Saturday, February 28, 2009

பொருளாதார வளர்ச்சி திடீர் சரிவு: இனிமேல் அதிக பாதிப்பு வரும்

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பின் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், நம் நாட்டின் மொத்த வளர்ச்சி 5.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால், அதிக அளவு பாதிப்பு வரும் என்று கருதப்படுகிறது. கடந்த அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான மூன்றாவது காலாண்டு வளர்ச்சியைக் கணக்கிட்ட போது, இந்த சரிவு தெரிந்தது. இச்சரிவுக்கு விவசாய உற்பத்தி, மான்யுபேக்சரிங் துறை உற்பத்தி குறைவு என்று தெரிய வந்தது.
நடப்பாண்டான 2008- 2009ம் ஆண்டுக்கு மொத்த வளர்ச்சி 7.1 சதவீதம் இருக்கும் என்று அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக, அதற்குள் மொத்த வளர்ச்சி 5.3 சதவீதம் என்று புள்ளியியல் துறை தகவல் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
இது, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சதவீதமாகும். உலகப் பொருளாதார மந்த நிலை பாதிக்கும். ஆனால், இங்கே தேக்கம் வராது என்று நிதியமைச்சகமும், திட்டக்கமிஷனும் கூறி வந்தாலும், தற்போது விவசாய உற்பத்தி மூன்றாவது காலாண்டில் வெறும் 2.2 சதவீதம் என்பது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதில் கரும்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்திருக்கிறது என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. இத்தகவல் குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை இணையமைச்சர் பன்சால், 'இன்னும் மூன்று மாதம் இருக்கிறது; வளர்ச்சி அதிகரிக்கும்' என்றார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் சிலர், தற்போது அரசு சில பொருளாதார நிதியுதவித் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தந்திருக்கிறது. அதன் பயன் தெரிய சில காலமாகும் என்றனர். 'கிரிசில்' என்ற மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஜோஷி கூறுகையில், 'அரசு அறிவித்த சலுகையின் பயன் கள் தெரிய இன்னமும் ஏழு மாதங்கள் ஆகும்' என்றார். குறிப்பாக, சமூக, தனிநபர் சர்வீசஸ் துறையின் வளர்ச்சி கடந்தாண்டில் இதே காலத்தை ஒப்பிடும் போது முன்பிருந்த 5.5 சதவீதம் என்பது 17.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அது, மத்திய-மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு அளித்த சம்பள உயர்வு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சி என்று மார்தட்டிய நிலை திடீரென கீழிறங்கியிருப்பது, பொருளாதார நிலை அபாய கட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இதனால், நாடும் மக்களும் சிரம நிலையைச் சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே வேலையிழப்பு, ஏற்றுமதி சரிவு, உற்பத்தியின்மை என்று தொடர்கிறது. ஆனாலும், தொழில் துறை மந்தம் ஏற்படும் பெரிய அபாயம் வராது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், வங்கிகள் வட்டி சதவீதத்தைக் குறைப் பது தேவை என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


நெருக்கடியில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் : இவ்வாண்டில் சம்பள உயர்வு கிடையாது

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.,) நிறுவன ஊழியர்களுக்கு இவ்வாண்டு சம்பள உயர்வு இல்லை என்றும், ஆட் குறைப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தின் விற்று முதல், கடந்த நிதியாண்டில் 22 ஆயிரத்து 863 கோடி ரூபாயாக குறைந்தது. இதனால், ஊழியர்களின் சம்பளம் மறு ஆய்வு செய்யப்படுகிறது. அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருக்காது என்றாலும், பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட உள்ளது. தகுதி, பணி மூப்பு அடிப்படையில், இது 20 சதவீதம் முதல் 30 சதவீதமாக இருக்கும். டி.சி.எஸ்., இ - சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் ஊழியர்கள் உட்பட, டி.சி.எஸ்., நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.4 லட்சம். ஊழியர்களின் சம்பளத்துக்காக, இந்நிறுவனம், மொத்த செலவுகளில், 54 சதவீதம் செலவிடுகிறது. தற்போது வருவாய் குறைந்து இருப்பதால், மொத்த செலவுகளில், ஊழியர்களுக்கான செலவை, 52 சதவீதம் முதல் 54 சதவீதத்துக்குள் தற்போது, இந்நிறுவனம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவுடன் நடத்தி வந்த வர்த்தகத்தில், 4 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை குறைப்பு செய்ய வேணடிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. தேவையற்ற, திறமையற்ற ஊழியர்களை வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலும், நிலைமை மேலும் மோசமடைந்தால், அதிகளவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று, டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது. 'காம்பஸ் இன்டர்வியூவில், 24 ஆயிரத்து 500 பேருக்கு, வேலையில் சேர ஆபர் லெட்டர் அளிக்கப்பட்டு இருந்தது. இவர்களை பணியில் அமர்த்துவதில் உறுதியாக இருந்தாலும், அது டிசம்பர் மாதம் வரை தாமதப்படும்' என்று, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைகின்றன

சந்தை முதலீட்டு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் ( ஆர் ஐ எல் ) அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படுகின்றன. இந்த தகவல் நேற்று மும்பை பங்கு சந்தைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் போர்டும் தனித்தனியாக மார்ச் 2 ம் தேதி அன்று கூடி இது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று இருந்தது. 2001ல் உற்பத்தியை துவக்கிய அந்த நிறுவனம், 2002 இலேயே ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டது. இப்போதிருக்கும் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து விட்டால் பின்னர் அந்த நிறுவனத்தில் மொத்த சந்தை முதலீடு ( மார்க்கெட் கேபிடலைஷேசன் ) ரூ.2,33,000 கோடியாக உயர்ந்து விடும். அப்போது அது, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரி ய நிறுவனமான என்.டி.பி.சி.,யின் சந்தை முதலீட்டை விட 35 சதவீதம் அதிக சந்தை முதலீட்டை கொண்டதாக இருக்கும். இரண்டும் ஒன்றாக இணைந்து விட்டால், உலகின் அதிகம் லாபம் சம்பாதிக்கும் 50 நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் வந்து விடும்.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு பெருமளவு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று, என்றுமில்லாத அளவாக குறைந்து விட்டது. இன்று மதியம் வர்த்தகத்தின்போது அது, டாலர் ஒன்றுக்கு ரூ.51 வரை சென்று விட்டது. பகல் 12.34 க்கு ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.50.87/88 ஆக இருந்தது. இன்று மாத கடைசியாக இருப்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய்க்கான பில் தொகையை இன்று டாலரில் கொடுக்க வேண்டும். அதற்காக அவைகள் வெளி மார்க்கெட்டில் பெருமளவு டாலரை வாங்கும். இதன் காரணமாக டாலருக்கு டிமாண்ட் அதிகமாகி அதன் மதிப்பு உயர்ந்து விடும். ரூபாயின் மதிப்பு குறைந்து விடும்.

நன்றி : தினமலர்



Friday, February 27, 2009

ஜப்பானின் தொழில் உற்பத்தி கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானின் தொழில் உற்பத்தி கடந்த மாதத்தில் 10 சதவீதம் குறைந்து விட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு. கடந்த நான்கு மாதங்களாகவே ஜப்பானின் தொழில் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வந்திருப்பதால், அது பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும். ஜப்பானின் ஏற்றுமதி 45.7 சதவீதம் குறைந்து விட்டது என்ற அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே அதன் தொழில் உற்பத்தி 10 சதவீதம் குறைந்து விட்டது என்ற அறிக்கை வெளி வந்திருக்கிறது. ஏற்றுமதியையே பெரிதும் நம்பியிருக்கும் ஜப்பானின் பொருட்கள், பொருளாதார மந்த நிலை காரணமாக வெளிநாடுகளில் சரிவர விற்காததால் அதன் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கார்களுக்கு டிமாண்ட் குறைந்து விட்டது. அதனால் ஜப்பானின் ஏற்றுமதி குறைந்து போனது. அதேபோல உள்நாட்டிலும் மக்களின் வாங்கும் சக்தி 5.9 சதவீதம் குறைந்திருப்பதால் உள்நாட்டிலும் பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அங்கு தொழில் உற்பத்தி 10 சதவீதம் குறைந்திருக்கிறது என்கிறார்கள். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஆரம்பித்தபோது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் எல்லாம் கடும் சிரமத்தில் இருந்தபோது, ஜப்பான் வங்கிகள் எதுவும் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் ஜப்பானின் பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையை நம்பி இருப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஜப்பானை அதிகம் பாதித்து விட்டது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


நானோ காருக்கு புக்கிங் தொகை ரூ.70,000 செலுத்த வேண்டும் ?

இன்றைய தேதியில் உலகிலேயே மிக மலிவான கார் என்று சொல்லப்படும் டாடாவின் ' நானோ ' கார், வர்த்தக ரீதியான பார்வைக்கு, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து அதன் டீலர்களிடம் வைக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நேற்று அறிவித்தது. நானோ கார் வேண்டுபவர்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் நானோ கார் மலிவு விலையில் கிடைத்தாலும், அதற்கான புக்கிங்தொகை அவ்வளவாக மலிவாக இல்லை என்று தெரிகிறது. அதற்கான புக்கிங் தொகையாக ரூ.70,000 வரை கட்ட வேண்டியிருக்கும் என்கிறார்கள் டீலர்கள். நானோ கார் ரூ.ஒரு லட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமான தொகையில் கிடைத்தும், அதற்கான புக்கிங் தொகை ரூ.70,000 கட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் நானோவின் விலையை விட சுமார் இரண்டு மடங்கு விலையில் இருக்கும் மாருதி 800 காருக்கு புக்கிங் தொகை ரூ.35,000 இலிருந்து ரூ.50,000 வரை தான். செவர்லே ஸ்பார்க் காரின் விலை ரூ.3.25 லட்சமாக இருந்தாலும், அதற்கான புக்கிங் தொகை ரூ.5,000 மட்டுமே.
நன்றி : தினமலர்


Thursday, February 26, 2009

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 மணி வரை குறைந்திருந்த குறியீட்டு எண், அதன் பின்னர் உயர துவங்கியது. மதியத்திற்கு மேல் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்ததால் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை உயர ஆரம்பித்தது. ஆட்டோ, மெட்டல், டெலிகாம், ஆயில் கம்பெனிகளில் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ரான்பாக்ஸி, ஹெச்.டி.எஃப்.சி, டாடா பவர், விப்ரோ, மற்றும் ஹின்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சர்வதேச பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் பணவீக்க விகிதம் குறைந்திருப்பதாக வந்த அறிவிப்பு போன்றவையும் சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 52.30 புள்ளிகள் ( 0.59 சதவீதம் ) உயர்ந்து 8,954.86 புள்ளிகளில் முடிந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 23.15 புள்ளிகள் ( 0.84 சதவீதம் ) உயர்ந்து 2,785.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 3.36 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 3.92 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில் நிர்வாகத்தின் பங்கை அதிகரிக்க திட்டம் ?

