Wednesday, November 12, 2008

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 303.36 புள்ளிகள் குறைந்து 9,536.33 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 90.20 புள்ளிகள் குறைந்து 2,848.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று ரியல் எஸ்டேட், பேங்கிங், மெட்டல், கேப்பிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ் மற்றும் பவர் பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. பிஎஸ்ஸி யின் ரியால்டி இன்டக்ஸ் 7.34 சதவீதமும், பேங்க் இன்டக்ஸ் 4.38 சதவீதமும், மெட்டல் இன்டக்ஸ் 3.67 சதவீதம், கேப்பிடல் குட்ஸ் 3.63 சதவீதமும் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்

டாடா டெலிசர்வீசஸின் 26 சதவீத பங்குகளை ஜப்பானின் டோ கோ மோ வாங்குகிறது

இந்தியாவின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் முதலீட்டில், ஜப்பானின் என்டிடி டோ கோ மோ நிறுவனமும் பங்கேற்கிறது.இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் சந்தையான இந்தியாவில் டோ கோ மோ ஆழமாக கால்ஊன்றுகிறது. இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய வயர்லெஸ் சேவை நிறுவனமான டாடா டெலிசர்வீஸசின் 26 சதவீத பங்குகளை ஜப்பானின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான டோ கோ மோ, 2.7 பில்லியன் டாலருக்கு ( 260 பில்லியன் யென் ) வாங்குகிறது. இதன் மூலம் ஜப்பானின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் டோ கோ மோ, அதன் வர்த்தகத்தை அயல் நாட்டிலும் விரிவுபடுத்துகிறது என்று நிக்கி என்ற ஜப்பான் பிசினஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டாடா டெலிசர்வீஸசை அடுத்து டோ கோ மோ, வங்காள தேசத்தின் மூன்றாவது பெரிய மொபைல் போன் நிறுவனத்தில் 350 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. இதன் மூலம் அது வெளிநாடுகளில் முதலீடு செய்யும் மொத்த தொகை 63 பில்லியன் டாலர்களாகிறது. டோ கோ மோ நிறுவனம் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரித்து வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது, சமீபத்தில் இருந்துதான் வெளிநாடுகளில் கம்பெனிகளை வாங்க ஆரம்பித்திருக்கும் டாடா குரூப், உலக பொருளாதார சீர்குழைவின் காரணமாக அதன் வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. டோ கோ மோ வின் இந்த நடவடிக்கையை குறித்து கருத்து சொன்ன மிட்சுபிசி யுஎப்ஜெ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த கணிப்பாளர் சிஞ்சி மொரியுகி, இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடையப்போவது டோ கோ மோ தான். ஏனென்றால் இந்தியாவில் இனிமேல் வர இருக்கும் 3 ஜி மொபைல் சர்வீஸசில், டோ கோ மோ ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றவர்கள். இந்தியாவை போலவே பெரும்பாலான நாடுகளில் இப்போதுதான் 3 ஜி சர்வீஸ் வந்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் சந்தையாக இந்தியா இருக்கிறது. செப்டம்பரில் மட்டும் இங்கு ஒரு கோடி பேர் மொபைல் சர்வீஸ் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 31 கோடியே 53 லட்சம் பேர் மொபைல் சேவையை பெற்றிருக்கிறார்கள். இது அமெரிக்க மக்கள்தொகையை காட்டிலும் அதிகம். ஜப்பானின் 10 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்களை விட இது 3 மடங்கு அதிகம்.
நன்றி : தினமலர்


