Tuesday, March 10, 2009

மும்பை தீவிரவாத தாக்குதலால் இந்தோ - பாகிஸ்தான் வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்கும்

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வரும் பனிப்போரை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வந்த வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2009 - 10 நிதி ஆண்டில் இரு நாட்டு வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்க கூடும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ( எஃப் ஐ சி சி ஐ ) தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழில் அதிபர்கள் அச்சப்படுகிறார்கள் என அது தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் தற்போது 2 பில்லியன் டாலருக்கும் ( ரூ.10,200 கோடி ) அதிகமான தொகைக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்கள், இந்த நிதி ஆண்டின் இறுதியில் 900 மில்லியன் டாலருக்கும் ( ரூ.4,590 கோடி ) குறைவான தொகைக்கே வர்த்தகம் செய்திருப்பார்கள் என்கிறது எஃப்.ஐ.சி.சி.ஐ. வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய ஏற்றுமதியாளர்கள் பாகிஸ்தான் செல்லவே பயப்படுகிறார்கள் என்கிறது அது. பாகிஸ்தானுக்கு நேரடியாக செல்லாமல் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாக அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் சில ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல், ரெடிமேட் ஆடைகள்,டெக்ஸ்டைல் மெஷின்கள், காட்டன், விவசாய பொருட்கள், ஸ்டீல், கெமிக்கல் போன்ற பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

நன்றி : தினமலர்


ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது சி.பி.ஐ

சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சஞ்சலகுடா சிறையில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவையும் மற்ற நான்கு பேரையும் இன்று விசாரணைக்காக சி.பி.ஐ. தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கோர்ட்டில் பெறப்பட்ட கடிதத்துடன் இன்று காலை 9.30 மணிக்கு சஞ்சலகுடா சிறைக்கு சென்ற சி.பி.ஐ., குழுவினர், அவர்கள் ஐந்து பேரையும் விசாரணைக்காக அங்கிருந்து அழைத்து சென்றனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்த நிதி மோசடி குறித்து விசாரித்து வரும் ஐதராபாத் 14 வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்டிரேட், இவர்கள் ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்திருந்தார். இதுவரை ஆந்திர பிரதேச சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் இருந்த இவர்கள் ஐந்து பேரும் இனிமேல் சி.பி.ஐ.,யின் விசாரணைக்கு சென்றுள்ளனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸின் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராம ராஜூ, முன்னாள் நிதி அதிகாரி வட்லமணி ஸ்ரீநிவாஸ்,மற்றும் சத்யத்தின் ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பங்குதாரர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் தல்லுரி ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரும் வரும் 17ம் தேதி வரை சி.பி.ஐ., காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
நன்றி தினமலர்


டெர்மினேஷன் சார்ஜஸ் 33 சதவீதம் குறைக்கப்பட்டதால் மொபைல் பில் குறையும்

ஒரு நெட்வொர்க் ஆப்பரேட்டர், இன்னொறு நெட்வொர்க் ஆப்பரேட்டருக்கு விதிக்கும் டெர்மினேஷன் சார்ஜஸை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டராய், 33 சதவீதம் குறைத்திருக்கிறது. ஒவ்வொரு லோக்கல் காலுக்கும் விதிக்கப்பட்டு வந்த டெர்மினேஷன் சார்ஜஸ் 30 பைசாவில் இருந்து 20 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஆப்பரேட்டர்களான டேட்டாகாம், யூனிடெக், சியாம் - சிஸ்டமா, மற்றும் லூப் டெலிகாம் ஆகியவை நிமிடத்திற்கு டெர்மினேஷன் சார்ஜஸாக 10 பைசா தான் வசூலிக்கின்றன. ஆனால் ஏற்கனவே இருக்கும் ஜி.எஸ்.எம்.ஆப்பரேட்டர்கள், டிராயின் இந்த கட்டண குறைப்பை எதிர்க்கின்றன. காரணம் என்னவென்றால் அவர்களுக்கு வருமானம் குறைந்து விடும் என்று நினைப்பதால்தான்.இந்தியாவுக்குள் செய்யும் கால் களுக்கு டெர்மினேஷன் சார்ஜஸை குறைத்த டிராய், வெளிநாட்டு கால் களுக்கான டெர்மினேஷன் சார்ஜஸை நிமிடத்திற்கு 30 பைசாவில் இருந்து 40 பைசாவாக உயர்த்தியிருக்கிறது. எனவே வெளிநாட்டு கால்களுக்கான கட்டணம் உயரும்.
நன்றி : தினமலர்


பி.எஃப்.,க்கு கட்டாமல் போன ரூ.1.76 கோடியை உடனடியாக கட்ட சுபிக்ஷாவின் எம்.டி.,க்கு உத்தரவு