இ.பி.எஃப்., எனப்படும் எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில்,தொழிலாளர்களுக்கு அதிக பயன்கள் கிடைக்க செய்வது எப்படி என்பதை ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு கமிட்டிகளை நியமித்திருப்பதாக மத்திய அரசு இன்று பார்லிமென்ட்டில் தெரிவித்தது. பார்லிமென்ட்டில் இன்று இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ், ஆறாவது சம்பள கமிஷனுக்காக எம்ப்ளியீஸ் பென்சன் ஸ்கீம் 1995ல் மாற்றம் எதுவும் செய்யப்போவதில்லை என்றும், இ.பி.எஃப் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு தனி குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதில் ஒரு குழு, தனி செகரட்டரி தலைமையில் கூடி, இ.பி.எஃப்., திட்டத்தில் தொழிலாளர்களுக்கு எப்படியெல்லாம் பயனை அதிகரிக்க செய்யலாம் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்கும் என்றார். அவர்களது அறிக்கை கிடைத்ததும், அது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றார். இ.பி.எஃப்., திட்டத்தின் முழு பயன்களை தொழிலாளர்கள் அடைய செய்வதற்காக, இ.ப்.எஃப்.,திட்டத்தில் அரசு மற்றும் நிர்வாகம் செலுத்தும் பங்கை அதிகரிக்க செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்திருக்கிறது. மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இனிமேல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி, 22 சதவீதம் கொடுக்கப்படும் என்றார். ஜனவரி 2009ல் இருந்து இது கணக்கிட்டு கொடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ' நானோ ' கார்

உலகின் மிக மலிவான காரான ' நானோ 'வை, வரும் மார்ச் மாதம் 23ம் தேதி மும்பையில் வர்த்தக ரீதியாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஏப்ரலில் இருந்து அந்த காருக்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி 2008 ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் பொதுமக்களுக்காக நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வர்த்தக ரீதியாக வரும் மார்ச் 23ம் தேதிதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. மும்பையில் மார்ச் 23ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா முழுவதிலும் இருக்கும் டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் இது பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்துதான் அதற்கான புக்கிங் ஆரம்பமாகும். புக்கிங் விபரங்கள், 23ம் தேதி நடக்கும் அறிமுக விழாவில் சொல்லப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2008 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார் ஜெனிவாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனை பார்வையிட்ட வெளிநாட்டு கார் கம்பெனிகள், தாங்களும் இம்மாதிரி குறைந்த விலை காரை தயாரிக்க வேண்டும் என்று எண்ணின. பிரான்சின் நிஸன் - ரெனால்ட் நிறுவனம், குறைந்த விலை ஃபேமிலி காரை விரைவில் வெளியிடுவதாக அப்போது அறிவித்தது. ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Wednesday, February 25, 2009

சிறிது முன்னேறி முடிந்தது பங்கு சந்தை

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியில் தலா 2 சதவீதத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவித்தது, ஆசிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற நிலை போன்றவற்றால் இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே ஏறி இருந்த குறியீட்டு எண்கள், மாலை வரை தொடர்ந்தது. இன்று ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி, ஆட்டோ, மெட்டல், பேங்கிங் மற்றும் பவர் பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்.டி.எப்.சி, எல் அண்ட் டி., டி.எல்.எப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, ஏபிபி, அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் ஏசிசி நிறுவன பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 80.50 புள்ளிகள் ( 0.91 சதவீதம் ) உயர்ந்து 8,902.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 28.60 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) உயர்ந்து 2,762.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் விலையை குறைக்கின்றன

இந்தியாவின் முன்னணி டிரக் தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட், டிரக் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கின்றன. உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை தலா 2 சதவீதம் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் டிரக் விலையை குறைக்கின்றன. உற்பத்தி வரி குறைப்பால் எங்களுக்கு மிச்சமாகும் பணம் முழுவதையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறோம் என்று அசோக் லேலாண்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு வாகன தயாரிப்பாளர்களும் ரூ.16,000 வரை விலையை குறைப்பார்கள் என்று தெரிகிறது. உற்பத்தி வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், சேவை வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஜப்பானின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்து விட்டது

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நாடாகவும், ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும் ஜப்பானின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 45 சதவீதம் குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் காரணமாக ஜப்பான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்திருப்பதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்கான ஏற்றுமதி 53 சதவீதமும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பானின் டிரேட் டெபிசிட் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்து விட்டது. உலக அளவில் ஜப்பானின் கார்களுக்கான டிமாண்ட் 69 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போனதால் ஜப்பானின் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜப்பானின் பொருளாதாரமே ஏற்றுமதியை நம்பித்தான் இருப்பதால், ஏற்றுமதி குறைந்திருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தை பெரிதாக பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இப்போதுதான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவும், இரண்டாவது பொருளாதார நாடான ஜப்பானும் இணைந்து, ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
நன்றி : தினமலர்


சென்னையில் வீடுகளின் விலையை ரூ.13 லட்சம் வரை குறைத்தது டி.எல்.எஃப்

சென்னையில் கட்டியிருக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் ( பிளாட்) விலையில் ரூ.13 லட்சம் வரை குறைப்பதாக, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்.,அறிவித்திருக்கிறது. டி.எல்.எஃப்.,இன் அறிவிப்பை தொடர்ந்து மற்ற கட்டுமான நிறுவனங்களும் வீடுகளின் விலையை குறைக்கும் என்று தெரிகிறது. டி.எல்.எஃப்., நிறுவனம், வீடுகளின் விலையை குறைப்பதில் சென்னை மூன்றாவது நகரமாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரு மற்றும் ஐதராபாத்தில் உள்ள வீடுகளின் விலையை டி.எல்.எஃப்., குறைத்தது. இப்போது சென்னையிலும் விலை குறைப்பது அமல்படுத்தப்படுகிறது. இது தவிர குர்காவ்ன், பஞ்ச்குலா மற்றும் கொச்சியிலும் அவர்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட இருக்கிறார்கள். ' குறிப்பிட்ட சில நகரங்களில் கட்டுப்படியான விலையில் வீடுகள் ' என்ற திட்டத்தின் கீழ் இவைகள் கட்டப்படுவதாக டி.எல்.எஃப்., உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் புதிதாக வீடுகள் வாங்க இருப்பவர்களும், ஏற்கனவே வாங்கியவர்களும் இந்த விலை குறைப்பால் பயனடைவார்கள் என்றார் அந்த உயரதிகாரி . சென்னையில் இவர்கள் குடியிருப்பை கட்ட ஆரம்பித்த மார்ச் 2008ல், வீடுகளின் விலையை சதுர அடிக்கு ரூ.2,800 என்று வைத்திருந்தார்கள். ஆனால் அது கட்டி முடிக்கப்பட்டபோது ரூ.3,000 ஆக உயர்ந்து விட்டது. இப்போது அது புது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,500 ஆகவும், இனிமேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,550 ஆகவும் குறைக்கப்படுகிறது என்று டி.எல்.எஃப்., தெரிவித்திருக்கிறது. இதனால் வீடுகளின் அளவை பொருத்து, வீடு வாங்குபவர்களுக்கு ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மிச்சமாகும். சென்னையில் டி.எல்.எஃப்., நிறுவனம் மொத்தம் 3,493 வீடுகளை கட்டியிருக்கிறது. அதில் 1,500 வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, February 24, 2009

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இன்று காலை பெரும் சரிவுடன் ஆரம்பித்த மும்பை பங்கு சந்தை, மதியத்திற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பின்னர் ஓரளவு சரியானது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.15 புள்ளிகள் ( 0.24 சதவீதம் ) மட்டும் குறைந்து 8,822.06 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.55 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 2,733.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி., செய்ல், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், டாடா ஸ்டீல், விப்ரோ, மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ஓ.என்.ஜி.சி.,என்.டி.பி.சி., டி.எல்.எஃப், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, கிராசிம், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டாடா பவர், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் எல் அண்ட் டி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


12 வருடங்களுக்குப்பின் அமெரிக்க பங்கு சந்தைகளில் கடும் சரிவு

வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தும் கூட, அந்நாட்டின் பங்கு சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த அக்டோபர் 28, 1997 க்குப்பிறகு மிகப்பெரிய சரிவாக, டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 250.9 புள்ளிகள் ( அல்லது 3.41 சதவீதம் ) சரிந்திருந்தது. ஆனால் வங்கிகளின் பங்குகள் விலை உயர்ந்து தான் இருந்தது. சிட்டி பேங்க் இன் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு முடிவு செய்திருந்த போதும் கூட, வங்கிகள் தனியார் வசமே இருக்கட்டும் என்று தான் விரும்புகின்றன. ஏற்கனவே வந்த தகவலின் படி, சிட்டி குரூப்பின் குறிப்பிடப்பட்ட பங்குகளை அமெரிக்க அரசு வாங்கிக்கொண்டு அதை தேசியமயமாக்கி விடும் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அவ்வாறு சொல்லவில்லை. டெக்னாலஜி துறையை சார்ந்திருக்கும் நாஸ்டாக்கிலும் நேற்கு 53.5 புள்ளிகள் ( அல்லது 3.71 சதவீதம் ) குறைந்திருந்தது. ஐரோப்பிய சந்தைகளான லண்டன் எஃப் டி எஸ் ஸி 100 ன் புள்ளிகள் 1 சதவீதமும், பிரான்சின் கேக் 0.8 சதவீதமும், பிராங்பர்ட்டின் டாக்ஸ் 2 சதவீதமும் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