தொழில் வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்ந்தது

இந்தியாவின் தொழில் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் அது, கவலை அளிக்ககூடிய வகையில் 1.42 சதவீதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது 4.8 சதவீதமாகத்தான் இருக்கிறது. இன்டக்ஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் புரடக்ஷன் ( ஐஐபி) எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தொழில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் அது 9.5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்டில் இது 1.3 சதவீதம்தான் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது 1.42 சதவீதமாக உயர்ந்திருந்தது. இந்த இன்டக்ஸில் 80 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் உற்பத்தி, கடந்த வருடம் செப்டம்பரில் 7.4 சதவீதமாக இருந்தது இந்த வருடம் செப்டம்பரில் 4.8 சதவீதமாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மின் உற்பத்தி 4.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த வருடத்தில் 4.5 சதவீதமாகத்தான் இருந்தது. சுரங்க உற்பத்தி கடந்த வருடத்தில் 4.9 சதவீதமாக இருந்தது இந்த வருடத்தில் 5.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 59 டாலர்தான்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்துகொண்டே வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 21 சென்ட்கள் குறைந்து 59.12 டாலராகத்தான் இருந்தது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு குறைவு. லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 9 சென்ட் குறைந்து 55.62 டாலராகத்தான் இருந்தது. கடந்த மார்ச் 2007க்குப்பின் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. அடுத்த மாதம் அல்ஜீரியாவில் நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டாலும், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்துகொண்டே வருவதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மத்தியில் பேரலுக்கு 147 டாலருக்கும் மேல் இருந்த கச்சா எண்ணெய் விலையில் இப்போது 60 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 55 டாலருக்கு கூட வந்து விடும் என்று கிரிடிட் சூசி நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வாளர் தோபியாஸ் மெராத் சொல்கிறார்.
நன்றி : தினமலர்


புதிய தொழில் துவங்குவதற்கு வசதியாக குஜராத்தில் 25,000 ஹெக்டேர் நிலம் தயார்

புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு, அதற்கு தேவையான நிலம் கிடைப்பதுதான் இப்போது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலுமே இந்த பிரச்னை இருக்கிறது. அதனை போக்கும்விதமாக, குஜராத் அரசாங்கம் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்காகவே பிரத்யேகமாக 25,000 ஹெக்டேர் நிலத்தை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் யார் இங்கு வந்து தொழில் துவங்க விரும்பினாலும் அவர்களுக்கு தேவையான நிலத்தை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் எங்களால் ஒதுக்கி கொடுக்க முடியும் என்று குஜராத் மாநில நிதி மற்றும் தொழில் அமைச்சர் சவ்ரப் பட்டேல் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பில் கலந்து கொண்டபின் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் குஜராத் அரசாங்கம் இப்போது 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரத்தை எல்லா தரப்பினருக்கும் அளித்து வருகிறது. அடுத்த வருடத்தில் இன்னும் ஒரு 2,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மூன்று வருடங்களில் மேலும் ஒரு 10,000 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே எங்கள் மாநிலத்தில் பவர்கட் என்பதே இருக்காது என்றார் அவர். முதலீட்டாளர்களுக்கு குஜராத் ஒரு நல்ல இடமாக இப்போது திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மொத்த முதலீட்டில் 22 சதவீதம் குஜராத்திற்கு தான் செல்கிறது என்று ரிசர்வ் பேங்க் சமீபத்தில் தெரிவித்ததை குறிப்பிட்ட அவர், சோலார் பவர் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் துறைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


ரஷ்ய எண்ணெய் கம்பெனி இம்பீரியலை வாங்க இன்னும் 28 நாளில் ஏற்பாடு : ஓ.என்.ஜி.சி

ஓ.என்.ஜி.சி.,யின் வெளிநாட்டு அங்கமான ஓ.என்.ஜி.சி.,விதேஷ் நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான இம்பீரியல் எனர்ஜியை, 2.6 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தேவையான டாக்குமென்ட்களை இன்னும் 28 நாளில் அனுப்பும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் முதலீட்டாளர் களிடையே இதை இப்போது வாங்க வேண்டுமா என்ற பயமும் இருந்து வருகிறது. இம்பீரியல் எனர்ஜி நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி.,க்கு விற்க, ரஷ்ய அரசாங்கமும் அனுமதி கொடுத்துவிட்டது. திங்கள் அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இம்பீரியல் எனர்ஜிக்கு ஓ.என்.ஜி.சி., கொடுக்க இருக்கும் தொகை மிக அதிகம் என்று இந்திய அரசாங்கம் எண்ணுகிறது என்றும், இந்த விலையில் அதிருப்தியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்து போனது. ஆகஸ்ட்டில் இம்பீரியல் எனர்ஜியை ஓ.என்.ஜி.சி., வாங்கிக்கொள்வதாக சொன்னபோது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 128 டாலராக இருந்தது. இப்போது அது 63 டாலராகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி.,கொடுப்பதாக சொன்ன விலையை குறைக்கப்போவதில்லை என்று இப்போது அறிவித்திருப்பதால் மீண்டும் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு கூடி விட்டது.
நன்றி: தினமலர்