Monday, November 23, 2009

நெடுந்தொடர்களா? கொடுந்தொடர்களா?

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில், கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாய், நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலமாய், வல்லார்க்கும் அல்லார்க்கும் வரமளிக்கும் வரமாய், எல்லார்க்கும் எளிதாகப் புரிகின்ற கலையாய் விளங்குவதுதான் நாடகத்தமிழ்.

நாட்டு மக்களைக் கவர்ந்த நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றிப் புகழ்பெற்ற டி.கே. சண்முகம் சகோதரர்கள், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோர் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள். விருதுபெற்ற சிறந்தபல திரைப்படங்கள், பல நூறுமுறை மேடையில் கோடை மழையாய்க் குளிர்வித்தவைதாம்.

இன்றும் திரைப்படமாக எடுக்கத் தயங்குகிற கல்கியின் “சிவகாமியின் சபதம்’ என்கிற சரித்திர நாவலை டி.கே. சண்முகம் மேடை நாடகமாக்கிக் காண்பவரை வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். நாடகக்கலைக்கு அது ஒரு பொற்காலம்.

நாடகத்தமிழ் இன்று சின்னத்திரையில் சிறைப்பட்டுப் போயிற்று. நெடுந்தொடர்கள் என்கிற பெயரில் அவை கொண்டுள்ள கோலங்கள் கொஞ்சநஞ்சமல்லை. மக்கள் மனத்தை எளிதாகக் கவர்கின்ற ஊடகமாகச் சின்னத்திரையே சிறந்து விளங்குகிறது. தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியை, ஒப்பற்ற குறிக்கோள்களை, முன்னேற்றும் தன்னம்பிக்கையை, மனத்தை விரிவாக்கும் புதியபுதிய சிந்தனைகளை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியை குடும்ப பாசத்தை, உறவுகளை வளர்த்தெடுக்கும் உன்னதத்தை நெஞ்சங்களில் எளிதாகப் பதியவைப்பதற்கு மற்ற நிகழ்ச்சிகளைவிட நெடுந்தொடர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

நூல்கள் இல்லாத இல்லங்கள் உண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்கள் இல்லை. உழைத்துக் களைத்து வீட்டுக்கு வருபவரின் அறிவுப் பசிக்குத் தீனிபோடவும், உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தவும் தொடர்களால் இயலும். ரஸ்கின் எழுதிய “கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற ஒரு நூல் காந்தியடிகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது என்றால், நெடுந்தொடர்களால் முடியாதா என்ன?

ஆனால், இன்று நெடுந்தொடர்களின் போக்கு அவ்வாறு இல்லையே. வேறு வழியின்றிப் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

பத்துக்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் விதவிதமான தொடர்கள். தாய்க்கு ஒரு தொடரைக் காண ஆசை. பிள்ளைகளுக்கோ வேறு ஒரு தொடரைக் காண விருப்பம். பலஇல்லத்தரசிகள் வீட்டுவேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்களுக்குள் மூழ்கிப் போகிறார்கள். அடுப்பில் வேகும் உணவு அடிப்பிடித்த பிறகுதான் பலருக்கு நினைவே வருகிறது.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே. பெண்ணின் பெருமையை விளக்க அன்று; இயற்கையான அவர்களின் பலவீனங்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் காட்சிகள்தாம். பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள். பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்; அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்; வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள் சித்திரிக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன. இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

மாமியார் மருமகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருப்பார்களா? எத்தனையோ இல்லங்களில் மாமியாரைத் தாயாகக் கருதும் மருமகளும், மருமகளைத் தன் பெண்ணாகக் கொண்டாடும் மாமியார்களும் வாழ்கிறார்கள். பழங்கதையை மாற்றக்கூடாதா? “மாற்றம் என்பது மானிடத் தத்துவம்’ என்பார் கவிஞர் கண்ணதாசன்.

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்பார் பாரதிதாசன். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செருக்கு பெண்கட்கு வேண்டும்’ என்று சிந்துக்குத் தந்தை பாரதி பாடுவார். இன்று மகளிர் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகத்திறமை பெற்றுத் தனியே வெளிநாடுசென்று உயர்ந்த லட்சியத்துடன் லட்சங்களையும் தேடி வருகிறார்கள்.