புதுச்சேரி எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் லாக் அவுட்

சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எஃப்.டயர் கம்பெனி, அதன் புதுச்சேரி தொழிற்சாலையில் லாக்அவுட் செய்திருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக லாக் அவுட் செய்திருப்பதாக மும்பை பங்கு சந்தையில் அது அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 22 ம் தேதி இரண்டாவது ஷிப்ட்டில் இருந்து லாக்அவுட் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. எம்.ஆர்.எஃப்.,நிறுவனத்திற்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கேரளாவில் கோட்டயம், ஆந்திராவில் மேடக் மற்றும் கோவாவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் அதன் தொழிற்சாலைகளில் ஒரு வருடத்திற்கு மேலாக தொழிலாளர் பிரச்னை இருந்து வருகிறது. அதன் திருவெற்றியூர் தொழிற்சாலை கடந்த 2007 டிசம்பர் மாதத்தில் இருந்தே மூடப்பட்டிருக்கிறது. அங்கு எம்.ஆர்.எஃப்., நிர்வாகம் கொண்டுவந்த நிரந்தர லாக் அவுட் திட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியை சென்னை ஐகோர்ட் கடந்த வாரத்தில் நிறுத்தி வைத்தது.
நன்றி :தினமலர்

Monday, February 23, 2009

பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.பி.ஐ.எடுக்கும் : சுப்பாராவ்

இந்திய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்படும் போது வேண்டிய நடவடிக்கையை எடுக்க தயங்காது என்று ஆர்.பி.ஐ.,யின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளின் மத்திய வங்கி தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த சுப்பா ராவ், நிதி அமைச்சரை சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு அன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் குறித்தும் இந்திய பொருளாதார நிலை குறித்தும் பேசினார். அப்போது நம்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றார். வெளிநாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அதனை சமாளிக்க அங்குள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே சென்றிருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்று இங்கே உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் டோக்கியோ சென்றிருந்த சுப்பா ராவ் அங்கு பேசியபோதுற, நாங்கள் இன்னும் வட்டியை குறைக்க முடியும். ஆனால் எவ்வளவு குறைப்பது, எப்போது குறைப்பது என்றுதான் தெரியாமல் இருக்கிறது என்றார். இப்போது ரிசர்வ் வங்கியில் ரிபோ ரேட் 5.5 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரிபோ ரேட் 4.0 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வாங்குகிறது ரிலையன்ஸ்

அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வாங்கும் முயற்சியில் ரிலயன்ஸ் இன்டஸ்டிரீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு மற்றும் வளைகுடா கடற்பகுதியில் கிடங்குகளை அது தேடி வருகிறது. கிடங்குகளை குத்தகைக்கு எடுக்கிறார்களா அல்லது விலைக்கு வாங்குகிறார்களா என்று இன்னும் தெரியவில்லை. அந்த கிடங்குகள் ஒவ்வொன்றும் 2,00,000 முதல் 2,50,000 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. மார்ச் முடிவிற்குள் கிடங்குகள் வாங்கும் வேலை முடிந்து விடும் என்று தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம், நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் தயாராகும் எண்ணெய்யை, உலக அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. அதற்காக இந்த சேமிப்பு கிடங்குகள் வாங்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு இருக்கும், நாள் ஒன்றுக்கு 6,60,000 பேரல் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறனுடைய தொழிற்சாலைக்கு அருகிலேயே 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் இன்னொரு தொழிற்சாலையையும் அது நிறுவியிருக்கிறது. அதன் மூலம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை கொண்டதாக ஆகியிருக்கிறது.
நன்றி : தினமலர்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் விலகல்

ரூ.7,800 கோடி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக இருந்து வந்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம், அதிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 12,2009 முதல் அது விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. எனினும் அங்கு நடந்ததாக கூறப்படும் ரூ.7,800 கோடி மோசடி குறித்து நடந்து வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அது அறிவித்திருக்கிறது. சனிக்கிழமை அன்று கூடிய சத்யத்தின் போர்டு, அதன் ஆடிட்டராக இருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனையடுத்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கு பதிலாக வேறு ஆடிட் நிறுவனத்தை நியமிக்கும் வேலையில் சத்யம் போர்டு ஈடுபட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை சென்னையில் அறிமுகம்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும், எந்த பகுதிக்கும் '50 காசுகளில்' பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இச் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது: சில வளர்ந்த நாடுகளில் மட் டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பில் உள்ள இந்த '3 ஜி' சேவை, தற்போது முதன் முதலாக இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., மூலம் சென்னையிலேயே துவக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரே நேரத்தில் ஏழை மக்களுக்காக நடத்தும் இதுபோன்ற சாதனைகளை நாம் என் றைக்கும் நிரந்தர சரித்திர கல்வெட்டுக்களாக ஆக்குகிறோம். இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், நான் இங்கே வந் திருப்பது என் உடலில் ஒரு துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பிரச் னைக்காக, நாட்டு நன்மைக் காக போராடுவேன் என்பதற்காகத் தான். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப் பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா பேசியதாவது: கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல்., மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என். எல்., மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ராஜா பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் கூறியதாவது: சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு குல்தீப் கோயல் தெரிவித்தார். நிகழ்வில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முதன் மை பொது மேலாளர் வேலுசாமி, தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு': பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3ஜி' மொபைல் சேவை சென்னையில் துவக் கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வருகிறது. இதற்கு தனி சிம் கார்டு மற்றும் எண் வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டின் விலை 300 ரூபாய். இதில் பேசும் வசதி அளிக்கப் படவில்லை. ஏழு நாட்கள் 'வேலிடிட்டி' வழங்கப்பட் டுள்ளது. 2 ஜி சேவையிலிருந்து 3ஜி சேவைக்கு நேரடியாக மாறும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் வாய்ஸ் மற்றும் டேட் டா பிளான் எனும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இரண்டு திட்டங்களிலும் போஸ்ட் பெய்டு மற்றும் பிரிபெய்டு வசதிகளும் உள் ளன.
நன்றி : தினமலர்


Sunday, February 22, 2009

குக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்

வங்கியின் கிளை இல்லாத குக்கிராமங்களில் சேவை செய்ய, மின்னணு சாதனங்களின் வசதியுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கியில் பணம் போடும் வசதி இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வேலை செய்ய தொழிலாளிகள் போகும் போது, அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். இப்படி குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்ய ஸ்டேட் பாங்க் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. வங்கியின் சார்பில், குக்கிராமங்களில், வர்த்தக பிரதிநிதிகள் இருப்பர். அவர்களிடம் மின்னணு சாதனம் தரப்படும். விவசாயிகள், தொழிலாளிகளுக்கு வங்கி தரும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, இந்த சாதனம் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உடனுக்குடன் பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்கில் போட இந்த மின்னணு சாதனம் உதவுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சட்டத் தின் படி செயல்படும் கூட்டுறவு சொசைட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை வங்கியின் பிரதிநிதியாக செயல்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கிராமத்தில் உள்ளவர்கள் பணத்தை செலுத்தினால், அதே போல, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணமும் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் இருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றும் வசதியையும் வங்கி ஏற்படுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் கார்டை, ஏ.டி.எம்., கார்டு போலவே பயன்படுத்தலாம். பணத்தை போடுவது, எடுப்பது, கணக்கு விவரம் பெறுவது ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு புத்துயிர்