சுபிக்ஷா டிரேடிங் சர்வீசஸில் மேலாண் இயக்குநராக இருப்பவர் சுப்ரமணியம். இவர் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய ரூ.1.76 கோடியை கட்டாமல் இருந்திருக்கிறார். எனவே இப்போது உடனடியாக அந்த தொகையை கட்ட வேண்டும் என்று பி.எஃப்.,அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த தொகையை கட்டவில்லை என்றால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கவும் பி.எஃப்., முடிவு செய்திருக்கிறது. ரூ.1.76 கோடி பி.எஃப் பணம் பாக்கி இருப்பது குறித்து 7 - ஏ விசாரணையையும் பி.எஃப்., கமிஷனர் துவக்கியிருக்கிறார். அந்த விசாரணையின் போது, நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்தும் அதனை சரிசெய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்தும் சுபிக்ஷா நிறுவனம் சார்பில் விளக்கப்பட்டது. அப்போது சுப்ரமணியம், கம்பெனி கணக்கில் கட்டாமல் விட்ட பி.எஃப்., பாக்கிக்காக, அவரது சொந்த பி.எஃப்., கணக்கில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது பி.எஃப்.,கணக்கில் இருந்து கம்பெனி பி.எஃப்., கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு தேவையான பேப்பர்களையும் அவர் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் பி.எஃப்., பாக்கிக்காக அவரது சொந்த பி.எஃப்., அக்கவுன்ட் பணம் ' அட்டாச் ' ஆகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து சுபிக்ஷா நிறுவனம் கடும் நிதி சிக்கலுக்குள் வந்துள்ளது. இதனையடுத்து, சுபிக்ஷாவில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கும் ஐசிஐசிஐ வங்கி, ரிஜிஸ்டரர் ஆஃப் கம்பெனீஸை அணுகி, இந்த நிதி சிக்கல் குறித்து விசாரணை நடத்துமாறும் தனியாக வேறு நபர் மூலம் ஆடிட் செய்ய உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, சுபிக்ஷா நிறுவனம், நிதி சிக்கலில் இருந்து மீள, செலவை குறைக்கும் விதமாக அதன் ஊழியர்களில் சம்பளத்தை அதிகபட்சமாக ரூ.6,500 ஆக குறைத்து, அதற்கு ஊழியர்களில் ஒப்புதலையும் பெற்றது. ஆனால் அந்த சம்பளத்தையும் பல மாதங்களாக கொடுக்காமல் அட்வான்ஸ் தொகையை மட்டும் கொடுத்து வந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அதன் 15,000 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இதற்கிடையில் சுபிக்ஷாவை சென்னையை சேர்ந்த புளு கிரீன் கன்ஸ்டரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்கவும் முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதற்கு சுபிக்ஷாவின் பங்குதாரர்களான ஐசிஐசிஐ வங்கி, மற்றும் விப்ரோ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


அடுத்த வருடம் வரை இந்திய சந்தையில் இருந்து விலகி இருக்கப்போகும் அந்நிய முதலீட்டாளர்கள்

இந்திய பங்கு சந்தையில் பெருமளவு பணத்தை முதலீடு செய்யும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப் ஐ ஐ ) அடுத்த வருடம் வரை அதிலிருந்து விலகியேதான் இருப்பார்கள் என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ச்சி அடைந்ததில் இருந்து, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் அவர்கள் வைத்திருந்த பங்குகளை விற்க ஆரம்பித்தனர். அந்த நிலை இன்றும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் முழுவதும் அதே போன் முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார்கள். சர்வதேச அளவில் பொருளாதார நிலை அடுத்த வருடத்தில் மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் இந்தியாவிலும் எஃப்.ஐ.ஐ.,களின் முதலீடு மீண்டும் குவிய ஆரம்பிக்கும் என்கிறார் மூடி'ஸ் எக்கனாமி டாட் காமின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் ஷான். அடுத்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில்தான் இந்தியாவின் நிலையிலும் மாற்றம் இருக்கும் என்கிறார் அவர். இதே கருத்தைத்தான் இன்னொரு பொருளாதார நிபுணரான ஜேம்ஸ் மிக் கார்மக்கும் தெரிவிக்கிறார். இந்திய பங்கு சந்தையில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எடுத்து சென்ற தொகை 8,333 மில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 42,500 கோடி ரூபாய்.
நன்றி :தினமலர்


