Tuesday, March 24, 2009

திப்பு சுல்தானின் நவரத்ன கற்கள் பதித்த சிம்மாசன அலங்கார பொருள் ஏலம் விடப்படுகிறது

மகாத்மா காந்தி உபயோகித்த பொருட்களை எலம் விட்டு கொஞ்சம் நாட்களே ஆகி இருக்கும் நிலையில் இப்போது திப்பு சுல்தானின் மதிப்பு மிக்க பொருள் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தை அலங்கரித்த நவரத்தினங்கள் பதித்த, தங்கத்தால் ஆன, புலியின் தலையை போன்ற தோற்றத்தை கொண்ட அலங்காரப்பொருள் லண்டனில் ஏப்ரல் 2 ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஏலத்திற்கு வருகிறது. இது அதற்கு முன் கடந்த 100 வருடங்களாக நார்த்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் இருக்கும் ஃபெதர்ஸ்டோன் கோட்டையில் இருந்திருக்கிறது. 1799ல் திப்பு சுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர்கள், அவரின் சிம்மாசனத்தை பெயர்த்து அதிலிருந்த இந்த அலங்கார பொருளை எடுத்து சென்றதாக தெரிகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இன்னொரு பெரிய அலங்கார பொருள் வின்ஸ்டர் கோட்டையிலும், இன்னொரு பகுதி போவிஸ் கோட்டையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஏலம் விட இருக்கும் அலங்கார பொருள் 8.00,000 பிரிட்டிஷ் பவுண்ட்க்கு ( சுமார் 5,84,00,000 ரூபாய் ) ஏலம் போகும் என்று சொல்லப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் இந்த பொருள், ஏலம் விடப்பட்டு யாரிடம் செல்லப்போகிறது என்பதை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


டாடாவின் நானோ கார் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்குமா ?

உலகின் மிக மலிவு விலை கார் என்று சொல்லப்படும் டாடாவின் நானோ, மக்களின் கைக்கு வரும் போது ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைக்காது என்பது தெளிவாகிறது. ஏனென்றால், நானோவின் ஸ்டாண்டர்டு மாடல் காரின் எக்ஸ் - பேக்டரி விலையே ரூ.ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது ஷோரூமுக்கு வரும்போது, ரூ.1,12,000 வரை விலையாகும் என்கிறார்கள். வாங்குபவர்கள் கைக்கு வரும்போது, ரோடு டாக்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ரூ.1,20,000 க்கு மேல் விலை வந்து விடும் என்கிறார்கள். இது நானோவின் பேசிக் மாடல் தான். இது தவிர இரண்டு டீலக்ஸ் மாடல்கள் இருக்கின்றன. பேசிக் மாடலே ரூ.1,20,000 க்கு மேல் விலைக்கு வந்து விடும் போது டீலக்ஸ் மாடல்களின் விலை ரூ.1,60,000 மற்றும் ரூ.2,00,000 வரை கூட வந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு கொடுக்கிறது ஒரு லட்சம் கோடி டாலர்

கடும் கடன் சுமையால் வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை, அதிலிருந்து மீட்டு கொண்டு வர, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர் ( ஒரு டிரில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய முன்வந்திருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் கடன் பெறுபவர்கள், அதற்கு அடமானமாக எழுதி கொடுத்திருக்கும் சொத்துக்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாததாக இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகையையும் செலுத்தப்படாமல் இருந்து, அந்த சொத்தையாவது விற்று கடனை கழித்து விடலாம் என்று பார்த்தால் அதுவும் விலை போகாமல் இருந்தால் வங்கிகள் என்னதான் செய்யும்?. சொத்தையும் விற்க முடியாமல் கடனையும் திரும்ப வாங்க முடியாமல், கணக்கில் மட்டும் கடனை எழுதி வைத்திருந்தால் போதுமா?. இப்படி ஏராளமான சொத்துக்கள் அமெரிக்க வங்கிகளிடம் சும்மாவே இருக்கின்றன. கடனும் திருப்பி வராமல், சொத்தையும் விற்க முடியாமல் நிறைய வங்கிகள் திணறுகின்றன. அதனால்தான் பல வங்கிகள், வங்கியை நடத்த முடியாமல் திவால் ஆகி வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்போது இதனை சரி செய்ய அமெரிக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, இந்த உதவாத சொத்துக்களை அமெரிக்க அரசே பெற்றுக்கொண்டு, அதை வைத்து வாங்கிய கடனை வங்கிக்கு கொடுத்து விடும். பின்னர் வேறு ஒரு நாளில் இந்த சொத்துக்களை அமெரிக்க அரசே விற்று அதில் கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டாலும் அல்லது லாபம் கிடைத்தாலும் அதனை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்திற்காக அமெரிக்க அரசு 75 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலர் வரை ( அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் ) செலவு செய்ய முன் வந்திருக்கிறது. மேலும் இந்த திட்டத்தை ' பப்ளிக் - பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் ' படி செயல்படுத்தலாம் என்றும், அதற்காக தனியாரும் இதில் பங்கு பெறலாம் என்றும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த திட்டத்தால் அங்குள்ள பங்கு சந்தைகளான டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் 500 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ), எஸ் அண்ட் பி குறியீட்டு எண் 54 புள்ளிகள் ( 7.1 சதவீதம் ), நாஸ்டாக் குறியீட்டு எண் 99 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ) உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


