Monday, August 16, 2010

காஷ்மீர்: பிரதமர் முனைப்புக் காட்டுவாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வன்முறைப் போராட்டங்களால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது, தில்லியில் ஆளும் அதிகார வட்டத்தினருக்குப் பெருங்கவலையை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு அங்கு நிலைமை மோசமாக இருப்பதைப் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 1989-ல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் "ஆஸôதி' கோஷம் முதன்முதலாக எழுந்தபோது இருந்த நிலைமையைவிட இப்போது நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் உள்பட பெரும்பாலானவர்கள் வீதிகளில் திரண்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதிலிருந்து அவர்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை முதல்வர் ஒமர் அப்துல்லா சென்று பார்த்தபோது, முதல்வரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண். இதிலிருந்தே காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு, தடையை மீறி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா? அல்லது பிரிவினைவாதிகள் காரணமா? அல்லது நமது அண்டை நாடான பாகிஸ்தான் காரணமா? என்பது புரியவில்லை. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாகிஸ்தான் முயல்வது மட்டும் தெளிவாகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம் என்று கேட்டால், அனைத்து நிலைகளிலும் தலைமை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கும் தலைவர்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தில்லியில் உள்ள தலைவர்களோ, ஸ்ரீநகரில் உள்ள ஆட்சியாளர்களோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நிறுவின. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்து அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து, எங்கே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மாநில அரசு சரிவர செயல்படாததால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆதரவாளருமான சையத் அலி ஷா கிலானி. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறையில் இருக்கும் கிலானியுடன் மாநில அரசு நிர்வாகம் பேச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு முற்றிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிலானியுடன் பேச்சு நடத்த முயன்றும் அவர் அதை நிராகரித்துவிட்டார். கிலானியைப் போல மஸôரத் ஆலம், ஆஸிய ஆந்திரபி போன்ற தீவிரவாதத் தலைவர்களும் இப்போது காஷ்மீர் விவகாரத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பொறுப்பேற்றபோது, இளம் தலைவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால், ஒமர் அப்துல்லா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு காஷ்மீர் பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயல்பட முதல்வர் ஒமர் தவறிவிட்டார். இதேபோல கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் டஃபைல் மட்டூ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண ஒமர் அப்துல்லா தவறிவிட்டார். இதையடுத்து வன்முறையும் போராட்டமும் தொடர்கதையாகிவிட்டது.

தற்போதைய நிலைமையை முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு உதவவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தயாராக இல்லை. இது தொடர்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானபோது மக்கள் பிரச்னைகளைத் தேசிய அளவில் எடுத்துச் செல்ல புதிய அரசியல் கட்சி உருவானதாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால், அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.

வன்முறை ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் சுட்டதாக போலீஸôர் கூறினாலும், நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா? இது விஷயத்தில் போலீஸ் துறை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போராட்டத்தின் போது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க புதிய உத்திகளைப் பாதுகாப்புப் படையினர் கையாள வேண்டுமே தவிர, அதற்காக கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாளக்கூடாது.

பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தாலும், குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு கதவையும் இழுத்துப் பூட்டியதுபோல் அவரது பேச்சு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராவார்.

கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை தலைதூக்கிய போதெல்லாம் அதைச் சமாளிக்கப் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர். பிரதமர் ஆவதற்கு முன் ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியவர்.

இப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் பிரதமராகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதிலும், காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவும் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால், இன்று நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் போல் வாய் பேசாமல் மௌனமாக இருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆராய பணிக்குழுவை பிரதமர் நியமித்திருந்தார். மத்திய அரசும் அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், அவற்றைச் செயல்படுத்தத்தான் முன்வரவில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை வெடித்து தடியடி, துப்பாக்கிச்சூடு நடந்து ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தபோதிலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குத் தீர்வுகாண பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிலைமையை எப்படி பிரதமர் சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஸ்ரீநகருக்குச் சென்றார். பயங்கரவாதிகளுடன் பேசி அவர்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டே வி.பி.சிங் அங்கு சென்றார். ஸ்ரீநகரில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வி.பி.சிங்கை சந்தித்துவிட்டுச் சென்றனர். ஷபீர் ஷா, தேநீர் விருந்துக்கு வருமாறு வி.பி.சிங்கை அழைத்தார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

வி.பி.சிங், ஷபீர் ஷா வீட்டுக்குச் செல்லவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அவரிடம் புலனாய்வுத் துறை போலீஸôர், "நீங்கள் அந்த இடத்துக்குச் செல்லவேண்டாம். அப்பகுதியைச் சுற்றிலும் வெடிமருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்' என்று கூறினர். ஆனால், வி.பி.சிங், உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இரண்டு மணிநேரத்தில் அவை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷபீர் ஷாவை சந்தித்தார் வி.பி.சிங். பின்னர் வி.பி.சிங் தனது சகாக்களிடம், பிரதமராகிய நான் ஷபீர் ஷாவுடன் தேநீர் அருந்துவதாகக் கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் காஷ்மீர் மக்கள் என்னை பிற விஷயங்களில் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார்.

இப்போது நிலைமை என்ன?

மத்திய அரசும், மாநில அரசும் துரிதமாகச் செயல்பட்டு காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் குறிப்பாக பாஜகவுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால். இப்போதைய தேவை காஷ்மீர் மக்களின் வலியை இதர மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான்!

கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

இந்தியன் வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்


இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


பொறுமைக்கும் எல்லையுண்டு...

வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!
நன்றி : தினமணி