தொடர்களின் கதையம்சம் பற்றிப் பார்த்தால் கதைக்கருவே சிதைந்து போய்க்கிடக்கிறது. கதைப்பஞ்சம் வந்துவிட்டதா என்ன? வாழமுயல்பவனுக்கு மற்றொருவன் தான் தீயவனாக (வில்லன்) வரவேண்டுமா? மழை, வெள்ளம், புயல், இலங்கைவாழ் தமிழர்கள் துயர் போன்ற சூழ்நிலைகள் தடையாக வராதா? அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டாதா?

தொடர்களின் தலைப்புகள், வெளிப்புறக் காட்சிகள், வீடுகளின் தோற்றங்கள், தொழில்நுட்பங்கள், ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஆகியன கண்ணுக்கு விருந்து தருகின்றன. இவையெல்லாம் பாராட்டுக்குரியவை.

தமிழில் ஏராளமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு நாளைக்கு ஒன்றாகவோ, வாரத்துக்கு ஒன்றைத் தொடராகவோ ஒளிபரப்பலாகாதா? நாட்டில் நடப்பதையும் மக்கள் விரும்புவதையும் தானே தொடர்களில் காட்டுகிறோம்’ என்பார்கள். நேயர்கள் விரும்புவதற்குமேல் தேவை எவையோ மாண்புகள் பெற வேண்டியவை எவையோ அவற்றைக் கருவாக அமைத்தால் தொடர்கள் உருப்படும். சமூகக் கண்ணோட்டத்துடன் பொறுப்புணர்ந்து படைக்காதபோது வெறுப்பும் மறுப்பும் தான் தோன்றும்.

தொடர்களை ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் என்று இழுத்துக் கொண்டு போவதால் மட்டும் அவை வெற்றிப்படைப்புகள் ஆகிவிடுமா? நெடுந்தொடர்கள் கொடுந்தொடர்களாக இருக்கின்றனவே, இதற்கு யார் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள்?
கட்டுரையாளர் : சு. சுப்புராமன்
நன்றி :தினமணி

உன் குற்றமா? என் குற்றமா?

நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'

சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.

இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.

ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?

சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!

தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.

கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?

கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.

சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?

கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?

இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.

கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...
நன்றி : தினமணி

இலவசமா, உயர்கல்வியா?

கல்வித்துறையில் அவசரமாகச் சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது எனும் உண்மையை நோபல் பரிசுபெற்ற இந்தியா வம்சாவளி அறிஞர் அமார்த்தியா சென் கூறியுள்ளார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலம் என இருந்த நிலைமை மாறி மிகவும் மோசமான நிலைமைக்கு கல்வித்துறை போய்விட்டது. உயர்கல்வியில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை முழுமையாக அறிந்தும், எப்படி இந்தத் துறையை முன்னேற்றலாம் என்கிற சிறிய முயற்சிகூட நமது அரசால் செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பாடத்திட்டத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் எம்பிஏ மாணவர்கள் இரண்டு செமஸ்டர்களில் சுமார் 6 மாதங்களில், படிக்கும் அளவுக்கான பாடங்களை நம்மவர்கள் 2 ஆண்டுகள் கற்கிறார்கள் என்ற கசப்பான உண்மையும் பெருவாரியான பாடங்கள் எண்பதுகளில் அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர்கள் கற்ற பழமையான பாடத்திட்டம் என்பதும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மேலும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருடன் இதுபற்றி விவாதித்தபோது, ""இது எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் இதைவிடக் குறைந்த அளவும் தரமும் உடையன'' என்று அவர் குறிப்பிட்டபோது திகைப்பதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சுமார் 30 மாணவர்கள் அடங்கிய எம்பிஏ வகுப்புக்குச் சென்று அங்கே பயிலும் மாணவர்களின் பட்டப்படிப்பு பற்றிக் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்றவர்கள். இப்போது ஆங்கிலப் பயிற்றுமொழியில் எம்பிஏ பாடங்களைக் கற்க வேண்டும். சரியான முறையில் ஆங்கிலம் தெரியாமல் மாணவர்கள் ஆங்கிலச் சொற்பொழிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். நிச்சயமாக அவர்களால் ஆங்கிலப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