வியாழனன்று சந்தை மேலும் கீழுமாக இருந்தது என்றாலும், அதற்கு முந்தைய மூன்று நாட்கள் கீழேயே போய்க் கொண்டிருந்த சந்தையை மேலே கொண்டு வந்தது. ரூபாயின் மதிப்பு 50 வரை சென்று வந்ததால், அது சாப்ட்வேர் கம்பெனிகளுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்து அந்தக் கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன. பணவீக்கம் மேலும் இந்த வாரம் குறைந்திருந்தது. ஆனால், சந்தை அதைக் கண்டுகொள்ளவில்லை. வெள்ளியன்று சந்தை உலகச் சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது. அன்றைய தினம் ஒரு கட்டத்தில் சந்தை, 280 புள்ளிகள் வரை இழந்திருந்தது. இது தான் சமயம் என்று வாங்குபவர்கள் சிலர் இருந்ததால், சந்தை இழந்ததில் 80 புள்ளிகளை திரும்பப் பெற்றது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 199 புள்ளிகள் கீழே சென்று 8,843 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 52 புள்ளிகள் கீழே சென்று 2,736 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை 9,000க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான். கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி முடிவில் 9,647 புள்ளிகளில் சந்தை முடிவடைந்திருந்தது. ஆனால், தற்போது 9,000 அளவில் அல்லாடுவது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் தான். நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால், இன்னும் விலை குறைகிறது. அதனால், முதலீட்டா ளர்கள் பயப்படும் நிலை உள்ளது. அதனால், சந்தையால் மேலே வரவே முடியவில்லை. நீண்டகாலம் என்று வாங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். சென்ற வருடமெல்லாம் பணவீக்கம் குறையாதா என்று கடவுளைப் பிரார்த் தித்துக் கொண்டிருந்தோம். தற்போது இன்னும் குறையாமல் இருக்க வேண்டுமே என்று முதலீட்டாளர்கள் பிரார்த் தித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறைவதற்குக் காரணம் தேக்க நிலை தான். சென்ற வாரம் 4.39 சதவீதம் அளவிற்கு இருந்தது, தற்போது 3.92 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது, பரமபத இறக்கம் தான். ஏறுவதில் இருந்த ஜோர் இறங்குவதிலும் உள்ளது. ஆனால், இரண்டுமே நிம்மதி தரவில்லை. டிசம்பர் 2007ல் 3.8 சதவீதம் வரை சென்றிருந்தது. அதை கிட்டத்தட்ட மறுபடி நெருங்கி விட்டது. இது போன்ற பொருளாதார மந்தமான சூழ்நிலையில் எல்லாரும் எங்கும் முதலீடு செய்யாமல் பணத் தைப் பணமாக வைத்திருப்பதையே விரும்புவர். நல்ல சமயத்திற்காகக் காத்திருப்பர். ஆனால், இது மியூச்சுவல் பண்டு களுக்கும் பொருந்துகிறது. தற்போது மியூச்சுவல் பண்டுகள் அதிகம் முதலீடு செய்யாமல் பணத்தைக் கைவசம் வைத்துள்ளது. ஜனவரி முடிவில் எல்லா மியூச்சுவல் பண்டுகளும் இது போல கைவசம் வைத்திருந்தது 9,729 கோடி ரூபாய். நல்ல சமயத்திற் காக அவர்களும் காத்திருக்கின்றனரோ என் னவோ? பூஜாரிகள் தான் சாமியிடம் வரம் கேட்க வேண் டும்.. ஆனால், சாமியே வரம் கேட்கும் நிலைக்கு வந்தால்? 9,729 கோடி ரூபாய் என்பது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர் அளவு, சந்தைக்குள் வந்தால் சந்தையில் புது ரத்தம் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.
8 சதவீத வட்டி: வீடு வாங்கப் போகின்றீரா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித் தது... வங்கிகளுடையே போட்டி உண்டாகியுள்ளது. வேறு சில வங்கிகளும் 8 சதவீதம் தான் முதல் வருட வட்டி என்று அறிவித் துள்ளன. ஆனால், அது ஐந்து லட்சம் வரை உள்ள லோன்களுக்குத் தான் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டு விலையும் குறைகிறது, வட்டியும் குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு லாபம் தானே? அடுத்த வாரம் பங்குச் சந்தை ரிசர்வ் வங்கியை நம்பி இருக்கும். ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : dinamalar


Saturday, February 21, 2009

மகாராஷ்டிராவில் பள்ளிகளில் மொபைல் போனை உபயோகிக்க தடை

மகாராஷ்டிராவில் இருக்கும் பள்ளிகளில் மொபைல் போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிமேல் மொபைல் போனை பயன்படுத்த முடியாது.மகாராஷ்டிரா முழுவதும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் மொபைலை பயன்படுத்தியது தெரிய வந்தால் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். இதையே ஒரு ஆசிரியரோ அல்லது பள்ளி அலுவலரோ செய்தால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை பள்ளியின் பிரின்சிபால் தான் நடைமுறை படுத்த வேண்டும். ஆனால் அதே நேரம் அவரும் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்றும், மீறி பயன்படுத்தினால் அவரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


பதவி ஏற்ற ஒரே மாதத்தில் பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது

கடும் எதிர்பார்ப்புடன் அமெரிக்காவின் 44 வது அதிபராக பதவி ஏற்ற பாரக் ஒபாமாவின் செல்வாக்கு, பதவி ஏற்ற ஒரே மாதத்தில் சரிந்து விட்டது. பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும் அமெரிக்கா, அதன் பெருமையை இழந்து வந்த நேரத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரக் ஒபாமாவை அந்நாட்டு மக்கள் பெரிதும் நம்பினர். ஒபாமா அதிபராக வந்தால் பொருளாதார சீர்குழைவை சரி செய்வார் என்றும், அமெரிக்காவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவார் என்றும் அந்நாட்டு மக்கள் நம்பினர். ஆனால் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்ற அவர், ஒரு மாதம் ஆகியும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் செய்யவில்லை என்கிறார்கள் அமெரிக்க மக்கள். மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு, அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் வேலை செய்யவில்லை என்கிறார்கள். பிப்ரவரி 18 - 19 தேதிகளில் சி.என்.என்.மற்றும் ஒப்பினியன் ரிசர்ச் கார்பரேஷன் இணைந்து எடுத்த கருத்து கணிப்பில் 67 சதவீத அமெரிக்க மக்கள் மட்டுமே ஒபாமாவின் நடவடிக்கையில் திருப்தி கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 11 நாட்களுக்கு முன் 76 சதவீதமாக இருந்ததுதான் இப்போது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது. அவருக்கு ஓட்டளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அவர் மீது நம்பிக்கை போய் விட்டது. இன்னொரு குரூப்பான ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஒப்பினியன் டைனமிக்ஸ் பிப்ரவரி 17 - 18 ல் எடுத்த கருத்து கணிப்பில் 60 சதவீதத்தினர் மட்டுமே ஒபாவுக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுவும் 65 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஒபாமாவின் தனி செல்வாக்கும் ஒரு மாதத்திற்கு முன் 76 சதவீதமாக இருந்தது இப்போது 68 சதவீதமாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நகை கடைகளில் இப்போது கடும் கூட்டம் : வாங்க அல்ல ; விற்க.

தங்கம் விலை என்றுமில்லாத அளறவாக கிராம் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.1566 வரை வந்து விட்டது. ஆனாலும் மும்பையில் உள்ள நகை கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு வித்தியாசம். இந்த கூட்டம் நகைகளை வாங்குவதற்காக கூடியது அல்ல ; விற்பதற்காக வந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,566 வரை ஏறி விட்டதால் மக்கள் அவர்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்க முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள். மும்பையில் தங்க நகை கடைகள் அதிகம் இருக்கும் ஜாவரி பஜாரில் இருக்கும் நகை கடையான ஜக்ராஜ் காந்திலால் அண்ட் கோ வின் அதிபரான நிதேந்திரா ஜெயின் இது குறித்து பேசியபோது, கடந்த 10 நாட்களாக எங்கள் கடைக்கு ஏராளமான மக்கள் பழைய நகைகளை விற்க வருகிறார்கள். தங்கத்தின் விலை இன்னும் கூடுமே அன்றி குறையாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். நாங்கள் காலை 11.30 இலிருந்து மாலை 6.30 வரை கடையை திறந்து வைத்திருக்கிறோம். பழைய நகைகளை இப்போதுள்ள விலையில் இருந்து ஒரு சதவீதம் குறைத்து நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்றார் அவர். பழைய நகைகளை விற்க வந்தவர்களில் ஒருவரான கான் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, இப்போதுள்ள நிலையில் எதில் முதலீடு செய்தாலும் லாபம் கிடைப்பதில்லை. எனவேதான் எங்கள் குடும்பத்து பழைய நகைகள் சிலவற்றை விற்க வந்தேன் என்றார்.

நன்றி : தினமலர்


ஸ்டேட் பேங்க் கின் அதிரடி திட்டம் : கார் கடனுக்கு ஒரு வருடத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் புதிதாக கார் கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருக்கிறது. இப்போது, கார் கடனுக்கு ஸ்டேட் பேங்க் 11.5 சதவீத வட்டியும், மற்ற பொதுத்துறை வங்கிகள் 10.25 முதல் 12.25 சதவீத வட்டியும் வசூலிக்கின்றன. மேலும் கார் கடனை அதிகபட்சமாக 84 இ.எம்.ஐ.,களாக செலுத்தலாம் என்றும் ஸ்டேட் பேங்க் சொல்லியிருக்கிறது. டிசம்பர் 2008 உடன் முடிந்த காலத்தில் கணக்கிட்டு பார்த்தபோது, ஸ்டேட் பேங்க்கில் கார் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கார் கடனை அதிகரிக்கும் விதமாக இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதா மாதம் 20,000 பேருக்கு கார் கடன் கொடுக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, அதிக வட்டி காரணமாக இந்தியாவில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருப்பதை அறிந்த ரிசர்வ் பேங்க், வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. கார் விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் டிசம்பர் மாதத்தில் 7 சதவீதமும் ஜனவரி மாதத்தில் 3 சதவீதமும் குறைந்திருந்தது. கார் கடனுக்கு இப்போது வட்டியை குறைத்திருக்கும் ஸ்டேட் பேங்க், கடந்த ஜனவரி 31ம் தேதி, வீட்டு கடனுக்கு ஒரு வருடத்திற்கு 8 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருந்தது.
நன்றி : தினமலர்


Friday, February 20, 2009

பங்குசந்தையில் சரிவு

பங்குச்சந்தையில் , பங்கு வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது . மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 8915 புள்ளிகளில் துவங்கியது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 2748 புள்ளிகளில் துவங்கியது . வர்த்தக முடிவின் போது சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்து 8843 புள்ளிகளில் முடிந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52 புள்ளிகள் குறைந்து 2,736.45 புள்ளிகளில் முடிந்தது .
நன்றி : தினமலர்


Thursday, February 19, 2009

தனலட்சுமி வங்கி ஆன்-லைன் சேவை

ரிசர்வ் வங்கியின் 'துரித பணம் அனுப்பும் சேவை திட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, 'தனம் எக்ஸ்பிரஸ்' என்ற 'ஆன்-லைன்' பணம் அனுப்பும் வசதியை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனலட்சுமி வங்கி, அபுதாபியில் உள்ள மிகப் பெரிய 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிவர்த்தனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அபுதாபியில் உள்ள ஒருவர், இந்தியாவில் எந்த வங்கியின் எந்த கிளைக்கும் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். இந்த வங்கியின் கொச்சியில் உள்ள தொழில் நிதியக் கிளை இதன் ஒரு பிரத்யேக கேந்திரமாக விளங்கும். பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் (ஆர்.டி.ஜி. எஸ்.,) மற்றும் என்.இ.எப்.டி., மூலம் பணம் அனுப்பி வைக்கப் படும்.
நன்றி : தினமலர்


