Tuesday, September 1, 2009

எஃகுக் கோட்டை பாதுகாப்பில் "கறுப்புப்பணம்'

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.

தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

வரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.

இது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.

இத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன்? சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.

2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள்! இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

இப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.

2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.

இந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா, 34 நாடுகளைக் குறி வைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.

அமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.

இப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.

சுவிஸ் நாட்டு அரசாங்கம் "இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் பெயர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.

ஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.

இந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.

மொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.

நம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை.

எனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே!
கட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

யானைக்கும் அடி சறுக்கும்!

"டயட்' என்று அழைக்கப்படும் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குப் படுதோல்வியை அளித்திருக்கிறது. யுகியோ ஹடோயாமா தலைமையிலான ஜப்பான் ஜனநாயகக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மேலைநாடுகளிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஒருசேர அளித்திருக்கும் தேர்தல் முடிவுகள், ஜப்பானின் பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

2006-ம் ஆண்டில் ஜப்பானில் தனிப்பட்ட செல்வாக்குடன் விளங்கிய பிரதமர் ஜுனிச் சிரோ கொய்சுமி அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த நாடு மூன்று பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. ஷின்சோ அபி, யசுவோ ஃபுகுடா மற்றும் டரோ ஆசோ ஆகிய மூன்று பிரதமர்களுமே கொய்சுமி அளவுக்கு அரசியல் அனுபவமோ, நிர்வாகத் திறமையோ பெற்றவர்களாக இல்லாமல் போனதால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் செல்வாக்கு அதிவேகமாகச் சரியத் தொடங்கியது.

1993-ல் 11 மாதங்கள் தவிர, கடந்த 53 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி என்கிற பெருமை லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு உண்டு. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த டோக்கியோ மாநகராட்சித் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மக்கள் மன்றத்திடம் ஆட்சியில் தொடர அனுமதி கோரி திடீரென்று முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த ஆளும் கட்சி முடிவெடுத்ததன் விளைவுதான் இந்தப் படுதோல்வி.

ஜப்பான் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஹடோயாமா அந்தக் கட்சியின் தலைவரானதுதான் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம். ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த இச்சிரோ ஒசாவாவின் உடல்நலக் குறைவும், நன்கொடை வாங்கியதில் அவர் மீது எழுந்த புகாரும் அவரை அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வைத்தன. 62 வயதான ஹடோயாமா, அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்புக்கும், அரசியல் சாதுர்யத்துக்கும் பெயர் போனவரும்கூட. சரிந்து வரும் பிரதமர் டரோ ஆசோவின் செல்வாக்கு, ஹடோயாமாவின் வெற்றிக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 480 உறுப்பினர்களைக் கொண்ட "டயட்'டின் 308 இடங்களில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தல்களில் மேல்சபையிலும் ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை பலம் இருப்பதால், ஒரு நிலையான ஆட்சியை நோக்கி ஜப்பான் அடி எடுத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

கடந்த 20 ஆண்டுகளாகவே ஜப்பான் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களாகி விட்டதால், உற்பத்தியும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டது. அதனால் அந்நியச் செலாவணி வரவும் குறைந்து, வேலையின்மையும் அதிகரித்து விட்டிருக்கும் நிலைமை. உலகிலேயே மிக அதிகமான விலைவாசியும் ஜப்பானில்தான். வேலைவாய்ப்பு இழந்த பலர், தங்களது பழைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பொருளாதாரமோ வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்ட நிலையில் தொடர்கிறது.

ஒருகாலத்தில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்பட்ட ஜப்பான், இப்போது சீனாவின் வளர்ச்சிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுகிறது. கிழக்காசிய நாடுகளின் தலைமை சீனாவுக்குக் கைமாறிவிடும் நிலைமை ஏற்பட்டிருப்பதைத் தங்களது தேச கெüரவத்துக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவாக ஜப்பானியர்கள் கருதி வருந்துகிறார்கள்.

இந்த நிலையில்தான், யுகியோ ஹடோயாமா தலைமையில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் அமர இருக்கிறது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சி, ஏற்கெனவே பல பொருளாதார மாற்றங்களைச் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், ஜப்பானின் வெளிவிவகாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர வேண்டுமா என்று யோசிப்பதாகவும் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் ஹடோயாமா ஏற்கெனவே கூறி வருகிறார்.

