Sunday, August 9, 2009

பழமையைப் பாதுகாப்போம்!

அன்னைத் தமிழில் தோன்றிய பழம்பெரும் இலக்கியங்களில் பல கடற்கோள்களாலும், கவனக் குறைவாலும் செல்லறித்து, சிதைந்து போயிருக்கின்றன. நமது வரலாற்றுத் தடயங்கள் பல அழிந்து போயிருக்கின்றன. பாதுகாத்துச் சேகரித்து வைக்காத பெரும் பிழையால், நேற்றைய தலைமுறையின் புகழையும், புலமையையும் முற்றாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லா தலைமுறையினராய் இருப்பது வேதனையைத் தருகிறது.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களது இன்றைய பதிவுகளிலிருந்து பல செய்திகளையும், இழந்துபோன தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் பலவற்றைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

கல்வெட்டுகளில் சில நூல்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்பெயர்களுக்குரிய நூல்களின் முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. நூலின் பெயர் தெரிந்த அளவுக்கு நூலாசிரியரது பெயரும், அவரைப் பற்றிய குறிப்பும் காணப்பெறவில்லை. ஆனால் கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கின்ற பாங்கினைப் பார்த்தால், அந்நூல் அன்றைய நாளில் மக்களால், சான்றோர்களால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பற்ற உயரிய நூல் எனத் தெரிகிறது.

சோழப் பேரரசின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்தியவர்களில் முதலாம் ராஜராஜன் முதன்மையானவன். சோழப் பேரரசின் பரம்பரையில் ஈடு இணை இல்லாத பேரரசன். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாய்ப் போற்றி உயர்த்திய பெருமகன். இத்தகைய மாமன்னனைப் பற்றி அன்றைய நாளில் இயற்றப்பட்ட நூல்களில் அறிஞர்களால் வெகுவாய்ப் புகழப்பட்ட நூல்கள் இரண்டு. ஒன்று "இராஜராஜேஸ்வர நாடகம்', மற்றொன்று "இராஜராஜ விஜயம்' என்ற காவியம்.
இராஜராஜ நாடகம் என்ற நூல் அன்றைய நாளில் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருவிழாக்களின் போது அரங்கமைத்து நடிப்பதற்காகவே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டாவது நூலான "இராஜராஜ விஜயம்' இவனது புகழ் பரப்பும் காவியம். இது திருப்பூந்துருத்தித் திருக்கோயிலில் சான்றோர் பேரவையில் வாசிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

இவ்விரு நூல்களும் தமிழில் அல்லது வடமொழியில் எழுதப்பட்டனவா என்பது அறியமுடியவில்லை. திருவிழாக் காலங்களில் நடிப்பதற்கும், படிப்பதற்கும் அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நூல்கள் இரண்டுமே தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் வரலாற்றை மையக் கருவாய் அமைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் கே.எ.நீலகண்ட சாஸ்திரிகளது கருத்து.

நாராயண பட்டர் எனப்படும் கவிஞர் குமுதசந்திடுமரன் என்பவர், திருபுவனியில் மாணிகுவாசனிச் சேகரியைச் சேர்ந்தவர்; பண்டிதர். இவர் "குலோத்துங்க சரிதை' என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார். முதலாம் குலோத்துங்கன் புகழ்பாடும் நூல். இந்நூலை இயற்றியதற்காக அந்த ஊர்ச் சபையார் அரைநிலமும், இரண்டு மாவும் கொண்ட (இன்றைய மதிப்பு 4 ஏக்கர் பரப்பளவு) நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலத்திற்குக் குறைந்த அளவே வரி விதித்திட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது அரசனது ஆணையாகும் என செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்தி நம்மை வியக்க வைக்கிறது.

கடலூரில் கி.பி.1111-1119-ஆம் ஆண்டு கல்வெட்டுகள் நிறையவே உள்ளன. அதில் ஒரு கல்வெட்டில் ஒரு செய்தி. கமலாலயபட்டன் என்ற ஒருவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என இரண்டு நூல்கள் எழுதியதாகவும், இதற்குச் சன்மானமாக அரசனால் முற்றூட்டாக நிலம் வழங்கிய செய்தியைக் கடலூர் கல்வெட்டில் காணமுடிகிறது.

கி.பி.1210-ஆம் ஆண்டில் திருவாலங்காட்டுத் திருக்கோயிலில் தினந்தோறும் நெய்விளக்கு ஏற்றுவதற்காக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அறநிலை விசாகன் திரைலோக்கியமல்லன் வத்ஸராஜன் என்பவன் நன்கொடை கொடுத்து ஒரு கட்டளையை நிறுவியுள்ளான். இவன் வடமொழியில் உள்ள பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமகன். பைந்தமிழால் பல பாக்கள் பாடி சிவபெருமானுடைய பொற்பாதத்தைக் கண்டேன் என திருவாலங்காட்டுக் கல்வெட்டில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளான். ஆனால், அவனது மொழிபெயர்க்கப்பட்ட பாரதமும் கவிதைகளும் கிடைக்கப்பெறவில்லை.