எம்பிஏ பட்டப்படிப்பில் ""ஆர்கனைஷேசனல் பிஹேவியர்'' அதாவது, நிறுவனங்களின் நடைமுறைகள் என்பது ஒரு பாடம். அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்போது, அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் மாணவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆக, ஆங்கிலம் புரியாத மாணவர்கள் கஷ்டப்பட்டு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதிப் பட்டம் பெற்று வேலையிலும் சேர்ந்துவிடுகிறார்கள். இவர்களால் எப்படித் தங்கள் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும்? உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழி ஆனதன் பலன்தான் இது!

சமீபகாலத்தில் "நாஸ்காம்' எனும் அகில இந்திய கம்ப்யூட்டர் கட்டமைப்பு, மெக்கின்ஸி என்னும் சர்வதேச அமைப்புடன் சேர்ந்து நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் எம்.ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர்களில் பத்தில் ஒரு மாணவரும், பொறியியல் பட்டம் பெற்ற நான்கில் ஒரு மாணவரும் தான் வேலை செய்யத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலையில் திறம்படப் பணியாற்றும் சக்தியற்றவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் உயர்கல்வி தரம்தாழ்ந்துள்ள நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மேலும் பல சிக்கல்களை உருவாக்கலாம். இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் பாடத்திட்டங்களை பரிசீலனை செய்து, அதிகாரத்துடன் கூடிய புதிய பாடத்திட்டங்களை உருவாக்குகின்றன என தேசிய உயர்கல்விக்குழு தெரிவிக்கிறது. அவர்களின் கருத்தாய்வின்படி நம்நாட்டின் 90 சதவீதக் கல்லூரிகளில், 70 சதவீதப் பல்கலைக்கழகங்களும் மிக மோசமான தரத்தில் கல்வியைப் போதிக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் முந்தைய மத்திய அரசின் ஊழல் மிகுந்த கல்வி நிர்வாகம், லஞ்ச லாவண்யங்களில் திளைத்து, தகுதியில்லாத வகையில் நிறைய தனியார் கல்லூரிகளுக்கு சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் எனும் தகுதியை வழங்கிவிட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் 50 ஆண்டுகளில் 44 தனியார் சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக அர்ஜுன் சிங் பதவிவகித்த 5 ஆண்டுகளில் 49 தனியார் கல்வி நிலையங்கள் சுயாட்சித் தகுதி பெற்றன.

சுயாட்சி வழங்குமுன்னர் மத்திய அரசின் அங்கீகரிப்புத்துறை அதிகாரிகள் தனியார் கல்லூரிகளை தணிக்கைக்காகப் பார்வையிட வரும்போது கையூட்டுப்பெற்றுக் கொள்வதும் பின் தலைநகர் தில்லியில் நிறைய இடைத்தரகர்கள் அமைச்சர் வரை சிபாரிசு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டும்தான் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் சுயாட்சி பல்கலைக்கழகங்களால் இதுபோல் அதிகமான பணத்தைச் செலவுசெய்து கல்லூரியை அமைக்க நிலங்கள், பெரிய கட்டடங்கள் மற்றைய தளவாடச் சாமான்கள் ஆகியவற்றுக்குச் செலவும் செய்துவிட்டு தாங்கள் போட்ட பணத்துக்கு ஏற்ப வருமானத்தைப் பெற முடிவதில்லை.

விளைவு, மிக அதிகமான கல்விக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாநில அரசின் கெடுபிடி. வேறு வழியில்லாமல், கட்டணம் என்கிற பெயரில் ரசீது போட்டு வசூலிக்கும் சரியான தொகை ஒருபுறம் இருக்க, அதற்குமேல் கணக்கில் காட்டப்படாமல் பல்வேறு இனங்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான கல்விக் கட்டணத்தை இதுபோன்ற சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக வசூல் செய்கின்றன. நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாநில அரசின் உயர்கல்வித் துறைக்கும் கப்பம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும் கப்பம். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கவனிக்கப்பட்டு விடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட மிகவும் வேதனைதரும் விஷயம் உயர்கல்வி எதிர்கொள்ளும் ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர்கள் அதிகம் தேவை என்பதால் அவர்கள் கேட்கும் சம்பளம் அதிகமாகிறது.

