டு, வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ், அபாயகரமான ரசாயனப் பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டு, அதை கண்காணிப்பு பட்டியலில் வைக்க முடிவு எடுத்துள்ளன.கனடாவும், ரஷ்யாவும் தான், உலகிலேயே அதிகளவில் ஆஸ்பெஸ்டாஸ்களை ஏற்றுமதி செய்கின்றன. அதிகளவில் இவற்றை இறக்குமதி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இதனால், இந்த மூன்று நாடுகளும், இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யப்படும் போதும், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகள், அவற்றின் மீது அபாயகரமான ரசாயனம் என்ற முத்திரை குத்தியே அனுப்புகின்றன.மத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஆஸ்பெஸ் டாஸ் இறக்குமதிக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு தடை விதிக்கும் அதிகாரம் கொண்ட ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம், தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு ஆதரவாக உள்ளது.
நன்றி :தினமலர்


ஆள் எடுக்க இந்தியா வருது லேமென்

அமெரிக்க நிதி நெருக்கடி சிக்கலில் சிக்கிய முதலீட்டு வங்கி, நிதித்துறையில் வர்த்தகம் செய்யும் 'லேமென் பிரதர்ஸ்' நிறுவனம், இந்தியாவில் வழக்கம் போல, எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்க வர உள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் லேமென் வங்கி பாதிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதன் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை; ஊழியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை. ஆசிய, ஐரோப்பிய கிளை நிறுவனங்களின் பங்குகளை, ஜப்பானின் 'நோமுரா' கம்பெனியிடம் விற்றதை அடுத்து, இந்த நிறுவனங்கள் தலை தப்பியது. இந்திய கிளையும் இதில் உள்ளதால், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ஜப்பான் நிறுவனத்திடம் இந்த நிறுவனங்கள் கைமாறுவது குறித்த சட்ட நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன்பின், லேமென் இந்திய மற்றும் ஆசிய கிளை நிறுவனங்கள் வழக்கம்போல வர்த்தகத்தை நடத்தும். இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்கும் 'பிளேஸ்மென்ட்' முகாமில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்களில் லேமென் முன்னணியில் இருக்கும். கடந்தாண்டு கூட, ஆமதாபாத் உட்பட சில நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,களில் இருந்து எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பல லட்சம் ஆண்டு சம்பளம் நிர்ணயித்து வேலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்தாண்டு வருவது சந்தேகம் தான் என்று சொல்லப்பட்ட நிலையில், லேமென் அதை மறுத்துள்ளது. இதன் இந்திய அதிகாரிகள் கூறுகையில், 'லேமென் தன் நிதி நெருக்கடி சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. தன் ஊழியர்களுக்கு 50 சதவீத கூடுதல் போனஸ் தந்துள்ளது. இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் மூவாயிரம் பேரில் யாரும் வெளியேற்றப்படவில்லை' என்று தெரிவித்தார். அமெரிக்காவில் பல நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லேமென் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், பல நிறுவனங்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பை குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளன.
நன்றி : தினமலர்

தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் பனியன் உற்பத்தி பாதிப்பு

பனியன் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் 2,000க்கும் அதிகமான ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 1,500க்கும் அதிகமான உள்நாட்டு வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் துணை நிறுவனங்களான சாய, சலவை ஆலைகள் ஸ்கிரீன் பிரின்டிங், பவர் டேபிள் நிறுவனங்கள், செக்கிங் சென்டர்கள், எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட 2,000க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சாய, சலவை ஆலைகளில் பணியாற்றும் 90 சதவீத தொழிலாளர்கள் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.வெளியூர் தொழிலாளர்கள் அனைவரும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கி இருந்து வருவார்கள். இதில், 20 சதவீதம் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சென்று விட்டு திரும்பி வருவதில்லை. சொந்த ஊர்களிலேயே விவசாயம் உள்ளிட்ட பிறதொழில்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் பனியன் நிறுவனங்களுக்கு தீபாவளி முடிந்தவுடன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் போனஸ் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கடந்த மாதம் 24ம் தேதியில் சென்றவர்கள் நேற்று வரை திரும்பவில்லை.கடந்த ஒருவார காலமாக 3,000க்கும் அதிகமான பனியன் நிறுவனங்களிலும் உற்பத்தியை துவங்க முடியாமல், மூடியிருந்தன. பல நிறுவனங்களின் முன் பல்வேறு பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவையென விளம்பர அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து இன்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பனியன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.ஒரு வாரத்தில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களில் அதிகமாக வெளியூர் தொழிலாளர்கள் பணியாற்றுவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள் செயல்படாததால், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் வியாபாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் கூட ரசிர்கள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான தியேட்டர்களில் புதுப்படம் திரையிடப்பட்டும் வசூல் இல்லையென தியேட்டர் உரிமையாளர் ரேவதி ராஜா தெரிவித்தார்.
நன்றி : தினமலர்