Thursday, October 23, 2008

பங்கு சந்தையில் மீண்டும் பெரும் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் பெரும் சரிவை சந்திருக்கிறது. ஜூலை 24, 2006 க்குப்பிறகு, இன்று நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. சென்செக்ஸ் மீண்டும் 10000 புள்ளிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. கடந்த வரம் ஒரு தடவை இது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போயிருந்தது. பின்னர் மேலே எழுந்து வந்து இன்று மீண்டும் கீழே போய் விட்டது. எஃப் ஐ ஐ களின் ஷார்ட் செல்லிங் முறைக்கு தடை விதிப்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பிரயோஜனமாக இருக்கவில்லை.உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் கடும் சரிவு ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிவிப்பால் ஒரளவு சந்தை மீண்டு வந்தாலும் பெரிதாக மீழ முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 398.20 புள்ளிகள் ( 3.92 சதவீதம் ) குறைந்து 9,771.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 122.00 புள்ளிகள் ( 3.98 சதவீதம் ) குறைந்து 2,943.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பார்தி ஏர்டெல், செய்ல், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள்தான்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்தது

அக்டோபர் 11ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.44 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அட்டவணைப்படி கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த வருடத்தில் இதே காலத்தில் 3.07 சதவீதமாகத்தான் இருந்தது. பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர பருத்தி, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், புண்ணாக்கு, பாலியஸ்டர், காரீயம், துத்தநாகம் ஆகியவைகளின் விலையும் குறைந்திருக்கிறது. ஆனால் டீ, நெய், சோளம், அரிசி, புகையிலை, காட்டர் யார்ன், கடுகு விதை போன்றவைகளின் விலை உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கடந்த 16 மாதங்களாக இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது

உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டது. அமெரிக்காவில் வழக்கமாக சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய் அளவும், கடந்த அக்டோபர் 17ம் தேதியுடன் முடிந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட 3.2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக இருப்பதாக வந்த தகவலும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.43 டாலர் குறைந்து 66.75 டாலராகி விட்டது. இது கடந்த ஜூன் 2007க்கு பின் ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 64.52 டாலராகி விட்டது. இதுவும் கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்த அளவுதான். வெள்ளி அன்று ஓபக் மாநாடு கூடி, ஆயில் உற்பத்தியை குறைக்க தீர்மாணித்திருந்தாலும் இப்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை இன்னும் குறையும் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலருக்கும் கீழே போய் விடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலருக்கும் மேலே இருந்தது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் தெரிகிறது முன்னேற்றம் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை சிறிது மேலே தலை தூக்கிப் பார்க்கிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் அன்று பாடினார். இன்று பாடியிருந்தால், 'வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியிருப்பார். கடந்த வாரங்களில் குறைக்கப்பட்ட ரொக்க கையிருப்பு சதவீதம் 2.5 தவிர, இந்த வாரம் ரெப்போ ரேட் 1 சதவீதமும் குறைக்கப்பட்டது. இது பணப் புழக்கத்தை இன் னும் அதிகமாக்கும் என்றும், கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறையும் என்ற நோக்கத்தில் செய்யப் பட்டுள்ளது. பணப்புழக்கம் அவ்வளவு மோசமாகவாக இருக்கிறது? ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்று வெளிநாட்டுப் பணத்தை கொண்டு செல்வதால் பணப் புழக்கம் குறைகிறது. மேலும், டாலரின் மதிப்பு கூடி வருகிறது. பணம் உள்ளே வந்த போதெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். தற் போது போகும் போது பொறுமையாகத்தான் இருக்க வேண் டும். அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு என்ன வந்தது. எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பது போல எடுத்துச் செல்கின்றனர். பொறுமை தேவை. பங்குச் சந்தை என்பது இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கும் இடம். அதில் பயணம் செய்ய பொறுமை தேவை. தற்போது அசாத்திய பொறுமை தேவை. டாலர் மதிப்பைக் குறைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வங்கிகளில் வைக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதங்களை கூட்டியுள்ளன.

இது வெளிநாட்டுப் பணம் உள்ளே வர ஏதுவாகும். அப்படி வரும் வரத்து கூடிவருகிறது. எங்கு வட்டி கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு தானே போவார்கள். திங்களன்று மும்பை பங்குச் சந்தை 2.5 சதவீதம் மேலே சென்று முடிவடைந்தது. அன்று 247 புள்ளிகள் கூடியது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. நேற்று முன்தினம், ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நன்றாக மேலே சென்றது சந்தையையும் மேலே கொண்டு சென்றது. குறிப்பாக டி.சி.எஸ்., 12.9 சதவீதம் மேலே சென்றது. ஆசிய அளவில் சந்தைகள் குறைந்ததாலும், லாப நோக்குடன் விற்றதாலும் நேற்று சந்தை மிகவும் கீழே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 513 புள்ளிகள் குறைந்து 10,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 169 புள்ளிகள் குறைந்து 3,065 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மறுபடியும் மும்பை பங்குச் சந்தை 10,000க்கும் அருகில், வாய்ப்புகளா அல்லது சறுக்கல்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். திங்கள், நேற்று முன்தினம் கிடைத்த லாபத்தை நேற்று ஏற்பட்ட நஷ்டத்தால் காணாமல் போனது. இந்திய பங்குச் சந்தையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நார்வே 9,800 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்பது சந்தையை பலப்படுத்த உதவும். காலாண்டு முடிவுகள்: செயில் சென்ற வருடம் இதே காலாண்டை விட 18 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. அதே போல ஹீரோ ஹோண்டா சென்ற வருடம் இதே காலாண்டை விட 50 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. ஜெயப்பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வருடம் இதே காலாண்டை விட 96 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது.

இதே போல எல்.ஐ.சி., ஹவுசிங், இந்தியா புல்ஸ் பைனான்சியல், யுனைடெட் ஸ்பிரிட், போலாரிஸ் சாப்ட்வேர், மாரிகோ, ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.

ஏன் தங்கம் விலை குறைகிறது? பங்குச் சந்தையில் 10,000க்கும் கீழே வந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக தெரிந்ததால், தங்கத்தை விட்டு பங்குக்கு தாவ ஆரம்பித்தனர். இதனால், தங்கம் பரிதவித்துப் போய் கீழே இறங்கியது. கூடி வரும் டாலர் மதிப்பால் சிறிது விலை கூடி நிற்கிறது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பலரும் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும் அது நாடுகளையும், சந்தைகளையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதே நிறையப் பார்த்தாகிவிட்டது. இந்திய சந்தை பல நாடுகளின் சந்தைகளை வைத்துப் பார்க்கும் போது அதிகம் சரிந்த சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதலால் மேலும் பெரிதாக சரிய வாய்ப்பில்லை. 10,000க்கும் கீழே செல்லும் போது வாங்குபவர்கள் அதிகம் வருவார்கள்.
நன்றி : தினமலர்