சுகுணா 'டெய்லி பிரஷ்' கிளை துவக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் 150 சுகுணா, 'டெய்லி பிரஷ்' நேரடி விற்பனை நிலையங்களை துவக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிக்கன் கோழி உற்பத்தியில் சிகரத்தை எட்டியுள்ள சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் சார்பில், சுகுணா 'டெய்லி பிரஷ்' என்ற பெயரில் நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. கோவை ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் முதல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுச்சேரி உட்பட பல நகரங்களிலும், 'டெய்லி பிரஷ்' கிளைகள் துவக்கப்பட்டன. தற்போது கேரளாவில் அங்கமாலி, திருச்சூர், எர்ணாகுளம், எளமாக்காரா என பல நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்படாத சிக்கன்களை வாங்க விரும்பாத சிக்கன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளாக இந்த விற்பனை நிலையங்கள் அமைந் துள்ளன. லாலி பப், லெக் பீஸ், கறி கட், முழுக்கோழி என எட்டு விதமான சிக்கன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவப் பிரியர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில், ப்ரோசன் சிக்கன், ஹோம் பைட்ஸ் போன்ற உடனடி தயாரிப்பு சிக்கன் வகைகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு 'டெய்லிபிரஷ்' கடையிலும் தினமும் 4,000 கிலோ சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக டோர் டெலிவரி வசதியும் துவக்கப்பட்டிருப்பதாக இப்பிரிவின் துணை பொது மேலாளர் பிரியா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 150 கடைகளைத் திறக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த கிளைகள் துவக்க முன் வரலாம் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை கீழே தள்ளியது இடைக்கால பட்ஜெட் : சேதுராமன் சாத்தப்பன்

பட்ஜெட், 600 புள்ளிக்கு மேல் வரை சந்தையில் இருந்து அள்ளிக் கொண்டு போய்விட்டது. இந்த வாரம் திங்கள் முதல் நேற்று வரை நஷ்ட வாரம் தான். என்ன செய்வது என்று தெரியாமல் முதலீட்டாளர்கள் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். சாண் ஏறி சாண் வழுக்காமல் முழம் வழுக்குகிறது. சந்தை 9,000த்திலேயே அல்லாடுகிறது. பட்ஜெட்டை அனைவரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். நடக்கும் என்பார் நடக்காது என்பது போல ஆகிவிட்டது.
உலகளவில் ஏற்படும் தொய்வு, சந்தைகளின் இறக்கம், இங்கும் பிரதிபலித்தது. பட்ஜெட்டில் இன்னும் ஒரு பேக்கேஜ் வருமென அனைவரும் எதிர்பார்த்தனர்; அதுவும் வரவில்லை, வேறு எவ்விதமான நல்ல அறிவிப்புகளும் வரவில்லை. அது, சந்தையை திங்களன்றும் தாக்கியது, நேற்று முன்தினமும் இறக்கிச் சென்றது. திங்களன்று 329 புள்ளிகளும், நேற்று முன்தினம் 270 புள்ளிகளும் குறைந்தது. இந்தத் துறை தான் என்று இல்லாமல் அனைத்து துறைகளும் கீழே இறங்கியது.
கடந்த 30 ஆண்டுகளில் எப்போதெல்லாம் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் சந்தை கீழே இறங்கியே வந்திருக்கிறது. அதுபோல தற்போதும் இறங்கியுள்ளது. ஒரு வேளை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்குமோ என்னவோ? உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், நேற்று துவக்கத்தில் சந்தை கீழேயே இருந்தது. இது தான் நல்ல சமயம் என்று வாங்குபவர்கள் இருந்ததால் சந்தை சிறிது மேலே சென்றது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 19 புள்ளிகள் கீழே சென்று 9,015 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5 புள்ளிகள் மேலே சென்று 2,776 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 9,000க்கு மேலேயே இருப்பது ஒரு சிறிய ஆறுதல். இறங்கும் சந்தையும், ஏறும் டாலர் மதிப்பும்: சந்தை இப்படி இறங்குவதால், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. 50 ரூபாயை தாண்டி பயமுறுத்துகிறது. ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இறக்குமதியாளர்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்திருந்தாலும் இன்னும் விலை குறையுமா என்று தான் பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். ஸ்டேட் பாங்க் 8 சதவீதத்தில் கடன் அளிக்கிறேன் என்றாலும் அது முதல் ஆண்டுக்கு மட்டும் தான் என்பது ஒரு சிறிய குறை. ஆதலால், நீண்ட கால கடன் எடுப்பவர்கள் முடிவு எடுப்பதில் சிரமப்படுகின்றனர். வீடுகளை கட்டி வைத்துள்ள கம்பெனிகள் தள்ளுபடி செய்து விற்கவும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. டி.எல்.எப்., முதல் கட்டமாக டில்லி மற்றும் பெங்களூரில் சிறிது தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது கட்டுமானத் துறையை பலப்படுத்தப் போகிறதா என்று பார்க்க வேண்டும்.
தங்கமே தங்கமே: எல்லையே இல்லை என்ற அளவிற்கு ஏறிக்கொண்டு செல்கிறது. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், ஹெட்ஜ் பண்ட் போன்று எங்கு முதலீடு செய்தாலும் தற்போது பெரிய வருமானம் கிடைக்காது என்று சரியாக தெரிந்ததால் உலகளவில் தங்கம் மேல் அனைவரும் கண் வைத்திருக்கின்றனர். அது விலையைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.
திருமணத்திற்கு பெண் வைத்திருப்பவர்கள் அடிமடியில் பயத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதம் லாபத்தை தந்திருந்தாலும், சமீபகாலத்தில் 36 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இல்லை? விலை உடனடியாகக் குறையாவிட்டாலும் சிறிது நாட்கள் கழித்து குறைய வாய்ப்பு உண்டு. இவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் இருக்கின்றனர் என்றால் இல்லை அதிகமாக இல்லை என்று தான் கூறவேண்டும். அத்தியாவசியமாக வாங்கத் தான் வேண்டும் என்பவர்களும், வேறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லை என்பதால் முதலீடு செய்பவர்களும் செய்கின்றனர். ஆனால், கூடும் விலையால் தங்கம் இறக்குமதி மிகவும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் தங்கம் விலை கூடும் போதெல்லாம் வரிசையில் நின்று விற்பவர்களும் இருப்பார்கள். தற்போது அதுவும் குறைந்து விட்டது. இந்த ஆண்டு அரசு நிறைய கடன் வாங்க இருப்பதாக வந்த செய்திகளும் சந்தையை கீழே இறக்க ஒரு காரணமாக இருந்தது. அதாவது, அப்படி அரசு கடன் வாங்கும் போது அது தற்போது குறந்து வரும் வட்டி விகிதங்களை கூட்டி விடும். அந்த பயத்தினாலும் சந்தைகள் சிறிது சரிந்தன என்று கூறலாம். இப்போது அனைவரும் பிரார்த்திப்பது ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை தான். கட்டாயம் வரவேண்டும், அது தான் சந்தையை நிமிர்த்தும் என்பது பலருடைய எண்ணம்.
நன்றி : தினமலர்


Wednesday, February 18, 2009

100 கோடி ரூபாய்க்கு வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைகள்: விலை குறையும் பொருட்கள் எவை?

தமிழக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு மற்றும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளில் மின் கட்டணமும், பஸ் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. கடந்த மூன்று பட்ஜெட்களில் பல பொருட்களின் மீதான விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிக்கு விலக்கு அளித்தும், வரியைக் குறைத்தும் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் வரி விலக்கு, வரி குறைப்புகள் செய்ய அரசு கருதியுள்ளது.
மதிப்புக் கூட்டு வரியில் பின்வரும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன:
* மிளகு மற்றும் சீரகத்திற்கு விற்றுமுதல் நிபந்தனையுடன் வரிவிலக்கு அளிக்கப்படும்.
* பருப்பு, பயிறு மற்றும் பட்டாணிக்கு கொள்முதல் வரியிலிருந்து 1.1.2007 முதல் விலக்களிக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டிக்கு தற் போது 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இப்பொருளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் தகர டின்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
* வணிகச் சின்னமிட்ட நெய், ஊறுகாய் மீது தற்போது விதிக்கப்படும் 12.5 சதவீத வரி 4 சதவீதமாக குறைக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டகம், உலர்ந்த திராட்சை, சலவைத் தண்ணீர், இணைப்பான்களாக பயன்படுத்தப்படும் குண்டூசி, ஊக்கு, ஜெம் கிளிப், அடையாள அட்டை கிளிப், தேர்வு அட்டை கிளிப், ரப்பர் பேண்ட், ஸ்டேப்ளர் பின், ஐ-பாட், எம்.பி.,-3, எம்.பி.,-4 ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் 12.5 சதவீத வரி 4 சதவீதமாக குறைக்கப்படும்.
* சேலம் சேகோசெர்வ் மூலம் விற்கப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மீதான வரி 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைத்து விதிக்கப்படும்.
ண செங்கல் உற்பத்தியாளர்கள் எளிய முறையில் வரி செலுத்த வசதியாக, செங்கல் சூளை அடுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
* வணிகர்கள் கோரிக்கையை ஏற்று, 1.4.2006 முதல் 31.12.2006 வரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத் தின் கீழ் உண்டான விற்பனைத் தொகையை சேர்த்து கணக்கிட்டு, மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஆண்டு மொத்த விற்பனைத் தொகைøயாகக் கருதி மதிப்புக் கூட்டு வரி விதிப்பு செய்யப்படும்.
* இது மேற்குறிப்பிட்ட காலத்தில் மதிப்புக் கூட்டு வரி வசூலித்த வணிகர்களுக்கு மட்டும் பொருந்தும். இதனால், 10 ஆயிரம் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயன்பெறுவர்.
* 'வாட்' வரி விதிப்பை எளிமைப்படுத்த, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 மற்றும் அதன் விதிகளில் தேவையான உரிய திருத்தங் கள் மேற்கொள்ளப்படும்.இது குறித்த விவரங்கள் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும். இந்த வரிவிலக்கு மற்றும் வரிக் குறைப்பு சலுகைகள் 1.4.2009ல் இருந்து அமல்படுத்தப்படும். இச்சலுகைகளால் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும்.
நன்றி : தினமலர்