புதிய மாடல் கேமரா சோனி நிறுவனம் அறிமுகம்

இந்திய டிஜிட்டல் ஸ்டில் கேமரா சந்தையில் முன்னணி வகிக்கும் பொருட்டு, சோனி நிறுவனம் பல மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. டி, டபிள்யூ, எச் மற்றும் எஸ் வரிசை கேமராக்களுடன், சோனி நிறுவனம் தற்போது சைபர் ஷாட் கேமரா கலெக்ஷனில் 11 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்போர்டிவ், கலர்புல், ஸ்லிம் டைமென் ஷன், சூப்பர் டிசைன் என பல்வேறு சிறப்பம் சங்களைக் கொண்ட இந்தக் கேமராவை எல்லா இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். சைபர் ஷாட் லைன் அப் கேமராவில் 10-12 மெகா பிக்சல் ரிசொல்யூஷன், மேம்பட்ட இமேஜிங் செயல்பாடுகளுக்கு பவர்புல் இமேஜிங் இன்னோவேஷன்ஸ் என வாடிக்கையாளர் விரும்பும் அனைத்து நவீனங்களும் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு மூன்று லட்சத்து 70 ஆயிரமாக இருந்த சோனி கேமராக்கள் விற்பனை இந்தாண்டு ஐந்து லட்சமாக அதிகரிக்கும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது.
நன்றி : தினமலர்


தங்க நாணயம் விற்பனையில் அசத்தும் அஞ்சலகங்கள்

பங்குச்சந்தை, நிலம் இவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு நடுத்தர மக்களும் கூட சிறிய அளவில் ஒரு கிராம், இரண்டு கிராமாவது சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நகைக்கடைகளில் மட்டுமே தங்கம் விற்கப்பட்ட நிலை மாறி, வங்கிகளும் விற்பனை செய்யத் துவங்கின. கடந்தாண்டு அஞ்சல் துறையும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து தங்க நாணய விற்பனையை துவக்கியது. இத்திட்டத்தில் 24 காரட் சுத்த தங்கத்தில் அரை, ஒன்று, ஐந்து மற்றும் எட்டு கிராம் எடையுள்ள நாணயங்கள், சுவிட்சர்லாந்து வால்கேம்பி நிறுவனத்தின் தர நிர்ணய முத்திரையுடன், முற்றிலும் 'சீல்' வைக்கப்பட்ட வகையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன. தங்க நாணய விற்பனையை கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா, இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினர். அன்று முதல் நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள், தமிழகத்தில் 20 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை துவக்கப்பட்டது. கடந்த மாதம் மேலும் ஒன்பது அஞ்சலகங்கள், இம்மாதம் 13ம் தேதி 22 அஞ்சலகங்கள் என தற்போது தமிழகத்தில் 51 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விற்பனை துவக்கப்பட்டு ஐந்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 15ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 29 அஞ்சலகங்களில் இதுவரை 24.862 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய கோட்டத்தில் மட்டும் 65 லட்சம் ரூபாய் வரை தங்கம் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்க நாணய விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தற்போது ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தினந்தோறும் மாறும் விலைக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளிமார்க்கெட் விலையிலேயே தங்க நாணயங்கள் அஞ்சலகங்களில் கிடைக் கின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தங்க நாணயம் விற்பனைக்கான அஞ்சலகங்கள், பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வசதியை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. ''அஞ்சலகங்களில் வாங்கும் தங்க நாணயத்திற்கு, 'பில்' தரப்படுகிறது. மேலும், அஞ்சலகம் அரசு நிறுவனம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்க நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். ''தங்க நாணயங்கள் விற்பனை, மற்ற நகைக் கடைகள் போல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்களிலும், பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட காலங்களிலும் அதிகளவில் இருக்கும். சென்னை, திருச்சி பகுதி அஞ்சலகங்களிலும் அதிகளவு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன,'' என்றார்.
நன்றி : தினமலர்


