Tuesday, January 5, 2010

ஒரு வேலைநிறுத்தம், இரு பரிமாணங்கள்

பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.

இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.

இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.

வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.

திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.

1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.

ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.

இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.

ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:

""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.

""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''

இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:

""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.

இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.

அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

17 மாதங்கள் இல்லாத அளவு ஆசிய சந்தைகளில் உயர்வு

17 மாதங்கள் இல்லாத அளவு ஆசிய சந்தைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் பங்குச்சந்தை நிக்கி 124.5 புள்ளிகள் உயர்ந்து 10,779.29 புள்ளிகளோடு தொடங்கியது. ஹாங்காங் ஹாங்செங் 370.35 புள்ளிகள் அதிகரித்து 22,193.63 புள்ளிகளோடு‌ தொடங்கியது. சிங்கப்பூர் பங்குச் சந்தை 22.91 புள்ளிகள் அதிகரித்து 2,917.46 புள்ளிகளோடும், தென்கொரிய பங்குச்சந்தை கேஸ்பி 0.84 புள்ளிகள் அதிகரித்து 1,696.98 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியாவின் எஸ் அன்ட் பி/ஏஎஸ்எக்ஸ்200 42.8 புள்ளிகள் அதிகரித்து 4,9191.10 புள்ளிகளோடும்,
சீனா சாங்காய் 39.1 புள்ளிகள் அதிகரித்து 3,282.86 புள்ளிகளோடும், தைவான் பங்குச் சந்தை 35.8 புள்ளிகள் உயர்ந்து 8,243.65 புள்ளிளோடும் தொடங்கின.
நன்றி : தினமலர்


கொடிகட்டி பறக்குது 'ஸ்டெம் செல்' வர்த்தகம்: ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாயை எட்டியது

சமீபகாலமாக பிரபலம் அடைந்து வரும், 'ஸ்டெம் செல்' சிகிச்சைக்காக தொப்புள் கொடி, 'செல்'கள் சேமிக்கப்படுகின்றன. இதற்கான சேமிப்பு வங்கிகளின் வர்த்தகம், 100 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் வளரும், 'செல்'களை பயன்படுத்தி, உடலில் செயலிழந்த பகுதிகளில் காணப்படும் பழுதடைந்த செல்களை நீக்கிவிட்டு, புது செல்களை புகுத்தும், 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறைக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இதனால், 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளின் வர்த்தகமும் அதிகரிக்க துவங்கியது. அதிக விலைக்கு இந்த, 'செல்'கள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பு வங்கிகளின் மூலம் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட அதிகமான குடும்ப வியாதிகளுக்கு இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதனால், இந்த தொப்புள் கொடி ரத்தம் சேமிப்பு விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறையில், உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த செல்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய செல்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இந்த செல்கள் வேண்டி வங்கிகளை நாடும் தனியாருக்கு பொருத்தமான செல்கள், 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

'ஸ்டெம் செல்' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செல் உற்பத்தி செய் யும், 'கார்டு பிளட்' சேமிப்பு மற்றும் விற்பனையில் இறங்கிவிட்டன. டில்லியைச் சேர்ந்த, 'ஸ்டெம் செல்' குளோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வுப்படி, 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருவது தெரியவந்துள்ளது. இது ஆண்டு வளர்ச்சியில் 35 சதவீதமாகும். இந்த ஆண்டில் இதன் வர்த்தகம் 140 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நோயால் பாதிக்கப் பட்ட பல லட்சம் நோயாளிகளுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று, 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


இடைத்தேர்தல்கள்-இரையாகும் அரசு நிதி

சமீபகாலமாகத் தமிழகத்தில் இடைத்தேர்தல் என்ற "பண மழை' பெய்துவருவதால் அதில் சந்தோஷமாக நனையும் வாக்காளர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மழை பொழிவித்தவர்களின் மனதைக் குளிர்வித்து, நன்றிக்கடன் செலுத்தி வருவதை அத்தேர்தல் முடிவுகள் மூலம் நாம் காண்கிறோம்.