Tuesday, February 17, 2009

பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவு

பங்கு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் பங்குகள் அதிக அளவில் விற்கும் போக்கு காணப்பட்டது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு இறங்கி விட்டது. நிப்டி 2,800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 600 புள்ளிகளையும் நிப்டி 175 புள்ளிகளையும் இழந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்டிபிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி.பேங்க் போன்றவைகள் அதிகம் நஷ்டமடைந்திருக்கின்றன. இன்று மும்பை பங்கு சந்தையில் நிப்டி 270.45 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 9,035.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.00 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 2,770.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

புதுச்சேரி விமான நிலையம் செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகும் : குர்ஜார்

இந்த வருடம் மார்ச் மாதம் செயல்படுவதாக இருந்த புதுச்சேரி விமான நிலையம், செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கோவிந்த சிங் குர்ஜார் தெரிவித்தார். தற்போது கட்டப்பட்டு வரும் புதுச்சேரி விமான நிலையம், முன்பு போடப்பட்ட திட்டப்படி, வரும் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட வேண்டும். ஆனால் அங்கு வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி அங்கு வேலைகள் முடியாமல் இருக்கிறது என்றார் அவர். ரன்வேயை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்ன அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஆர்வமாக இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


நேற்று மட்டும் முதலீட்டாளர்கள் இழந்தது ரூ.ஒரு லட்சம் கோடி

மத்திய அரசு 2009 - 10 கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நேற்று ஒரு நாள் மட்டும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ரூ.ஒரு லட்சம் கோடியை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய தொழில் துறைகளை மேம்படுத்த எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்று கூறப்பட்டதால் நேற்று பங்கு சந்தை சரிவை சந்தித்தது. பட்ஜெட்டுக்கு முந்தைய இரண்டு வாரங்களில் கொஞ்சம் முன்னேறி இருந்த சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை அன்று பங்கு சந்தை முடிந்தபோது ரூ.30,71,114.61 கோடியாக இருந்த சந்தை முதலீடு, நேற்று வர்த்தகம் முடிந்த போது ரூ.29,79,509.44 கோடியாக குறைந்திருந்தது. ஒரே நாளில் சந்தை முதலீடு ரூ.91,000 குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த இடைக்கால பட்ஜெட் இழந்திருப்பதால், இனி வரும் நாட்களிலும் சந்தை சரிந்து கொண்டுதான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்கள் தொடர்ந்து சரிந்து தான் இருக்கும் என்கிறார்கள்.

தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவாக உயர்வு

ஏற்கனவே உயரத்தில் இருக்கும் தங்கத்தின் விலை இன்று என்றுமில்லாத அளவாக உயர்ந்து விட்டது. புதுடில்லியில் இன்றைய காலை வர்த்தகத்தின் போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,200 ஆக உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 960.20 டாலராக இருக்கிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், முதலீட்டாளர்கள் இப்போது தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் 10 கிராமுக்கு ரூ.360 கூடியிருக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாலும் இந்தியாவில் இது கல்யாண சீசனாக இருப்பதாலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், இன்று ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 37 டாலருக்கும் கீழே சென்று விட்டது. இன்று நியுயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 76 சென்ட் குறைந்து 36.75 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147.27 டாலர் வரை சென்ற கச்சா எண்ணெய் விலை இப்போது, அதிலிருந்து 75 சதவீதம் வரை குறைந்து விட்டது. அமெரிக்க பொருளாதாரம் கடும் சரிவில் இருப்பதால் அங்கு அதிகமான பேர் தினமும் வேலையை இழந்து வருகிறார்கள். எனவே அங்கு மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்து விட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானிலும் இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே அங்கும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது.
நன்றி : தினமலர்

நன்றி : தினமலர்

பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது கே.எஃப்.சி

பிரபல அமெரிக்க ஃபாஸ்ட் புட் நிறுவனமாக கே.எஃப்.சி., பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் அங்கு 300 க்கும் மேற்பட்ட புது ரெஸ்ட்டாரன்ட்களை துவங்குவதன் மூலம் அது 9,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 150 மில்லியன் பவுன்ட்கள் முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக டெலகிராப் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டனும் இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அங்குள்ளவர்கள் இப்போது குறைந்த செலவில் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை பயன்படுத்தி கே.எஃப்.சி., அங்கு புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க முன்வந்துள்ளது. இப்போது பிரிட்டனில் இருக்கும் கே.எஃப்.சி., ரெஸ்ட்டாரன்ட்களில் 22,000 பேர் ஷிப்ட் முறையில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு மணிக்கு 5.73 பவுன்ட் ( சுமார் ரூ.395 ) என்ற கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தாலும், கே.எஃப்.சி., நிறுவனம் கடந்த வருடத்தில் 36 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறந்திருக்கிறது. இந்த வருடத்தில் 44 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


பட்ஜெட்டில் வரி விதிப்பு இல்லாதது ஏன்: பிரணாப் பதில்: தேவையற்ற கடனுக்கும் எதிர்ப்பு

பார்லிமென்டின் ஒப்புதல் இல்லாமல் வரி விதிப்பதையும், தேவையற்ற வகையில் கடன் வாங்குவதையும் நான் விரும்பவில்லை. அப்படி செய்வது தவறான செயல். அதனால், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். இடைக்கால பட்ஜெட் சமர்ப்பித்த பின், லோக்சபா 'டிவி'க்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: அடுத்து பதவியேற்க உள்ள அரசு, பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் வகையில், முழுமையான பட்ஜெட்டில் திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் தற்போதைய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயல்பட்டுள்ளேன். பொருளாதார மந்தநிலை காரணமாக, வளர்ச்சி வீதம் 2 சதவீதம் கீழே இறங்கியிருந்தாலும், 9 சதவீத வளர்ச்சி வீதத்தை அடைய நாடு தொடர்ந்து பாடுபடும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முழுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்த இடைக்கால பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை. அரசியல் சட்ட ரீதியான கட்டுப் பாடுகளே அதற்கு காரணம். தற்போதைய அரசின் பதவிக்காலம் மே 22 - 23ம் தேதியுடன் முடிவடைந்து விடுகிறது. மேலும், தேர்தலும் நடைபெற உள்ளது. அதனால், பார்லிமென்டின் ஒப்புதல் இல்லாமல், தேவையற்ற வகையில் கடன் வாங்குவதையும், வரிகள் விதிப்பதையும் நான் விரும்பவில்லை. கடன் வாங்கினால், வரிகள் விதித்தால், அது தவறான செயலாகி விடும். அடுத்த அரசு எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை, இந்த பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளேன். குறிப்பாக மொத்த நிதிப்பற்றாக்குறை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மந்த நிலையைப் போக்க நிதி உதவி தேவைப்படும் போது அரசு பரிசீலக்க வேண்டிய விஷயம். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். சிதம்பரம் கருத்து: 'விரைவான மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியின் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இடைக்கால பட்ஜெட் உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உலக நிதி நெருக்கடியால், இந்த ஆண்டு சிரமமான ஆண்டாக மாறியுள்ளது. இந்தக் கால கட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க கடும் பணியாற்றியுள்ளார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அவரின் செயல் பாராட்டத்தக்கது. உலக அளவில் கடும் மந்த நிலை நிலவினாலும், 2008 -09ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி
7.1 சதவீதத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது திருப்தி அளிக்கும் விஷயம். இவ்வாறு சிதம்பரம் கூறினார். உலக வங்கி உதவும்: இதனிடையே பட்ஜெட் தாக்கலுக்குப்பின் வழக்கமாக நிதித்துறை செயலர் உட்பட அதிகாரிகள் நிருபர்களிடம் பேசினர். பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா, நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் ஆகியோர், 'நடப்பாண்டில் சுணக்கம் தீர தனி நிதி உதவி இருக்காது. தேவைப்பட்டால் அரசு உதவும். 'மேலும் உலக வங்கியிடம் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறப் போகிறோம். இதில், 15 ஆயிரம் கோடி பொதுத்துறை வங்கிகள் நிதி ஆதாரத்தை வலுவூட்ட தரப்படும். எஞ்சியுள்ள பணம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவன வளர்ச்சிக்கு செலவழிக்கப்படும். 'இன்றைய நிலையில் மொத்த வளர்ச்சியில் நிதிப்பற்றாக்குறை 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது' என்றனர். அதே சமயம் கவர்ச்சி இல்லாத பட்ஜெட் என்பதால், சென்செக்ஸ் புள்ளிகள் 329 குறைந்தது. நேற்றைய பங்குச் சந்தை குறியீட்டெண் 9,305.45 ஆகக் குறைந்தது.
உள்கட்டமைப்புக்கு ரூ.லட்சம் கோடி: மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைக்கு, 99 ஆயிரத்து 534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம், மின்சாரம், குடியிருப்பு மற்றும் சாலை உட்பட நாட்டின் கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டமான 'பாரத் நிர்மாண்' திட்டத்திற்கு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக 11 ஆயிரத்து 842 கோடி ரூபாயும், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 14 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்திற்கும், 8,800 கோடி ரூபாய் கிராமப்புறக் குடியிருப்பிற்கும், 9,992 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கும் செலவிடப்படும். இவை பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பாரத் நிர்மாண் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Monday, February 16, 2009

பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க திட்டம்: டாஸ்மாக் பிரமாண்ட ஏற்பாடு

தமிழக மதுக்கடைகளில் நடப்பாண்டு பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆறாயிரத்து 852 டாஸ்மாக் மதுக்கடைகளில், கடந்த ஆண்டு பீர் விற்பனை 62 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டது. இந்த விற்பனை உயர்வை நடப்பு ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க செய்ய 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழக மதுக்கடைகளில், கல்யாணி ப்ளக் லேபிள் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம், கிங்பிஷர் பிரிமியம் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் கோல்டு பிரிமியம், மார்கோபோலா சூப்பர் ஸ்ட்ராங், ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியம், புல்லட் சூப்பர் ஸ்ட்ராங், ப்ளக் நைட் சூப்பர் ஸ்ட்ராங், கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், மெட்ராஸ் ப்ள்ஸ்னர் டீலக்ஸ், கோல்டன் ஈகிள் லார்ஜர், ஹைவார்ட்ஸ் 5000 சூப்பர் ஸ்ட்ராங் பீர் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. பீர் விற்பனை மாதம் சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 500 கேஸ்கள் (ஒரு கேஸில் 12 பாட்டில் இருக்கும்) விற்கிறது. தினந்தோறும் சராசரியாக 73 ஆயிரத்து 880 கேஸ் என்ற அளவில் இருந்த பீர் விற்பனை, கடந்த ஆண்டு கோடை காலத்தில், ஒரு லட்சத்து 52 ஆயிரம் கேஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது. கடந்த ஆண்டு பீர் விற்பனை 57 சதவீதம் முதல் 62 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், பிராந்தி, ரம், ஜின் போன்றவற்றை உள்ளடக்கிய ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விற்பனை 22 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
பீர் விற்பனை அதிகரித்தது போல் ஷா வாலாஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கோல்கொன்டா ரூபீ பிரிமியம் ஒயின் விற்பனை 37 சதவீதமாக உயர்ந்தது. தமிழகத்தில், மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். இந்த கால கட்டத்தில் 'டாஸ்மாக்' கடைகளில் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில் ஐ.எம்.எப். எல்., மது விற்பனையில் சரிவு ஏற்படும். இந்த சரிவை பீர் விற்பனை மூலம் ஈடு செய்து 'டாஸ்மாக்' மது வருமானத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது தினந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விற்கும் கடைகளில் தினமும் ஐந்து பெட்டிகளும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்கும் கடைகளில் பத்து பெட்டிகளும் கூடுதலாக கோடை காலத்தில் விற்பது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு இந்த விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து 'டாஸ்மாக்' ஏரியா சூப்பர்வைஸர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கு குறைவாக விற்பனை நடக்கும் 'டாஸ்மாக்' கடைகளில், பீர் விற்பனை எட்டு கேஸ் ஆகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகளில் பீர் விற்பனையை 20 பெட்டிகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழக டாஸ்மாக் கடைகளில் மாதத்துக்கு சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 483 கேஸ் பீர் விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை அளவை 45 லட்சம் கேஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிக்கும் நோக்கத்துடன் 'டாஸ்மாக்' கடைகளில் குளிரூட்டும் வசதி இல்லாத கடைகளில், புதிதாக குளிரூட்டும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், குளிர் சாதன வசதிகளை கொண்டுள்ள கடைகளில் விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் பிரிட்ஜ் வைக்க டெண்டர் விடப் பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மண்டலங்களிலும் டெண்டர் கோரப்பட இருப்பதாக, 'டாஸ்மாக்' உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழக 'டாஸ்மாக்' கடைகளில் மே மாதம் முதல் வாரம், 50 சதவீதம் அளவுக்கு பீர் விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 'டாஸ்மாக்' மது கடைகளில், தற்போது 20 சதவீதம் அளவு பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


எல்.ஐ.சி.,யின் கிரிடிட் கார்டு : ஏப்ரலில் வெளிவரும்

எல்.ஐ.சி.,நிறுவனம், ஜனவரியில் வெளியிடுவதாக இருந்த கிரிடிட் கார்டை, வரும் மார்ச் கடைசியில் வெளியிடும் என்று அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் நாங்கள் அதை வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த கார்பரேஷன் வங்கியுடன் கூட்டு சேர்ந்து எல்.ஐ.சி.,நிறுவனம் கிரிடிட் கார்டை வெளியிடுகிறது. ஆனால் கிரிடிட் கார்டை வினியோகிப்பது கார்பரேஷன் வங்கிதான் என்று எல்.ஐ.சி.,தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரியில் கிரிடிட் கார்டை வெளியிடாததற்கு சில டெக்னிக்கல் கோளாறுதான் காரணம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து கார்பரேஷன் வங்கியில் கேட்டபோது, நாங்கள் டெக்னிக்கல் கோளாறை சரி செய்து விட்டோம். எனவே மார்ச் கடைசியில் அதை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சரிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய, அந்நாட்டு அரசு மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தும் கூட கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மார்ச் டெலிவரிக்கானது )இன்று காலை பேரலுக்கு 5 சென்ட் குறைந்து 37.46 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 11 சென்ட் குறைந்து 44.70 டாலராக இருந்தது. பொருளாதார மீட்பு திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்தும் கூட, அங்கு சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரித்திருப்பதாலும், பெட்ரோலுக்கான தேவை குறைந்து போனதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வரி விலக்கு மற்றும் சில சலுகை திட்டத்திற்காக 787 பில்லியன் டாலரை ஒதுக்கும் பொருளாதார மீட்பு திட்டத்திற்கு கடந்த வெள்ளி அன்று அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்திருந்தது. அது இப்போது அதிபர் பாரக் ஒபாமாவின் கையெழுத்திற்காக காத்திருக்கிறது.
நன்றி : தினமலர்

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததால் பங்கு சந்தையில் சரிவு

தற்போது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நலிவடைந்து இருக்கும் இந்திய தொழில்துறையை மேம்படுத்தும் எந்த வித நடவடிக்கையையோ அல்லது வரிவிதிப்பில் மாற்றத்தையோ அறிவிக்காத அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கவே பெரும்பாலான நேரங்களை செலவிட்டார் என்கிறார்கள். இதனால் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் சரிந்து கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லாததால், அதற்கு இந்த வருட மத்தியில் தாக்கல் செய்யப்பட இருக்கிற பட்ஜெட்டை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பட்ஜெட் உறையின்போது, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று சொன்ன பிரணாப் முகர்ஜி, நாங்கள் எதிர்பார்த்த 7 சதவீத வளர்ச்சியை நாடு அடைந்திருக்கிறது என்றார். எங்களது ஆட்சியில் தனி நபர் வருமானமும் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார். பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டத்தின் மூலம், உள்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதலீட்டை பெற, வேண்டிய நடவடிக்கையை செய்ய இருக்கிறோம் என்று சொன்ன அவர், 2008 ஆகஸ்டில் இருந்து 2009 ஜனவரிக்குள் ரூ.70,000 கோடி மதிப்புள்ள 37 உள்கட்டமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்றார். புதிதாக வரிவிதிப்பு எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் விதிக்கவில்லை. இன்று தாக்கல் செய்யப்ட்ட இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததை அடுத்து மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 329.29 புள்ளிகள் ( 3.42 சதவீதம் ) குறைந்து 9,305.45 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 99.85 புள்ளிகள் ( 3.39 சதவீதம் ) குறைந்து 2,848.50 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்

Sunday, February 15, 2009

வீடுகள் விலை 30 சதவீதம் சரிவு: வாங்குவோர் தயக்கம்

கடந்த நான்கு மாதங்களில், வீடுகளின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோனஸ் லாங் லாசல்லே மேக்ராஜ் என்ற ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இருப்பினும், வீடு வாங்குவதை பெரும்பாலானோர் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும்நிலையில், புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள், வீடு வாங்குவோருக்கு ஏற்ப அதிக சுமையில்லாத விலையில் தயாராகி வருகின்றன. ஏற்கனவே, வாங்கப் பட்ட நிலங்கள் அதிக விலை கொடுக்கப்பட் டவை. இருப்பினும், அதிக லாபம் இல்லாமல், அந்த நிலங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடுகளின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. வீடுகளின் விலை சரிந்துள்ள நிலையில், வங்கிக் கடன் வட்டி விகிதமும் சரிந்துள்ளது. இதனால், புதிய வீடுகள் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் பணிகளை துவக்கி உள்ளன. குறிப்பாக, நடுத்தரப் பிரிவினர் வாங்கும் திறன் கொண்ட வகையில், குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் ஆட் குறைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பதால், வேலை நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வீடுகளின் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வீடு வாங்குவோர் மத்தியில் தொடர்ந்துதயக்க நிலையே காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல், வீடு வாங்கும் திறன் அதிகரிக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வீடுகளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன. வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, குறைந்த விலை வீடுகளின் விற்பனை ஸ்திரமடையும் என்ற எதிர்பார்ப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர் மத்தியில் நிலவுகிறது. ஆனால், ஏற்கனவே, அதிக விலை கொடுத்து நிலம் வாங்கியிருப்பதால், இதற்கும் குறைவாக விலை நிர்ணயிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயாராக இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்கள் புதிதாக நிலம் வாங்கி, அதில் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
நன்றி : தினமலர்