'நானோ' கார் வாங்குவோருக்கு அதிர்ஷ்டம்: கூடுதல் விலைக்கு கை மாற்றிவிட வாய்ப்பு

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் நானோ கார். உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்னை, நானோ கார் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், டாடாவுக்கு குஜராத் மாநிலம் ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது, காரை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நானோ கார் நேற்று முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு மிகக் குறைவாக உள்ளதால், நானோ காருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நானோ கார் தொடர்பாக ஐந்து கோடிக்கும் அதிகமானோரிடம் இருந்து விசாரிப்புகள் வந்துள்ளன. முதல் கட்ட தேவையைப் போக்குவதற்கு இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் கார்கள் வரை தேவைப்படுகின்றன. மொத்த தேவையில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான அளவே முதல் கட்டமாக கார்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. காருக்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் நானோ காரை பெறுவதற்கு இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். முன்னர், மாருதி 800 கார் விற்பனைக்கு வந்த போதும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது முதல் கட்ட விற்பனையில் நானோ காரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தங்கள் பெயரில் புக் செய்யப்பட்ட காரை, கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம். கார் தேவைப்படாதவர்கள் கூட, காருக்காக முன்பதிவு செய்து, அதை கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம். எப்படியாது நானோ காரை வாங்கியே தீர வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்,காரின் விலையை விட கூடுதலாகக் கொடுத்து அதை வாங்க முயற்சிப்பர்.
நானோ கார் விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அதன் டீலர்கள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நானோ கார் தொடர்பாக டாடா நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் உடன்பாடு செய்துள்ளது. நானோ கார் வாங்குவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி வசதி அளிக்கும். காருக்கு புக் செய்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விற்பனைக்கு வரும் கார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புக் செய்யப்பட்டவரின் பெயருக்கு டீலர்களின் ஷோரூம்களுக்கு கார் வந்து விடும். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தங்கள் கார்களை எடுத்துச் செல்லலாம். நிதி விவகாரங்களில் டீலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. காரை டெலிவரி செய் யும் பணி மட்டுமே டீலர்களுக்கு உண்டு. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், 'நானோ காருக்காக பெருமளவு வாடிக்கையாளர்கள் புக் செய்வது, டாடா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். 'இரண்டு லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டால் கூட, அந்நிறுவனத்துக்கு அதன் மூலமாக 1,400 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிதியை டாடா நிறுவனம், தனது பல்வேறு நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தும்' என்றன.
நன்றி : தினமலர்


முன்கூட்டியே விற்பனைக்கு வந்து விட்டது 'நானோ' கார்: : சொன்னதைச் செய்தார் டாடா

உலகிலேயே மிகக் குறைந்த விலையுடைய நானோ கார், விற்பனைக்கு வந்து விட்டது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப் படி, ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த மாதம் 9ம் தேதி முதல், காருக்கான முன்பதிவு துவங்கும் என்றும் தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று பெருமையுடன் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில், ரத்தன் டாடா பேசியதாவது: இந்த நாளை, சாலை போக்குவரத்தின் புதிய பரிமாணமாக கருதலாம். ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள கார் என்பதால், அதை மிகவும் மலிவான கார் என கூறப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தக் கூடிய கார் என்று கூறலாம். ஏற்கனவே நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை உறுதியாக பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானோ காரின் எகானமி ரக கார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த உயர் ரக கார்களில் ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த கார்களை மேற்கு ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. நானோ கார்களுக்கான முன் பதிவு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும்.முதல் ஒரு லட்சம் நானோ கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்தவர்களில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கார் முன்பதிவு செய்வதற்கு அதிகபட்ச வரையறை எதுவும் இல்லை. குஜராத் சனாந்த்தில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் தாயரிக்க முடியும். பின்னர், இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும். நாங்கள் எதிர் பார்த்ததுக்கு முன் கூட்டியே நானோ கார் விற்பனைக்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்கட்டமாக, பந்த் நகர் தொழிற்சாலையில் இருந்து 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கார்கள் வரை சப்ளை செய்யப் படும். பந்த் நகரில் கார் தயாரிப்பது தற்காலிகமான ஏற்பாடு தான். ஒரு கோடிக்கும் அதிகமான நானோ கார்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படும். இவ்வாறு டாடா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் கூறியதாவது: நானோ காருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ300. நாடுமுழுவதும் உள்ள ஸ்டேட் பாங்குகளில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். டாடா நானோ கார் வாங்க கடன் வசதி கிடைக்கவும் 15 வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாங்குபவர்களுக்கு தனிக்கட்டணமும் உண்டு. முதலில் ஒரு லட்சம் கார்கள் வினியோகத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி கார் கிடைக்காத பட்சத்தில், நானோ காருக்காக முன்பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.75 சதவீத வட்டி தரப்படும். . நானோ கார்கள், நான்கு நபர்கள் வசதியாக அமரக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 624 சிசி திறன் கொண்ட இந்த கார்கள், மூன்று வகைகளில் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இந்த கார்கள் கார்பனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 26.6 கி.மீ., வரை செல்லும். இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.
நன்றி : தினமலர்