புதிதாக ஒரு தனியார் பொறியியற் கல்லூரி அல்லது உயர்கல்விக் கல்லூரி தொடங்கப்படும் வேளையில் மத்திய அரசின் யுசிஜி அனுமதி கிடைக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்கல்விப் பட்டங்கள் உடைய அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க அதன் முதல்வர் வேலைக்கு பி.ஹெச்டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர் பணியமர்த்தப்பட வேண்டும்.

இதுபோன்ற பட்டம் பெற்று உயர்கல்வி ஆசிரியர்களின் அனுபவம் உள்ளவர்கள் நிறையப்பேர் இல்லையென்பதால் மத்திய யுசிஜி அனுப்பும் தணிக்கைக்குழு புதிய கல்லூரியைப் பார்வையிட வரும்போது, ஏற்கெனவே ஒரு கல்லூரியில் முதல்வராக வேலையில் இருக்கும் ஒருவரை, தணிக்கை செய்யப்பட இருக்கும் கல்லூரியின் முதல்வராக வேலை செய்வதாகப் போலி தாக்கீதுகளை உருவாக்கி அவரையும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து தணிக்கை நாளில் தொடங்கப்பட இருக்கும் கல்லூரி வளாகத்தில் இருக்கச் செய்து தணிக்கையை வெற்றிகரமாகப் பல கல்லூரிகள் நடத்தி முடித்து விடுகின்றன.

அனுமதி பெற்றபின் முன் அனுபவம் இல்லாத புதுப் பட்டதாரிகளையும் அல்லது பணியில் இருந்து ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்களையும் கல்லூரியில் விரிவுரையாளர்களாக அமர்த்தி இதுபோன்ற கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. எனவே, தரமான கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது.

ஆரம்ப காலங்களில் அரசுக் கல்லூரிகளை அதிகம் தொடங்கி நடத்த பட்ஜெட்டில் பணம் இல்லை என்பதால், கல்வியை தனியார் மயமாக்க வேண்டிய கட்டாயம் நம்நாட்டில் உருவானது. பின் வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் இக் கல்லூரிகள் லஞ்ச லாவண்ய சூழ்நிலைகளால் சரியானபடி கல்வி போதனையில் கவனம் செலுத்தச் செய்ய முடியாத சூழ்நிலை.

தரமற்ற கல்வியைப் பெறும் அதிக மாணவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வருபவர்களே! வசதி படைத்தவர்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களிலோ அல்லது வெளிநாட்டின் பல்கலைக்கழகங்களிலோ சேர்ந்து பட்டம் பெற்று விடுகிறார்கள். வெளிநாட்டில் சென்று பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் ஆண்டுக்குச் செய்யும் செலவு மட்டும் ரூ. 35,000 கோடி என ரிசர்வ் வங்கியின் கணக்கு கூறுகிறது. இவர்கள் நிச்சயமாக அடித்தட்டு மாணவர்களாக இருக்க வழியில்லை.

பள்ளிக் கல்வியின் தரம்தாழ்ந்த நிலையில் நம் பொருளாதாரத்துக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதும், உயர்கல்வித்தரம் பாதிக்கப்பட்டால் ""அறிவார்ந்த சமூகம்'' உருவாகாது என்பதும் ஆராச்சியாளர்களின் சித்தாந்தம். அதாவது பள்ளிக்கல்வி, ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி, பி.ஏ., பி.காம்., போன்ற பட்டப்படிப்புகளில் தேறியவர்களே நமது பொருளாதார உற்பத்தி அங்கமான தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்து உற்பத்தியைப் பெருக்க முடியும். கல்வி வளர்ச்சியில் முன்னேறாத பல நாடுகளுக்குக் கேரளத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களை நினைவில் கொள்க.