சேமிப்பு கணக்குக்கு இனி 'பான்' தேவையில்லை

வங்கியில் சேமிப்பு கணக்குக்கு 'பான்' கட்டாயம் இல்லை; ஒரு லட்சம் ரூபாய் மேற்பட்ட பிரிமியம் கட்டும் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டும் தான் இது தேவைப்படும். சட்டவிரோத நிதி நடமாட்டங்களை தடுக்க, கருப்புப்பணத்தை ஒழிக்க 'பான்' கார்டு முறை வெகுவாக கைகொடுத்து வந்தது. கடந்தாண்டு பட்ஜெட் உரையில் கூட, நிதி அமைச்சர் சிதம்பரம் பேசும் போது,'எல்லா வித வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' கார்டு எண் குறிப்பிட வேண்டியது சட்டப்படி கடைபிடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பட்ஜெட் மீதான நடவடிக்கை அறிக் கை சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'பான்' கார்டு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' எண் குறிப்பிடப் பட வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கட்டும் போது 'பான் 'எண் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இனி இல்லை. ஆனால், நடப்பு கணக்கு ஆரம்பிக்கும் போது மட்டும் இந்த 'பான்' எண் குறிப்பிட வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி விஷயங்களில் மட்டும் , ஒரு லட்சத்துக்கு மேல் பிரிமியம் கட்டும் பட்சத்தில், 'பான்' எண் குறிப்பிடப்பட வேண்டும். இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிமாற்றம் செய்யும் போது 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை நீங்குகிறது. தபால் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தாலும், 'பான்' கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 'பான்' கட்டுப்பாடு வரப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், பெரும் சலுகையை இப்போது அரசு அமல்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எண்ணினாலும், இதனால், பலருக்கும் பலன் கிடைத்துள்ளது என்பதே உண்மை. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கையாளும் போது, வங்கியில் 10 இலக்க 'பான்' குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை.
நன்றி : தினமலர்


Saturday, February 14, 2009

ரூ.1,400ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்

இந்தாண்டு துவக்கம் முதலே மதுரையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.1,400ஐ தொட்டாலும் ஆச்சரியமில்லை. கடந்த ஜன., 1ல் ஒரு கிராம் தங்கம் ரூ.1,251க்கும், ஜன., 2ல் ரூ.1,253க்கும், ஜன., 3ல் ரூ.1,256க்கும் விற்றது. ஜன.,7ல் ரூ.14 குறைந்து ரூ.1,242க்கும், ஜன., 8ல் ரூ.10 குறைந்து ரூ.1,232க்கும் விற்றது. ஜன., 9ல் ரூ.18 அதிகரித்து ரூ.1,250க்கும், ஜன., 10ல் மூன்று ரூபாய் குறைந்து ரூ.1,247க்கும் விற்ற நிலையில், ஜன., 11, 12ல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஜன., 13ல் ரூ.1,236க்கு விற்கப்பட்டது. ஜன., 14ல் ரூ.1,232, ஜன., 15, 16ல் ரூ.1,227, ஜன., 17, 18ல் ரூ.1,245க்கும், ஜன., 19ல் ரூ.1,243, ஜன., 20ல் ரூ.1,240க்கும் விற்றது. ஜன., 22ல் ரூ.22 அதிகரித்து ரூ.1,262க்கும், ஜன., 23ல் ரூ.1,265க்கும் விற்ற தங்கம், எப்போதும் இல்லாத அளவிற்கு ஜன., 24ல் கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.1,301க்கு விற்று பொதுமக்கள் வயிற்றில் 'புளியைக் கரைத்தது'. ஜன., 27 வரை இந்த விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஜன., 28ல் ரூ.1,299க்கும், ஜன., 29ல் ரூ.1,290ஆக குறைந்த தங்கம், ஜன., 30ல் மீண்டும் ரூ.1,300ஐ தொட்டது. அன்று மதியமே ரூ.16 அதிகரித்து ரூ.1,316க்கு விற்றது. மறுநாள் ரூ.1,322க்கும், பிப்., 2ல் ரூ.1,315க்கும் விற்ற தங்கம் பிப்., 3ல் ரூ.1,299 ஆக குறைந்தது. பிப்., 4ல் ரூ.1,297க்கு குறைந்து, பிப்., 5ல் ரூ.1,311 ஆக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது. பிப்., 6ல் இதே விலை நீடித்தது.
விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பிப்., 7ல் ரூ.19 அதிகரித்து ரூ.1,330க்கு விற்றது. பிப்., 10 வரை இந்த விலையில் மாற்றமில்லை. பிப்., 11ல் ரூ.14 அதிகரித்து ரூ.1344க்கும், பிப்., 12ல் ரூ.1367க்கும் விற்ற தங்கம் நேற்று(பிப்.,13) ரூ.14 அதிகரித்து ரூ.1381க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் கூறுகையில், ''ஆன்-லைன் வர்த்தகமே இதற்கு காரணம். தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நன்றி : தினமலர்

Friday, February 13, 2009

குறைந்தது பணவீக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு காரணமாகவும், தேயிலை, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் விலைக் குறைப்பு காரணமாகவும், பணவீக்கம் 4.39 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 31ம் தேதியுடன் முடிந்த வார இறுதியில் பணவீக்கம் 5.07 சதவீதமாக இருந்தது. இது 0.68 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலைக் குறைப்பு போன் றவை கருதப்படுகிறது. ஓராண்டுக்கு முன் இதே காலத்தில் பணவீக்கம் 4.74 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் தற்போது மிகக் குறைந்த அளவாக பணவீக்கம் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


கோவை, கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சர்வீஸ்

தமிழக தலைநகருக்கு, தென்பகுதி நகரங்களில் இருந்து தற்போதிருக்கும் விமான சேவையை அதிகப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு புதிய தினசரி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய சேவைகள், அரசு அனுமதி கிடைத்ததும் செயல்படத் துவங்கும். தற்போது, கோயம்புத்தூர் - சென்னை இடையே தினசரி இரண்டு முறையும், கொச்சி - சென்னை இடையே தினசரி சேவையும் இயக்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சேவைகளும் தினசரி இயக்கப்படும். ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.10 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். கோயம்புத்தூரில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 7.30 மணிக்கு கொச்சி சென்றடையும். இரவு 8 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
நன்றி : தினமலர்

Thursday, February 12, 2009

உயிர் பெறுமா பங்குச் சந்தை? பட்ஜெட் முடிவு செய்யும்

வரப்போகும் மினி பட்ஜெட் மற்றும் கம்பெனிகளுக்கு இன்னும் பேக்கேஜ் என்று, சிறப்பான அரசு அறிவிப்புகள் வரும் வாரம் வருமென எதிர்பார்த்து பங்குச் சந்தைகள், திங்களன்று மிகவும் மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 283 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
கடந்த சில மாதங்களில் இவ்வளவு புள்ளிகள் அதிகம் சென்றது ஒரு சில முறை தான். ஆகையால் முதலீட்டாளர்கள், சந்தை மேலே இவ்வளவு சென்றவுடன் இந்தியா கிரிக்கெட்டில் வென்றதை கொண்டாடுவது போல கொண்டாடினர். இது வரை இரண்டு பேக்கேஜுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒன்று வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் உள் ளன. நேற்று முன்தினமும் மேலே சென்றது. அதுவும், கடந்த ஒரு மாத உச்சத்திற்கு சென்றது. குறிப்பாக வங்கிப் பங்குகள் கூடின. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 370 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியது ஒரு நல்ல அறிகுறி.
சந்தை அன்றைய தினம் 64 புள்ளிகள் மேலே சென்றது. திங்கள், நேற்று முன்தினம் இரண்டு தினங்களிலும் முதலீட்டாளர்களின் மதிப்பு 88 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது. 10 ஆயிரத்தை தொட்டு விடும் தூரம் தான் என்று நேற்று முன்தினம் சொன்னாலும், நேற்று கேட்கத் தயாராக இல்லை.
சந்தை துவக்கத்தில் 180க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. முடிவாக சந்தையில் வந்த ஒரு செய்தி என்னவென்றால், வரி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளில் சில திருத்தங்கள் வரப்போகின்றன என்ற தகவல்களால் சந்தைக்கு உயிர் வந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 9,618 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 8 புள்ளிகள் குறைந்து 2,925 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடு: எடுசர்வ் என்ற சென்னையைச் சேர்ந்த எஜுகேஷனல் நிறுவனம் தனது புதிய வெளியீட்டை 5ம் தேதி துவக்கி 9ம் தேதி முடித்தது. 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வைத்து வெளி
யிடப்பட்ட இந்த வெளியீடு 1.03 தடவைகள் செலுத்தப்பட்டன.
சமீப காலத்தில் புதிய வெளியீடு என்பதே அரிதாக இருக்கும் சமயத்தில் இந்த வெளியீடு துணிச்சலாக வந்தது ஆச்சரியம் தான். எப்படி பட்டியலிடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த மாதத்தில் வெளியாகும் உள்நாட்டு மொத்த வளர்ச்சி புள்ளி விவரத்தில் 7 சதவீத வளர்ச்சி இருக்கிறதா, இல்லையா என்றும் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் உதவும்.
இந்தியாவும், சீனாவும் தான் இந்த ஆண்டு ஒரு சிறப்பான வளர்ச்சி விகிதத்தை எட்டும். மற்ற நாடுகளில் அவ்வளவு வளர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்காது என்று பலரும் கணித்துள்ளனர்.
வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. குறைந்தால், கடன்கள் வாங்குவது கூடும். அது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும். மும்பை ஐகோர்ட் இடைக்கால உத்தரவுப்படி ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி பேசினிலிருந்து காஸ் தனியாருக்கு விற்கலாம் என்ற உத்தரவு அந்தக் கம்பெனிக்கு வருங்காலத்தில் லாபங்களை மிகவும் கூட்ட உதவும்.
வரும் வாரங்கள் எப்படி இருக்கும்? இன்று வரவிருக்கும் உற்பத்தி புள்ளி விவரம் ஒரு முக்கிய நிகழ்வு. இது பணவீக்க சதவீதத்தை விட அதிகமான முக்கியத்துவம் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில், நாளை வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் மத்திய மினி பட்ஜெட்டும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதில் என்னென்ன சலுகைகள் வரப் போகிறது என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கு அமையும்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்