திருவாரூர் திருக்கோயிலின் இரவுப் பொழுதில் ஆண்டவனை மகிழ்விக்க நடன மண்டபத்தில் பூங்கோயில் நாயகத் தலைக்கோலி என்ற ஆடலரசி நடனமாடி மகிழ்விப்பதைத் திருப்பணியாய்க் கருதிச் செய்த பெருமாட்டி. இவளுடைய ஆசான் பூங்கோயில் நம்பி. எனவே அரசன் இவளுக்கு வாயாற்றூர் என்ற பிரமதேய கிராமத்தில் "வீரணுக்க விஜயம்' என்ற காவியத்தை அரச அரன் புகழ்பாடி படைத்துக் கொடுத்த செய்தியை இன்றைக்கும் திருவாரூர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில் காணமுடிகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற திருத்தலத்துத் திருக்கோயில் நாயகர் மீது "வல்லை அந்தாதி' என்ற நூலை, குறத்தி என்ற ஊரைச் சேர்ந்த வரதய்ய புலவர் என்பவர் இயற்றியதாகவும், அதற்கு அரசன் சன்மானமாக நூறு குழி நிலத்தை வழங்கிய கல்வெட்டுச் செய்தி இன்றைக்கும் அழியாது உள்ளது. ஆனால் வல்லை அந்தாதி அழிந்து போனது. தமிழகத் திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக இது போன்ற அழிந்துபட்ட இலக்கியங்களின் செய்திகளையாவது தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இலக்கியங்கள் பாதுகாக்கப்படவில்லையே என்ற உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. தமிழர்கள் நல்லவர்கள்தான்; ஆனால் வல்லவர்களாக வாழாது போன காரணத்தால், நமது முந்தைய கால வாழ்வியல் சுவடுகள் பல சிதைந்து போயின. இனியாவது அரசும், சமுதாயமும் விழித்தெழுந்து பழமையைப் பாதுகாத்துத் தந்தால் நாளைய சமுதாயம் வாழ்த்தி, வணங்கும்.

கட்டுரையாளர் : ப.முத்துக்குமாரசுவாமி
நன்றி : தினமணி

நல்லது நடந்திருக்கிறது!

நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை அறிவிக்க வகைசெய்யும் மசோதா, மாநிலங்களவையின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருசில மாற்றங்களுடன் இந்த மசோதா அவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.

அறிமுகக் கட்டத்திலேயே முடக்கப்பட்டுவிட்டிருக்கும் இந்த மசோதாவில் காணப்பட்ட சில பிரிவுகள் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கூட்டணித் தரப்பில்கூட சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மத்திய சட்ட அமைச்சருக்கேகூட அந்த மசோதாவில் முழுத் திருப்தி இருக்க வழியில்லை என்பது அவரது முந்தைய சில கருத்துகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

இப்போதைய நிலையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பதாகவும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் கருத்து. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்துக் கணக்கை பொதுமக்கள் கோர முடியாது என்பதில் நீதிபதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில், நீதிபதிகளையும் ஒரு சில அடிப்படை விஷயங்களில் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக்குவதுதான் இந்த மசோதாவின் உள்நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-ன்படி, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதியிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற சட்ட நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், இந்த மசோதாவின் பிரிவு எண் 6-ன் படி, நீதிபதிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் காணப்படுகிறது. தலைமை நீதிபதியிடம் சொத்து விவரம் தரப்பட்டு, அது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டமும் மசோதாவும் எதற்கு என்பதுதான் கேள்வி.

சமீபகாலமாக, பல நீதிபதிகளின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களது வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பல நீதிபதிகள் இருக்கின்றனர் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு உள்படுத்தப்படுமானால், தவறுகள் தடுக்கப்படாவிட்டாலும், குறையுமே என்கிற எதிர்பார்ப்புத்தான், இப்படி ஒரு மசோதாவுக்கான அடிப்படை.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வாக்காளர்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சியில் அப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கி வாக்களிக்க முடியும் என்றும் தீர்ப்புகூறி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தது நீதித்துறைதான். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு என்ன சட்டமோ அதுதானே நீதித்துறைக்கும் இருக்க வேண்டும்? தனக்கொரு நீதி, அடுத்தவர்களுக்கு இன்னொரு நீதியென்று நீதித்துறையே சொல்வது நீதியாகுமா?

இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 19 (1) (அ)வின் படி ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை தரப்பட்டிருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதியும் செய்திருக்கிறது. இந்த நிலையில் துணிவாக, நீதித்துறையிலும் சில வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? இதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது வாதமல்ல, வறட்டுப் பிடிவாதம்.

இப்படி ஒரு சர்ச்சைக்கு வழிகோலியதே நீதித்துறைதான். நமது நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு உள்படுத்தி, தாங்கள் லஞ்ச ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டாமா? எங்கள் சொத்துக் கணக்கை யாரும் கேள்வி கேட்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் அடம்பிடிப்பது, "அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதையாக இருக்குமோ என்கிற தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா கிளப்பி இருக்கிறது.

வெளிப்படைத் தன்மை என்பது மக்களாட்சியில் நீதித்துறை உள்பட ஆட்சியில் எல்லா பிரிவுகளுக்கும் இருந்தாக வேண்டும். நீதிபதிகளின் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-லிருந்து 6-வது பிரிவு அகற்றப்பட்டு, மக்கள் மன்றத்தின் முன் நீதிபதிகளும் தங்களது நேர்மையை நிரூபிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமீபத்தில் சட்டக் கமிஷன் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணனின் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருப்பதைப்போல, "மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும்'!
நன்றி : தினமணி

இறங்கு முகத்தில் உள்ள சந்தை நிலவரம் அடுத்த வாரம் எப்படி?

இந்த வாரம் வியாழன், வெள்ளிக் கிழமைகளில், சந்தை 700 புள்ளிகளுக்கு மேல் இழந்து களையிழந்து காணப்பட்டது.

ஏன் குறைந்தது? : லாப நோக்கில் எல்லாரும் விற்றதால் சந்தை குறைந்தது. மேலும், சமீப நாட்களில் ஏறி வந்த ஆட்டோ பங்குகள் வியாழனன்று மிகவும் குறைந்ததாலும், பருவ மழை குறைவாலும் சந்தை கீழ் நோக்கி சென்றது. வியாழனன்று 389 புள்ளிகளும், வெள்ளியன்று 353 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை இழந்தது. வெள்ளி-யன்று, இறுதியாக மும்பை பங்குச் சந்தை 15,160 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,481 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 14 மாத உச்சமான 16,000 புள்ளிகளைத் தொட்டு இறங்கிய சந்தை, அதே வாரத்தில், 15,160 புள்ளிகளைத் தொட்டு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. எல் அண்ட் டி விற்கும் மகிந்திரா சத்யத்தின் பங்குகள்: சத்யம் கம்பெனியை எல் அண்ட் டி கம்பெனி வாங்க முயற்சி செய்தது மறக்க முடியுமா? சத்யம் கம்பெனியின் பங்குகளை மார்க்கெட்டில் வாங்க ஆரம்பித்தது; 8.34 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்திருந்தது. ஆனால், சத்யத்தை மகிந்திரா வாங்கிவிட்டதால், தற்போது, அந்த பங்குகளை செபியின் ஒப்புதல் பெற்று விற்க நினைக்கிறது. விற்றால் தற்போதைய விலையில், 800 கோடி ரூபாய் கிடைக்கும். 600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பங்குகள் அவை. மியூச்சுவல் பண்டுகள் எண்டிரி லோடு: மியூச்சுவல் பண்டுகளில் எண்டிரி லோடு இல்லாததால், பலர் மியூச்சுவல் பண்டுகளை விற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. தபால் அலுவலகங்கள் மியூச்சுவல் பண்டு விற்பனையை தற்சமயம் நிறுத்தி வைத்திருக்கிறது.


வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்திய சந்தையில் பங்குகளை வாங்கியுள்ளன.


என்.ஹெச்.பி.சி., புதிய வெளியீடு சப்ஸ்கிரிப்ஷன்: முதல் நாளே 3.54 தடவை செலுத்தப் பட்டுள்ளது. அதாவது கிட்டத் தட்ட 22,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இது போல, புதிய வெளியீடுகளுக்கு அப்ளை செய்ய செகண்டரி மார்க்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதாலும் சந்தைகள் குறைகின்றன.


பணவீக்கம்: பணவீக்கம் இன்னும் மைனசில் தான் இருக்கிறது. இந்த வாரம் 1.58 சதவீதம் மைனசில் இருந்தது. இது, சென்ற வாரத்தை விட சிறிது அதிகம்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : சந்தை அடுத்த வாரமும் சிறிது தள்ளாட்டத்தில் தான் இருக்கும்.


சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்