இதுபோன்ற "முன் விதைத்து பின் அறுவடை செய்' என்ற பார்முலா ஒருபுறம் இருந்தாலும், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் மக்களிடையே வலுக்கட்டாயமாகத் திணிக்கும் இடைத்தேர்தல்களில் அரசின் வருவாய் இரையாகிறதே என்று கவலைகொள்ளும் சமூக ஆர்வலர்களின் வேதனை "தண்ணீருக்குள் அழுகும் மீன்களின்' கதையாகவே உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டில் அக் கட்சியின் தலைமைக்குத் திருப்தியில்லை என்றாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ அந்த எம்.எல்.ஏ. "கட்டம்' கட்டப்படுகிறார். சில தினங்களில் நேற்று வரை தமது பரம எதிரியாகப் பாவித்துவந்த மாற்றுக் கட்சிக்குத் தூதுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் அங்கு ஐக்கியமாகி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிக்கிறார்.

எதிரிக் கட்சியில் இணைந்த அவருக்கே எம்.எல்.ஏ. சீட்டு கிடைத்து, தான் ராஜிநாமா செய்த அதே தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் மக்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்டு வெற்றிபெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

இதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒரு கேலிக்கூத்தான விஷயமாகத்தான் தோன்றுகிறது. "ஒரு தனிப்பட்ட நபரின் சுயநலம் மற்றும் அரசியல் லாபநோக்கில் எடுக்கப்படும் இதுபோன்ற முடிவால் எத்தனை கோடி ரூபாய்களை அரசும், அரசியல் கட்சிகளும் செலவிட வேண்டியுள்ளது' .மக்களின் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணாகிறதே என்பதை உற்றுநோக்கினால் சமுதாய மேம்பாட்டில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் மனதில் கோபம் எழத்தான் செய்யும்.

÷தமிழகத்தில் கடந்த 1997 முதல் 2009 வரை சுமார் 25 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றில் 7 தொகுதிகளில் இதுபோன்ற கேலிக்கூத்துகளை எம்.எல்.ஏ.க்கள் அரங்கேற்றியதால் இடைத்தேர்தல்கள் திணிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

÷2000}வது ஆண்டில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் ராஜிநாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2002}ல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை வலுக்கட்டாயமாக ராஜிநாமா செய்யவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

2001-ல் மங்களூர் தொகுதியில் ராஜிநாமா செய்த தொல். திருமாவளவனால், 2004-ல் மக்களவைத் தேர்தலுடன் அத்தொகுதியில் சட்டப்பேரவைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

2006-ல் கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி போன்ற தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கண்ணப்பன், தம்பிதுரை, ராஜகண்ணப்பன் ஆகியோர் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

இதில், ராமகிருஷ்ணன், கண்ணப்பன் ஆகிய இருவரும் மதிமுகவிலிருந்து திமுகவுக்கும், ராஜகண்ணப்பன் திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், தம்பிதுரை மக்களவைத் தேர்தலில் நிற்பதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததால் வாக்காளர்களிடையே இடைத்தேர்தல்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.

இதுபோன்று 12 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட 11 இடைத்தேர்தல்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களில் தாக்கப்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் பல்வேறு அரசியல் கட்சியினரால் அத்தொகுதிக்குள் வலம் வரும் வாகனங்களுக்கு ஆகும் "பெட்ரோல் செலவு' குறித்து கணக்கிட்டால் நமக்குத் தலையே சுற்றும்.

எனவே, சுயநலம், அரசியல் லாபம் கருதி ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்யும் எம்.எல்.ஏ.வால் இதுபோன்ற வீண் செலவு, பணப்பட்டுவாடா, பதற்றம், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையமும், அரசும் தகுந்த சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.

சமீபகாலமாக நடைபெற்று வரும் "இடைத்தேர்தல்கள் பார்முலா' அதிகாரம் மற்றும் பணபலம் கொண்டவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்பதாகவும், ஊழலுக்கு வழிகோலுபவையாகவுமே உள்ளது. வாக்காளர்களுக்குப் பணத்தாசையைக் காட்டி அவர்களைச் சிந்திக்கவிடாமல் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் "சிந்தனைச் சுரண்டலும்' ஓர் குற்றமே.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால், அந்த நபர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடைவிதிக்க வேண்டும். அல்லது அதுபோன்ற சூழ்நிலையில் இடைத்தேர்தலால் அரசுக்கு ஏற்படும் நிதிச் செலவை 50 சதம் வரை அந்த நபரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர் : கொ.காளீஸ்வரன்
நன்றி : தினமணி