கட்டுமான பொருட்களின் விலை வீழ்ச்சி: டீசல் கட்டண குறைப்பு எதிரொலி

டீசல் விலை குறைவு மற்றும் கட்டுமானத் தொழிலில் நிலவும் மந்தநிலை காரணமாக, கட்டட கட்டுமானப் பொருட்களின் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. மணல், ஜல்லி, இரும்பு விலையில் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டபோது, அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இரண்டு, மூன்று மடங்குகளில் விலை ஏற்றம் காணப்பட்டது. சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. கோவையில் கட்டுமானப் பொருட்களின் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களில், ஒவ்வொரு பொருளும் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.
ஸ்டீல் கம்பி விலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அதிகபட்சமாக கிலோ 53 ரூபாய் வரை விற்பனையானது. சமீபகாலமாக, விலை படிப்படியாக குறைந்து, தற்போது 31- 33 ரூபாயாக குறைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட கம்பிகளின் விலை 31 -33 ரூபாய் என்ற அளவில் உள்ளது. 'பிராண்டாட்' கம்பி விலை, 33 ரூபாய் அளவில் விற்பனையாகிறது.
மணல் விலையும் கணிசமான அளவு சரிந்துள்ளது. ஒரு யூனிட் கரூர் மணல் அதிகபட்சமாக 2,400 ரூபாய் வரை விற்றது; இப்போது, 2,000 முதல் 2,100 ரூபாயாக உள்ளது. செங்கல், 'டேபிள் மோல்டேட்' 3,000 எண்ணிக்கை, 9,000 முதல் 9,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
செங்கல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. டீசல் விலை குறைந்தாலும், லாரி வாடகையில் மாற்றம் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் சுற்றுப்புறங்களில் இருந்து சப்ளையாகும் செங்கல், தரத்தைப் பொறுத்து விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கருங்கல் (போல்டர்ஸ்) விலை இரண்டு யூனிட் 2,100லிருந்து 1,900 ரூபாயாக குறைந்துள்ளது. ஜல்லி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'சைஸ் ஸ்டோன்' எனப்படும் சதுரகல் ஒன்றின் விலை ஏழு ரூபாயில் இருந்து 6.50 ரூபாயாக ஆக குறைந்துள்ளது. டீசல் விலை குறைப்பால், சிறிய அளவில் விலை மாற்றம் இருந்தாலும், கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, தன்னிறைவு நிலையால் கட்டட பொருட்களின் விலையில் 10 முதல் 20 சதவீத அளவுக்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பல வர்த்தகர்கள், மணல், கல், சப்ளையர்கள் விலையை குறைக்க பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். மரங்களின் விலையிலும் இதே போன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேக்கு மரம் ஒரு சதுர அடி 4,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக இறங்கியுள்ளது. நாட்டு மரங்களின் விலையும் 1,500 ரூபாயிலிருந்து 1,250 ரூபாயாக குறைந்துள்ளது. அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்தாலும், சிமென்ட் விலை மட்டும் இறங்கவே இல்லை. ஓரிரு நாட்களில் சிமென்ட்டும் மூட்டைக்கு 10 ரூபாய் வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். தற்போது, நல்ல தரமான சிமென்ட் 50 கிலோ மூட்டை, 270 ரூபாய் முதல் 275 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருப்பதால், இன்னும் கட்டுமானப் பொருட்களின் விலையில் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை காட்ட ஆரம்பித்துள்ளன; விற்பனையை துரிதப்படுத்தவும் முயன்று வருகின்றன.
நன்றி : தினமலர்


பொருளாதார மந்தநிலை: ஏழை நாடுகள் அதோகதி

வளரும் நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. தற்போது உலகம் முழுவதையும் பாதித்திருக்கும் பொருளாதார மந்தநிலை வளரும் நாடுகளில் நீண்டகாலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் உலகவங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மிகவும் ஏழை நாடுகள் நிலைமை மீட்க முடியாத மோச நிலைக்கு செல்லக்கூடும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. வரும் ஞாயிறன்று 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாட் டின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சந்தித்து ஆலோசனை செய்யப் போகின்றனர்.
இதை ஒட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல் வருமாறு:
* இந்தியாவில் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வேலையிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சம் பேர். ஆபரணத் தயாரிப்பு, ஆட்டோ துறை, மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றில் வேலையிழந்திருக்கின்றனர். கம்போடியாவில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் வேலை இழந்திருக்கின்றனர்.
* நடப்பாண்டில் வளரும் நாடுகள் சந்திக்கும் நிதிப்பற்றாக்குறை அளவு 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். அதை அவர்கள் திரட்ட முடியாது. பாதிக்கப்படும் நாடுகளில் கால்வாசி நாடுகள் மட்டுமே ஓரளவு நிலைமையைச் சமாளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
* வளரும் நாடுகள் பட்டியலில் 116 நாடுகள் உள்ளன. அதில், 94 நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் 43 நாடுகள் மிகவும் பிச்சைக்கார நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் தங்கள் ஏழ்மையை அதிகரிக்காமல் தடுக்க தேவைப்படும் நிதியைக் கூட திரட்ட முடியாது.
* ஏழைமக்களை சொத்து என்று கருத வேண்டும், சுமை என்று கருதக்கூடாது. அதற்கேற்ப சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது, இளைஞர்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு ஆகியவை தேவை. அதற்கான நடைமுறைகளைக் கண்டறிய வேண்டும். இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உலக வங்கி துணைத் தலைவர் ஜஸ்டின் இபு லின் கூறுகையில், 'வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் நிதியை ஏழை நாடுகளுக்கு வழங்குவதின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு காண முடியும் ' என்றிருக்கிறார்.
நன்றி : தினமலர்