ஜப்பானியத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்கள் அந்த நாட்டு அரசியலில் மட்டுமல்ல, கிழக்காசியாவிலும், உலக அரங்கிலுமே ஏற்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை.
நன்றி : தினமணி

அகோர் ஓட்டல் பராமரிப்பில் ‌விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல்

பிரான்சு நாட்டு நிறுவனமான அகோர் ஓட்டல் மேற்பார்வையில் ‌விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல் இயங்கவிருக்கிறது. இந்திய ஒட்டல் நிறுவனமான வருன் குரூப் 'நோவோடெல், விசாகப்பட்டினம் வருன் பீச்' 2010ம் ஆண்டு ஜூலை மாதம் ஓட்டலை திறக்கிறது. வருன் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரபு கிஷோர் இதை தெரிவித்துள்ளார். இந்த ஓட்டல் அகோர் மேற்பார்வையில் இயங்கும். 125 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அகோர் ஓட்டல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 3 ஒட்டல்களில் அகோர் பராமரிப்பு சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


உண்மை சுடும்

இரவில்கூட அல்ல, பட்டப்பகலில் தனிமனிதனாக ஒருவர் ஒரு வீட்டில் நுழைந்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்கிறார். மேலும் மூன்று பேர் அவரது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகிப் படுகாயமடைகிறார்கள். வீட்டிலிருந்து அவர் கொள்ளையடித்த பணத்தையும், நகைகளையும், ஆவணங்களையும் ஒரு காரில் வைத்துவிட்டு மீண்டும் அதே வீட்டுக்குத் திரும்புகிறார்.

அதிர்ஷ்டவசமாக அவரது துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டிருந்ததால் மேலும் உயிர்ப் பலி நிகழாமல் அவர் பிடிபடுகிறார். சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூர் இரட்டைக் கொலை வழக்கு அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. கொலைக்குப் பின்னால் விழுந்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்தனவா என்றால் அதுவும் இல்லை.

உறவினர்களாலும் பொதுமக்களாலும் துரத்திப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 32 வயது ராஜன் என்கிற சண்முகசுந்தரம், அடுத்த நாள் அதிகாலையில் அடையாறு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.

கொள்ளையடிக்கப் போனவர் ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் கொள்ளையடித்துச் சென்றது பணமும் நகையும் மட்டுமல்ல, வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட ஆவணங்களும் என்பதும் தெரிகிறது. பணத்திற்காகவும் நகைக்காகவும் கொள்ளையடிக்கப் போனவர், சொத்து ஆவணங்களை ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்?

சரி, கொலை செய்துவிட்டு நகை, பணம், ஆவணங்களுடன் சென்றவர் ஏன் திரும்பிவந்தார்; அவர் தேடியது கிடைக்காததாலா? அவர் ஒரு காரில் வந்தாரே, அது யாருடைய கார்? அந்தக் காரில் யாராவது இருந்தார்களா? துப்பாக்கி யாருடையது? மேலே எழுப்பப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்திருக்கக்கூடிய ஒரே நபர், கொலையாளி என்று கருதப்படும் ராஜன் என்கிற சண்முகசுந்தரம் மட்டுமே!

32 வயது இளைஞர். தன்னந்தனியாகத் துப்பாக்கியுடன் ஒரு வீட்டில் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் இரண்டு முதியவர்களைக் குருவி சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார். குழந்தைகள், பெண் என்று பாராமல் ஏனைய மூவர் மீதும் துப்பாக்கி ரவையைப் பாய்ச்சுகிறார். தானே காரை ஓட்டி வந்திருக்கிறார். இத்தனை ஆரோக்கியமான ஒருவர் பிடிபட்ட இரவே காவல் நிலையத்தில் இறந்தும்விடுகிறாரே, அது எப்படி?

ராஜன் என்கிற சண்முகசுந்தரத்தின் உடல் முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதா? அவர் எப்போது யாரால் எரிக்கப்பட்டார் அல்லது புதைக்கப்பட்டார்? அவரது உறவினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதா இல்லையா? - இவையெல்லாம் மனித உரிமை ஆணையத்தால் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள்தானே?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பக்கூடாது என்றும் அப்படி எழுப்பினால் அது விசாரணையைப் பாதிக்கும் என்றும் காவல் துறை வாய்ப்பூட்டு போட்டால் எப்படி? பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் உரிமையும், வெளிப்படைத் தன்மையும்தானே மக்களாட்சியின் அடிப்படை.

சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சண்முகசுந்தரம் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்தக் கொலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் சந்தேகப்படுவதாகத் தெரிவித்திருப்பதில் என்ன தவறு?