அதுபோல, தரமான உயர்கல்வியில் உருவாகும் பட்டதாரிகள் தான் அரசு மற்றும் தனியார் நிறுவன உயரதிகார வேலையில் சேர முடியும். இவர்கள்தான் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களாகப் பணியாற்றப் போகிறவர்கள்.

இதுபோன்றவர்கள் உருவாக்கும் அறிவார்ந்த சமூகம் இனி வரும் காலங்களில் ஒரு நாடு முன்னேறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும். ""இனி உலக அரங்கில் ஏழை பணக்கார நாடுகள்' என்பதைவிட அறிவாற்றல்மிக்க, அறிவற்ற நாடுகள் என்கிற பாகுபாடுதான் செய்யப்படும். அதாவது பெரிய அளவில் தொழிற்சாலைகள் வியாபாரங்கள் உள்ளநாடு என்பதைவிட நிறைய அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடுகள்தான் பணக்கார நாடாக அமையும்'' என்றார் பீட்டர் ட்ரக்கர் என்னும் மேதை.

தரமான உயர்கல்விதான் ஆராய்ச்சிக்கு அடிப்படை. இதுபோன்ற ஆராய்ச்சியில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் விற்பனை செய்யப்பட்டு வெளிநாட்டுப் பணம் தரமான அறிவுசார்ந்த சமூக அமைப்புடைய நாடுகளுக்குச் சென்றுவிடும் என்ற அடிப்படையில் இந்தியா தற்காலத்தில் பின்னேறி வருகிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

நம்நாட்டின் இளைஞர்களில் 11 சதவீதத்தினர்தான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடிகிறது. அமெரிக்காவில் 83 சதவீதம் இளைஞர்கள் கல்லூரிப் படிப்பில் சேர்கிறார்கள்.

2012-ம் ஆண்டு 11 சதவீதம் இந்திய இளைஞர்கள் கல்லூரியில் சேருவதை 15 சதவீதமாக அதிகரிக்க நம்நாட்டில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும். இன்றைய கணக்குப்படி நம்நாட்டில் 300 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்ப்பது என்பது வேறு. அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியை அளிப்பது என்பது முற்றிலும் வேறு.

தற்போதைய 11 சதவீதம் 2012-ம் ஆண்டு 15 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையாக உயர ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 410 கோடி தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் 11-வது வளர்ச்சித் திட்டத்தில் உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.77 ஆயிரத்து 933 கோடி மட்டுமே.

இலவசங்களைவிட மிக முக்கியமானது உயர்கல்வி என்பது திண்ணம். விழித்துக் கொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

டாலருக்கு நிகர் வேறு ஏதுமில்லை: மன்மோகன்

உலக வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான நாணயம் வேறு ஏதுவும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்குவதில் ஊக்கத்துடன் செயல்படுவதை பாராட்டினார். தற்சமயம் டாலருக்கு மாற்றாக வேறு அந்நிய செலவாணியை நினைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீனாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பாக 2.5 டிரில்லியன் டாலர் உள்ளது. இதில் சிறு அளவு கூட விற்பனை செய்யவில்லை. இதில் இருந்து டாலரின் மேல் உள்ள நம்பிக்கையை அறியலாம். டாலரின் மீதான நம்பிக்கையில் பிரச்னை உள்ளது. இவை விரைவில் தீரும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்டபோது, அமெரிக்க முறையில் இது தற்காலிக பின்னடைவு, தற்காலிகமான கேள்விக்குறியே, ஆனால் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி: ரிசர்வ் வங்கி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி‌யை அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ‌பொதுவாக டாஸ்மாக் கடைகளில் தான் அதிகமாக கள்ளநோட்டுகள் புழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி அளிப்பதன் மூலம் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்கான நடவடிக்கைகள் எடுக்க துவங்கி உளளது. கள்ளநோட்டு சம்பவங்களில் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்காக, வரும் டிசம்பர் முதல் வாரம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 6500 டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கள்ளநோட்டு கண்டறிவது குறித்த பயிற்சி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சியை 34 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அளிக்க உள்ளனர். டிசம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தாலுகாவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்