சண்முகசுந்தரத்தின் சடலம் காவல் துறையின் உதவியோடு எரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது தவறான விஷமத்தனமான ஒன்று என்று கூறும் காவல் துறை, அவரது சடலம் எப்படி யாரால் எரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துவதல்லவா நியாயம். இதற்கும் கொலை விசாரணைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்?

இப்போதைய அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 15-க்கும் மேற்பட்ட மோதல் சாவுகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடந்திருப்பது மோதல் சாவல்ல, ஆனால் மர்மச் சாவு. காவல் நிலையத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு விளக்கம் கூற வேண்டிய கடமை காவல் துறைக்குக் கிடையாது என்று யார் சொன்னது?

தமிழகத்தில் மோதல் சாவுகள் என்கிற பெயரில் நடைபெறும் கொலைகளைத் தடுக்க, ""மிக அவசரம்'' என்று குறிப்பிட்டு, 8-8-2007 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் ஒருமுறை மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்புவதும் இந்த வழக்கைப் பற்றி யாரும் எந்தவித சந்தேகங்களையும் எழுப்பலாகாது என்றும் வாய்ப்பூட்டு போடுவதால் காவல் துறை மீதான சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை தமிழகக் காவல் துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரிப்பதைவிட, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றுவதுதான் பல முடிச்சுகளை அவிழ்க்கவும் கொலைக்கான உண்மைக் காரணத்தை வெளிக்கொணரவும் உதவும் என்று தோன்றுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலை வழக்கில் நீதி கேட்டு நெடும் பயணம் போனவரின் ஆட்சியில் கேள்வி எழுப்புவதுகூட தவறு என்கிற நிலைமையா? தமிழகம் பல விசித்திரங்களைச் சந்தித்து வருகிறது...

நன்றி : தினமணி

பன்றிக்காய்ச்சல் பீதியின் எதிரொலி : ஹிமாலயன் லிக்விடுக்கு கிராக்கி

பன்றிக் காய்ச்சல் பீதியால், பொதுமக்கள் அனைவரும் வருமுன் காப்போம் விழிப்புணர்வுக்கு ஓரளவு வந்துள்ளனர். இந்நிலையில் ஹிமாலயன் ஹெர்பல் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான கை சுத்திகரிப்பு திரவத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் இந்த லிக்விட் அறிமுகப்படுத்தப்பட்டது. விளம்பரத்துக்கு கூட அசைந்து கொடுக்காத இதன் மார்கெட்டிங் தற்போது, பன்றிக் காய்ச்சல் பீதியால் சூடு பிடித்துள்ளது. விற்பனையில் அனல் பறக்கிறது என்பது தகவல். தற்போதைய சூழலில், தேவை மட்டும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஹிமாலயா பிராடக்ட்ஸ் வியாபார தலைவர் சாகெட் கோர் தெரிவித்துள்ளார். பிராடக்ட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து கூறிய அவர், இது ஆல்கஹாலை மூலப் பொருளாக கொண்டு மிதமான நறுமனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கையில் ஊற்றி கழுவ வேண்டாம், கையில் ஊற்றி தேய்த்தவுடன் ஆவியாகி விடும் என்றார். இந்த மவுசால், விலை எகிறுமா என நிருபர்கள் கேட்டதற்கு : விலை உயர்த்தப்பவாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


புதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வு

புதுச்சேரியில் அனைத்து வகையான சிகரெட்களும், ஒரு சிகரெட்டுக்கு 50 பைசா விலை உயர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு, சிகரெட் மீதான மதிப்புக் கூட்டு வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. பின், சிகரெட் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27ம் தேதி முடிவடைந்த கையோடு, சிகரெட் மீதான விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால், பீடி விலை உயரவில்லை. சிகரெட்களுக்கான சில்லரை (எம்.ஆர்.பி.,) விலை அறிவிக்கப்படாத நிலையில், வியாபாரிகள் தன்னிச்சையாக விலை உயர்வை அமல்படுத்தி உள்ளனர். சராசரியாக அனைத்து வகையான சிகரெட்களுக்கும் தலா 50 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பழைய விலைக்கு வாங்கி வரும் சிகரெட்களை புதுச்சேரி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், உயர்த்தப்பட்ட விலைக்கு விற்பனை செய்கின்றனர். புதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வால் அதிக அளவு கோல்டு பிளாக் சிகரெட் பயன்படுத்துவோர் பலர், சிசர் பில்டர் மற்றும் சார்ம்ஸ் சிகரெட்டுக்கு மாறியுள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்